31 மே 2010

இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை!


இலங்கைப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் விசாரணை செய்யப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை இன்று திங்கட்கிழமை மீண்டும் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டைக் கவனிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கவும் என போருக்குப் பின்னான அரசியலமைப்பு ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இருந்தபோதிலும், முந்தைய அனுபவம் மற்றும் தற்போது கிடைத்த தகவல்களைப் பொறுத்து, இந்த நோக்கங்களை உண்மையில் நிறைவேற்றுவதற்கு அதிகாரமுடைய சர்வதேச பதில்கூறும் கடப்பாட்டுப் பொறிமுறையை அமைப்பது சிறந்தது என நம்புகிறேன். இது இலங்கை மற்றும் பிற இடங்கள் எங்கும் பொது நம்பிக்கையை வளர்க்கும் என நவி பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை இலங்கையில் போர் நிறைவடைந்த பின்னர், இடம்பெயர்ந்துள்ள மக்களைத் திருப்பி அனுப்பி மீளக்குடியேற்றம் செய்வதில் சிறிதளவு முன்னேற்றம் நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவும், தவறுக்குப் பரிகாரம் செய்யவும் குறிப்பான நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் மேற்கொண்டு வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது!




கிளிநொச்சி கணேசபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் மீள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். அங்குள்ள ஒரு வீட்டு உறுப்பினர்கள், தமது வீட்டைப் புனரமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியபோது, மலசலக் கூடக் குழிக்குள் பிளாஸ்டிக் பைக்குள் அடைக்கப்பட்ட பல சடலங்களை கடந்த சனிக்கிழமை கண்டுள்ளனர். இதையடுத்து செய்தி கிளிநொச்சி குற்றவியல் நீதிபதிக்குச் செல்ல, அவர் குறித்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் இவற்றை இன்று திங்கட்கிழமை வவுனியா அரச மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி முன்னிலையில் வெளியே எடுக்கும்படி பணித்தார். எனவே அவை இன்று வெளியே எடுக்கப்படவுள்ளன. வீட்டுக்காரர்கள் தாம் ஐந்து சடலங்களைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் மேலும் பல சடலங்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதேவேளை அவ்வீட்டுக்குச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் இதுகுறித்துக் கருத்துக் கூறும்போது, இந்தக் கொலைகள் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டார். இந்தச் சடலங்கள் இருபடையாலான பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு, கற்கள், மணல் நிரப்பட்டு தாழ்க்கப்பட்டுள்ளன. எனவே இதைச் செய்ய கணிசமான நேரம் எடுத்திருக்கும் எனச் சுட்டிக்காட்டிய அவர் இக்கொலைகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளன என்றார்.புதைக்கப்பட்ட இச் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அங்கு வந்த காவல்துறையினர், புகைப்படம் எடுக்க எவரையும் அனுமதிக்கவில்லை. அத்தோடு ஏற்கனவே கையடக்கத் தொலைபேசியில் எடுத்த சில புகைப்படங்களையும், சோதனையிட்டு அதனை அழித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரர் மீது துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பினார்!


வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை மர்ம நபர் ஒருவர், நேற்று துப்பாக்கியால் சுட முயன்றார். மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். இச்சம்பவத்தை அடுத்து அவரது ஆசிரமத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூர் புறநகர்ப் பகுதியில் தலகட்டபுரா என்ற இடத்தில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கரின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் 'சத்சங்கம்' பிரார்த்தனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும், மாலை ரவிசங்கர் அங்கிருந்து, தான் தங்கி இருக்கும் இடத்திற்குக் காரில் புறப்பட்டார். அப்போது, பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்த மர்ம மனிதர் ஒருவர், திடீரென்று ரவிசங்கரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். காருக்குள் இருந்ததால் ரவிசங்கர் மயிரிழையில் உயிர் தப்பினார். மர்ம மனிதர் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த வினய் என்ற பக்தர் மீது பாய்ந்தது. தொடையில் குண்டு பாய்ந்ததால் அவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து ரவிசங்கருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் பிறகு தாம் பாதுகாப்பாக இருப்பதாக ரவிசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரமம் வழக்கம் போல் செயல்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது. பக்தரின் காலில் பாய்ந்த தோட்டாவை அவர்கள் கண்டெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா இது விடயத்தைத் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆசிரம நிர்வாகிகள் கேட்டுக் கொண்டால், மேலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆசிரமத்தில் கண்காணிப்பு கெமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களைச் சோதனையிடவும் ஆசிரமம் முடிவு செய்துள்ளது. எனக்கு எதிரி இல்லை : ரவிசங்கர் பேட்டி இது குறித்து ரவிசங்கர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு எதிரிகள் எவருமே இலர். இந்நிலையில் என் மீது தாக்குதல் நடத்த மு‌யன்றவரை கண்டு அச்சமோ பயமோ எனக்கில்லை. எனினும் என்னைச் சுட மு‌யன்றவரை நான் மன்னிக்கின்றேன். மேலும் தாக்குதல் நடத்த மு‌யன்றவரை எனது ஆசிரமத்தில் ‌இணைய, மனமாற அழைக்கின்றேன். வன்முறையைத் தூண்ட நினைத்தவர்களே இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும். இந்நிலையில் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்கிறேன். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இதுகுறித்து பக்தர்கள் யாரும் பீதியடைய வேண்டாம். எதிரிகளைக் கண்டு அஞ்சாமல் அவர்களைத் தைரியமாகவும், துணிச்சலாகவும் எதிர் கொள்ள வேண்டும். இந்தத் தாக்குதலுக்காக எனது பாதுகாப்பை அதிகரிக்‌க வேண்டும் என்பதில் தனக்கு சிறிதளவு கூட உடன்பாடு இல்லை" என்றார்.

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் பாரியார் இலங்கையில்!



தமிழர் விடுதலை கூட்டணியின் மறைந்த முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி, மங்கையற்கரசி அமிர்தலிங்கம் மற்றும் அவரது மகன் பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோர் லண்டனில் இருந்து விடுமுறையில் இலங்கை வந்துள்ளனர்.
அவர் இலங்கை வந்ததுதும், தமது கணவர் சுட்டுக் கொல்வதற்கு முன்னர் அவருக்கு பாதுகாவலாளராக இருந்த டீ ஏ நிசங்க என்பவரை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
கடந்த 1989ம் ஆண்டு ஜுலை மாதம் 13ம் திகதி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 3 ஆயுததாரிகளால் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லபட்டார். அவருடன் தமிழர் விடுதலை கூட்டணியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன் போது அப்பாப்பிள்ளைக்கு தனிப்பட்ட காவலாளியாக இருந்த சிங்கள இனத்தவரான நிஷங்க, இந்த தாக்குதலை மேற்கொண்ட 3 பேரையும் தமது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இந்த சம்பவத்தின் பின்னர் அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறினர். தற்போது விடுமுறைக்காக இலங்கை வந்துள்ள அமிர்தலிங்கத்தின் மனைவி, தொடர்ந்து இலங்கையில் தங்க விரும்புகின்ற போதும், தமது பிள்ளைகள் இங்கிலாந்தில் குடியேறி இருப்பதால் தம்மால் அது முடியாது என தெரிவித்துள்ளார்.

30 மே 2010

சல்மான் கானின் உருவபொம்மையை எரித்து நாம் தமிழர் இயக்கம் போராட்டம்!



இலங்கையில் அடுத்த மாதம் நடக்க உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்கு இந்தியாவை சேர்ந்த திரைப்பட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின் விளம்பர தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு தமிழர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நடிகர் அமிதாப்பச்சன், இலங்கை விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். தனது தூதர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அமிதாப்பின் இந்த முடிவையடுத்து, படவிழாவில் பங்கேற்க இருந்த அவரது மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் மகன் அமிஷேக் பச்சன் இருவரும் இலங்கை படவிழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்தனர்.
அமிதாப்பச்சன் தூதர் பதவியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சல்மான்கான் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா தூதுவராக நியமிக்கப்பட்டார். இலங்கையில் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் இன்னலுக்கு ஆளாகிவரும் நிலையில் இப்பதவியை ஏற்கக் கூடாது, ராஜினாமா செய்ய வேண்டும், இலங்கை படவிழாவிலும் பங்கேற்க கூடாது என்று பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் நடிகர் சல்மான்கானுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டு முன்பாக ஏற்கனவே ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.
இருப்பினும், சல்மான்கான் தனது முடிவு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் சல்மான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மும்பை தாராவியில் உள்ள காவல் நிலையம் முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் சல்மான் கானின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் உருவ பொம்மையை கைப்பற்றி தீயை அணைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 10 பேரை கைது செய்தனர்.

தமிழர்களை அங்கீகரிப்பது இந்திய இறையாண்மையை எப்படி பாதிக்கும்?முதல்வர் ராமசாமி கேள்வி.



மதுரை மாநாட்டில் நான் தவறாக எதையும் பேசவில்லை. எங்கள் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் முழு அங்கீகாரம் அளிப்பேன் என்றுதான் கூறினேன். இதில் இந்திய இறையாண்மை எங்கே வந்தது என்று பினாங் துணை முதல்வர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் சீமான் நடத்திய நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக உளவுத்துறை இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.
இதையடுத்து மலேசிய அரசுக்கு, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இது தொடர்பாக "தட்ஸ் தமிழ்" இணையத்தளத்திற்கு கருத்துக் கூறுகையில்;
வேறொரு நாட்டில் பேசும்போது எப்படிப் பேச வேண்டும் என்று கூட தெரியாதவனல்ல. என் தொப்புள் கொடி உறவுகளுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன். அதனால்தான் சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினேன். இன்னும் ஒரு ஆண்டில் மலேசியாவில் தேர்தல் வரப்போகிறது.
இத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் இலங்கைத் தமிழர்களுக்கு முழு அங்கீகாரம் அளிப்போம். இதை நான் தமிழகத்தில் சீமான் மாநாட்டில் மட்டும் பேசவில்லை. எங்கள் நாட்டிலும் பேசி வருகிறேன்.
இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக நேற்று கூட ஐ.நா. அதிகாரிகளிடம் பேசினேன். மலேசிய உள்துறையிடமும் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறையின் கடிதம் பற்றி எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து என்னிடம் கேட்டால், நான் விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன். எங்கள் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு முழு உரிமையும் அங்கீகாரமும் அளிப்பேன் என்று கூறியது இந்திய இறையாண்மையை எப்படிப் பாதிக்கும்? என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகத்திரை கிழிகிறது-அதிர்வு இணையம்.


