31 அக்டோபர் 2011

சம்பந்தருடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு நூறு கனேடியன் டொலர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கலந்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு அவருடன் அமர்ந்து உணவு உண்பதற்கு கனடா வாழ் புலம்பெயர் மக்கள் தலா 100 டொலர் நிதி செலுத்தவேண்டும் எனவும் பிரித்தானியா வாழ் புலம்பெயர் மக்கள் தலா 50 பவுண்ஸ் நிதியும் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,அமெரிக்காவின் உயர் மட்ட அழைப்பினை அடுத்து அமெரிக்காவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பினரில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் கனடாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கான அனுமதியினை கனேடிய உயர்ஸ்தானிகரகம் வழங்கவில்லை.
கனடா செல்லும் கூட்டமைப்பினருக்கான இராப் போசனத்திற்கான அழைப்பினை கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளை என்ற பெயரிலான அமைப்பு விடுத்திருக்கின்றது. இந்த அமைப்பினால் கனடா வாழ் புலம்பெயர் மக்கள் 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், நிகழ்வில் கலந்து கொள்வோர் தலா நூறு டொலர்களை செலுத்த வேண்டும் என்றும் அழைப்பிதழலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதேவேளை எதிர்வரும் ஆறாம் திகதி பிரித்தானியாவிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ள கூட்டமைப்பினருக்கான விருந்துபசார நிகழ்வில் பங்கு கொள்ளவுள்ளவர்கள் தலா 50 பவுண்ஸ்களைச் செலுத்த வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னளர்.
அல்லல்படும் மக்களுக்கு கைகொடுப்போம் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும் அங்கு சேர்க்கப்படும் நிதி எங்கு சென்று சேரும் என்பது யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக கனடாவில் சேர்க்கப்பட்ட நிதி தொடர்பிலான கணக்கறிக்கை இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
அதேபோல கடந்த தேர்தல்களுக்காக தாம் சேகரித்து அனுப்பிய நிதி தொடர்பில் லண்டன் கூட்டமைப்புக் கிளையினர் லண்டனுக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கேள்வி எழுப்பிய போது, அவ்வாறான நிதி தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்று சிறீதரன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு கோடி ரூபா நிதி வழங்கப்பட்டிருந்ததாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அது தொடர்பிலான கணக்கறிக்கையும் கூட்டமைப்பினரிடம் இருப்பதாக தெரியவில்லை.
அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது இந்திய அரசினால் கூட்டமைப்பின் கட்சிச் செலவுக்காக எழுபத்தைந்து இலட்சம் ரூபா வழங்கப்பட்டிருந்ததாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. ஆனாலும் சபைகளில் போட்டியிட்டவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரையிலேயே வழங்கப்பட்டிருந்தமை நோக்கத் தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவு செய்து ஒற்றுமையை வலுப்படுத்தத் தவறி வருகின்ற கூட்டமைப்பு, ஒரு தொண்டு நிறுவனத்தினைப் பதிவு செய்வதற்கான முயற்சியினை இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கின்ற கூட்டமைப்பு புலம் பெயர் மக்களின் பணத்தினைப் பெற்று என் செய்ய போகிறது?

திருமலையில் தந்தை செல்வா சிலை உடைப்பு!மனோ கண்டனம்,தமிழரசுக் கட்சி மெளனம்.

