30 செப்டம்பர் 2011

கனடாவில் ஸ்ரீலங்கா நடத்தும் உல்லாசத்துறை வர்த்தக கண்காட்சியை எதிர்ப்போம்!

சிறிலங்கா அரசினால் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Sri Lanka Travel Showஎனும் உல்லாச பயண வர்த்தக கண்காட்சிக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு கனடிய தமிழர்களை தாயாராகுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் 16-17 ஆகிய இருநாட்களுக்கு Mississaugaவில் Living Arts Centerஉள்ள இல் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.
கண்காட்சி இடம்பெறும் இருநாட்களும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் ‘சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டம்’ ஒன்று நா.த.அரசாங்கத்தின் கனடா-மக்கள் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரிதிநிதிகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
தமிழர்கள் மீதான போரின் வடுக்களையும் – வலிகளையும் மறைத்து, இலங்கைத்தீவை ஒரு உல்லாசபுரியாக, சர்வதேத்துக்கு காட்ட சிறிலங்கா அரசு முற்றபட்டு வருகின்றது.
வர்த்தக, பொருளாதார முதலீடுகளைக் பெருக்கவும், உல்லாசத்துறைக்கு வருவாயை ஈட்டவும்; சிறிலங்கா அரசாங்கத்தினால், இந்த உல்லாச பயண வர்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறிலங்கா தொடர்பில் தனது கடுமையான நிலைப்பாட்டை கனடிய அரசு எடுத்துள்ள இவ்வேளை, தமிழர்களாகிய நாங்கள் எமது பலமான எதிர்பை சிறிலங்கா அரசுக்கு காட்டுவோம்.
‘சிறிலங்கா புறக்கணிப்பு’ எனும் மக்கள் போராட்டம் ஊடாக கண்காட்சியில் பங்கெடுப்போருக்கு சிறிலங்கா குறித்து விழிப்பை ஏற்படுத்துவோம்.
கண்காட்சி நடைபெறும் இருநாட்களும் மக்கள் திரட்சியாக ஒன்றுதிரண்டு கொட்டொலிகள், பாதாதைகள் மூலம் எமது எதிர்ப்பபை காட்டுவதோடு துண்டுப்பிரசுரங்கள் கையேடுகள் மூலம் விழிப்பையும் ஏற்படுத்துவோம்.

உங்கள் பிரச்சனையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்"மகிந்தவிடம் மன்மோகன் கூறினாராம்?

இறுதிப் போரின்போதும் அதன் பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கி வந்த இந்தியா இப்போது அந்தப் போக்கைக் கைவிட்டுள்ளது என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கையின் எந்தவொரு உள்விவகாரத்திலும் இனி இந்தியா தலையிடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்று அறிய வந்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையில் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை டாக்டர் மன்மோகன் சிங் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரியப்படுத்தினார் என அறியமுடிகிறது.
இலங்கைக்கு எதிராகச் சர்வதேச சமூகம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அழுத்தங்கள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த இந்தச் சந்திப்பில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதனை நன்கு கவனமாகச் செவிமடுத்த இந்தியப் பிரதமர் இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கும் அழுத்தங்கள் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கையே இனிமேல் வெளிப்படுத்தவேண்டுமெனவும், இலங்கை விவகாரத்தில் தலையிடாதிருக்க இந்தியா உத்தேசித்திருப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தினால் காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாட்டிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் அழுத்தங்கள் வருவதை விலாவாரியாக ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர், இனிமேல் இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று மேலும் தெரியவருகிறது.
சர்வதேச நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்தியா இவ்வாறு இலங்கையைக் கைவிட்டிருப்பது, கொழும்புக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகையில் இந்தியா இலங்கையைக் கைவிட்டிருப்பது மஹிந்த அரசுக்கு விழுந்த பேரிடி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மகிந்தவின் புகழ் பாடிய யோகேஸ்வரி!

மகிந்த அரசு தமிழ் மக்களுக்கு ஏதிராக தற்போது செயற்படவில்லை. இது எங்கள் அரசு. அரசின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என 'யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி' நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழக்கித் தள்ளியுள்ளார் யாழ். மாநகரசபை முதல்வர்(ஈ.பி.டி.பி) யோகேஸ்வரி பற்குணராசா.
இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகிய யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவருக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார். நிகழ்வு தொடர்பாக யாழ்ப்பாண வாழ்வியலைப் பற்றி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழங்கித் தள்ளினார். அதில் வழமை போன்று தன் புகழையும், மகிந்தாவின் புகழையும் பாடியதுடன் கடந்த கால அரசியல் தலைமைகளின் வழிநடத்தல் பிழை என்ற தனது தாரக மந்திரத்தையும் அவர் உச்சரிக்கத் தவறவில்லை.
அவர் ஆற்றிய உரையிலிருந்து,
நாம் கடந்த முப்பது வருட காலமாக போரைக் காரணம் காட்டி எமது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கத் தவறி விட்டோம். கடந்த காலங்களில் எமது மாநகரசபை கட்டிடத்தின் புகைப்படத்தைக் கூட பாதுகாக்கத் தவறி விட்டோம். இந்த நிலைக்கு கடந்த கால மோசமான அரசியல் தலைமையின் வழிநடத்தலே காரணம் ஆகும்.
தற்போது அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படவில்லை என்றே நான் கூறுவேன். எனக்கும் அரசுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. ஜனாதிபதி கூறியிருக்கின்றார் "இது உங்களுடைய அரசு. உங்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது. நீங்களே பயமின்றி ஆளலாம். நாம் எந்தவிதத்திலும் தலையிட மாட்டோம்." என்று. எனவே இது எங்களுடைய அரசாங்கம். இந்த அரசின் மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். என்று முழங்கித் தள்ளிய அவர்,
நேற்று எங்களின் ஜனாதிபதி ஐ.நா. கூட்டத் தொடரில் உரையாற்றுகையில், எங்கள் பிரச்சனைகளுக்கு சர்வதேசத்தை இணைத்து தீர்வு காணத் தேவையில்லை. எமது நாட்டு மக்களை இணைத்துத் தான் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நான் வரவேற்கின்றேன். என்றார்.

29 செப்டம்பர் 2011

அட...! என்னதான் நடக்குது அங்க?

யாழ்,மாநகரசபையின் பெண் ஊழியர் ஒருவரின் மார்புகளை பிடிக்க முயன்று மாட்டுப்பட்டு இருப்பவர் அம்மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசன்.
ஆயினும் இவரைப் பற்றி ஊடகங்களில் வெளிவராத செய்தி ஒன்று உள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் போட்டி இட்டு இருந்த இவர் கணிசமான வாக்குகளை பெற்று இருந்தார்.
கல்வித் தகைமை, அரசியல் அறிவு மற்றும் அனுபவம் வாக்குகள் ஆகியவற்றை பார்க்கின்றபோது அவருக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என்று மனப் பால் குடித்து இருந்தார்.
ஆயினும் யோகேஸ்வரி பற்குணத்தை முதல்வர் ஆக்குகின்றமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முடிவு மங்களநேசனை மட்டுமன்றி மங்களநேசனின் ஆதரவாளர்களையும் கோபப்பட வைத்தது.
வீட்டில் ஆதரவாளர்கள் சகிதம் குழுமி மந்திராலோசனை நடத்தினார் மங்களநேசன். மந்திராலோசனை மதுவில் கலந்தது. போதை தலைக்கேறியமையுடன் அமைச்சரின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தார் மங்களநேசன்.
நீ என்ன யோகேஸ்வரியை வைத்திருக்கின்றாயா? ..... எனக்குதான் முதல்வர் பதவியை தர வேண்டும்.... இல்லையேல் பெரிய பிரச்சினை வரும்.... என்று தொலைபேசியில் சத்தம் இட்டு இருக்கின்றார்.
சிறிது நேரம் கழிந்தது. குண்டர்களுடன் வந்து இறங்கினார் வேட்டிக் கட்டோடு டக்ளஸ். மங்களநேசனை அலாக்காக தூக்கினார். நன்றாக போட்டுத் தாக்கினார். வானில் ஏற்றிச் சென்றார்.
முதல்வர் பதவியேற்பு வைபவம் நிறைவடைகின்றவரை மங்களநேசனை இரகசிய அறை ஒன்றில் பூட்டியும் வைத்தாராம் டக்ளஸ்.

சவேந்திர சில்வாவை பாதுகாப்பது பான் கீ மூனின் பொறுப்பு என்கிறார் நிமால்!

ஐ.நா.வுக்கான பிரதிநிதி என்ற வகையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு உள்ளதென நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது தனியான வழக்கு தொடரப்பட்டுள்ள போதும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அவர் முகம் கொடுப்பதற்கான சகல உதவி ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை!

பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் வடக்கு மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையில் முன்பு யுத்த பிரதேசங்களாக இருந்த இடங்களில் சாமானிய மக்கள் படுகின்ற கஷ்டங்கள் பற்றியும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குரல் கொடுத்துள்ளது. யுத்தத்துக்கு பின் மீள்குடியேறி வருவோர் பெரும்பான்மையாக இருந்துவரும் இப்பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படையான வசதிகள் கூட இல்லை. சர்வதேச கொடையாளி நாடுகளும் இவர்களுக்கு போதிய அளவு உதவுவதில்லை.
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், வடக்கில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிரந்தர வீடும், வாழ்வாதாரமும், குடி நீர், கழிப்பறை வசதிகளும் உடனடியாகத் தேவைப்படும் நிலையே இருந்து வருவதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபெய்சிங்க கூறினார். இலங்கையிலிருந்து மனித உரிமை பிரச்சினை தொடர்ந்த காதில் விழுந்து வருவதால், கொடையாளி நாடுகள் உதவிகளை வழங்கத் தயங்குகின்றனவோ என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது அடிக்கடி மனித உரிமை தொடர்பான விமர்சனங்கள் எழுந்ததால், சர்வதேச சமூகத்தின் உதவி முயற்சிகள் நீர்த்துப் போயுள்ளன என்றும் அவர் விமர்சித்திருந்தார். ஆனால் செஞ்சிலுவைச் சங்கத் தலைவரின் விமர்சனத்தை தாம் ஏற்க முடியாது என இலங்கையின் முக்கிய கொடையாளிகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதி பெர்னாட்ட சேவெஜ் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகளை வழங்க நாங்கள் தயங்குவதில்லை. இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எப் போதும் ஆதரித்தே வருகின்றது. உறைவிடம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான உதவித் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவியினை வழங்கி வருகின்றது.
இலங்கையின் அரசியல் நிலைவரம், மனிதவுரிமைகள் நிலைவரம் ஆகியன எமது மனிதாபிமான உதவித் திட்டங்களில் செலவாக்குச் செலுத்துவதில்லை. ஆனாலும் கொடையாளி நாடுகள் வழங்கும் உதவிகள் குறைந்து வருகின்றன. ஐ.நா. மன்றம் மிகச் சமீபத்தில் வெளியிட்ட மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றிய அறிக்கையில், இலங்கையில் இந்த வருடம் ஐ.நா. சபை முன்னெடுக்கவுள்ள உதவித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியில் சர்வதேச நிதி வழங்குநர்களிடமிருந்து நான்கில் ஒரு பகுதி நிதிதான் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 செப்டம்பர் 2011

தளபதி சூசையின் வீட்டை தேடி அலைந்த சிங்களவர்கள்!