கடைசியில் மெல்லமெல்ல தமது உண்மையான கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது வெளியிட்டுவருகிறது. அதாவது "வட கிழக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயார் எனில் தாம் அரசுடன் இணைந்து மகிந்த அரசை பாராளுமன்றில் 3ல் 2 பெரும் பான்மையாக்குவேன் என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அப்படியாயின் அரசியல் சாசனத்தை திருத்தி, தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என ஐயா சம்பந்தன் நம்புகிறார். அவர் அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதாக பல செய்திகள் ஏற்கனவே வந்திருந்தாலும், இத் தகவல் மூலம் அதை அவர் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்துள்ளார்.தற்போது ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே நடைபெற்று வரும் இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பாக சில பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில், நடந்துவரும் ரகசியப் பேச்சுவார்த்தை பற்றி இதுவரை அவர் வாயே திறக்கவில்லை. பத்திரிகை நிருபர்கள் இது குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தந்தை செல்வா காலம் முதல் தமிழர்களை ஏமாற்றிவரும் இலங்கை அரசுடன் எச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் இணைந்து செல்ல முற்படவில்லை. மாறாக ஒரு பலம் பொருந்திய நிலையில் இருந்து பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்தனர், தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் தமிழ் மக்களின் 30% ஆணையைப் பெற்று தாமே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசிடம் மண்டியிட இருப்பது, மொத்தத் தமிழினத்தையே தலைகுனியவைக்கும் செயலாகும்.புலிகளை இலங்கை இராணுவம் யுத்தரீதியாக வென்றிருக்கலாம், ஆனால் எமது போராட்டத்தையோ , அல்லது விடுதலை குறித்து எரியும் நெருப்பையோ எவராலும் அணைத்துவிட முடியாது. எஞ்சியுள்ள தமிழர்களின் மனதில் நிற்பது ஒன்றுதான், அது தமிழீழ தேசிய தலைமையும், அது விட்டுச் சென்ற போராட்டமும் தான் ! என்பதில் ஐயமில்லை.

29 மே 2010

சிறிலங்காவின் ஆணைக்குழுவை அமெரிக்கா நம்புகிறதாம்-ஹிலாரி.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழு யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஒழுங்கு முறையாக விசாரிக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளின்ரனை அந்நாட்டுக்கு நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து உரையாடினார். இருவரும் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்துப் பரஸ்பரம் பேசி உள்ளார்கள்.

இச்சந்திப்புக் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்த போதே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளின்ரன் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழு யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஒழுங்கு முறையாக விசாரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு:

”இந்த ஆணைக்குழு எமது நம்பிக்கையைப் பாழாக்காத விதத்தில் செயற்பட வேண்டும்.நான்கு தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பிரஜைகளின் தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் இதன் செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.

இதன் விசாரணைகள் சுதந்திரமானவையாகவும் , வெளிப்படைத்தன்மை கொண்டனவாகவும்,பாரபட்சம் அற்றனவாகவும், நீதியானவையாகவும் அமைதல் வேண்டும். அமைச்சர் பீரிஸ் ஆணைக்குழு ஒழுங்குமுறையாக விசாரணைகளை நடத்தும் என்று வாக்குறுதி தந்துள்ளார்.இலங்கை அதன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

இந்திய திரைப்பட விழாவிற்கு தென்னிந்திய திரைப்பட துறையினர் கடும் எதிர்ப்பு!

இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய திரைப்படத்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வரும் யூன் மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் சர்வதேச திரைப்பட விருதுகள் விழா நடைபெறவுள்ளது.
இலங்கையில் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்கள வெறிபிடித்த அரசு, தமிழர்களின் மயானபூமியில் விழா மேடை அமைத்து இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது.
இதில் வட இந்திய நடிகர் - நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் அனைத்து தென்னிந்திய திரைப்படத்துறை அமைப்புக்களையும் அழைத்து கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், "இரத்தக்கறை படிந்த இலங்கையில் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டாம்" என எங்களது வட இந்திய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர் தோழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1. இனி தென்னிந்திய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் கலை விழாக்கள் இலங்கையில் நடத்தப்பட மாட்டாது. 2. இந்த விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து இந்திய நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் தென்னிந்திய திரைப்படத் துறையினர் தொழில் ஒத்துழைப்புத் தரமாட்டார்கள். 3. இந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் - நடிகையர் திரைப்படங்களை தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது. 4. இந்த திரைப்பட விழாவை நடத்தும் குழுவினருக்கு எங்களது வேண்டுகோள் என்னவென்றால், "இந்த விழாவை அன்பு கூர்ந்து ரத்தக்கறை படிந்த இலங்கையில் நடத்த வேண்டாம். வேறு எந்த நாட்டிலாவது நடத்துங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 5. இதற்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் 15-பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாளை மும்பை சென்று IIFA - குழுவினரைச் சந்தித்து இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த வேண்டாம் என நேரில் சென்று வலியுறுத்தவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புக்கள்
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம். இந்த அமைப்புக்களின் சார்பில் கலந்து கொண்டோர்
கல்யாணம், இராம.நாராயணன், ராதாரவி, வி.சி.குகநாதன், ஆனந்தா எல்.சுரேஷ், சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், பன்னீர்செல்வம், கலைப்புலி ஜி.சேகரன், மெட்ரோ ஜெயக்குமார், அன்பாலயா பிரபாகரன், ரவிக்கோட்டரக்கரா, கே.எஸ்.சீனிவாசன், டி.சிவா, கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், காட்ரக்கட்டபிரசாத், வேணுகோபால், ஏடிதநாகேஸ்வரராவ், வி.ஞானவேலு, என்.விஜயமுரளி, ஜி.சிவா, செளந்திரபாண்டியன், மங்கை அரிராஜன், ஆனந்தி நடராஜன், எம்.பாஸ்கர், ஏ.எஸ்.பிரகாசம், டி.ஜானி, ஸ்ரீதர், பெருதுளசி.பழனிவேல், டைமன்ட்பாபு, சிங்காரவேலு, ரியாஸ், பி.என்.சுவாமிநாதன், ஞானம், ஆபுகாபிரியேல், முரளி, மூர்த்தி, கண்ணன், எஸ்.ஆர்.சந்திரன், சண்முகசுந்தரம், துரை, சிபிசந்தர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

28 மே 2010

தமிழ் மக்கள் சிங்களப்படைகளை நேசிக்கின்றனராம்-அல்ஜசீராவில் மகிந்தவின் நாடகம்!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்து இராணுவத்தினர் கைப்பற்றியபோது தமிழ் மக்கள் அப்படியே ஓடிவந்து, இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், தமிழ் மக்கள் இராணுவத்தை நேசிக்கின்றனர் என்றும் மகிந்த அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். 3வது தடவையும் தான் ஜநாதிபதியாக இருக்க ஆசைப்படுவதாக தெரிவித்த அவர், சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாகக் கலக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூதரகத்திடம் விளக்கம் கோருகிறது இன்ன சிற்றி பிரஸ்.



இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் விளக்கம் கோரி, ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையான இன்னர் சிற்றி பிரஸ், இலங்கை தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக்குற்றச் சாட்டுகளுக்கான விளக்கங்களையும் இன்னர் சிற்றி பிரஸ் கோரியுள்ளது.
இதேவேளை, அண்மையில் பான் கீ மூனுக்கும் ஜீ.எல்.பீரிஸிக்கும் இடையிலான சந்திப்பின் போது, இன்னர் சிற்றி பிரஸ் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன ஆகியோர் கலந்து கொண்டனர்.
எனினும் இதன் போது புகைப்படம் எடுக்கவோ, கலந்து கொள்ளவோ இன்னர் சிற்றி பிரஸிற்கு அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

புலிகளுக்கு ஆதரவாக பேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மீது நடவடிக்கை வேண்டும்-இந்தியா.


மதுரையில் நடந்த நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் மலேசியாவின் பினாங்குமாநில துணை முதல்வர் ராமசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக உளவுத்துறை இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.
இதையடுத்து மலேசிய அரசுக்கு, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் நக்கீரன் இணையதள நிருபர் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது,
‘’ஈழத்திற்காகவும், ஈழத்தமிழர்களுக்காவும் நான் எப்போதும் எங்கேயும் குரல் கொடுப்பேன்.
அதனால்தான் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினேன். இன்னும் ஒரு ஆண்டில் மலேசியாவில் தேர்தல் வரப்போகிறது. இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் ஈழத்தமிழர்களுக்கு முழு அங்கீகாரம்
அளிப்போம்.
ஈழத்தமிழர்கள் விசயமாக நேற்று கூட ஐநா அதிகாரிகளிடம் பேசினேன். மலேசிய உள்துறையிடமும் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறையின் கடிதம் பற்றி எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து என்னிடம் கேட்டால், நான் விளக்கமளிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

மகிந்தவின் ரகசிய அழைப்பை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்.