திருக்கோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையின் தலைப்பகுதி நேற்று இரவு உடைத்து சேதமாக்கப்பட்டிருப்பதாக திருகோணமலையிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து மலையக மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ள போதிலும் தமிழரசுக்கட்சி, தந்தை செல்வா என அரசியலுக்காக புகழ்பாடுகின்ற தமிழரசுக்கட்சியினர் எவரும் வாய் திறக்காமை தந்தை செல்வாவை ஆழமாக நேசித்த மக்கள் மத்தியில் விசனத்தினைத் தோற்றுவித்துள்ளது.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் அமெரிகாவிற்கான முக்கிய பயணத்தினை மேற்கொண்டிருக்கின்ற போதிலும் தமிழரசுக்கட்சியினை நிர்வகிக்கின்ற பேராசிரியர் சிற்றம்பலம், சீ.வி.கே சிவஞானம், குலநாயகம் உட்பட்டவர்களும் கூட்டமைப்பில் தம்மை தமிழரசுக்கட்சி என அடையாளப் படுத்திக் கொள்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் செய்தி தரவேற்றம் செய்யப்படும் வரையில் எந்த ஊடகத்திற்கும் தகவல் வழங்கியிருப்பதாகத் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனோகணேசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:-
அரசாங்கத்தின் முழுமையான நிர்வாகத்திற்குள்ளிருக்கும் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் எம்மை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருக்கின்ற தமிழர்களின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்
தந்தை செல்வா, தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தலைவராகும். மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர். ஈழத்து காந்தி என்று போற்றப்படும் தந்தை செல்வா அவர்களை, இலங்கையில் வாழ்கின்ற எல்லாத் தரப்பு தமிழ் மக்களும் தேசிய தலைவராக ஏற்றுக்கொண்டு, போற்றி வணங்குகின்றார்கள்.
இன்று ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் பல்வேறு பேரினவாத அனர்த்தங்களைப்பற்றி தந்தை செல்வா அன்றே தீர்க்கதரிசனமாக எடுத்துக்கூறியிருக்கின்றார். இத்தகைய உன்னதமான தலைவரின் சிலை இன்று திருக்கோணமலையிலே உடைக்கப்பட்டிருக்கின்றது. இது தமிழ் மக்களின் சாத்வீக சிந்தனைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வடகிழக்கில் சமீபகாலமாக திட்டமிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழனத்தின் அனைத்து பரிமாணங்களையும் அழிக்கும் முயற்சிகளை இந்த அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தூண்டிவிடுகின்றது.
இத்தகைய பேரினவாத போக்கின் கடைசி வெளிப்பாடுதான் இந்த காட்டுமிராண்டி செயலாகும். இத்தகைய பேரினவாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தங்களது சாத்வீக போராட்டத்தை தந்தை செல்வா வழியில் உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும் என்பதையே இத்தகைய சம்பவங்கள் வலியுறுத்தி நிற்கின்றன. எனக் கூறியுள்ளார்.

30 அக்டோபர் 2011

அனைத்துலக ஆதரவு கோரி கனடாவில் அணி திரண்ட தமிழ் மக்கள்.

கனடாவின் ரொரன்ரோ நகரில் நேற்றுமாலை சுமார் 5000 தமிழர்கள் பங்கேற்ற தமிழர் சுதந்திரப் பேரணி இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு காரணமான சிறிலங்கா அரசாங்கத்தைக் கூண்டில் ஏற்ற வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்ற இந்தப் பேரணியில் கனடாவில் வாழும் சுமார் 5000 தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.
குயின்ஸ் பார்க் மைதானத்தில் இந்தப் பேரணியில் இந்தப் பேரணியில் ரொரன்ரோ மற்றும் யோர்க் பிராந்திய தொழிலாளர் சபையின் ஜோன் காட்ரைட், லிபரல் பன்முக கலாசார விமர்சகர் ஜிம் கரஜியானிஸ் ஆகியோரும் கலந்து கொண்டு கனேடிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான கொள்கையை கடுமையாக விமர்சித்தனர்.
“சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், போரின் கடைசி நான்கு மாதங்களில் மட்டும் 40,000 தொடக்கம் 75,000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற கனேடிய தமிழர் தேசிய சபையின் பேச்சாளர் கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
இறுதியான அரசியல் தீர்வு ஒன்றையே தாம் எதிர்பார்ப்பதாகவும், இல்லையேல் மீண்டும் போர் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு ஒரு இலட்சம் சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் தமது நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்புவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கனேடியத் தமிழர் தேசிய சபை குற்றம்சாட்டியுள்ளது.
அமைதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறு சிறிலங்கா அரசுக்கு கனேடியத் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோருவதாகவும் கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் பலரும் தமிழீழ மற்றும் கனேடியத் தேசியக் கொடிகளை தாங்கியிருந்தனர்.

மூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா?என சீமான் கேள்வி.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணானதாகும்.
3 பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப்பூர்வமான நிலையா என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது.
அப்படியானால், அவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை முதல் அமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

எங்களுக்கு தெரியாமல் பான் கீ மூனை கூட்டமைப்பினர் சந்திக்க முடியாதென்கிறார் சவேந்திர சில்வா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீமூனைச் சந்திப்பதற்கான எந்த வாய்ப்புக்களுமில்லை. ஐக்கிய நாடுகள் சபைவரை அவர்கள் செல்லக்கூடும்.ஆனால் ஐ.நா.செயலரைச் சந்திக்கமாட்டார்கள்.எங்களுக்குத் தெரியாமல் அவர்களின் சந்திப்பு இடம் பெற அறவே வாய்ப்பு இல்லை இவ்வாறு நேற்றுத் திட்டவட்டமாகக் கூறினார் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் மற்றும் ஐ.நா.செயலரை கூட்டமைப்பினர் சந்திப்பது குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கூட்டமைப்பினரின் அமெரிக்கப் பயணம் தொடர்பில் அரசு அலட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. செயலரைச் சந்திக்கமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஐ.நாவில் அவர்கள் செயலாளர் நாயகத்தை சந்திப்பதாக இருந்தால் அது தொடர்பான தகவல் எமக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எந்தத் தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை.நாடாளுமன்றத்தைப் பார்க்க செல்லும் ஒருவர் நாடாளுமன்றத்தை வேண்டுமானால் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் சபாநாயகரை பார்த்தேன் என்று சொல்ல முடியுமா? அதுபோல, கூட்டமைப்பினர் ஐ.நாவின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துபேசக்கூடும். ஆனால் செயலாளரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் கிடையாது.இன்னொன்றையும் கூறவிரும்புகின்றேன். தமிழக் கூட்டமைப்பினர் எவரைச் சந்தித்தாலும் எமக்குப் பிரச்சினையில்லை. ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு இலங்கை. எனவே இப்படியான கட்சிகளின் செயற்பாடுகள் அல்லது முயற்சிகள் எந்த விதத்திலும் எம்மைப் பாதிக்கப் போவதில்லை. இவ்வாறு தெரிவித்தார் சவேந்திர சில்வா.

29 அக்டோபர் 2011

தமிழீழ தேசியத்தலைவர் முற்றுகையிலிருந்து தப்பித்தால் தாம் தேடிப்பிடித்து தருவதாக கோத்தாவுக்கு உறுதியளித்தாராம் பிளேக்!

தமிழீழ தேசியத்தலைவர் வே. பிரபாகரன் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் இருந்து தப்பிச் சென்றால் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாக சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
2009 ஏப்ரல் 15ம் நாள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனுக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், றொபேட் ஓ பிளேக்கிற்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பாக இந்த தகவல் பிரமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வருவதற்கு ஒரு மாதம் முன்னதாக இந்தத் தகவல் பரிமாறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகள் சிறிலங்காப் படையினரின் முற்றுகைக்குள் முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்த நிலையில அவர் அங்கிருந்து தப்பிச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் இருந்து தப்பி சிறிலங்காவை விட்டு வெளியே சென்றிருந்தால் அவரைத் தேடிப் பிடித்துத் தர உதவுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் றொபேட் ஓ பிளேக்.
அத்துடன் விடுதலைப் புலிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக இருப்பதாக இந்தச் சந்திப்பில் கோத்தாபய ராஜபக்ச கூறியதாகவும், விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.
அதனை பகிரங்கமாக அறிவிக்க சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்றும், சிங்கள தேசியவாத சக்திகள் அதனை எதிர்க்கும் என்பதால் அவ்வாறு பகிரங்கமாக அறிவிக்க முடியாது என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியதாகவும் அமெரிக்கத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்கவுள்ளதாம் ஸ்ரீலங்கா.