கடற்புலிகளின் தளபதி சூசை வீடு என நினைத்து சூலை என்பவரின் வீட்டைத் தென்பகுதியிலிருந்து வந்தவர்கள் குதூகலத்துடன் புகைப்படம் எடுத்து ஏமாந்த சம்பவம் அண்மையில் புதுக்குடியிருப்பில் அரங்கேறியுள்ளது.
தென்பகுதியிலிருந்து மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக வந்த தென்பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வள்ளிபுனத்திலுள்ள கடையொன்றில் தமது வாகனத்தை நிறுத்திச் சூசையின் வீட்டுக்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளனர்.
கடையில் இருந்தவர்களுக்குச் சூசை என்பது சூலை எனக் கேட்டுள்ளது. இதனால் கோம்பாவில் பகுதியிலுள்ள சூலை என்பவரின் வீட்டுக்கு வழிகாட்டியுள்ளனர். தென்பகுதிச் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் சூலையின் வீட்டைச் சென்றடைந்தனர்.
அங்கே இரும்புக் குவியல்கள் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தன. அவர்கள் கடற்புலிகளின் தளபதி சூசையும் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாக எண்ணினார்களோ என்னவோ இரும்புக் குவியல்களை மளமள வெனப் புகைப்படம் பிடித்தார்கள்.
சூலையின் வீட்டிலுள்ள இரும்புக் குவியல்களைப் படம் பிடிப்பதில் அங்கு சென்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டனர். தென்பகுதிக்குச் சென்று புலிகளின் தளபதி சேகரித்து வைத்ததாக அந்த இரும்புக் குவியலைக் காட்டுவதில் அவர்கள் அக்கறையுடன் இருந்ததாகவே தெரிந்தது.
அப்போது அந்த வழியே வந்த உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் அங்கே குழுமி நின்று வேடிக்கை பார்த்தனர். சூலையின் வீட்டுக்கு இன்று என்ன நடந்தது? என்று கேள்வியும் எழுப்பினர். பாவம் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் சூசையின் வீடு என நினைத்துச் சூலையின் வீட்டைச் சல்லடை போட்டுக் கொண்டிருந்தனர்.இப்படியும் விநோதங்கள் வன்னிப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கு ஏளனமாக பதிலளித்தார் கோத்தபாய!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌விடம் அப்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் கூறியபோது மோசமான காலநிலை காரணமாக இருநாட்களாக ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லை என அவர் ஏளனமாக பதிலளித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இது குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள் ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இத்தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பீரங்கித் தாக்குதல்களில் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 254 பொது மக்கள் காயமடைந்ததாகவும். ஐக்கிய நாடுகளின் சபையின் பிரதிநிதி தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக இத் தகவல் குறிப்பில் றொபோர்ட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்­ஷ‌வைச் சந்தித்து பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியதாக றொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த தகவல் குறிப்பில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலைகள் இருந்தாலும் கூட அப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என கோத்தபாய ராஜபக்­ஷ‌ விடம் தான் வலியுறுத்தியதாகவும் றொபேர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.
இந் நிலையில் மோசமான காலநிலை காரணமாக இரு நாட்களாக ஜெட்போர் விமானங்கள் பறக்கவில்லை என ஏளனமாக பதில் அளித்த கோத்தபாய ராஜபக்­ஷ‌ இதன்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து வியப்புடன் கேள்வி எழுப்பியதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இப்பாதுகாப்பு வலயங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என களத்தில் இருக்கின்ற படை தளபதிகளுக்கு பணிக்கு மாறு படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌விடம் றொபேர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

27 செப்டம்பர் 2011

உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்காவின் உதவி கேட்குமாம் ஸ்ரீலங்கா!

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ருத்ரகுமாரன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவிகளை வழங்கியமைக்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆதாரங்களை சமர்ப்பித்து அமெரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகளில் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான கப்பல்களை ருத்ரகுமாரன் பராமரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக நவீன ரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக ருத்ரகுமாரன் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலிகளுக்கு வழங்கியமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், படையினருக்கு எதிராகவும் வழக்குகளைத் தொடுக்கும் நடவடிக்கைகளை ருத்ரகுமாரன் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மகிந்த ஸ்ரீலங்கா திரும்பினார்!வழக்கிற்கு பயந்து ஓடித்தப்பினாரா?

ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என அரச தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் தங்கியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேவி எதிர் ராஜபக்ஷ வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
கேணல் ரமேஸின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந் நிலையில் ஜனாதிபதி அவசரமாக நாடுதிரும்பியிருப்பதன் பின்னணி இதுவாக இருக்கலாமோ? என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

உண்மையை நிலை நாட்டுவதே எமது நோக்கம்"வழக்கு தொடர்பாக உருத்திரகுமாரன் கருத்து.

2009ம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தின் போது பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வெள்ளைக்கொடி விவகாரம், கேணல் ரமேஸ் படுகொலை தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூ யோர்க்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் முக்கிய இடத்தை வகிக்குமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.சிறிலங்கா அரச படைகளிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றவர்களில, கேணஸ் ரமேசும் ஒருவர் என்ற நிலையில், சர்வதேசத்தின் தொடர்புடைய இந்த 'வெள்ளைக்கொடி' விவாகாரம் முக்கிய இடத்தை வகிக்கவுள்ளது.
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச மீது தொடுக்கபபட்ட, முதலாவது போர்குற்ற வழக்காக அமைந்துள்ள கேணல் ரமேஸ் படுகொலை வழக்கில் பிரதமர் வி.உருத்திரகுமாரனே சட்டவாளராக பங்காற்றுகின்றார்.
இந்நிலையில் திங்கட்கிழமை லண்டன் பிபிசி தமிழோசைக்கு வழக்கு தொடர்பில் செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.
நட்டஈடு கோருவதாக இந்த வழக்கு அமைந்திருந்தாலும், வழக்கின் நோக்கம் மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியதான உண்மையும், மக்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டியுமே, கேணஸ் ரமேசின் மனைவயினால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்தார்.
நீதி விசாரணையை நடாத்துவதற்குரிய சட்ட வெளியோ அல்லது அரசியல் வெளியோ இலங்கதை; தீவில் இல்லாத காரணத்தினால்தான், புலத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்தச் செவ்வியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கு அமைய, நீதிமன்ற அழைப்பாணையை மகிந்த ராஜபக்சவிடம் சேர்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

26 செப்டம்பர் 2011

சனல்4 வெளியிட்ட காணொளியை பார்வையிடாத பான் கீ மூன் ஸ்ரீலங்கா வெளியிட்ட காணொளியை பார்வையிட்டாரா?

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக் களங்கள் ஆவணப் படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா. பொதுச் செய லர் பான் கீ மூன் அதற்கு போட்டியாக இலங்கை அரசு தயாரித்த Lies Agreed To ஆவணப் படத்தை பார்வையிட்டிருப்பதாக இன்னர் சிற்றிபிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு ஜனாதிபதி மகிந்த தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றிச் சாதாரணமாகப் பேசியவாறே இவர்கள் சந்திப்பு அறையிலிருந்து வெளியே வந்தனர். அப்போது நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொளியை அவர் ஏற்கெனவே பார்வையிட்டுள்ளார் என்று ஜனாதிபதியைப் பார்த்து பாலித கோஹன கூறியுள்ளார்.
இதனை இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ காணொளியில் பதிவு செய்துள்ளார். பாலித கோஹன கூறியது இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப் படத்திற்குப் போட்டியாக இலங்கை அரசாங் கம் தயாரித்த Lies Agreed To ஆவணப் படமே என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் ஒரு இறுவட்டு ஐ.நா. பொதுச் செயலருக்கு அனுப்பப்பட்டு நீண்ட நாட்களாகியும் அவர் அதனைப் பார்வையிடவில்லை.
ஐ.நா. பொதுச்செயலர் இந்த ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடவில்லை என்றும் ஆனால் அதன் உள்ளடக்கம் பற்றி அவர் அறிந்து கொண்டுள்ளதாகவும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கி கடந்த 22 ஆம் திகதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகி லெ,கேர்ணல் திலீபனின் நினைவு நாள் இன்றாகும்!

சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகவும்,இந்திய அமைதிப் படைக்கு எதிராகவும் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழ விடுதலை புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் லெப்.கேணல் திலீபன் 15.09.1987 அன்று நல்லூர் கந்தசாமி கோயில் எதிரே உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.
மன உறுதியோடும்,கட்டுப்பாடோடும் 12 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் 26.09.1987 அன்று தனது உடலை உருக்கி தியாக மரணம் அடைந்தார்.திலீபனின் தாகம் வீண் போகாது.
திலீபனுக்கு வீர வணக்கங்கள்…….!

மகிந்தவிற்கும் அமெரிக்க நீதிமன்று அழைப்பாணை!அமெரிக்காவை விட்டு வெளியேறுவாரா மகிந்த?

அமெரிக்காவில் தங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது எனத் தெரியவருகிறது. கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேவி எதிர் ராஜபக்ஷ வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
கேணல் ரமேஸின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 செப்டம்பர் 2011

ஜே.வி.பியின் ஊடகப் பிரிவுக்கும் மூடு விழா!வலுக்கிறது பூசல்.

ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜே.வி.பியின் பத்திரிகையான லங்கா பத்திரிகையும், அக்கட்சியின் ஊடகப்பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜே.வி.பியின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு விரிசல் அடைந்து வருகின்றது. இதனால் சிலர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என ஜே.வி.பி யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அவ்வாறு கட்சியிலிருந்து பிரிந்து செல்பவர்கள் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.தமிழ் மக்களின் விவகாரங்களுக்கு அதிகளவான முன்னுரிமை அளித்தல் மற்றும் கட்சியின் தலைமைத்துவம் என்பன தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஜே.வி.பியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கீழ்மட்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு கட்சியிலிருந்து புறம்பாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
அதேவேளை, ஜே.வி.பியின் தற்போதைய தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதால் கட்சிக்குள் காணப்பட்ட பிரச்சினை பிளவாக உருவெடுத்துள்ளது.
இதேவேளை, ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு அரச தரப்பிலுள்ள சில உறுப்பினர்களும் காரணமாக இருக்கலாம் என அக்கட்சியின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கூறினார்.
அரசு, ஐக்கிய தேசியக்கட்சி, அமைச்சர் விமல்வீரவன்ஸ உள்ளிட்ட கட்சிகளின் முயற்சியாக ஜே.வி.பியைப் பிளவுபடுத்த நினைக்கும் என்றால் அது ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கட்சியிலிருந்து எவரையும் விலக்கவோ எவரும் விலகவோ இல்லை என்று கூறிய அவர், இன்னும் சில தினங்களில் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். தற்போது கட்சி உறுப்பினர்கள் சுமுகமாகத் தமது கடமைகளைச் செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்கிறார் சவேந்திர சில்வா!

உலகின் எந்தவொரு நீதிமன்ற விசாரணையையும் சந்திக்கத் தயார் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், தமக்கும் தமது படையணியைச் சேர்ந்த படையினருக்கும் எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு ஷவேந்திர சில்வாவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஷவேந்திரா சில்வா பதிலளிக்க வேண்டுமென அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எந்தவொரு நபரினாலும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஷின் மனைவியும், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சீதாராம் சிவம் என்வரின் மகளும் அமெரிக்க நீதிமன்றில், ஷவேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

24 செப்டம்பர் 2011

சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க நீதிமன்று பிடிவிறாந்து!எந்நேரமும் அமெரிக்காவை விட்டு தப்பியோடலாம்!

அதிரவைக்கும் செய்திகள் தற்போது அமெரிக்காவில் இருந்து வெளியாகியவண்ணம் இருக்கிறது. ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சர்வேந்திர சில்வாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சற்று முன்னர் அமெரிக்காவில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமெரிக்க சிவில் நீதிமன்றம் இந்தப் பிடியாணையைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகத் தமிழர் பேரவை(GTF) உதவியுடனே அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. தற்போது அவர் ஐ.நா வின் கட்டிடத்தில் பாதுகாப்பிற்காக தங்கவேண்டி நிலை தோன்றியுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. ஐ.நா வின் பிரதிநிதி என்ற வகையில் அவர் ஐ.நா கட்டிடத்தினுள் தங்கும்வரை அவரை அமெரிக்க பொலிசார் கைதுசெய்ய முடியாது. இருப்பினும் அவர் அக்கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை தோண்றியுள்ளது.
இதன் காரணமாக அவர் அமெரிக்காவை விட்டு நாளை அல்லது இன்றைய தினம் இரவு வெளியேற வேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது. அவர் பெரும்பாலும் ஐ.நாவின் வாகனத்தில் ஏறி அதன் பாதுகாப்புடன் அமெரிக்காவில் இருக்கும் எதாவது ஒரு விமனாநிலையமூடாக வெளியேறலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் மேல் அடுத்த பேரிடியாக இது வீழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக சட்ட பீடமே இந்த வழக்கைத் தொடுத்ததாகவும், நீதிமன்றில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் இலங்கை இறுதிப்போரில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சுட்டிக்காட்டியும் அப்போது 58 படைப்பிரிவுக்கு தலைமையேற்ற சர்வேந்திர சில்வா இனப்படுகொலை செய்துள்ளதாகவும் வாதாடியுள்ளார்.
இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சர்வேந்திர சில்வாவைக் கைதுசெய்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது. புலம்பெயர் ஈழத் தமிழர் போராட்டங்களில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதோடு ஒரு வரலாறு படைக்கும் விடையமாகவும் பார்க்கப்படுகிறது.
நன்றி:அதிர்வு

23 செப்டம்பர் 2011

ஜெகத் டயஸ் சுவிஸ் வந்தால் விசாரிக்கப்படுவார்!

சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளில் ஒரவரான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், மருத்துவமனைகள், மற்றும் வழிபாட்டு மையங்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர் என்ற அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சமத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு எதிரான தீங்குகளுக்கு சுவிஸ் அமைப்பும், அச்சுறுத்தல்களுக்குள்ளான மக்களின் சமூகம் என்ற அமைப்பும் இணைந்து ஜெகத் டயஸ் மீதான போர்க்குற்ற வழக்கை சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தன. இதைடுத்தே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்தால் அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று சுவிற்சர்லாந்தின் சட்டமாஅதிபர் அறிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்து, வத்திக்கான், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் கடந்த 18ம் நாளுடன் கொழும்புக்கு திரும்பியழைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிருடன் உள்ளவரை இறந்ததாக கூறி ஒப்படைத்த மருத்துவர்கள்!

இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் தமிழகத்தில் அதிகளவான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழ்ந்த இலங்கை அகதியின் தலைவிதியைத் தமிழக வைத்தியர்களும் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, திருச்சி தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறி பிணமாக மூடை கட்டி கொடுக்கப்பட்டவர் உயிர் பிழைத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தன்னேரி (வயது 64) .இவரது மனைவி கோமதி (வயது 56). இலங்கையில் நடந்த கலவரத்தை தொடர்ந்து 1985-ம் ஆண்டு மண்டபம் முகாமுக்கு வந்த இவர்கள் 1996-ல் இருந்து திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஜெயராணி என்ற மகளும், செவ்வந்தி செல்வன், சந்திரன், மோகன்தாஸ் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். பெயின்ரராக பணிபுரியும் இவர்களது மகன் மோகன்தாஸ் 15 ஆம் திகதி இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். திருச்சி கே.எம்.சி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை 3 நாட்கள் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அவர் இறந்து விட்டதாக கூறி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மோகன்தாஸ் இறந்ததை அறிந்து வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு ஐஸ் பெட்டியும் வரவழைத்தனர். ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து மோகன்தாஸ் அம்புலன்சில் ஏற்றப்பட்டார். திடீரென அவரது கை கால்கள் அசையவே அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மீண்டும் தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாக தரப்பு கூறியதாவது, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்ட்ட மோகன்தாஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டி லேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார்.
3 நாட்கள் அப்படியே சிகிச்சை பெற்றதால் இறந்த பிணத்தை வைத்து சிகிச்சை கொடுக்கின்றீர்கள். நாங்கள் வெளியிடத்தில் சிகிச்சை செய்கிறோம் என அவரது உறவினர்கள் தகராறு செய்தனர்.
அதனால் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக அகைன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ் என மோகன்தாஸ் தந்தை தன்னேரி, அண்ணன் செவ்வந்தி செல்வனிடம் கையயழுத்து வாங்கி உயிருடன் தான் கொடுத்தோம். தற்போது திருச்சி அரசு மருத்துமனையில் அதே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் மோகன்தாஸ் உயிரோடு இருக்கிறார். எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு நிர்வாக தரப்பில் கூறப் பட்டது.

நில அபகரிப்பு,இன ஒழிப்பு செய்வதற்கான நடவடிக்கையில்தான் அரசு செயற்படுகிறது!

மகிந்த அரசினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வரும் இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி நான் கூறிய கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானதென்றால் உண்மையினை அரசாங்கத்தால் நிரூபித்துக் காட்ட முடியுமா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார்.
தாம் தெரிவித்த இக் கூற்றுக்கள் ஆதாரமற்றவை என அரசாங்கம் மறுத்துள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் கண்டனம் என்று கூறுவதனை நான் ஏற்க மாட்டேன். தனிப்பட்ட, பெயர் குறிப்பிடாது அரசாங்கம் என்று குறிப்பிடப்ட்டுள்ளது. பெயர் இல்லாத கண்டனம் உண்மையானதல்ல.
நான் உறுதியாகக் கூறுகின்றேன் தமிழர் பகுதிகளில் அரசாங்கம் தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து வருகின்றது. நில அபகரிப்பு, இன ஒழிப்பு செய்வதற்கான நடவடிக்கையில்தான் அரசாங்கம் செயற்படுகின்றது. அரசு இவ்வாறான குடியேற்ற நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும்.
நான் கூறுவது உண்மைக்குப் புறம்பானதென்றால் அரசாங்கம் உண்மையினை நிரூபித்துக் காட்ட வேண்டும். அரசு மோசமான செயல்களில் ஈடுபடுவதற்காகவே பெயர் குறிப்பிடாது செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் அரங்கேற்றப்பட்டு வரும் இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம். தேவை ஏற்படின் நீதிமன்றமும் செல்வோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஆதாரமற்றவை என அரசாங்கம் மறுத்துள்ளதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெ யரை ஏற்படுத்தி அநாவசியமான அழுத்தங்களை கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை என்ற பொய்யான தகவல்களை வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டுவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்து வரும் முயற்சிகள் தேசத்திற்கு ஏற்படுத்தும் பாதகமான செயல்கள் என்றும் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

தளபதி ரமேசின் பாரியாரால் மகிந்தவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கேணல் ரமேஸின் மனைவி, இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.தமது கணவரை கொன்றமைக்கு எதிராக அவர் நேற்று மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயோர்க் தென்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது ஐக்கிய நாடுகள் அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க்கில் தங்கியிருக்கும் நிலையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேணல் ரமேஸின் மனைவியின் சார்பில் வெளிநாட்டவருக்கு தகுதி என்ற அடிப்படையில் இந்த வழக்கை, சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தாக்கல் செய்தார்.
11 சிஐவி 6634 என்ற இலக்கத்தை கொண்ட இந்த வழக்கில், சனல் 4 காணொளியில் கேணல் ரமேஸ், இலங்கைப்படையினரால் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி, அவர் கொல்லப்பட்டதன் பின்னர் மற்றும் ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டியமை என்பன சாட்சியங்களாக தெரிவிக்கப்படடுள்ளன.
இலங்கையின் முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே கேணல் ரமேஸின் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரே போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரங்களாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வெளியிட்ட அறிக்கை. அதில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், தாக்கப்பட்ட மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கு காட்டப்பட்டாத இன்னும் 140 ஆயிரம் பொதுமக்களின் உயிரிழப்பு என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


22 செப்டம்பர் 2011

இலங்கைக்கு எதிராக பிரேரணை!கனடா சமர்ப்பிக்கிறது.

சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையிலான சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரும் தீர்மானமே இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் சபை நேற்று மாலை தெரிவித்தது.
18ஆவது கூட்டத்தொடருக்கான பிரேரணைகள் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற காலக்கெடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு எதிரான பிரேரணையை இன்று காலை கனடா சபையில் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரேரணைக்கு தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்தன.
தனக்கு எதிரான பிரேரணை இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட இலங்கை அரச பிரதிநிதிகள் அதனைத் தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றன என்று ஜெனிவாவில் இருக்கும் தமிழ்ச் செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
கனடாவால் இன்று பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் அது அடுத்த வாரம் விவாதத்திற்கு வரலாம் எனத் தெரியவருகிறது. 18ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்த பிரேரணை விவாதத்திற்கு வரும் பட்சத்தில் இந்தியா விவாதத்திலோ அல்லது வாக்கெடுப்பிலோ கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்கலாம் என ஜெனிவாவில் உள்ள, மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
சீனா இலங்கையைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் எண்ணிக்கையே சபையில் அதிகம் இருப்பதால் அவற்றின் ஆதரவு எந்தப் பக்கம் இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே பிரேரணை வெற்றிபெறுவது தங்கியுள்ளது என்றும் அவை தெரிவித்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணிக்குள் எந்த குழப்பமும் இல்லையாம்!

மக்கள் விடுதலை முன்னணி முன்னை போன்றே செயற்படுகிறது. இக்கட்சிக்குள் பேசுவதுபோன்று எந்தவிதமான குழப்பமும் இல்லை. வதந்திகளுக்கு பதில்சொல்லவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நாங்கள் இப்பொழுது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்திவருவதால் இப்படியான வதந்திகளை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை என அக்கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.
ஜே.வி.பி.க்குள் குழப்பம் உருவாகியிருப்பதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் சோமவன்ஸ அமரசிங்கவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்செய்தி தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கேட்டபோது…
கட்சிக்குள் உருவாகியிருக்கின்ற சதி முயற்சிகளுக்கு நாங்கள் ஒருபோதும் கையசைத்துப் போகப்போவதில்லை. இவ்விடயம் தொடர்பில் முன்னையை விட கூடிய கவனத்தினைச் செலுத்தி பிரச்சினைகளை களையவிருக்கிறோம். கட்சியினை புதிய சக்தியுடன் வலுவடையச் செய்து நாட்டில் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது பற்றி கூடிய கவனம் செலுத்தவிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
கட்சி அங்கத்தவர்களுக்குள் ஏதாவது குழப்பம் நிலவினால் அதனை உரியமுறையில் தீர்த்து வைத்து மக்கள் முன்னணியை சக்திமிக்க கட்சியாக உருவாக்கி நாட்டினை கட்டியெழுப்புவதே எங்களது குறிக்கோள் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
1987 காலப்பகுதியில் கொலைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ரஞ்சிதத்தின் சகோதரரான பிரேமகுமார் குணரத்தினம் தலைமையில் புதிய ஜே.வி.பி. உருவாகி வருகிறது என்ற செய்தி அண்மையில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஈழத்தை காக்கின்ற உணர்ச்சி தீயை நெஞ்சில் ஏந்தி எழுவோம்!

சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இராஜா அண்ணாமலை மன்றம் அரங்கில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த, 'இன்னுயிர் ஈந்து மூன்று தமிழர் உயிர் காத்த வீரமங்கை தோழர். செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் மற்றும் மூன்று தமிழரின் மரண தண்டனையை முற்றிலும் நீக்கக்கோரி கூட்டம்' 21.09.2011 அன்று மாலை நடைபெற்ற்றது.
இந்த கூட்டதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
இனியும் செங்கொடிகள் தங்களை தீக்கரையாக்கிக் கொள்கிற நிலை உருவாகிவிடக்கூடாது என்று கொளத்தூர் மணி சொன்னார். இந்த வீரமங்கை செங்கொடி தீட்சண்யமான கண்கள். வசீகரம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்தப் புகைப்படத்தை பார்க்கின்றபோதே, நமது நெஞ்சை ஏதோ ஈர்க்கிறது. நான் சுமந்து செல்கின்ற கைப்பெட்டியில் அந்த அழகான படத்தை வைத்திருக்கிறேன்.
எம்ஜிஆர் நகரில், கட்சி வேறுபாடு இல்லாமல் ஒருசேர எழுவோம். தமிழ் ஈழத்தை காக்கின்ற உணர்ச்சி தீயை நெஞ்சில் ஏந்தி எழுவோம். முவர் உயிரை காக்கவும், மரண தண்டனை முற்றாக அழித்து ஒழிக்கவும் சங்கநாதம் புரிவோம். தோள் கொடுத்து நிற்போம் என்று அந்த கூட்டத்திற்கு செல்லும் வழியில் மல்லை சத்யா, இதோ இந்த தங்கை தான் செங்கொடி.
நாளை வேலூருக்கு புறப்படுகின்ற, பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரை காப்பதற்கு புறப்படுகின்ற அந்தப் பயணத்தைப் பற்றிய துண்டு பிரசுரத்தை இதோ உங்களிடம் தருகிறார் என்றார்.
26ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு பேரறிவாளனிடம், சாந்தனிடம், முருகனிடம் 9ஆம் தேதி அன்று உங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்து அவர்கள் கையெழுத்துக்களை அவர்களிடமே பெற்றுக்கொண்ட ஒன்றரை மணி நேரத்தில், பிற்பகல் 3 மணிக்கு தனித்தனி கொட்டடிகளில் பூட்டப்பட்ட அவர்களை சந்திக்க சென்றபோது, அந்த கொட்டடிகள் இருக்கிற இடத்துக்கு செல்ல என்னால் இயலவில்லை. என் கால்களில் இனம்புரியாத ஒரு நடுக்கம். திரும்பவும் இவர்களை நாம் காண்போமா.
அவர்கள் கலகலப்பாக இருந்தார்கள். மனதில், முகத்தில் எந்த சஞ்சலத்தின் ரேகையும் காணவில்லை. வீரர்கள் அல்லவா. மானம் உணர்வு உள்ள வீரர்கள் அல்லவா. ஏன்னே பயப்படரீங்க. ஒண்ணுமில்லண்ணே. தமிழகம் எங்களை காப்பாற்றும். தமிழர்கள் எங்களை காப்பாற்றுவார்கள்.
சிறை வாசலில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்தபோது, 9ஆம் தேதி தூக்கு என்று சொல்லுவதற்கு என் நாக்குக்கு துணிச்சல் இல்லை. நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் செய்தி மின்னல் வேகத்தில் பரவத்தானே செய்யும். தொலைக்காட்சிகளிலே 9ஆம் தேதி தூக்கு தண்டனை என்ற செய்தி கோடிக்கணக்கா மக்களின் நெஞ்சில் ஈட்டியாக பாய்ந்தது. அங்கிருந்து அவசர அவசரமாக நாம் ஏற்கனவே எடுத்திருக்கின்ற முடிவின்படி, மூன்று தமிழர்களின் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பிலே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, மனித சங்கிலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாவை தந்த காஞ்சி நகரத்துக்கு ஓடோடி வந்தேன்.
தொடர்வண்டி செல்லுகின்ற பாதையை வழிமறிக்கின்ற கதவுகள் பூட்டப்பட்டிருந்த காரணத்தினால் குறித்த நேரத்தில் நான் செல்ல முடியவில்லை. தாமதமாகிவிட்டதே என்று விரைந்து சென்றேன். முழுக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் மேடையில் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.
அப்போது கரம் கோர்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் நிற்கின்ற காஞ்சி நகர வீதிகளில் நின்றபோது, எனக்கு தெரியாது. வீரமங்கை செங்கொடிக்கு பக்கத்தில் நிற்கின்ற பாக்கியம் எனக்கும் கிடைத்தது என்று எனக்கு தெரியாது.
சேலத்துக்கு பக்கத்தில் ஆத்தூர் என்ற நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற மேடையேற போகிறேன். காஞ்சிபுரத்தில் இளம்தளிர் செங்கொடி நெருப்பிலே பாய்ந்தாள். முடிந்துவிட்டது அவள் வாழ்வு. கருகி சாம்பல் ஆகிப்போனாள் என்ற செய்தி, அதற்கு பிறகு அந்த மேடையில் உரையாற்ற என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.
மகேஷ் (காஞ்சி மக்கள் மன்றம்) சொன்னார். சின்ன வயதில் என்னிடம் வந்தாள். நான் வளர்த்தேன். இசையில், பாடல் பாடுவதில், அந்த குயிலின் ஓசை அந்த கானக் குரலோடு கலந்திருந்ததாமே, தப்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதிலே அற்புதமான கலை அவளிடம் வளர்ந்திருந்ததாமே, போராட்ட களங்களுக்கு முதல் ஆளாக வந்து நிற்பாளாமே. காஞ்சி மக்கள் மன்றம் நடத்திய போராட்டத்தில் துணிச்சலாக முதல் ஆளாக நின்று நாயகியாக நின்றாளாமே.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அங்கையற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதாவும் நாங்களும் எங்களை மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டோம். உயிர் முடிந்தாலும் பரவாயில்லை. உண்ணா நோன்பு இருப்போம் என்று அறப்போர் நடத்துகின்ற களத்துக்கு செல்வோம் வா என்று அழைத்த மகேஷிடம், நான் வரவில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர இன்று எனக்கு விருப்பமில்லை என்று சொன்னாளாம்.
சொன்னதற்கு பிறகு மகேஷ் சொல்லுகிறார், நான் புறப்பட்டுச் சென்றேன். திருப்பி பார்த்தேன். என்னாளும் இல்லாத விசித்திரமான புன்னகை ஒன்று அவள் உதடுகளில் தவழ்ந்தது. எதற்கு இந்த புன்னகையை நெளிய விடுகிறார் என்று அப்பொழுது புரியவில்லை. கடைசியாக பார்க்றோம் என்று தான் சிரித்தாள் போலும்.
முத்துக்குமார் தன்னைத்தானே அழித்துக்கொண்ட விளைவாகத்தானே தமிழக்ததில் பிரளயம் ஏற்பட்டது அதுபோல யாராவது ஒருவர் மாய்த்துக்கொண்டால், எரிமலை சீறுமா என்று கேட்டபோது, இதெல்லாம் எதற்காக கேட்கிறாய். அதெல்லாம் இப்பொழுது அவசியமில்லை. அதுபற்றி ஏன் சிந்திக்கிறாய் என்று சொல்லிவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன் என்றார்.
செங்கொடி அதன் பிறகு துரிதமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனத்திலே புறப்பட்டுச் செல்கிறாள். அவளுக்கு அத்தனை பயிற்சிகளும் உண்டு. ஏன் போர்ப் பயிச்சிக் கூட பெற்றிருப்பாள். வாகனத்திலே சென்று, அந்த இடத்தில் வானத்தை நிறுத்திவிட்டு, அங்கிருக்கும் கடைக்காரரிடம் சாவியை கொடுத்து வருவார்கள் சாவியை கொடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறாள்.
பெட்ரோல் வாங்கிக்கொண்டு, வாகனத்துக்கு என்று வாங்கிக்கொண்டு, அந்த பெட்ரோல் தன் மீது ஊற்றுக்கின்றபோதே, தன்னை கொண்டுபோய் மருத்துவமனையிலே காப்பாற்றிவிடக்கூடாது என்று நனைய நனைய அந்த பெட்ரோலை மேனி மீது இருக்கிற உடை மீது கொட்டிவிட்டு, அதன்பிறகு நெருப்புக் குச்சியை எடுத்து மேலே போட்டவுடனேயே பனை மர உயரத்துக்கு தழல் எழுந்ததள்ளவா. தழல் எழுகிற வேளையிலேயே முழக்கமிடுகிறாள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். முழக்கம் எழுப்புகிறாள். நெருப்பு எரிவதை பார்த்து பலர் ஓடி வருகிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டுபோகிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டே வருகிறபோது, அந்த உயிர் விளக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணைகிறபோது, சுவாசம் நிற்கப்போகிறது. அந்தக் கட்டத்தில், குரல் எழுப்புற அந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் கரைந்துகொண்டே இருக்கிற காரணத்தினாலே, பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். என்று சொல்லி வந்தவள், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முடிந்துவிட்டது செங்கொடியின் உயிர்.
தற்கொலையை நியாயப்படுத்தவில்லை. தீக்குளிப்பதை எவரும் ஊக்கப்படுத்துவல்லை. தீக்குளிப்பை ஊக்கப்படுத்துவதாக தயவு செய்து எண்ணி விடாதீர்கள். கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சுடர் இங்கே எரிகிறது.
நெஞ்சில் எவ்வளவு தியாக உணர்வு இருந்திருந்தால், பற்றுமே தழல், படீர் படீர் என்று வெடிக்குமே, தசை கருகுமே, நரம்புகள் கருகுமே, அந்த வலி தாங்க முடியாதே என்று எண்ணினாளா. இல்லை. அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியது. என்னுடைய உடல் மூன்று பேரின் உயிரை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு செல்லுகிறேன் என்று அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். தமிழினத்தின் ஒரு பொக்கிஷம் அல்லவா செங்கொடி. இவ்வாறு வைகோ பேசினார்.