இலங்கை திரைப்பட விழாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்று ரஜினிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசிய தூது அனுப்பினார். ஆனால் அதை அவர் வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்தார், என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.இலங்கையில் அடுத்த வாரம் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது இந்தியாவின் முதல் நிலைக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது இலங்கை அரசு. ஆனால் இதற்கு தமிழ் திரையுலகம் மசியவில்லை.சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் திரையுலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விழாவின் தூதராக இருந்த அமிதாப் அந்தப் பதவியிலிருந்தே விலகிக் கொண்டார். அந்த விழாவுக்குப் போகமாட்டேன் என்றும் கூறிவிட்டார். புதிய தூதராக சல்மான் கான் பொறுப்பேற்றுள்ளார்.அமிதாப் குடும்பத்திலிருந்து அபிஷேக், ஐஸ்வர்யா ராய் என யாருமே இந்த விழாவில் பங்கேற்க மாட்டோம் என் அறிவித்துள்ளனர்.இதனை இலங்கை அரசு முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே, பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, முன்னணி இந்தியக் கலைஞர்கள் அனைவரும் கொழும்பு வருவார்கள் எனக் கூறி வருகிறது.இந் நிலையில், உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த விழாவுக்கு வருமாறு இலங்கை அரசு சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பிதழ் கொடுத்தது.பொதுவாக, ஒரு மரியாதைக்காகவாது இதுபோன்ற அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் ரஜினி, இந்த அழைப்பிதழைப் பெறவும் மறுத்துவிட்டார். அவரது அலுவலகமும் இந்த அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தச் செய்தி வெளியில் தெரிந்த பிறகுதான், தமிழ் திரையுலகம் வேகத்துடன் செயல்பட்டு விழாவைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தது.இந் நிலையில் அதிபர் ராஜபக்சேவே ரகசியமாக தூது அனுப்பியுள்ளார் ரஜினிக்கு. எப்படியாவது இந்த விழாவில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ராஜபக்சே லைனுக்கே வராத ரஜினி, அவரது அழைப்பையும் எடுத்த எடுப்பில் புறக்கணித்து, இனியொரு முறை இதுபற்றிப் பேசவோ யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என்று வேகமாகக் கூறியுள்ளார்.இந்தத் தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளவர், கவிஞர் தாமரை. அவர் கூறுகையில்,“தமிழ் மக்களைக் கொன்றொழித்துவிட்டு ஒன்றும் நடவாததுபோல இருக்க இலங்கை அரசு முயல்கிறது. இதை இப்படியே விட்டுவிட முடியாது. இவ்வளவுக்கும் பிறகும், இலங்கை அரசுத் தரப்பில் திரை உலகினரைத் தனிப்பட்டரீதியில் தொடர்புகொண்டு வசப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.இந்த ‘ஐஃபா’ விழாவில் கலந்துகொள்ளுமாறு ரஜினிகாந்த்துக்கு ராஜபக்சே தூதுவிட்டார். ஆனால், ரஜினி அதை வந்த வேகத்தில் நிராகரித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.இதுகுறித்து ரஜினியின் அலுவலகத்தில் நாம் தொடர்பு கொண்டபோது, “இலங்கைத் தரப்பில் யார் தொடர்பு கொண்டாலும் அதற்கு பதிலளிக்கவோ, பெரிதாக ரியாக்ட் பண்ணவோ வேண்டாம் என்று ரஜி்னி கூறிவிட்டார் என்றனர்.

27 மே 2010

நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக பிரச்சாரம்,மட்டக்களப்பில் இருவர் கைது.



நாடு கடந்த தமிழீழம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் பிரசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாண்டிருப்பு மற்றும் எருவில் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இருவரும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்படி மக்களிடம் பிரசாரம் செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளின் பிரசார வீடியோக்கள் காணப்பட்டதாகவும் இவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அமைச்சருக்கு எதிராக திருச்சியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!



இலங்கை ராணுவ மந்திரியைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்.நாம் தமிழர் இயக்கத்தவர் 50 பேர் திருச்சியில் கைது.
தமிழ் இனத்தை கொன்றொழித்த சிங்கள ராணுவ மந்திரி தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணிக்கு உல்லாசப்பயணமாகவும் தனது பாவத்தை கழுவுவதற்காகவும் இன்று வருகை தரத் திட்டமிட்டிருந்தான்.
இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவர் வருகையை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.
அதன்படி இன்று காலை விமான நிலையம் எதிரே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது.இதனால் இன்று வருகை புரிந்த சிங்கள ராணுவ அமைச்சர் திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் வெளிவரமுடியாமல் தவித்தார்.
இதனை அடுத்து நாம் தமிழர் இயக்கத்தவர் பிரபு,ஜெயந்தி,ஜெயதேவன் உட்பட நாம் தமிழர் இயக்க தோழர்கள் 50 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

போராளிகளை விசாரிக்க வவுனியாவில் சிங்கள நீதிபதி நியமனம்!

தடுப்புக்காவலில் உள்ள போராளிகள் தொடர்பான வழக்குகளை, அரசுக்கு சார்பாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கென - அரசியல் அமைப்புச் சட்டத்தினை மீறி - வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் இன்று ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிய நீதிபதியாக சிங்களவரான சமரக்கோன் நியமிக்கப்பட்டு இன்று சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி தமிழ் பிரதேசங்களில் தமிழர் தான் நீதிபதியாகச் செயற்பட வேண்டும். ஆனால் அந்த நடைமுறையினை மீறி சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தடுப்பில் உள்ள போராளிகளை விடுவிப்பது தொடர்பிலான முடிவுகளை எடுக்கக்கூடிய நீதிமன்றமாக வவுனியா உயர் நீதிமன்றம் விளங்கிவருகின்றது. இன் நிலையில் சிங்களவர் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் போராளிகளின் விடுவிப்புத் தொடர்பில் அவர் ஈவிரக்கமற்ற முறையில் நடந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளதாக மக்கள் தரப்பில் இருந்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை இதுவரை காலமும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வாதங்களை முன்வைத்த தாம் இனிவருங் காலங்களில் சிங்களத்தில் வாதிடவேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களைக் கொண்ட வவுனியா மாவட்டத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு கேட்டறிந்து தீர்ப்புச் சொல்லப்போகின்றார் என்றும் தமிழர் தரப்பில் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதி மாசுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!


சர்வதேச நீதி மாசுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை விமர்சனம் வெளியிட்டுள்ளது. தாம் வெளியிட்டுள்ள 111 பக்கங்களை கொண்ட சித்திரவதை தொடர்பான அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்பு சபை இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை சில பலமிக்க அரசாங்கங்கள் மூடிமறைத்துள்ளதாக மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் தலையிடவில்லை என்பதை அந்த சபை குறைகூறியுள்ளது.
இலங்கையின் இறுதிப்போர்க்காலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அந்த வேளையில் ரத்தவெள்ளம் ஏற்பட்டிருந்ததாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டமையையும் மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை, யோசனை ஒன்று நிறைவேற்ற முயற்சித்தமையை மன்னிப்பு சபை வரவேற்றுள்ளது.

26 மே 2010

அகதிகள் நூறு பேருடன் அவுஸ்திரேலியா சென்ற கப்பல் கடலில் மூழ்கியதா?




கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2ம் திகதி இந்தோனேசியாவில் இருந்து 100 இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா நோக்கிச் சொன்ற படகு, அப்படியே கடலில் மூழ்கி அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தற்போது அவுஸ்திரேலிய புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டனர் என்றும் இதுவரை அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வரவில்லை என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி மிச்சல் கார்மொடி அந்நாட்டின் விசாரணைக்குழு ஒன்றுக்கு தெரிவித்துள்ள தகவல் ஒன்றின்படியே இச் செய்தி தற்போது கசிந்துள்ளது.இப் படகு புறப்பட்ட சில தினங்களில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இந்தோனேசிய அதிகாரிகள் இது குறித்து அறிவித்ததாகவும், இருப்பினும் பல நாட்கள் கழித்தும் இப் படகு அவுஸ்திரேலியா வராததால், அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் இந்தோனேசியாவை தொடர்புகொண்டு, இக் கப்பலை தேடுமாறு வேண்டுகோள் விடுத்ததாக அறியப்படுகிறது. இந்தப் படகு கிறிஸ்மஸ் தீவை ஒரு வேளை சென்றடைந்திருக்குமா? என்று ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்திய போதிலும் அங்கும் அந்தப் படகு வந்திருக்கவில்லை என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அக்டோபர் 2ம் திகதி இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட இப் படகைப் பற்றி, புலம்பெயர் தமிழர்கள் விடயம் அறிந்திருந்தால், அல்லது தற்போது அப் படகு எங்கு நிற்கிறது என்ற விடயம் தெரிந்தால் உடனடியாக கீழ் உள்ள தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்புகொள்ளவும். இப் படகில் பயணித்த அகதிகளின் உறவுகள், மிக ஏக்கத்துடன் இவர்கள் நிலைகுறித்து அறிய பெரிதும் ஆவலாக உள்ளனர். மேற்படி அவர்களுக்கு உதவ அதிர்வு இணையம் ஆவன செய்ய கடமைப்பட்டுள்ளது. எனவே வாசகர்களே நீங்கள் அறிந்த விடயத்தை உடனே தெரியப்படுத்துங்கள். 0044 787 331 4360
செய்தி:அதிர்வு இணையம்.

போர்க் குற்றவாளிகள் புலம்பெயர் தேசங்களில் இராஜதந்திரிகளாக பதவி வகிப்பதை தடுப்போம்!



சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இன அழிப்புப் போரைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான இராஜதந்திரப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. தாயக விடுதலைக்கான களம் புலம்பெயர் தமிழுறவுகளின் கைகளுக்கு மாறியுள்ளதை அரசும் நன்கு உணர்ந்துள்ளது.
இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடடிவக்கைகளை அது மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இன அழிப்புப் போரில் போர்க் குற்றங்கள் புரிந்த இராணுவத் தளபதிகள் இராஜதந்திரத் தூதுவர்களாகவும் தூதரக அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர். இந்த நியமனம் இரு வகை முக்கிய இலக்குகளைத் கொண்டிருக்கிறது.
போர்க் குற்றவாளிகளை இராஜதந்திரிகளாக மாற்றும் போது அவர்களுக்கு இராஜதந்திர விதிமுறைகளின் படி பாதுகாப்புக் கிடைக்கிறது. தூதரகத்தில் அமர்ந்தவாறு புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான நடவடிக்களை இவர்களால் மேற்கொள்ள முடியும் மனித நேயப் பணியாளர்களை கண்காணிப்பதற்கும் அவர்களை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கும் அரிய வாய்ப்பு ஏற்படுகிறது.
தூதுவர் நியமனத்திற்கு முன்பாக இவர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் முக்கிய பணிப்புரை பற்றி செய்தி எமக்கு எட்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விடுதலை உணர்வும் தாயகப் பற்றும் உச்சநிலையில் இருக்கின்றன. விடுதலைப் போர் முற்றாக நிறுத்தப்படவில்லை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழுறவுகள் மனதில் அது தணியாத தாகமாக இருக்கிறது. உங்களால் இயன்ற மட்டிற்கு விடுதலை உணர்வை முடக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுங்கள்.
இந்த பணிப்புரைக்கு அமைவாக இலங்கையின் வெளிநாட்டுத் தூதரங்கள் தோறும் தமிழர்களுக்கு எதிரான பரப்புரைகளும் இடையூறுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் முடக்கி விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக எமது மனித நேயச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கும் சிறையில் இடப்படுவதற்கும் இது தான் காரணம்.
இலங்கையில் அரசியல் இராணுவமயமாகியுள்ளது. அதன் இராணுவமோ அரசியல் மயமாகி உள்ளதோடு இராஜதந்திரத் துறையுமாகியுள்ளது. இது சென்ற நூற்றாண்டின் அதிபர் ஜெயவர்த்தன காலத்தில் ஆரம்பித்த சிங்களப் பேரினவாதப் பாரம்பரியமாகும். ஜெயவர்த்தனா தமிழர் படுகொலையை பெருமளவில் கச்சிதமாகச் செய்தவர்களுக்கு வெகுமதிகளை வழங்கினார். இதன் காரணமாக இராஜதந்திர பதவி கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் இராணுவத்தினர் இன அழிப்பைத் தீவிரப்படுத்தினர். ஜெயவர்த்தனா செய்த முதல் நியமனம் கடும் தோல்வியில் முடிந்தது. அவருடைய மிக நெருங்கிய உறவினரும் யாழ்ப்பாணத்தில் இன்பன் போன்ற விடுதலை வீரர்களை கடுஞ் சித்திரவதை செய்து படுகொலை செய்தவனுமாகிய புல் வீரதுங்கா என்ற இராணுவத் தளபதியைக் கனடாவுக்கான தூதுவராக நியமித்தார். கனடாத் தமிழர்கள் கொதித்தெழுந்து கடும் போராட்டத்தில் குதித்தனர்.
இதை அவதானித்த கனடா அரசு நாங்கள் இந்த அதிகாரியை படிப்படியாகச் செயலிக்கச் செய்து வெளியேற்றுவோம் உங்கள் போராட்டம் நியாயமானது. அதை இப்போதைக்கு நிறுத்தி வையுங்கள் போராட்டம் நிறுத்தப்பட்டது. தூதுவரும் வெளியேற்றப்பட்டார். இந்த வகையில் கனடா முன் மாதிரியான நாடு.
மணலாறு தமிழர்களை வெளியேற்றிச் சிங்களக் குடியேற்றம் செய்வதற்காக பல அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தவனும், செம்மணிப் படுகொலைகள் போன்றவற்றிற்குப் பொறுப்பானவனுமான ஜானக பெரேராவை அதிபர் சந்திரிக்கா அவுஸ்ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமித்தார் அவுஸ்ரேலியாத் தமிழர்கள் மாத்திரமல்ல அவுஸ்ரேலியா மைய அரசின் எதிர்க்கட்சிகளும் ஜானக பெரேராவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
சர்வதேச அபய ஸ்தாபனம் ஐானக பெரேராவின் நியமனத்திற்கு எதிரான அறிக்கைகளை வெளியிட்டது. போர்க் குற்றவாளியை அவுஸ்திரேலியா எப்படித் தூதராக வரவேற்க இணங்கியது என்ற கேள்வியை அது சர்வதேச மட்டத்தில் எழுப்பியது. இறுதியில் ஒரு குறுகிய காலம் அவுஸ்திரேலியாவில் பதவி வகித்த பின் ஜானக பெரேரா இராணுவ ஆட்சி நிலவும் இந்தோனேசியாவுக்குப் பணிமாற்றம் பெற்றுச் சென்றார்.
இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய 57ம் படையணியின் தளபதியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இப்போது ஜெர்மனியில் இலங்கைத் துணைத் தூதராகப் பதவி வகிக்கிறார். இவர் ஒரு போர்க் குற்றவாளி. எப்படி இவருடைய நியமனத்தை ஜேர்மனி ஏற்றுக் கொண்டதோ தெரியவில்லை.
போர் மரபுகள் மற்றும் விதிமுறைகளை மீறிப்போர் புரிந்தமை, வன்னியில் கொல்லப்பட்ட பொது மக்கள், பாரம்பரிய பூர்வீக நிலங்களில் இருந்து மக்களை இடம் பெயரச் செய்தல், மனிதத்திற்கு எதிராகப் போர் புரிதல், அநாதைகளாக அல்லற்படும் குழந்தைகள், விதவைகளாக வாழ்ந்த பெண்கள், உடல் உறுப்புக்களை இழந்தோர்கள், சித்தப்பிரமை அடைந்தோர்கள் சார்பில் நியாயம் கேட்க வேண்டிய பொறுப்பு எம்முடையதாகும்.
எனவே சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டியவர் தான் ஜேர்மனிக்கான துணைத் தூதுவர் மேஐர் ஜெனரல் ஜகத் டயஸ்.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் போன்ற படையதிகாரிகள் இன்னும் இலங்கையில் இருந்து தூதுவர் நியமனம் பெற்று வெளிவரும் சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை வெளியேற்றும் நடவடிக்கைக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
ஜேர்மன் வாழ் தமிழ் மக்களே!, புலம்பெயர் வாழ் மக்களே! உங்கள் நியாயபூர்வமான எதிர்ப்பை ஜேர்மன் அரசுக்கும், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத் தொண்டர்கள், மனித உரிமை அமைப்புக்களையும் சந்தித்து உங்கள் ஆதங்கத்தை தெரிவித்து அனைத்துலக அபய ஸ்தாபனத்திற்கும் கண்டனக் அறிக்கைகளை அனுப்புவதோடு போர்க் குற்றங்கள் பற்றிய தகவலையும் வழங்குங்கள்.
உலகத் தலைநகரங்கள் தோறும் கண்டனப் பிரசுரங்கள், கவன ஈர்ப்புப் போராட்டங்களை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்க்கு எதிராக குரல் கொடுப்போம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
பேராசிரியர் ப. சிவசண்முகம்

செயலாளர்,

தமிழீழ எதிலிகள் பேரவை.

ஈழம் புதிய பாடல்!

தொழிலதிபராக நடித்த நிருபரிடம் லஞ்சம் கேட்ட இளவரசி!


தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நிருபரிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் மருமகள் சாரா ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டார். ராணி எலிசபெத்தின் 2வது மகன் இளவரசர் ஆன்ட்ரூ. இவரது முன்னாள் மனைவி சாரா பர்கூசன். நியூஸ் ஆப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் இவரை சமீபத்தில் சந்தித்தார்.அப்போது அவர் தன்னை இந்தியத் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து நாட்டில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆன்ட்ரூவை சந்திக்க விரும்புவதாகவும் சாராவிடம் கூறினார்.ஆன்ட்ரூவை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமானால் தனக்கு ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று சாரா கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த நிருபர் முதல் கட்டமாக ரூ.28 லட்சத்தை சாராவிடம் கொடுத்தார். அதை அவர் வீடியோவாக படம் எடுத்தபோதுதான் தன்னிடம் பணம் கொடுத்தவர் நிருபர் என்று சாராவுக்கு தெரிந்தது.உடனே சாரா அந்த பணத்தைத் திருப்பி கொடுத்ததுடன், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பிரிட்டிஷ் அரச குடும்ப வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 மே 2010

மலேசியாவில் தவிக்கும் மக்களை காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.-டேவிட் பூபாலபிள்ளை.


மலேசிய கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 75 ஈழத்தமிழர்களை (பெண்கள், குழந்தைகள் உள்பட) பினாங்கு கடற்கரைக்கு மலேசிய கடற்படை அழைத்து வந்தது. எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி 75 ஈழத்தமிழர்களும் மலேசிய அரசை கேட்டுக்கொண்டனர்.
இதை முதலில் எற்றுக்கொண்ட மலேசிய அரசாங்கம், அதன்பிறகு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனி முகாம்களில் அடைக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தும் முகாம்களை விட்டு வெளியே அனுப்பவில்லை என்று முகாமில் உள்ள 61 ஆண்கள் கூறினர்.
இப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 61 ஆண்கள் மட்டும் திங்கள் கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
இந்த செய்தியை நக்கீரன் இணையதளம் மூலமாக அறிந்த கனடா நாட்டு தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டேவிட், மலேசிய முகாமில் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர், உங்களை காப்பாற்ற கனடா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் மலேசிய முகாமில் இருந்து மீட்போம். அதனால் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்களப்படையின் அராஜகம்!மற்றுமோர் போர்குற்ற ஆதாரம்.(காணொளி கோரமானது)

சிங்கள அரசின் மற்றுமொரு யுத்தக்குற்ற ஆதாரம்.இரசாயன ஆயுதங்கள் மூலம் கோழைத்தனமாககொன்று குவிக்கபட்ட எம் குலப்பெண் தளிர்களைபாருங்கள்,சிங்களத்துடன் தமிழன் இனியும் ஒட்டிவாழமுடியுமா?சிந்தியுங்கள்!.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த உலக சாதனையாளர் பரீத் நசீர் காலமானார்!