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், இலங்கைக்கு செல்வதை தடைசெய்யும் வகையில் அவர்களின் பெயர் விபரங்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவர்களின் உண்மையான பெயர்களை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
புலிகளின் இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் தமது மனைவி, பிள்ளைகளுடன்,சுற்றுலா செல்லும் போர்வையில் இலங்கைக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் தம்முடன் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் தமது நண்பர்கள் எனக் கூறி அழைத்து செல்வதாகவும் இவர்கள் வடபகுதிக்கு சென்று புலிகளின் ஆதரவாளர்களை சந்தித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக திவயின கூறியுள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுக்குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 26 லிருந்து அமெரிக்க இராஜாங்கத் துறை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்தியிருப்பதாகத் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
பல மூத்த அதிகாரிகளை இதுவரை சந்தித்திருப்பதாகத் தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், இனி வரும் நாட்களில் மேலும் சில முக்கிய செனட்டர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
இது வரை நடந்த சந்திப்புகளில், அமெரிக்க அதிகாரிகள், இலங்கையில் போருக்கு பின் , நல்லிணக்கம் என்று அரசு வெளி உலகுக்குக் கூறினாலும், நடக்கும் நடப்புகள் அதற்கு நேர்மாறாக இருப்பதைப் பற்றி விவாதித்தாகத் தெரிவித்தார்.
மேலும், அரசியல் தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்பது குறித்தும் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே அமெரிக்கா, இலங்கை அரசு மீது அரசியல் தீர்வு குறித்து அழுத்தங்களை தந்து கொண்டிருக்கிறது என்று கூறிய சுரேஷ் பிரேமசந்திரன், ஆனால் இலங்கை அரசு இதை சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறதா என்பதுதான் சரியாகத் தெரியவில்லை என்றார்.
அமெரிக்காவின் அழுத்தம் மட்டும் போதாது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மற்ற சர்வதேச சமூகத்தின் அழுத்தமும் ஒத்துழைப்பும் தேவை என்றும் பீபீசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

28 அக்டோபர் 2011

மகிந்தவை முக்கியப்படுத்தி சுற்றி சுழலும் ஊடகங்கள்!

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 54 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த உச்சிமாநாட்டை முன்னிட்டு பல்வேறு அமர்வுகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீதே ஊடகங்களின் கண் பதிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக கொமன்வெல்த் அமர்வுகளில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மீதே ஊடகங்களின் கண் இருக்கும்.
ஆனால் இம்முறை போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, சர்ச்சைகளுக்குள்ளாகியிருக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, பிரித்தானிய மகாராணிக்கு இணையாக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இதற்கு முன்னர் சிறிலங்காவுக்கு இத்தகைய ஊடக முக்கியத்துவம் கொமன்வெல்த் அமர்வுகளிலோ, பிராந்திய நாடுகளின் அமர்வுகளிலோ கிடைத்ததில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தி ஆசிரியர் சமிந்திர பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்காவையும், மகிந்த ராஜபக்சவும் அனைத்துலக ஊடகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
சிறிலங்கா விவகாரத்தை குறிப்பாக போர்க்குற்ற விவகாரத்தை, அவுஸ்ரேலிய ஊடகங்களும், அனைத்துலக ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு கோணங்களில் அலசி வருகின்றன.
அத்துடன் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை அவுஸ்ரேலியா அரசு தடுத்ததும் அங்கு விமர்சனங்களை தோற்றிவித்துள்ளது.
சிறிலங்கா அரசுக்கு எதிராக மென்போக்குடன் நடந்து கொள்வதாக அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள், முன்னாள் இராஜதந்திரிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
‘தி வெஸ்ரேர்ன் ஒஸ்ரேலியன்‘ ஊடகத்தில் “சிறிலங்கா மூலம் பரிசோதிக்கப்படும் கொமன்வெல்த்தின் பெறுமானம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின் பொதுச்செயலர் சலில் செற்றி, கொமன்வெல்த்தின் ஒருபகுதி நாடுகள் சிறிலங்கா விவகாரத்தில் குருட்டுக் கண்ணுடன் செயற்படுவதாக குற்றம்சாட்டிள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபியாவின் இடைக்கால அரசு மீது சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்கு!