21 செப்டம்பர் 2011

ஸ்ரீலங்காவின் கோரிக்கை நிராகரிப்பு!

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான உலக அமைப்பு( OECD ) நிராகரித்துள்ளது.
பொருளாதார தரப்படுத்தலில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை குறித்த அமைப்பு நிராகரித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் தொடர்பான தரப்படுத்தல்களை மேற்கொள்ளும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக ஓ.ஈ.சீ.டி கருதப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார நிலைமை அபிவிருத்தி அடைந்துள்ளதாகவும் இந்த விடயங்களை கருத்திற் கொண்டு தரப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓ.ஈ.சீ.டியின் இந்த நடவடிக்கை அதிருப்தி ஏற்படுத்துவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் ஏனைய முதனிலை தரப்படுத்தல் முகவர் நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் சாதகமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் சார்பான சகல விடயங்களையும் கருத்திற் கொண்டு தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக ஓ.ஈ.சீ.டி தெரிவித்துள்ளது.

மனித உரிமைப்போருக்கு கனடிய தமிழர்கள் அளித்த பெரும் நன்கொடை!

கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பெற்ற 3வது வருடாந்த நிதிசேர் நடை பவனியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களால் கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோவிலுள்ள தொம்ஸன் பூங்கா மஞ்சள் சாயத்தில் ஒளிர்ந்து காட்சியளித்தது.
முழு மஞ்சள் நிற ரீசேர்ட் அணிந்து, ஸ்காபரோ நகரைச் சுற்றி 5 கிலோ மீட்டர்கள் நடந்து வந்த நடைபவனியினர், மனித உரிமைகளுக்காக பாடுபடும் சர்வதேச மன்னிப்புச் சபைக்காக 50,000 டாலர்களை சேர்த்துக் கையளித்தனர்.
இதைத்தொடர்ந்து தொம்ஸன் பூங்காவில் பல நிகழ்ச்சிகளும் உரையாற்றல்களும் நடந்தேறின. பலவயதைச் சான்றோரும் (செல்ல நாய்க்குட்டிகள் உட்பட) பங்குபெற்ற இவ் நடைபவனி ரொறன்ரோ சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல தமிழ் சமூக நிறுவனங்களால் ஆதரிக்கப்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
நடைபவனியை முன்னிட்டு நடந்த ஆரம்ப விழாவில் பல அரசியல் பிரதிநிதிகளும், சமூகத் தலைவர்களும் பங்கேற்றி உரையாற்றினர். ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர் திரு. மைக்கல் தொம்ஸன், மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு. லோகன் கணபதி, ஸ்காபரோ சென்றர் ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினரும் அமைச்சருமான திரு. பிராட் டுகுய்ட், ஸ்காபரோ கில்வுட் ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினரும் அமைச்சருமான திருமதி மாகிரட் வெஸ்ட், ஸ்காபரோ ரூஜ் ரிவர் பாராளுமன்ற உறுப்பினரான செல்வி ராதிகா சிர்சபைஈசன், ஸ்காபரோ கில்வுட் பாராளுமன்ற உறுப்பினரான திரு. ஜோன் மக்கே, பீச்சஸ் பாராளுமன்ற உறுப்பினரான திரு. மத்தியூ கெல்வே ஆகியோர் தமிழர் சமூகத்தின் முன்னோக்குக் கொள்கைகளை பாராட்டி இவ்வைபவத்தில் உரையாற்றினர்.
மற்றும், தற்போது நடக்கவிருக்கும் ஒன்றாரியோ மாகாண தேர்தல்களில் போட்டியிடும் திரு. நீதன் ஷான், திரு. ஷான் தயாபரன், திருமதி கத்லீன் மதுரீன் ஆகியோரும் இந்த நடைபவனியில் பிரசன்னமாகியிருந்தனர்.
ஒன்றாரியோ மாகாண பிரதமர் மதிப்பிற்குரிய திரு. டால்டன் மகின்டி, கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திருமதி நிக்கோல் டேர்மெல், கனடா லிபரல் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. பாப் ரே ஆகியோரின் சிறப்புச் செய்திகள் அவர்களது பிரதிநிதிகளால் வாசிக்கப்பெற்றன.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடாக் கிளை செயலாளர் நாயகம் திரு. அலெக்ஸ் நீவ் மனித உரிமைகளுக்காக பாடுபட வேண்டிய தேவைகளை வலியுறுத்தி உரையாற்றி அதனை ஆதரிக்கும் தமிழ் சமூகத்தை மனம்திறந்து பாராட்டினார்.
சர்வதேச மன்னிப்புச் சபை ஆரம்பித்து இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இதைக் கொண்டாடும் முகமாக ஒரு பிறந்தநாள் ‘கேக்’கும் வெட்டப்பட்டது இவ் நடைபவனி வைபவத்திற்கு பொலிவைக்கூட்டியது.
கனடிய தமிழர் பேரவை கடந்த மூன்று வருடங்களாக நடைபவனிகளை ஒழுங்குசெய்து வெற்றிகரமாக நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. கடந்த இரண்டு வருடங்களில் சிக் கிட்ஸ் பவுன்டேஷனுக்கு 42,000 டாலர்களும், கனடா கான்சர் அமையத்துக்கு 36,000 டாலர்களும் இவ் நடைபவனிகளால் நிதி சேகரித்து வழங்கப்பட்டுள்ளன.
இவ்வருடம் சேகரிக்கப்பெற்ற 50,000 டாலர்கள் மனித உரிமைகளின் மகத்துவத்தை கனடியத் தமிழர்கள் எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 50 வருடங்களாக ஈழத்தில் அல்லல்பட்டுவரும் அநேக தமிழர்களுக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் இடைவிடாத மனித உரிமை போராட்டங்களும், உண்மை நிலைமையை வெளிப்படுத்தும் அறிக்கைகளும் உதவி புரிந்து வருகின்றன.
அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சிச் ‘சனல் 4′-ஆல் தயாரிக்கப்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படமும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவைப் பெற்றிருந்தது.
ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறு குழுவினரால் ஆரம்பிக்கபெற்ற சர்வதேச மன்னிப்புச் சபை இன்று உலகளாவ வளர்ந்து அநேக நாடுகளில் நடைபெறும் அந்நியச் செயல்களை எடுத்துக்காட்டி மனித உரிமைகளுக்காக போராடுவது தமிழர் சமூகம் செய்த மிகப்பெறும் பாக்கியமாகும்.
அதன்பாலான ஒரு சிறு நன்றிக்கடனே கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பெற்ற 3வது வருடாந்த நிதிசேர் நடை பவனியாகும்.

அமெரிக்க தூதுவர் வன்னிக்கு செல்கிறார்!

வன்னியின் இன்றைய நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் இன்று அங்கு பயணமொன்றை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது அரச அதிகாரிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிய வருகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னிக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனையும் அவர் கிளிநொச்சியில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கின் கொழும்பு மற்றும் யாழ். விஜயத்தையடுத்தே இன்று அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் வன்னி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 செப்டம்பர் 2011

ஜெனீவா முன்றலில் பொங்கி எழுந்தனர் தமிழ் மக்கள்!