எட்டு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பரீட் நசீர் நேற்று காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 56. புத்தளத்தில் காலமான இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். வேக நடை, யாழ்பாணத்தில் இருந்து அம்பாந்தோட்டைக்கு சைக்கிளைப் பின்புறமாகச் செலுத்தியமை, 500 நச்சுப்பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்களாக தொடர்ந்து பந்தைத் தட்டி சாதனை படைத்தமை, 3 நாட்களாக தொடர்ச்சியாக ஒன்றைக் காலில் நின்றமை போன்றவை இவரின் சாதனைகளில் சிலவாகும். இவை தவிர, பூல் டூம் நடனம், நான்கு நாட்களாக தொடர்ச்சியான நடனம், 72 மணி நேரமாக கைகோர்த்து நடனம் ஆடியமை ஆகிய உலக சாதனைகளையும் இவர் படைத்துள்ளார். இவரது புதல்வர் பர்சான். இவரும் உலக சாதனையாளரே. கடந்த வருடம் ஜூலை மாதம் 23ஆம் திகதி உலக சாதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த போது விஷப்பாம்பு தீண்டி இவர் மரணமானார். இந்நிலையில், நேற்று காலமான பரீட் நசீரின் ஜனாசா நல்லடக்கம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றதாக. அவரது மற்றுமொரு புதல்வரான உலக சாதனையாளர் ரிபாஸ் நசீர் தெரிவித்தார்.

அண்ணன் வருவாண்டா,தமிழீழம் தருவாண்டா..!


ராஜ ராஜ சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி .தொடுத்தான்ர என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை.என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா தமிழ் ஈழம் வென்று தருவான்ராதளராதே தமிழா தளராதே…
தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே தமிழா .முப்படையும் வரும் மும் முனையிலும் மோதும் .பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா.என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும் விடப்போவதில்லை .எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா வன்னிமண்ணிலே.தளராதே தமிழா தளராதே…
நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா.அண்ணன் விடப் போவதில்லையடா .இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா .அண்ணன் படை விரட்டுமடா .இங்கு தமிழன் ஆளுவானடா .தளராதே தமிழா தளராதே..
அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடாகாலம் வரும் நல்ல நேரம் வரும் .கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும் .எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா .தளராதே தமிழா தளராதே .
அண்ணன் படை தமிழீழம் வென்று தரும்.மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும் .தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா .சோனியாவின் துண்டு சாணியாக மாறும் .தளராதே தமிழா அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு .தளராதே தமிழா தளராதே தமிழா தளராதே தமிழா..

பாமினி.

24 மே 2010

தமிழின படுகொலையின் பங்காளியான இந்தியா விடுதலை புலிகள் சட்டவிரோத அமைப்பென அறிவித்துள்ளதாம்!




தமிழகத்தில் சில தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். ( ஈழ நாதம் குறிப்பு: சீமானின் நான் தமிழர் இயக்கத்தினையே இவர்கள் குறி வைக்கின்றார்கள்)
இலங்கையில் பெரும்பாலான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், `நம்பிக்கை துரோகிகள்’ (இந்திய அரசு) மற்றும் `எதிரிகளை’ (இலங்கை அரசு) பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளதாம். ( ஈழ நாதம் குறிப்பு: இந்த வேலைகளை சிறிலங்காவினால் அனுப்பபட்ட புலனாய்வு நபர்கள் மற்றும் சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படும் சில முன் நாள் போராளிகளே செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புலிகள் என்றும் , பொட்டமான் என்றும் அறிக்கைகள் இவ்வாறுதான் தமிழ் நாட்டில் தயாராகி விடப்படுகின்றன.)
இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது. கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.
உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரச்சாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன. ( ஈழ நாதம் குறிப்பு: இந்த செயற்பாடு பல வருடங்களாக நடக்கின்றன ஆகவே ஏன் இந்தியா இப்போ கவனத்தில் கொள்ளவேண்டும்)
மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.
1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.ரி.ரி போராளிகள், அந்த அமைப்பை விட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.ரி.ரி. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது;
2) தடையாணை செயலில் இருந்தும், இந்தியாவில் எல்.ரி.ரி ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.ரி.ரி. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.
3) இந்த அமைப்புகுறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.ர்.ரி. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
எல்.ரி.ரி. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படவேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.
மேலும் அ) எல்.ரி.ரி. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும், ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3-ம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை (எல்.ரி.ரி) இயக்கத்தினை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது’’என்று குறிப்பிட்டுள்ளது.
ஈழ நாதம் குறிப்பு: மேற்சொன்னவை எல்லாம் கடந்த காலங்களில் இந்திய அரசினால் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கூடவே விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தடையும் இருக்கின்றது. எனினும் தற்போது அதற்கு மேலாக ஓர் தடை வருவதற்கான காரணம்..
1 தமிழகத்தில் சீமான் தலைமையிலான மக்கள் அணியினையும் அடுத்ததாக அதற்காக அணிதிரளும் மக்களை விரட்டுவதற்காகவும் இருக்கலாம். இது கருணா நிதியின் ஆலோசனையாகவும் இருக்கலாம்.
2 விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள், முன் நாள் போராளிகளை கைது செய்வது.
3 விடுதலைப்புலிகள் போராளிகளை வைத்து ஏதாவது நாடகம் ஒன்றை இலங்கை அல்லது வேறு இடங்களில் இந்திய அரசு பயன்படுத்துவற்கான ஓர் முன் பாதுகாப்பாகவும் இருக்கலாம்.
நன்றி: ஈழநாதம்.

சிங்கள அரசின் கொடூரங்களை மூடி மறைத்து,புலிகளை குற்றவாளிகளாக சித்தரிக்க முயலும் பான் கீ மூன்!


புலம்பெயர் தமிழர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக பல வெளிநாடுகள் இலங்கை இராணுவம் இழைத்த யுத்தக்குற்றம் தொடர்பாக கவனம் செலுத்திவரும் நிலையில், இலங்கை அரசால் ஒரு இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டு, நம்பியாரூடாக அது செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பட்டுள்ளது. அவ் அறிக்கையின் பிரகாரம் பான் கீ மூன் நேற்றைய தினம் புலிகளைச் சாடி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இறுதி யுத்தம் நடைபெற்ற வேளை புலிகள் பெண்களின் தலை முடிகளை வெட்டியதாகவும், அதனால் அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வது தடைப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம், இரசாயனக் குண்டுகளைப் பாவித்தது, கன ரக ஆயுதங்களை மக்கள் வாழும் பகுதியில் பாவித்தது, உயிரோடு மக்களை பதுங்கு குழியில் போட்டுப் புதைத்தது, இவை அனைத்தையும் விடுத்து, புலிகள் பெண்களின் முடியை வெட்டிவிட்டார்கள், என்று புலம்புகிறது சர்வதேச சமூகம். ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்திருக்கும் நேரம், ஒரு இனமே அங்கே அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரம் சர்வதேச சமூகத்தின் பார்வையை திசை திருப்ப இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கையே இவை. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ள கெகலிய ரம்புக்வல, இதனால் தான் தனது இராணுவம் பல பெண்களைக் கைதுசெய்ததாகக் கூறியிருக்கிறார். இல்லாவிட்டால் இவர் இராணுவம் சும்மா இருந்திருக்குமா என்ன ?இலங்கை அரசு யுத்தக்குற்றம் இழைத்தமையை மறந்து, சில அமைப்புகள் தற்போது பல்டி அடித்து புலிகள் யுத்தக்குற்றத்தில் ஈடுபட்டனர் எனக் கூறி அதை, ஊதிப் பெரிதாக்க முயல்கின்றனர். குறிப்பாக இலங்கை அரசை யுத்தக் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்காக பலர் முனைப்புக்காட்டி வருகின்றனர். ஆனால் இலங்கை அரசானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை, அதனால் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்று நடவடிக்கை எடுக்க முடியாது, அப்படி எடுப்பதற்கு ஐ.நாவின் பாதுகாப்புச் சபையின் ஒப்புதல் தேவை.அவ்வாறு பாதுகாப்புச் சபை கூடினால், அதனை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது வீட்டோ அதிகாரங்களை பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை செயலிழக்கச் செய்யும். இதுவே கடந்த வருடமும் நிகழ்ந்தது.இந்த நிலையில் இலங்கை அரசை எவ்வாறு யுத்தக் கூண்டில் நிறுத்த முடியும் என்பது மிகவும் கேள்விக்குறியான விடயமாக தற்போது உள்ளது.இலங்கை அரசுக்கு எதிராக குறிப்பாக 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 1) யுத்தக்குற்றம், 2) இன அழிப்பு,இதில் இன அழிப்பை நாம் முன் நகர்த்துவதன் மூலம் இலங்கை அரசை நாம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளமுடியும். எனவே குறிப்பாக புலம்பெயர் சமூகம், எந்த நடவடிக்கையை நாம் முன்னெடுப்பதன் மூலம் இலங்கை அரசை தண்டிக்க முடியும் என்பதில் தெளிவுபெறுதல் நல்லது.

உள் விவகாரங்களில் தலையீடு வேண்டாம்,சிங்கள அமைச்சர் பீரிஸ், பான் கீ மூனிடம் கோரிக்கையாம்!


நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்திய செய்தி இணையத்தளமான பி.ரி.ஐக்கு இத்தகவலைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான அழுத்தங்கள் தமது எதிர்கால நடவடிக்கைகளைப் பாதிக்கும் என அமைச்சர் கூறியதாக பி.ரி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.சபையின் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பிறகு இவ்வாறு தெரிவித்ததாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.போர்க் குற்றங்கள் சம்பந்தமாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கடந்த வாரம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன வலியுறுத்தியிருந்தன. அதேவேளை, போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கத் தயாராக இல்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாகனங்களை தேடும் வன்னி மக்கள்!



யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சியில் கொண்டுவந்து குவிக்கப்படும் நிலையில் தமது வாகனங்களைத் தேடி மக்கள் அலையாய் அலைகின்றனர். கடந்தவாரம் வரையில் 6250 மோட்டார் சைக்கிள்களும் 11ஆயிரம் சைக்கிள்களும் 45 ஏனைய ரக வாகனங்களும் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்திற்கு எதிர்புறமாக திருநகர்செல்லும் வீதிக்கு அருகேயுள்ள வளாகத்தில் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள வாகனங்களை விடவும் மேலும் பத்தாயிரம் மோட்டார் வண்டிகளும் ஏனைய வாகனங்களும் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் இதற்கான திகதி குறித்து தெளிவாக கூறமுடியாது என வாகனங்கள் கொண்டு வந்து இறக்கப்படும் வளாகத்தில் பணிபுரிபவர்கள் தெரிவிக்கின்றனர். தமது வாகனத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்காக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள் முகாம்களில் இருந்தும் வவுனியா யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சி வந்து வாகனங்களை தேடிவருகின்றனர்.குறித்த திகதியில் வாகனங்கள் கையளிக்கப்படும் என எத்தனையோ திகதிகள் குறிக்கப்பட்டு அவை கடந்து போயுள்ள நிலையில் தற்போது இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டு பிள்ளைகளைத் தேடுவது போன்று தமது வாகனங்களின் படங்களுடன் தேடுதல் நடவடிக்கையில் மக்கள் அலைந்து திரிகின்றனர். கொண்டுவரப்பட்டுள்ள வாகனங்களில் அநேகமானவற்றின் பெறுமதி மிக்க பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் அன்றேல் இல்லாத நிலையிலேயே கிளிநொச்சியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வாகனங்களைத் தேடும் சிலர் கவலை வெளியிட்டனர். இப்படியான நிலையில் வாகனங்களைப்பார்த்து நொந்து போவதைவிட தம் உயிராக கருதிய வாகனங்களை காணமல் இருந்திருந்தால் பரவாயில்லை என அங்கலாய்க்கும் மக்களையும் கிளிநொச்சியில் வாகனங்கள் கொண்டுவந்து குவிக்கப்படும் இடத்தில் காணமுடிகின்றது. தற்போதும் வவுனியா மெனிக் பாம் முகாமில் இருக்கின்ற 46வயதுடைய ஒருவர் கருத்து வெளியிடுகையில், கடந்த வாரத்தில் கிளிநொச்சிக்கு வந்து தமது வாகனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் கருத்துவெளியிடுகையில், "என்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு ட்ரக்டரும் இருந்தன ஆனால் தற்போது எதுவுமே இல்லை இங்கே ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள போதும் என்னுடைய வாகனங்கள் எதனையும் காண முடியவில்லை. என்னுடைய வாகனத்தை என்னால் இனங்காண முடியும் பிள்ளைகளைப் போன்று பராமரித்த வாகனம் பலவருடங்களாக நான் பராமரித்த வாகனம் அதனை என்னால் இனங்காணமுடியும். ஆனால், இங்கு காணவில்லை. இங்குள்ள வாகனங்களைப் பார்க்கும் போது என்னுடைய வாகனத்திற்கு என்னவாகியிருக்குமோ எனக் கவலை ஏற்படுகின்றது. நாங்கள் மாங்குளம் அம்பகாமம் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் தொடர்ந்தும் வவுனியா மெனிக் பாம் முகாமிலேயே வைக்கப்பட்டுள்ளோம் எமது பகுதியில் இன்னமும் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை" என்றார்.யுத்தத்திற்கு முன்பாக வன்னிப்பகுதியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களைச்சேர்நத மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் குறைந்தது இரண்டு சைக்கிள்கள் காணப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி வன்னியில் மொத்தமாக ஒருலட்சத்திற்கு அதிகமான சைக்கிள்கள் இருந்திருக்கக் கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனைத்தவிர வன்னியில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் ஆயிரக்கணக்கான உழவு இயந்திரங்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கை மீது போர்குற்ற விசாரணை,ஐ.நாவை வலியுறுத்துமாறு கிலாரிக்கு காங்கிரஸ் உறுப்பினர் கடிதம்!



இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், நிதிச் சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஸ்டிவ் டிரை கோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமது வேண்டுகோளை விடுத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் அந்த நாட்டு அரசினால் நடத்தப்படும் விதம் குறித்த எமது கவலையை வெளிப்படுத்தி நானும் எனது சகாக்கள் 25 பேரும் ஒருவருட காலத்துக்கு முன்னர் கடிதமொன்றை உங்களுக்கு அனுப்பி இருந்தோம். இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதை இலங்கை அரசு தாமதப்படுத்தி உள்ளது.
இலங்கையில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்துமாறும் நீதி வழங்குமாறும் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகத்தைத் தூண்டுவதற்கு உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கடந்த 23 வருடங்களில் இலங்கை மக்கள் மிக மோசமான யுத்தமொன்றைச் சந்தித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான மோசமான குற்றங்களாகும். இதன் காரணமாக மோதலினால் உருவான துயரங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
இறுதி நான்கு மாதங்களில் 7ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனவும் 13 ஆயிரம் பேர் கயமடைந்தனர் எனவும் ஐ. நா. சபை மதிப்பிடுகின்றது. ஏனைய மதிப்பீடுகள் 30ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கு தேசிய நல்லிணக்கமும் நிரந்தர சமாதானமும் அவசியமாகும். எனினும், மோதலின்போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறாமல் இது சாத்தியமாகாது.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை இலங்கை ஜனாதிபதி 2009இல் தெரிவித்திருந்தமை எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்' குறித்த ஆணைக்குழுவை நியமித்ததன் மூலம் ஒருவருட காலத்துக்குப் பின்னர் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
கடந்த கால ஆணைக்குழுக்களின் பயனற்ற தன்மை மற்றும் முன்னைய விசாரணைகளை ஜனாதிபதி கைவிட்டமை போன்றவற்றால் தற்போதைய ஆணைக்குழுவை அமைக்கும் நோக்கம் மற்றும் பலாபலன்கள் குறித்து சந்தேகம் எழுகின்றது.
மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.சபை விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல. பல கௌரவம் மிக்க தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இந்த வேண்டுகோளைப் பகிரங்கமாகவே விடுத்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அரசும் நீதியை நிலைநிறுத்தவும், மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான தனிநபர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் விரும்பினால் ஐ.நா.சபை மூலமாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் மாத்திரமே அது சத்தியமாகும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 மே 2010

ஸ்ரீலங்கா விழாக்களில் பங்கேற்கமாட்டோம்.-கமல்




FICCIயின் பொறுப்பிலிருந்து கமலகாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை(23.05.2010) மே 17 இயக்கம் சார்பில் கமல்ஹாஸன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கமலகாசன் கொடுத்துள்ள அறிக்கையில் சிறீலங்கா விழாவில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

மே 17 இயக்கத்தினரின் போராட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் கமலகாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில்,

“தமிழ் உணர்வாளர்களே

மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஃபிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும்.

உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை.

என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள் கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர்.

அவை நான் தென்னக FICCI தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி, எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், FICCI தலைமை, FICCI entertainment தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து IIFA விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர்.

மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது FICCI போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன்.

FICCI விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் FICCI கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக FICCI தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார் கமலகாசன்.

நடிகர் கமல் வீட்டின் முன் தமிழின உணர்வாளர்கள் போராட்டம்!


இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிற்கு வணிக ஆதரவு அளித்துள்ள இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக் கூட்டமைப்பு (FICCI) பொறுப்பிலிருந்து நடிகர் கமல் ஹாசன் விலக வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் தமிழன உண‌ர்வாள‌ர்க‌ள், கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதன் தூதர் பொறுப்பில் இருந்து அமிதாப் பச்சன் விலக வேண்டும் என்றும், வணிக ஆதரவு தரும் ஃபிக்கி விலகிக் கொள்ள வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் விளைவாக அமிதாப்பச்சன் தூதர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால், ஃபிக்கி வணிக நோக்குடன் அங்கு திரைப்பட விழாவை நடத்துவதில் முனைப்பாக உள்ளது.
இந்நிலையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமல் ஹாசன் வீட்டின் முன் மே 17 இயக்கத்தின் சார்பாக தமிழன உணர்வாளர்கள் திரண்டனர். இதில் எழுத்தாளர் புகழேந்தி தங்கராஜ், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, பத்திரிக்கையாளர் கா.அய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவர்கள், ஃபிக்கியின் ஊடக பொழுது போக்கு மற்றும் வணிக பொறுப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து கமல்ஹாசன் விலக வேண்டும் என்று கோரிக்கைகள் அடங்கிய போர்டுகளை பிடித்தனர்.
சிறிது நேரத்தில் கமல் அங்கு வந்தார். பிறகு அவருடைய அலுவலக மேலாளர், மே 17 இயக்கம் விடுத்த வேண்டுகோள் தொடர்பான மனுவை பெற்றுக்கொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் அமைப்பாளர் திருமுருகன், ’’கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததற்குப் பிறகும் அந்த விழாவை அங்கு நடத்துவதில் ஃபிக்கி உறுதியுடன் உள்ளது.
தமிழின படுகொலை குற்றச்சாற்றிற்கு ஆளாகியுள்ள சிறிலங்காவை காப்பாற்றும் நோக்குடன் ஃபிக்கி விழாவை நடத்துவதை எதிர்த்து அந்த அமைப்பில் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிக அமைப்பின் தலைவராக உள்ள கமல்ஹாசன் விலக வேண்டும் என்று மனிதாபிமானத்துடன் எங்களது கோரிக்கையை முன்வைக்கிறோம். இதனை கமல் ஏற்பார் என்று நம்புகிறோம்’’ என்று கூறினார்.