கடாபி மற்றும் அவரது மகன் கொல்லப்பட்டது போர் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக லிபிய அரசு மீது சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்குத் தொடரவுள்ளோம். இவ்வாறு கடாபியின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
லிபியாவில் புரட்சிப் படையினர் தற்போது நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். லிபிய அதிபர் கடாபி மற்றும் அவரது மகன் ஆகியோர் அவரது சொந்த ஊரான சிர்த் நகரில் புரட்சிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடாபி குடும்பத்தினர் பலர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
போரில் கடாபி கொல்லப்பட்டது தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
கடாபி குடும்பத்தினர் சார்பில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி பார்ஸ்டன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர், லிபியாவில் புரட்சிப் படையினர் ஆரம்பத்தில் இருந்தே போர்க்குற்றங்களை புரிந்து வந்துள்ளனர். போர்க்குற்றறத்தை மீறி ஏராளமான இராணுவத்தினரையும் அப்பாவிகளையும் கொன்று குவித்துள்ளனர். கடாபி மற்றும் அவரது மகன் கொல்லப்பட்டதும் போர் விதிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே, இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர இருக்கிறோம்.
இடைக்கால அரசுக்கு லிபியாவை ஆளுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் ஆட்சியை கடாபியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னுதாரணம் இல்லாத வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் உலகின் பல தரப்பாலும் வியப்போடும் விழிப்போடும் நோக்கப்படுகிறது.பிரதான இராஜதந்திரிகள், நாட்டின் பிரதிநிதிகளையே ஓரிரு மணித்தியாலங்கள் சந்தித்துப் பேசுகிற பாங்கையுடைய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்திப்பை மேற்கொண்டு வருகிறது.
புதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாளக்கிழமையும் மாலை வரை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது.
இதுவரை நடந்த சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும், பயன்தருவனவாகவும் அமைந்தன என்பதை பூடகமாகத் தெரிவித்த பேச்சுக்குழுவினர் நாளை பேச்சுக்கள் முடிந்ததும் மக்களிற்கு அறிக்கை வாயிலாக தங்களின் பேச்சுக்களின் விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் முடிவெடுக்கும் தலைமையகமான இராஜாங்கத் திணைக்களம் ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பான கற்கை, சமகால நிலவரப் பரிமாற்றம் என்பவற்றை மேற்கொண்டு இலங்கை தொடர்பான கொள்கை மாற்றமொன்றிற்குள் தன்னை கொண்டு செல்வதான ஐயப்பாடே நீண்டு செல்லும் பேச்சுக்களினால் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.
இதேவேளை ஐ.நா.வின் செயலர் பான் கீ மூனுடன் சந்திப்புக்கான சாத்தியம் நவம்பர் 1ம் திகதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் கனடாவிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து சேரும் தமிழ்த் தேசியக் குழுவினர் மீண்டும் அமெரிக்கா செல்லும் சாத்தியம் காணப்படுகிறது.
கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்புக்களில் ஒக்டோபர் 31ம் திகதி மேற்கொள்ளும் இக் குழுவினர் அதன் பிற்பாடு மீண்டும் அமெரிக்கா செல்லலாம் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியப்பிரிவுப் துணைச் செயலாராக ரொபேட் பிளேக் அவர்கள் இருக்கும் காலமே தமிழர்களிற்கும் அமெரிக்காவும் புரிந்துணர்வு ஏற்பட்ட காலமாக மாறும் வாய்ப்புள்ளதையே தற்போதைய சந்திப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ரொபேட் பிளேக் அவர்கள் சென்னையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிய காலம் தொட்டுத் தமிழர்களின் வாழ்வியலை அறிந்தவராகவும் தமிழ்மொழியை ஓரளவு அறிந்தவராகவும் இருந்தவர் என்பதும் இலங்கையில் விடுதலைப் போர் உச்சத்திலிருந்த போது தூதுவராகப் பணிபுரிந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கிளாரி கிளிண்டனின் அண்மைய இந்திய விஜயத்தின் போது அவர் சென்னை சென்று ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கும் ரொபேட் பிளேக்கே காரணம் என்று கூறப்பட்டது.

27 அக்டோபர் 2011

மக்களின் செயற்பாடுகளில் சிங்களப்படைகள் குறுக்கீடு செய்வதை நேரில் பார்த்தேன்"