சுவிற்சர்லாந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்பாக உள்ள ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்கு தமிழ் !
சுவிற்சர்லாந்து, ஜெனிவாவில் இடம்பெற்ற மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் பலவற்றிலும் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.
வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பேருந்துகளில் வந்து நிகழ்வில் கலந்துகொண்டனர்.
10ஆயிரம் வரையான மக்கள் இந்நிகழ்வில் மிக எழுச்சி பூர்வமாகக் கலந்துகொண்டதை நேரில் காணமுடிந்தது.
சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபை முன்றலில், ஐரோப்பிய தமிழர்கள் ஒன்று கூடிய மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வு பிற்பகல் 2.00 மணியளவில் கொட்டிய மழைக்கு மத்தியில் ஜெனிவா தொடரூந்து நிலையத்திலிருந்து ஐ.நா சபை நோக்கி அணிவகுப்பு நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
பேரணியை வரவேற்று ஐ.நா. முன்றிலில் இருந்து பிரான்ஸ் தமிழ்ச்சோலை சோதியா கலைக்கல்லூரி மாணவர்களின் இன்னியம் நிகழ்வு மற்றும் தேசிய அணிநடை நிகழ்வுகள் இ;டம்பெற்றன. இது அனைவரையும் கவர்ந்தது.
பிற்பகல் 3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது.
தமிழீழ தேசிய கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகள் என்பன அடுத்ததாக இடம்பெற்றன.
தொடர்ந்து சிறீலங்கா இறுதி யுத்தத்தை நிறுத்தக்கோரி, ஐ.நா முன்றலில் தன்னை தீயுடன் ஆகுதியாக்கிக்கொண்ட ஈகை பேரொளி முருகதாசன் உட்பட, தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோரின் ஈகைச்சுடரொளி ஏற்றல் வைபவம் அடுத்து இடம்பெற்றது.
இதில் முருகதாசனின் தந்தை உட்பட ஈகிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு அவர்களின் திரு உருவப்படங்களுக்கு ஈகச் சுடர் ஒளி ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து பல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், சகோதர இனப் பிரமுகர்கள் பொங்குதமிழ் நிகழ்வின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்களுக்கு தமது ஆதரவு குறித்தும் தமிழிலும் ஏனைய மொழிகளிலும் உரைநிகழ்த்தினர். இதற்கு தமிழில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஜேர்மன் மாணவர்களின் எழுச்சி நடனம் இடம்பெற்றது. இது அனைவரையும் உணர்வுடன் எழுந்து நடனம் ஆடவைத்தது.
தொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக ‘வெல்வது உறுதி” என்னும் குறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
கலந்து கொண்ட மக்கள் அந்த குறுவட்டை வாங்குவதற்கு முண்டியடித்தமையையும் காணமுடிந்தது.
தொடர்ந்து சிறப்புரை இடம்பெற்றது. சிறப்புரையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்.
சிறப்புரையைத் தொடர்ந்து பொங்கு தமிழ் 2011 இற்கான பொங்குதமிழ் பிரகடனம் வெளியிட்டுவைக்கப்பட்டது.
தொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்விற்கான நல்வாய்ப்புச் சீட்டிழுப்புக்கான குலுக்கல் இடம்பெற்றது.
அடுத்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இறுதியாக சுவிஸ் தமிழர் இசைக்குழுவினால் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டது. இதன்போது அனைவரும் எழுந்து நின்று தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நடனம் ஆடியமை அனைவரையும் உணர்ச்சிபொங்கச் செய்தது.


சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த மானமிகு தமிழ் மாணவன்!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இம்சம்பவம் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், மநிதுர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது ஏனைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.
அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்தியபோதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன் என கூறினான்.
இவ்வைபவத்தில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ வட மாகாண ஆளுநர். ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகிந்தவுடனான சந்திப்பின் இரகசியங்களை சம்பந்தர் கசியவிட்டுள்ளார்!

அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு அமைக்குமாக இருந்தால், அதில் பங்கெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சாதகமாகப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது என்று கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு மீண்டும் சென்றமை, தெரிவுக்குழுவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதற்கான முனைப்புக்காட்டி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளை அடுத்து கொழும்பில் உள்ள ஊடகத்தினைத் தொடர்பு கொண்ட கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவுடன் தான் மேற்கொண்ட சந்திப்புத் தொடர்பிலான சில தகவல்களை வெளியிடுமாறு கோரி சில விடயங்களையும் கூறியிருக்கின்றார். அதனை அடுத்து அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றதாவது,
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான நோக்கம் பற்றிய கருத்துரையை (Terms of reference) மாற்றியமைப்பதற்கு அரசுத் தலைமை இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தாங்கள் சாதகமாகப் பரிசீலிக்கத் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றார் என நம்பகரமாகத் தெரியவந்தது.
கடந்த 2ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய சந்திப்பில் சம்பந்தர் இதனைத் தெரிவித்திருக்கிறார். சில இராஜதந்திர மட்டங்களின் முன் முயற்சி மற்றும் அழுத்தத்தினால் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியவருகின்றது.
இந்தச் சந்திப்பின்போதே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதற்கான நிலைமைகள் தொடர்பான தங்களது தரப்புக் கருத்து நிலைப்பாட்டை இரா.சம்பந்தன் வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளார்.
அரசுத் தரப்பில் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் தலைவர்களுக்கும், இடையில் தற்போது இடம்பெற்றுவரும் தீர்வு முயற்சிக்கான பேச்சுகள் ஒருபுறம் தொடரவேண்டும்.
அந்தப் பேச்சுகளில் எட்டப்படும் முடிவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது யோசனையாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்வைக்கும். அதேசமயம், மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலூக்கம் உள்ள ஒரு கட்சியாக முழு அளவில் பங்குபற்றவேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தச் சந்திப்பின்போது சம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றும் அறிய வந்தது.
அப்போது, தெரிவுக்குழு அமைப்பதற்கான நோக்கம் குறித்து நாடாளுமன்றப் பத்திரத்தில் அரசுத் தரப்பு குறிப்பிட்டிருக்கும் கருத்துரையை (Terms of reference) கடுமையாகச் சாடி சம்பந்தர் கருத்துகளை முன்வைத்துள்ளார்.
போர் முடிந்துவிட்டது; சமாதானம் பிறந்துவிட்டது. நாட்டை அபிவிருத்தி செய்வது எப்படி என ஆலோசித்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்தத் தெரிவுக்குழுவை அமைப்பதாகவே நாடாளுமன்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில், நல்லிணக்கத்துடன் சமாதானத் தீர்வை எட்டுவது, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, அதற்கேற்ப அரசமைப்பை மாற்றுவது போன்ற விடயங்களை ஆராய்ந்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாக அதன் கருத்துரை (Terms of reference) மாற்றப்படவேண்டும்.
அவ்வாறு அந்த இலக்கை மாற்றுவீர்களாயின், ஒருபுறம் அரசுத் தலைமையுடன் தீர்வுக்கான பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டு மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பங்குபற்றுவது குறித்தும் தமிழ்க் கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும்.” என்று சம்பந்தர் பதிலளித்தார் எனவும் அறிய வந்தது.
அதனை செவிமடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அச்சந்திப்பில் தம்முடன் இருந்த தமது செயலாளர் லலித் வீரதுங்கவிடமும், அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவிடமும் சம்பந்தரின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி பணிப்புரை விடுத்தார் எனவும் அறியவந்தது. சம்பந்தரின் கருத்துக்கு ஏற்ப நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கத்துக்கான கருத்துரையை மாற்றியமைக்க முடியுமா? என்பது குறித்து கவனம் எடுக்கும்படி தம்மை ஜனாதிபதி நேரில் தொடர்பு கொண்டு பணித்தார் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் பின்பு சம்பந்தருக்குத் தெரியப்படுத்தினார் எனவும் அறியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று அல்லது நாளை கொழும்பில் நடைபெறும்போது இந்த விடயங்கள் குறித்து மற்யை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பந்தன் விளக்கமளிப்பார் எனவும் அறியவந்தது. என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

19 செப்டம்பர் 2011

தாயகம்,தேசியம்,தன்னாட்சி என்ற கோட்பாட்டிற்காக வாக்களித்த மக்களை யாரும் ஏமாற்ற முடியாது!

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரிடையே சுயநிர்ணயம் பற்றிய தளம்பல் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் பேச வேண்டிய இடங்களில் பேசாமல் இருந்து விடுகின்றார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியுள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழ் இயங்கும் நூலகங்களுக்கு நூல்களை வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாம் எதை எடுத்துக் கொண்டாலும் எமக்கு பின்னால் எமக்காக ஆயிரக்கணக்கான தியாகிகள் உயிர் கொடுத்துள்ளார்கள். இலட்சக் கணக்கான மக்கள் இரத்தம் சிந்தி உயிர் துறந்து போயுள்ளார்கள் என்பதை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது.
இன்று தமிழ் மக்களின் தலைவர்கள் என்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு சுயநிர்ணய உரிமை பற்றி தளம்பல்கள் இருக்கின்றது. சுயநிர்ணய உரிமை பற்றி பேசவேண்டிய இடங்களில் சிலர் மௌனம் காக்கின்றார்கள்.
சுயநிர்ணய உரிமை, தாயகம், தேசியம் என்ற கோட்பாடுகளுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்கள். ஆனால் பேச்சுவார்த்தை மேடைகளில் தேசிய அபிலாசைகளை மனம் திறந்து பேச சில தலைவர்கள் வெட்கப்படுகின்றார்கள்.
மதில்மேல் பூனையாக இருக்கின்றார்கள். வடகிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணய உரிமை, தேசியம் என்ற விஞ்ஞாபனங்களுக்காக வாக்களித்த தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நழுவுகின்றவர்களை மக்கள் நிச்சயமாக தண்டிப்பார்கள்.
நாம் சுயநிர்ணய கோட்பாடுகளில் இருந்து என்றும் மாறப் போவதில்லை. எமது தேசிய அபிலாசைகளுக்கான பயணம் தொடரும். வட்டுக்கோட்டை தீர்மானம் ஜனநாயக வழி உரிமைகளுக்கான அடி நாதமாக விளங்குகின்றது.
எனவே பல்வேறு தலைமுறைகள் தலைமைகள் ஊடாக வந்தவர்களை ஒரே மேடையில் வைத்து தமிழ் மக்கள் பார்ப்பது சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையிலேயே என்பதை யாரும் மறக்கக்கூடாது. மக்கள் தந்திருக்கின்ற ஆணையின்படி வெளிப்படையான அரசியல் பயணம் நடக்க வேண்டும் எனறார்.

கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்கக்கூடாது என கூறும் புத்திஜீவிகள் யார் என்கிறார் சுமந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது தமிழ் மக்களின் சார்பில் முழுமையான ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர் என வீரகேசரி வாரஇதழ் தனது முதலாம் பக்கத்தில் தலையங்கமாக செய்தி வெளியிட்டிருந்தது.
இனி வருங்காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அங்கிகாரத்தை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் என அரச தரப்பு கூறியதை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்ட கூட்டமைப்பு புத்திஜீவிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா அரசின் இராஜதந்திரிகளால் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை எந்தவித தயக்கமும் இன்றி குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்(தங்களை புத்திஜிவிகள் என நினைக்கின்ற) ஏற்றுக் கொண்டனர்.
இது தொடர்பாக நேற்றைய வீரகேசரி இப்படியான பொறிக்குள் கூட்டமைப்பு சிக்கிக் கொள்ளாது ஒரு இறுதித் தீர்வை முன்வைத்தே பேச வேண்டும் என புத்திஜீவிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் வேண்டிக் கொள்வதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச் செய்தி சம்பந்தமாக அரசாங்கப் பத்திரிகையான தினகரன் இன்று வெளியிட்ட செய்தியில் ‘பேச்சுவார்த்தைப் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கிக்கொள்ளக் கூடாது என புத்திஜீவிகளை மேற்கோள் காட்டி பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்திகள் குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த சுமந்திரன் புத்திஜீவிகள் என்றால் யார் என்று அந்தப் பத்திரிகைச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. யார் அந்தப் புத்திஜீவிகள் எனத் தெரியாதவிடத்து அதுகுறித்துப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்’.
பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளை அங்கிகாரத்திற்காக தெரிவிக்குழுவிற்கு முன்வைப்பதை விட கூட்டமைப்பு புத்திஜீவிகள் தெரிவுக் குழுவுடனே பேச்சுவார்த்தை நடாத்துவது சிறந்தது என்கிறார் கொழும்பின் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.

18 செப்டம்பர் 2011

ஒட்டுக்குழுக்களை பாதுகாப்பு வலயத்தினுள் இரகசியமாக அனுப்பி வைத்தோம்!

முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலையத்தினுள் ஒட்டுக்குழுக்களை இரகசியமாக அனுப்பி வைத்தோம். அந்த ஒட்டுக்குழுக்களும் எமது படையினரும் புலிகளின் முன்னரங்க நிலைகளை உடைக்க மக்களிற்கு உதவினார்கள் என மஹிந்த கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு அமெரிக்க துணைத்தூதருக்கு மஹிந்த இராஜபக்‌ஷ இத்தகவலை தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. மே மாதம் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் படையினரிடம் தப்பி ஓடும் வேளை அங்கு புலிகள் தான் அவர்களை சுட்டுக்கொலை செய்தார்கள் என படையினர் கூறினர்,ஆனால் அந்த நேரமே விடுதலைப்புலிகள் போல வந்த கருணாவின் ஒட்டுக்குழுக்களும் படையினரும்தான் மக்களைச்சுட்டதாகவும் விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையே குழப்பத்தினை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் பொதுமக்கள் பலர் கூறினர். ஆனால் சர்வதேசம் அதனை நம்ப மறுத்தது.
ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி மற்றும் மே மாதம் 13 ஆம் , 14 ஆம் திகதிகளில் பொதுமக்கள் கண்ணிவெடிகள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் முன்னரங்க நிலைகள் நோக்கி ஒடினர். இவர்களை ஓடுமாறு தூண்டி வற்புறுத்தியது விடுதலைப்புலிகள் வடிவில் இருந்த ஒட்டுக்குழுக்கள்தான்.அதுமட்டுமன்றி ஓடிய பொதுமக்களை சுட்டுக்கொன்றதும் இவர்கள்தான்.
இப்போது உண்மைகள் மெல்ல மெல்ல வரத்தொடங்குகின்றன. மஹிந்த தமது ஆள ஊடுருவும் படையும் ஒட்டுக்குழுக்களும் உள்ளே ( பாதுகாப்பு வலையத்தினுள் நுழைந்து முன்னணி காவலரண்களை உடைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியமையினை கூறியுள்ள நிலையில் அங்கு நடந்த பொதுமக்கள் மீதான நடவடிக்கைகள், காட்டுமிராண்டித்தனங்கள் போராளிகள் வடிவில் இருந்த மஹிந்தவின் ஆட்களே.
இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா போர் முடிந்த கையோடு தாம் ஒட்டுக்குழுக்களை ஒரு போதும் படை நடவடிக்கையில் பயன்படுத்தவில்லை என பொய்கூறினார். ஆனால் மஹிந்த இராஜபக்‌ஷவோ தாம் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

மக்களின் ஆணைக்கு கூட்டமைப்பு துரோகம் இளைக்கின்றது!

மக்களின் ஆணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரோகம் இளைக்கின்றது. இலங்கை அரசை சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்கள். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சுயநிர்ணயம் என்ற சொல்லை சொற்களிலும் மக்களிடமும் கூறிக்கொண்டு நடைமுறையில் முழுமையாகக் கைவிட்ட நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. தற்போதய பேச்சுவார்த்தை எந்த சூழலில் நடைபெறுகிறது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
13வது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாகாணசபை முறைமையை கூட்டமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதிகாரப்பகிர்வு குறித்தோ சுயநிர்ணய உரிமை குறித்தோ கூட்டமைப்பினால் பேச முடியாது. எனவே அவற்றைக் கைவிட்டு விட்டார்களா என்பதே இன்றுள்ள கேள்வி. அப்படியாயின் வடகிழக்கில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தனர். இந்த சுயநிர்ணய உரிமை, என்ற ஒன்றிற்காகவே.
நாம் கூட்டமைப்பிற்க்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம், இந்த மாகாணசபை முறைமையை கூட்டமைப்பு நிராகரிக்கவேண்டும், பதிலாக ஆர்வமுள்ள சமுக ஆர்வலர்களை இணைத்து சுயேட்சைக் குழுவொன்றை உருவாக்கி கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கவேண்டும்.
இலங்கை அரசு சுதந்திரம் பெற்ற காலத்திலும் பார்க்க தற்போது உலக நாடுகளின் கடும் அழுத்தத்தில் இருக்கிறது. உரிமைப் போராட்டத்தில் புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடு அதிகரித்துள்ள நிலையில் தமிழர் பகுதிகளில் இருந்து செய்ய முடியாத செயல்களை புலம்பெயர்ந்தவர்கள் செய்கின்ற நிலையில் இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.



17 செப்டம்பர் 2011

ஜெனீவா மாநாட்டில் இலங்கை அரசு மண்டியிட்டது!

ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசு மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டதால்தான் சர்வதேச நாடுகள் தனது இறுக்கமான கெடுபிடிகளைத் தளர்த்திக்கொண்டன என்று ஐக்கிய சோஷலிஸ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
"ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது கூட்டத் தொடரில் தப்பிப்பிழைத்துக்கொள்ளும் நோக்குடனேயே அரசு தனது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை வெளியிடும் காலத்தை இழுத்தடித்தது.
இதனால்தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என சர்வதேச சமூகம் தீர்மானித்துள்ளது.
ஜெனிவாவில் உறுதிமொழிகளை அள்ளி வீசிய இலங்கை அரசு அதனை இங்குவாழ் மக்களுக்கு கட்டாயம் செய்யவேண்டும். இல்லையேல் இலங்கைக்கு கெட்டகாலம் என்றே சொல்லலாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு.
அதனால்தான் சர்வதேசம் பொறுமை காக்கிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு அரசு வெற்றிபெற்றுவிட்டோம் என மார்தட்டும் வேலையை விடுத்து மக்களுக்கு நீதியை வழங்க முன்வரவேண்டும்" - என்றார் ஐக்கிய சோஷலிஸ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய.

நெதர்லாந்து நீதிமன்றில் "இலங்கையின் கொலைக்களம்"காணொளி காண்பிக்கப்படவுள்ளது!

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களம் காணொளி, நெதர்லாந்தின், ஹேக் நீதிமன்றத்தில் காண்பிக்கப்படவுள்ளது.விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான 5 இலங்கையர்கள் தொடர்பிலான வழக்குக்கு, ஆதரமாக இந்த காணொளி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கின் சந்தேக நபர்கள், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை எனவும், அவர்கள் விடுதலைப் போராளிகள் எனவும், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி விக்டர் கொப்பே வாதிட்டுள்ளார்.
எனவே விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியது சட்ட விரோதமானது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் அன்றி, விடுதலை போராளிகள் என்ற தமது வாதத்துக்கு ஆதாரமாக காண்பிப்பதறாகாக, சனல் 4 தொலைக்காட்சியின் காணொளியை நீதிமன்றத்தில் திரையிட கோரியுள்ளார்.
இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இதேவேளை, எதிர்வரும் மூன்று வாரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா? அல்லது விடுதலைப் போராளிகளா என ஹேக் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

16 செப்டம்பர் 2011

ஜெனீவாவிற்கோ அமெரிக்க படை பலங்களுக்கோ ஸ்ரீலங்கா அஞ்சாதாம்!

ஜெனீவாவின் தீர்மானங்களுக்கோ ஐ.நா. உட்பட அமெரிக்காவின் படைப் பலங்களுக்கோ இலங்கை ஒருபோதும் அஞ்சாது. மீள் தலையீடுகளுக்கு எவராவது முயற்சித்தால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். ரொபேட் ஓ பிளேக் போர் குற்றச்சாட்டுக்களுக்கு அடி பணிய வைக்கவும் உள்நாட்டில் அதிகாரப் பகிர்வின் ஊடாக நாட்டை துண்டாடவுமே இலங்கை வந்தார். எனவே ,அரசாங்கம் உடனடியாக பிரிவினைவாதத்திற்கு ஏதுவான காரணிகளை தேசிய அரசியலில் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கலாநிதி குணதாஸ அமரசேகர மேலும் தெரிவிக்கையில், ஜெனீவா அமர்விற்கு பான் கீ முன் நிபுணர் குழு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். எனவே, ஏதாவது வழியை பின்பற்றி நாட்டிற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை வெளிப்படையாகவே தெரிகின்றது. இதற்கு அரசாங்கம் அஞ்சாமல் முகம்கொடுக்க வேண்டும். பிரிவினைவாத சர்வதேச சூழ்ச்சிக்காரர்களின் நோக்கம் இலங்கையை துண்டாடுவதே ஆகும். நிபுணர்குழு அறிக்கை 6 மாத காலத்திற்கு பின்னர் பேசப்படும் என்றால் அது பாரிய ஆபத்தானதாகவே அமையும்.
எவ்வாறயினும் எந்தவொரு சர்வதேசத்தின் நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் இலங்கை அடிபணியாது. அமெரிக்கா, இலங்கை மீதான தலையீட்டை அத்துமீறி மேற் கொள்கின்றது. ரொபேட் ஓ பிளேக்கின் இலங்கை வருகை நாட்டிற்கு எதிரான காரியமாகவே உள்ளது. தமிழ் கூட்டமைப்பினரை அவர் சந்தித்தமையும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மையும் பிரிவினைவாத போராட்டத்திற்கு மீண்டும் வித்திடும் நடவடிக்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் கோரிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா செவிமடுக்காமல் செயற்படுகிறது!