பீகாரில் கிராமத்தவர் ஐவர் சுட்டுக்கொலை,மாவோயிஸ்டுக்கள் கொடுத்த பதிலடி!


பீகாரில் சியோர் மாவட்டம் ரம்பன் பஜார் கிராமத்துக்குள் நுழைந்த மாவோயிஸ்ட்கள், அக்கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மாவோயிஸ்ட் ஒருவரைக் கிராமத்தினர் கொலை செய்தனர். இதற்குக் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் உறவுகளுக்கான போர்க் களத்தை திறக்க வாருங்கள்!


புலம்பெயர் தமிழர்களின் மனச்சாட்சிக்குச் சவாலாக அண்மையில் சிங்கள தேசம் ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய கோரப் படுகொலைகளின் காட்சிப் படங்கள் வெளியாகி வருகின்றன.
இறுதி யுத்த காலத்திலும், விடுதலைப் போராளிகளும், பொது மக்களும் சிங்களப் படைகளிடம் வேறு வழியற்ற நிலையில் சரணடைந்த காலத்திலும், அதற்குப் பின்னரான இன்று வரையான இந்த ஒரு வருட காலத்திலும் இந்த மிலேச்சத் தனமான இனப் படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளது. இன்னமும் நடாத்தப்பட்டு வருகின்றது.
சிங்களர்களின் வரலாறுகளில், அவர்களது கொடூர குணங்கள் ஆங்காங்கே பதிவுகளாக உள்ள போதும், இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறே வெட்கித் தலை குனியும் அளவிற்கு தற்போதைய சிங்கள தேசத்தின் இன வன்முறை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில், நிர்வாணப்படுத்தப்பட்டு, கைகளும் கால்களும் கட்டப்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படும் காணொளிக் காட்சியை 'சனல் 4' எனப்படும் பிரித்தானிய தொலைக் காட்சி ஒளிபரப்பி, சிங்கள தேசம் நடாத்திய இனப் படுகொலையை அம்பலப்படுத்தியது.
அதே 'சனல் 4' தொலைக் காட்சி நிறுவனம் பெருந்தொகையான தமிழ் இளைஞர்களும், சிறுவர்களும் பெரும்பாலும் நிர்வாணப்படுத்தப்பட்டு, பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்வதற்குத் தயாராக, வாய்க்கால் போன்ற பதுங்கு குழிகளுக்குள் இருத்தப்பட்டிருப்பதையும், பலர் சுட்டுக் கொல்லப்பட்டும் பிணங்களாகக் கிடப்பதையும், சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்ட இரு பெண் யுவதிகளின் கொலை செய்யப்பட்ட உடலங்களையும் காண்பித்து, இந்தப் படுகொலைகள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டன என்பதை, அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் வாக்குமூலத்தையும் பெற்று ஒளிபரப்பியுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 'சனல் 4' தொலைக்காட்சியால் அம்பலப்படுத்தப்பட்ட காணொளிக் காட்சியக் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்று சிறிலங்கா அரசால் நிராகரிக்கப்பட்டது.
இந்தக் காணொளிக் காட்சியை ஆராய்ந்த பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தக் காணொளிக் காட்சி உண்மையானது என்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது 'சனல் 4' தொலைக் காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மிகத் தெளிவாக, அந்த முகங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது.
இந்தப் புகைப்படங்களையும் சிங்கள அரசு நிராகரித்துள்ளது. ஆனாலும், மனித உரிமைகள் அமைப்புகளும், ஐ.நா. அமைப்புக்களும் அந்தத் தமிழர்களைப் பார்வையிடக் கோரினால், சிங்கள தேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது என்பது தெரியவில்லை. இந்தப் படுகொலைகளை மேற்கொண்ட சிப்பாய்களில் ஒருவர், 'எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்' - என்று சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
'விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்' - என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட இலங்கை இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில் - முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்' - என்று கூறினார்.
சனல் - 4 தொலைக்காட்சியினால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதி மேலதிக தகவல் ஒன்றினை தெரிவிக்கையில் - விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் - தலைவர் பிரபாகரன் - எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மே 20 அன்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் ஒரு படுகொலைக் காட்சியைச் சித்தரிக்கும் நான்கு புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு விடுதலைப் போராளியை தென்னை மரத்தோடு சேர்த்துக் கட்டி வைத்து, அவரை சிறிய கத்தி ஒன்றால், சிறுகச் சிறுக வெட்டிக் கொல்லும் கோரக் காட்சி தொடர்ந்து நான்கு புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
அவரைக் கொலை செய்தவர்கள் தமிழீழத் தேசியக் கொடியினால் அவரது உடலைப் போர்த்து ஏளனம் செய்துள்ளார்கள். முள்ளிவாய்க்காலுடன் சிங்களக் கொடூரங்கள் முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை என்பதை வெளிவந்து கொண்டுள்ள தகவல்களும் காட்சிகளும் மீண்டும் உணர்த்துகின்றன.
இந்தக் கொடூரங்களைப் பார்த்த பின்னரும், ஈழத் தமிழினம் மீது கூட்டுப் படுகொலையை நடாத்திய இந்திய தேசம் சிங்களத்தின் மீதான போர்க் குற்ற விசாரணைகளுக்கு இன்றுவரை தடைக்கல்லாக இருப்பதுதான் உலகின் மிகக் கேவலமான தமிழினத் துரோகமாக நோக்கப்படுகின்றது.
சிங்கள தேசத்தின் இனப் படுகொலைக் காட்சிகளால் காந்தி தேசம் தற்போது முற்றிலும் அம்மணமாகக் காட்சி தருகின்றது.
உலகத் தமிழ் உறவுகளே...!
எங்கள் ஈழத்தில் சிங்களம் நடாத்திய, நடாத்திவரும் படு கொலைகளையும், தமிழின அழிப்பையும் இனியும் அனுமதிக்கப் போகிறீர்களா?
இருபத்தோராம் நூற்றாண்டின் நாகரிகம் மிக்க மனிதர்களே...!
இன்னுமா எங்கள் மக்களின் அவலங்களை வேடிக்கை பார்க்கப் போகின்றாய்?
புலம்பெயர் தமிழர்களே...!
உங்கள் உறவுகளுக்கான போர்க் களத்தை நிறைக்க வாருங்கள்...!
பொங்கி எழுங்கள்...!
எங்கள் தேசம் விடுதலை பெறும் வரை போராடுவோம் வாருங்கள்!
சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா.வை நோக்கி நீதி கோரும் போராட்டம் குறித்த அறிவித்தல் வெகு விரைவில் அறியத் தரப்படும்.
- பாரிஸ் ஈழநாடு-

22 மே 2010

சத்துருக்கொண்டான் பகுதியில் இளம் பெண் மீது பாலியல் வல்லுறவு!



மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் பதினேழு வயது நிரம்பிய இளம் பெண் இரு கயவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,


இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது,இதையடுத்து அப்பெண் மனமுடைந்த நிலையில் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றதாகவும்,மக்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.


தீப்பிடித்த பின்னரே விமானம் வெடித்து சிதறியது!


டுபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புறப்பட்டு வந்தது. போயிங் 737 வகையைச் சேர்ந்த அந்த விமானத்தில் 163 பயணிகள், 4 குழந்தைகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 173 பேர் இருந்தனர். சுமார் 4 மணி நேர, நேரடி பயணத்துக்குப் பிறகு அதிகாலை 6.30 மணியளவில் அந்த விமானம் மங்களூர் விமான நிலையத்தை நெருங்கியது. விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த விமானம் தரை இறங்க அனுமதித்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் கவனமாக தரை இறங்குமாறு நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தினர். திடீரென விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தில் திடீரென தீ பிடித்தது. அப்போது விமானம், விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்தான் இருந்தது. புகை கக்கிய நிலையில்....விமான நிலைய சுற்றுப்பகுதியை எட்டி இருந்த விமானம், தரை இறங்க சில வினாடிகள் இருந்த நிலையில், நிலை தடுமாறியது. புகை கக்கிய நிலையில் அந்த விமானம் அல்லாடியது. அதன் போக்கும் மாறியது. இதைக் கண்டதும் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே தீ பரவுவதற்குள் விமானத்தை தரை இறக்கி விடலாம் என்று விமானிகள் முயற்சித்தாகத் தெரிகிறது. ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. விமான நிலையத்தின் புதிய ஓடு தளத்தில் இறங்குவற்கு பதில் தவறுதலாக, அதன் அருகில் விமானம் தரை இறங்க ஆரம்பித்தது.. இதனால் மேலும் நிலை தடுமாறிய விமானம் இழுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள மலையடிவார பகுதி மீது பலத்த சத்தத்துடன் மோதியது. மறுவினாடி விமானம் வெடித்துச் சிதறியது. உறவினர்களை வரவேற்க வந்தவர்கள் இந்த கோர விபத்தை நேரில் பார்த்ததும் துடித்துப் போனார்கள். விபத்து குறித்து உடனடியாக மீட்புக் குழுக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமான நிலையம் அருகில் உள்ள டெக்கான் பார்க் மற்றும் ரயில் பாதை இடையே விமானம் தீ பிடித்தபடி கிடந்தது. முள்காடாக இருந்ததால், விமானத்தின் அருகில் செல்ல முதலில் மீட்புக்குழுவினர் தடுமாற வேண்டியிருந்தது. இதையடுத்து மீட்புப் பணிக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 150 வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த பாதை மூலம் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. சுமார் 25 அம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நின்றன. தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். முதலமைச்சர் தகவல் விமானம் மோதிய வேகத்தில் தீ பிடித்து வெடித்து சிதறியதால் சம்பவ இடத்திலேயே பயணிகள் பிணமாகிப் பேனார்கள். விமானப் பணியாளர்கள் உட்பட 163 பேர் பலியானதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறினார். விமானத்தின் பின் பகுதியில் இருந்தவர்களில் 6 பேர் மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார்கள். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியபடி கிடந்தனர். உயிருக்குப் போராடியபடி கிடந்த ஒரு குழந்தையையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். அவர்கள் 6 பேரும் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். போதிய அளவு வெளிச்சம் இல்லாததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் விமானம் தரை இறங்கிக் கொண்டிருந்தபோது இடது பக்க இறக்கையில் தீ பிடித்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். இதபற்றியும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். போயிங் 737 ரக விமானங்களில் எல்லா நவீன வசதிகளும் உள்ளன. ஆபத்து காலத்தில் விமானத்தைத் தற்காத்துக் கொள்ளும் வசதிகளும் உள்ளன. தரை இறங்க முயற்சிக்கும்போது நிலைமை மோசமாகியிருந்தால்கூட அந்த விமானத்தை உடனடியாக மேலே கிளப்ப முடியும். எனவே விமானியின் தவறான கணிப்பும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலை புலிகளின் மூன்று உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜர்!


விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் கப்டனாக இருந்த சிவஞானம் ஐங்கரன் என்பவரும் கதிரவேலு ஜனந்தன் மற்றும் நடேசன் போதிதாசன் ஆகியோரும் கடந்த புதன்கிழமை மவுண்ட் லாவண்யா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது மேற்படி மூவரையும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரையிலும் மறியலில் வைக்கும்படி நீதிபதி ஹர்ஷா சேதுங்க பணித்துள்ளதாக போலீஸ் தெரிவித்தது. இவர்களைக் கைது செய்த பின்னர் நந்திக்கடலில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றியதாகத் தெரிவித்த போலீஸ், அவற்றை அளிப்பதற்கு அனுமதி தரவேண்டும் என்றும் நீதிபதியைக் கேட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதியும் அவற்றை அழித்துவிடும்படி அனுமதி கொடுத்துள்ளாராம்.நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டவர்களில் ஐங்கரன் என்பவர் அவரது 13 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகக் கூறும் போலீஸ் அவர் தலைவர் வே. பிரபாகரன் உட்பட பல தலைவர்களிடன் பயிற்சி பெற்றவர் எனவும் தெரிவித்துள்ளது. கடைசிக் கட்டப் போரில் காயமடைந்த இவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடி மவுண்ட் லாவண்யா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டவர் எனவும் போலீஸ் தரப்புக் கூறியுள்ளது.அடுத்த இருவரும் விமானசேவை அலுவலகம் ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது கைது செய்யப்பட்டனராம். மேலும் ஐங்கரன் என்பவர் கொடுத்த தகவலை அடுத்தே நந்திக்கடல் பகுதியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சிறிலங்கன் போலீஸ் தெரிவித்தது.

21 மே 2010

மக்களவையின் அனைத்துலக செயலகம் விடுக்கும் அவசர அவசிய வேண்டுகோள்!

அன்பான தமிழீழ மக்களே! முள்ளிவாய்காலின் மனிதப்படுகொலைகள் ஓராண்டுகள் எட்டிவிட்டன. ஆனால் கொலையை செய்தவனும், கட்டளையிட்டவனும் எக்காளம் இட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ எமது உறவுகளை பறிகொடுத்தும், பலிகொடுத்தும் அவர்களுக்கான எதையும் நீதியின் முன்னால் நிறுத்த நாம் முன்வரவில்லை. எமது மக்களுக்கு நீதி வேண்டியும், நியாயம் கேட்டும் உலகம் முழுவதும், தாம் வாழும் நாடுகளிலும் அதை நீதிமன்றங்களில் வழக்கை பதிவு செய்தும், யுத்தத்தாலும், இப்பெயர்வாலும் மற்றும் அனைத்து இராணுவநடவடிக்கையாலும் உயிரை இழந்து, அங்கீவீனமாக்கப்பட்டவர்,காணாமல் போனோர், மனவுழைச்சலுக்குள்ளானவர்கள் போன்றோரின் விபரங்கள், தகவல்களை ஆதாரங்களுடன் எதிர்பார்க்கின்றோம். ( உங்கள் அனைத்து தகவல்களும் இரகசியம் பேணப்படும் என்பது உறுதி )
இவை சம்பந்தமான துரிதநடவடிக்கை எடுப்பதற்கு சட்டவாளர்களும், மனதவுரிமை அமைப்புக்கள், சர்வதேச பிரசித்தி பெற்ற ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் முன்வந்திருக்கும் வேளை நாம் வாழாதிருப்பது எமது இனத்திற்கும், உயிரைப்பறிகொடுத்த அப்பாவி உயிர்களுக்கு செய்யும் நன்றியற்ற தொரு விடயமாகும். எனவே நாம் துரிதகதியில் இந்த செயற்பாட்டிற்கு துணைநிற்போமாக மேலதிக விடயங்களுக்கு உங்கள் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் பேரவையுடன் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது எங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்பு: 06 15 88 42 21

நெஞ்சு பதை பதைக்கும் கோரக்காட்சி!சிங்கள அரச பயங்கரவாதிகளின் அட்டூழியம்!நோயாளிகள்,குழந்தைகள் பார்க்க வேண்டாம்!




கைது செய்யப்பட்ட ஒரு தமிழ் இளைஞனை சிங்கள பயங்கரவாதிகள் தென்னை


மரத்தில் கட்டி வைத்து,கத்தியால், வெட்டி வெட்டி,சித்திரவதை செய்து கோரமாக


கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய படம் வெளியாகியுள்ளது,


இது சென்ற வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட படு பயங்கரச்செயலாகுமென


தெரிவிக்கப்படுகிறது.சிங்கள அரசு போர் குற்றம் புரிந்தமைக்கான மேலும் ஒரு


ஆதாரம் இதுவாகும்.

20 மே 2010

நாம் தமிழர் இயக்க ஆதரவாளர் விபத்தில் சாவு!





மதுரையில் கடந்த மே 18 இல் நடைபெற்ற நாம் தமிழர் அரசியல் கட்சி மாநாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தவர்களின் வாகனம் விபத்தில் சிக்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
நாம் தமிழர் அரசியல் கட்சி மாநாடு முடிந்து சென்னை திரும்பிச் சென்ற பேருந்து ஒன்று 19.5.2010 அன்று அதிகாலை 3 மணியளவில் திருச்சி அருகே விபத்துக்குள்ளாகியது . அதில் பயணம் செய்த தண்டையார்பேட்டை ஆறுமுகம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதி நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் நடந்தது அதில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதியமான், பேராசிரியர் தீரன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நீங்கா நினைவுகள்!





பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.
வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.
இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.
இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
1990 ஆம் ஆண்டில் கொக்காவில் – மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.
முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் “கடற்காற்று” எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.
வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “வன்னிவிக்கிரம” நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.
1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான “ஆகாய- கடல்வெளி”ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.
மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “மின்னல்” நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.
இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட “யாழ்தேவி” நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.
1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட “முன்னேறிப்பாய்தல்” முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.
யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த “சூரியக்கதிர்” நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.
வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.
தொடர்ந்து “ஓயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.
அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.
2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட “தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.
போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.
பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாத மா பேரிழப்பாகும். அந்த மாவீரனுக்கு தமிழ் மக்கள் வீர வணக்கம் செலுத்தி நிற்கிறார்கள்.

19 மே 2010

தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரின் பாதங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டுமென படைத்தரப்பு உத்தரவு!


சிறிலங்காவில் போர்வெற்றி தினமாக அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 20 ஆம் திகதியன்று ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றித்தூபிக்கு அருகில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் வன்னிப்பகுதி பாடசாலைகள் ஒவ்வொன்றிலுமிருந்து தலா 20 மாணவர்கள் கலந்துகொண்டு இராணுத்தினரின் பாதங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெரியவருவதாவது:சிறிலங்காவெங்கும் போர் வெற்றிவிழா கொண்டாட்டங்களுக்கான நாளாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 20 ஆம் திகதி அன்று ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு அருகில் இராணுவத்தின் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. அன்றைய நாளில் வன்னியில் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் பாடசாலைகள் அனைத்திலுமிருந்து தலா 20 மாணவர்கள் இந்த நிகழ்வுக்கான ஆனையிறவு பகுதிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.பாடசாலைகளிலிருந்து செல்லவுள்ள இந்த மாணவர்கள் அன்றையதினம் அங்கு நடைபெறவுள்ள நிகழ்வில் அணிநடையாக சென்று அங்கு வரிசையில் நின்றுகொண்டிருக்கவுள்ள சிங்கள இராணுவத்தினர் கால்களில் மலர் தூவி, நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தமைக்கு நன்றி கூறவேண்டும் என்று இராணுவத்தின் ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வுக்கு கட்டாயம் அனைத்து பாடசாலைகளிலுமிருந்து தலா 20 மாணவர்கள் கட்டாயம் வருகை தரவேண்டும் என்று வன்னியிலுள்ள சகல பாடசாலை அதிபர்களுக்கும் கடுமையான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மீளக்குடியமர்வு என்ற பெயரில் வன்னியில் அடிமைகளாக நடத்தப்படும் தமிழ்மக்கள் இப்படியான காரியங்களை நிறைவேற்றினால்தான் அங்கு வாழலாம் என்ற நிலையே காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவித்ததுபுலம் பெயர்ந்த மக்களே உங்கள் அனைவரினதும் ஒன்றினைந்த சக்திதான் எம் சந்ததியின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முடியும் என இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நாம் தமிழர் அரசியல் மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற பேரணி!
















நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம்மாநாட்டை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பேரணி முத்துக்குமார் அரங்கத்தில் முடிந்தது. அப்போது புலிக்கொடி ஏற்றப்பட்டது.