நாங்கள் சில இராணுவ சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தோம். பொதுமக்களின் செயற்பாடுகள் சிலவற்றில் இராணுவ வீரர்கள் குறுக்கீடு செய்வதைப் பார்த்த போது நாங்கள் மிகவும் குழப்பமுற்றோம்.
இவ்வாறு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட Journal of Foreign Relations என்னும் ஊடகத்தில் Gibson Bateman எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் தலைமை தாங்கப்படும் போருக்குப் பிந்திய சிறிலங்காவானது சோகம் நிறைந்த இடமாக உள்ளது.
மே 2009 ல், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து சிறிலங்கா அரசாங்கம் பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இதில் புலிகளின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டனர்.
சிறிலங்கா அரசிற்கு எதிராக பிறிதொரு தமிழ்த் தேசிய அமைப்பானது ஆயுதத்தைத் தூக்குவதென்பது மிகக் கடினமான செயலாகும் என எதிர்வுகூறப்படுகின்றது. ஆனால், தற்போதும் சிறிலங்காவில் வசிக்கும் ஒருவர் அங்கே யுத்தம் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவே கருதுவார்.
போருக்குப் பிந்திய சிறிலங்காவின் சில இடங்கள் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளை அழித்ததன் மூலம் இராணுவ வீரர்கள் யுத்தக் கதாநாயகர்களாகக் கருதப்படுகின்ற சிங்களவர்கள் செறிந்து வாழும் சிறிலங்காவின் தெற்குப் பகுதியில் இராணுவ நடமாட்டங்கள் குறைவாகவே உள்ளன.
ஆனால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையைக் கொண்டுள்ளனர். முன்னர் புலிகளின் பலம்மிக்க அரண்களாக விளங்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகள் தற்போது முற்று முழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதானது அந்த மக்களைக் குழப்புவதாக உள்ளது.
இந்த மக்களின் ஒட்டு மொத்த வாழ்வில் நாட்டின் பாதுகாப்புப் படைவீரர்கள் தமது செல்வாக்குகளைச் செலுத்துகின்றனர்.
சிறிலங்காவில் தற்போது அதிகம் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பான புள்ளிவிபரங்கள் எங்கும் கிடைக்கப்பெறவில்லை.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்கள இராணுவப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் மக்கள் குறிப்பாக போர்க் காலத்தில் தமது கணவன்மாரை இழந்து தனித்து வாழும் தமிழ்ப் பெண்கள் அச்சத்துடன் வாழ்வைக் கழிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்லும் சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏ-09 நெடுஞ்சாலை வழியாக நானும் எனது நண்பர் ஒருவரும் சென்றுகொண்டிருந்தோம்.
அந்தப் பகுதி முழுதும் இராணுவ வீரர்களால் நிறைந்திருந்தது. நாங்கள் சில இராணுவ சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தோம். பொதுமக்களின் செயற்பாடுகள் சிலவற்றில் இராணுவ வீரர்கள் குறுக்கீடு செய்வதைப் பார்த்த போது நாங்கள் மிகவும் குழப்பமுற்றோம்.
நாங்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அவ்வீதியின் அருகிலிருந்த உணவகத்தில் கோப்பி அருந்துவதற்காகச் சென்றோம். அது சிறிலங்கா இராணுவத்தின் உணவகமாகும். அந்த உணவகத்தில் நாம் கேட்டவற்றை இராணுவ வீரர் ஒருவர் பரிமாறினார். இது எமக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
வீட்டுக்குத் தேவையான பொருட்கள் விற்கப்படும் பல்வேறு வகையான கடைகளில் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுவதை நாம் பார்த்தோம். அத்துடன் சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட விடயத்திலும் சிறிலங்கா இராணுவத்தினர் தலையீடு செய்வதை நான் வாசித்து அறிந்துள்ளேன. இவ்வாறான விடயங்கள் நியாயமற்றவையாகும்.
யுத்தம் முடிவுற்றுவிட்டது. ஏற்கனவே தமது கௌரவத்தை இழந்து வாழும் தமிழ் மக்கள், தற்போது இராணுவ மயப்படுத்தப்பட்ட நிழல் நிர்வாகத்தின் கீழ் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிறிலங்காவின் வடக்குக் கிழக்கில் கடந்த யூலை மாதத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்கள் அங்கு வாழும் தமிழ் மக்கள் மகிழ்ச்சியற்ற வாழ்வைக் கொண்டுள்ளனர் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அவர்களுக்கென சிறிய ஆதரவுகள் உண்டு.
இதேவேளை சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கம் பல அபிவிருத்தி, மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இது பெரிய விவகாரம் அல்ல. ஏனெனில் இங்கு வாழும் தமிழ் மக்கள் இவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனெனில் இவ்வாறான துரித அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மூலம் தாம் தமிழ் மக்களில் மிகவும் அக்கறையுடன் உள்ளதை உலக நாடுகளிற்குக் காட்டுவதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் போருக்குப் பிந்திய அபிவிருத்தித் திட்டங்களைவ வடக்குக் கிழக்கில் மேற்கொள்கின்றனர்.
தமிழ் மக்கள் தமக்கான அரசியற் தீர்வையே விரும்புகின்றார்கள். நீதியான, நேர்மையான முறையில் தமக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.
தாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமது தாயக பூமியில் இரண்டாந்தர மக்களாகத் தாம் நடாத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதையே அந்த மக்கள் விரும்புகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை வழங்குவதற்கான எந்தவொரு செயற்பாட்டையும் ராஜபக்ச அரசாங்கம் இன்னமும் மேற்கொள்ளவில்லை.
நீண்ட கால யுத்தத்தை நிறைவு செய்து தற்போது வேலையற்றவர்களாகவுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான இளையோர்களை வைத்திருப்பதையே ராஜபக்ச அரசாங்கம் விரும்புகின்றது. இது குற்றச் செயல்கள் மற்றும் குழப்பநிலைகள் அதிகரிப்பதற்குக் காலாக உள்ளது. ஆனால் இராணுவ வீரர்களின் குறைப்பதானது எவ்வாறான நன்மையைத் தரும் என்பதைக் கூட ராஜபக்ச அரசாங்கம் தனது கவனத்தில் எடுக்கவில்லை.
துரதிஸ்டவசமாக, இவ் இராணுவமயப்படுத்தலானது பூகோள அரசியல் பொருளாதாரத்திற்கு சிறிது நன்மையைத் தந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் இராணுவ மயப்படுதுதப்பட்ட சிறிலங்காவைத் தமது பூகோள அரசியல் பொருளாதாரம் தொடர்பாகக் கவனம் எடுக்கவில்லை.
இதேபோல் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையாக அனைத்துலக சமூகத்திடமிருந்து சுதந்திரமான விசாரணை ஒன்று மேற்கொள்வதற்கான அழுத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான அழுத்தத்தின் மூலம் தமிழ் மக்களிற்கான ஒரு அரசியற் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றே இந்நாடுகள் கருதுகின்றன.
இவை தவிர, சிறிலங்காவுடன் அமெரிக்கா முழுமையான இராணுவ உறவொன்றைப் பலப்படுத்திக் கொள்ளுமாறு பென்ரகன் வலியுறுத்தி வருவது தெரிந்ததே. தேவையற்ற விதத்தில் சிறிலங்காவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவமயமாக்கலானது, சிறிலங்காவிலும் வெளிநாடுகளிலும் செயற்படும் மனித உரிமைக் குழுக்கள் இது தொடர்பாகப் போதியளவு எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்பதையே குறிக்கின்றது.
முதலில் சில விடயற்களை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். முதலாவதாக, சிறிலங்கா அரசாங்கம் பெரும்பாலான ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக, சிறிலங்காவில் மனித உரிமைச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதி குறைவாக உள்ளமையாகும்.
மனித உரிமையைப் பாதுகாப்பவர்கள் துணிச்சலுள்ளவர்களாக இருந்தால், சிறிலங்காவில் உள்ள இராணுவமயப்படுத்தல் செயற்பாடானது ஆபத்து மிக்கதாகும் என்பதை வெளிப்படையாகக் கூறலாம். மீண்டும் மக்கள் அச்சமுறுவதும், பயங்கொள்வதும் மிகச் சக்திவாய்ந்ததொரு விடயமாகும். இறுதியாகக் குறிப்பிட்ட விடயத்தை பரந்துபட்ட பூகோள அரசியற் போக்குடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தனது விமர்சனங்களை அறிவித்துள்ள போதிலும், இதன் உறுப்புநாடுகளில் பல 2005 ல் மகிந்த ராஜபக்ச முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்தும் சிறிலங்காவிற்கு ஆயுதங்களை விநயோகித்து வருகின்றன.
கடந்த பல பத்தாண்டுகளாக சிறிலங்காவின் மிகப் பெரிய ஆயுத வழங்குனராகச் செயற்பட்டு வரும் சீனாவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகளின் ஆயுத விநயோகம் மிகக் குறைவானதாகும்.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் தொடர்ந்தும் சிறிலங்காவிற்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தவில்லை. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அமெரிக்கா, சிறிலங்காவிற்கு தனது ஆயுதங்களை வழங்கியிருந்தது. அத்துடன் இனிவருங் காலங்களிலும், அமெரிக்கா, சிறிலங்காவுடன் ஆயுதப் பேரம் பேசுவதில் ஈடுபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கதே.
மேற்கூறிய காரணங்களை சீர்தூக்கிப் பார்க்கும் போது சிறிலங்கா இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்தல் அல்லது இராணுவ ஒதுக்கீட்டைக் குறைத்தல் என்பது எதிர்காலத்தில் சாத்தியமாகாது தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும் என்றே எதிர்வு கூறப்படுகின்றது.