யுத்தம் நிறைவடைந்து இரு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் சில விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி தெரிவித்துள்ளார். சமதானத்தையும்,அபிவிருத்தியையும் ஏற்படுத்த மெய்யாகவே அரசாங்கம் அக்கறை காட்டினால் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பான விவகாரத்தை உதாசீனம் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் வெளியி;;ட்ட கருத்து தொடர்பில் இலங்கை ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தெடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலைமை உருவாகும்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறுவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டு கால அவகாசம் இருப்பதாகவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தி வருவதாகவும் புருஸ் லெவி குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவின் மிரட்டலுக்கு அஞ்சி பேச்சுக்கு சம்மதித்தாரா சம்பந்தன்?

பத்துச் சுற்றுப் பேச்சுக்களுடன் இடைநடுவில் முறிந்துபோன அரசு கூட்டமைப்பு இடையிலான பேச்சு இன்று மீண்டும் ஆரம்பமாக உள்ளது. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான அரச குழுவினரும் நாடாளுமன்றத் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான குழுவினரும் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த மாத ஆரம்பத்தில் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தனை தனிப்பட அழைத்து ஜனாதிபதி பேசியதன் அடிப்படையில் இன்றைய பேச்சுக்கு இரு தரப்பினரும் இணங்கினர் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்துத் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் பேச்சுக்களின் போது என்ன விடயங்கள் குறித்து ஆராய்வது என்பது தொடர்பிலும் இணக்கம் காணப்படும் விடயங்களை உடன் நடைமுறைப்படுத்துவது என்றும் இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் ஊடகமான உதயன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பமான அரசுகூட்டமைப்பு பேச்சுக்கள் 10 சுற்றுக்கள் இடம்பெற்றன. எனினும் முடிவுகள் எவையும் காணப்படவில்லை. இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வந்தது.
இறுதியில் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுக்களில் கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை முன் வைத்தது. ஆட்சி அதிகாரக் கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் அதிகாரப் பகிர்வு அலகுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட உள்ள பகிர்வுகள் மற்றும் பங்கீடுகள், நிதிக் கையாளுகை மற்றும் வரி அறவீடு என்பன தொடர்பான அரசின் நிலைப்பாட்டை விளக்க இருவார கால அவகாசம் கொடுத்த கூட்டமைப்பு, அதுவரை அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதியைக் குறிப்பிட மறுப்புத் தெரிவித்தது.
எனினும், கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது என்று தெரிவித்த அரசு, விடுதலைப் புலிகள் போன்ற நடத்தையை கூட்டமைப்பு வெளிப்படுத்துவதாகவும் சாடி இருந்தது. கூட்டமைப்பின் கோரிக்கைகள் குறித்து அரசு எதனையும் வெளிப்படையாகப் பதிலளிக்காத நிலையில் இன்றைய பேச்சு ஆரம்பிக்கப்படுகிறது என்று அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சனல் 4 காணொளி வெளியாகிய காலப் பகுதியிலும் இரா.சம்பந்தனை அழைத்து அமெரிகாவிற்கோ, இந்தியாவிற்கோ அஞ்சப் போவதில்லை என்று மஹிந்தராஜபக்ச மிரட்டல் விடுத்திருந்ததாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந் நிலையில் சம்பந்தனை அழைத்த மஹிந்த மிரட்டியே பேச்சுக்கு சம்மதிக்க வைத்திருக்கலாம் என்கின்றனர் நோக்கர்கள்.

15 செப்டம்பர் 2011

நெதர்லாந்து நீதிமன்றில் ஐந்து தமிழர்களுக்கு எதிரான வழக்குஇன்று!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய ஐந்து பேர் தொடர்பிலான வழக்கு ஒன்று, இன்றைய தினம் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது. த ரேடியோ நெதர்லாந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில், நெதர்லாந்தில் நடைபெற்று வந்த தமிழர்களின் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை காவற்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். ஒப்பரேசன் கொனிக் என இந்த முன்னெடுப்புக்கு பெயரிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னரும், இந்த நிதி வழங்கல் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.
இந்த குற்றச்சாட்டின் கீழ் பல நெதர்லாந்து தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் தொடர்பிலான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த குழுவில், நெதர்லாந்தில் இயங்கிய விடுதலைப் புலிகளின் கிளைத்தலைவர் என நம்பப்படும் ஆர்.சிறிரங்கமும் உள்ளடங்குகிறார்.
நெதர்லாந்தின் ஹேக் நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என, சிறிரங்கத்தின் சட்டத் தரணி, விக்டர் கொபே ஐரோப்பிய சங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்ட படையினன் நையப்புடைக்கப்பட்டான்!

சந்தேகத்திற்கு இடமான முறையில் மலசல கூடத்தில் மறைந்திருந்த இராணுவச் சிப்பாய் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். நேற்று இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் கொட்டடி கோணாந்தோட்டம் பகுதி வீடொன்றில் வீட்டின் உரிமையாளர் அவதானித்துக் கொண்டிருந்த போது இராணுவச் சிப்பாய் ஒருவர் அங்குள்ள மலசல கூடத்தினுள் மறைந்துகொண்டதை அவதானித்தார். இதனையடுத்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்ததை அடுத்து ஒன்றிணைந்த மக்கள் குறித்த சிப்பாயை பிடித்து யாழ் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இராணுவச் சிப்பாய் யாழ் நகரப்பகுதியிலுள்ள 512வது படைப்பிரிவைச் சேர்ந்தவர் எனவும் மகியங்கனையைச் சொந்த இடமாகக் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.

14 செப்டம்பர் 2011

மேர்வின் சில்வாவின் நடவடிக்கைக்கு மனோகணேசன் கண்டனம்!

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோயில் வளாகத்திற்குள் அடியாட்களுடன் அத்துமீறி நுழைந்து, சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மிருகவதையை தடுப்பதாக கூறிக்கொள்ளும் இந்த அரசியல்வாதி, தமிழ் இந்துக்களின் மனங்களை வதை செய்துள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
முன்னேஸ்வரம் கோயிலில் ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இது இந்து தர்மத்திற்கு முரணானது. மிருகவதையை ஒருபோதுமே இந்து பாரம்பரியம் ஏற்றுக்கொள்வதில்லை.
உலகெங்கும் பல்வேறு மதஸ்தலங்களிலே பகுத்தறிவிற்கு ஒவ்வாத எத்தனையோ காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்விதம் பாரம்பரியமாக நடைபெற்றுவரும் ஒரு செயற்பாட்டை தடாலடியாக தடுத்து நிறுத்திவிட முடியாது. முன்னேஸ்வரம் தொடர்பிலே ஏற்கனவே நீதிமன்றத்தின் தலையீடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அகில இலங்கை இந்து மாமன்றம் உட்பட பல்வேறு இந்து மத அமைப்புகளும் இதுதொடர்பிலே அக்கறை கொண்டுள்ளன. அது தவிரவும், அரசாங்கத்திற்குள்ளே பல்வேறு தமிழ் இந்து அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் இந்து அமைப்புகளின் துணையை பெற்றுக்கொள்ளாமலும், குறைந்தப்பட்சமாக அரசாங்கத்தில் இருக்கக்கூடிய இந்து அரசியல்வாதிகளை துணைக்கு அழைத்துகொள்ளாமலும் மேர்வின் சில்வா தனது அடியாட்களுடன் ஆலயத்திற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளார். அங்கு குழுமியிருந்த பக்தர்களையும், அந்த ஆலய குருமார்களையும் அவமானப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்து உணர்வாளர்களின் மனங்களை கடுமையாக புண்படுத்தியுள்ளார்.
இத்தகைய மிருகவதையை தடாலடியாக தடுக்க வேண்டும் என்று கூறுகின்றவர்கள் வாழ்கின்ற இந்நாட்டிலேதான், இலட்சக்கணக்கான மக்கள் சில நாட்களுக்குள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் நினைத்து பார்க்கவேண்டும். இன்று மிருகவதையை எதிர்கின்றவர்கள், மனித படுகொலைகளை எதிர்காதது மாத்திரம் அல்ல, அவற்றை நியாயப்படுத்தியவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்வதைப்போல், இந்து ஆலய வளாகத்திற்குள் நுழைந்து மேர்வின் சில்வாவும், அவரது அடியாட்களும் முறைதவறி நடந்துகொண்டுள்ளார்கள். ரூபவாஹினி கூட்டுத்தாபனம் என்பது வேறு, மத வழிபாட்டு ஸ்தலம் என்பது வேறு என்பதை மேர்வின் சில்வாவிற்கு அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகளாவது எடுத்துக்கூறவேண்டும்.
பௌத்த விகாரைகளுக்குள்ளே எத்தனையோ முறைதவறான செயல்கள் நடைபெறுவதாக தினந்தோறும் செய்திகள் வருகின்றன. இவற்றை எதிர்த்து பௌத்த சிங்களவர்கள் அல்லாத நாங்கள், எங்களது ஆதரவாளர்களுடன் விகாரைகளுக்குள் நுழைந்து சட்டத்தை நிலைநாட்ட முடியுமா? அவ்வாறு நடந்துகொண்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். சட்ட ஒழுங்கையும், தர்மத்தையும் நிலைநாட்டும் பொறுப்புகளை பொலிஸாருக்கும், மதத்தலைவர்களும் மாத்திரமே வழங்கவேண்டும்.