நாட்டை மீட்டெடுத்த எனக்கு கற்களாலும் தாக்குகின்றனர் என்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்திமிக்க நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனக்கு மலர்மாலைகள் விழுவதைப் போன்று கற்களால் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை தூதுவராலயம் மற்றும் அந்நாட்டில் இருக்கின்ற இலங்கை கலாசார அமைப்புகள் 7 இணைந்து ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் ஜனாதிபதி நேற்று மாலை கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழக வின்துரோப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கையின் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்துகொண்டார். இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமைக்காக இந்நிகழ்வில் அவர்கள் ஜனாதிப திக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர்.
புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் பொய்யான பிரசாங்களுக்கு எதிராக செயற் படுவதாகவும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத்தை ஒழித்த ஒரே நாடு என்பதனால்தான் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் எமக்கு வழங்கிய ஆதரவிற்கு இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
சிங்கள பெயரை கொண்டிருக்கின்ற பிள்ளைகளுக்கு சிங்களம் கற்பிப்பது மிகவும் இன்றியமையாததாகும். தமிழ் பிள்ளைகள் தமிழ் மொழியை கற்பது முக்கியமானதாகும். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எங்களுடைய கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்றார். புலிகளுக்கு எதிராக மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏன்? ஏற்பட்டது என்பது தொடர்பிலும் ஜனாதிபதி இங்கு தெளிவுபடுத்தினார் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா சென்றடைந்துள்ள கூட்டமைப்பினர் ஹிலாரி கிளின்டனையும் சந்திப்பர்.

அமெரிக்கா சென்றடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்க நேரப்படி நேற்றுப் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு (இலங்கை நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு) வாஷிங்டனில் உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது.
அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு நேற்றுமுன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வாஷிங்டனைச் சென்றடைந்தது. இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அமெரிக்க நேரப்படி நேற்றுக் காலை 9.20 மணிக்கு (இலங்கை நேரப்படி நேற்று இரவு 9.50 மணிக்கு) தமிழ்க் கூட்டமைப்பின் குழுவினர் சென்றனர். அவர்களை அங்கு இராஜாங்கத் திணைக்களத்தின் உயரதிகாரிகள் வரவேற்றதாகத் தெரியவருகிறது.
அமெரிக்க உயர்அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு நேற்று அமெரிக்க நேரப்படி சரியாகக் காலை 9.30 மணிக்கு இராஜாங்கத் திணைக்களத்தில் ஆரம்பமா கியதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரி வித்தன.அமெரிக்காவில் பலதரப்பட்டவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற் கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று இடம் பெற்ற முதலாவது சந்திப்பு யாருடன் நடைபெற்றது என்பது குறித்து உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் அவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச்செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கை நேற்றுச் சந்தித்ததாக செய்திகள் தெரிவித்தன.
கூட்டமைப்பினரின் இந்த முதலாவது சந்திப்புடன் அமெரிக்கத் தரப்புக்களுடனான சந்திப்புகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் யார் யாரை எப்பொழுது எந்த நாளில் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசுவர் என்பது குறித்து தகவல்களை முன்கூட்டியே அறிய முடியாத நிலை உள்ளதாகவும் தமிழ்க் கூட்டமைப்பினருடனான சந்திப்பு அட்டவணை விவரங்கள் அனைத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மிகவும் இரகசியமாகக் கையாள்வதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
எனினும் கூட்டமைப்பினர் இந்த விஜயத்தின்போது ஐ.நா. பொதுச் செயலர் பான் கீமூன், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிங்டன் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது எனவும் தகவல்கள் தெரிவித்தன.

26 அக்டோபர் 2011

சுயநலவாத போக்கை கைவிட்டு தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டால் மட்டுமே தீர்வு சாத்தியம்.

தமிழ்த் தலைவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே நாட்டில் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என அகில இலங்கை இந்து பேரவை வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக நாட்டின் சகல தமிழ் பேசும் தலைவர்களும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் இனியும் காலம் தாழ்த்தப்படக் கூடாது என அகில இலங்கை இந்து காங்கிரஸின் தலைவர் காசிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு இடையிலான சுயநலவாத கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களின் நலன்களையும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஒற்றுமை மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் பற்றி பேச்செடுத்தாலே நடுங்கும் இந்தியாவும்,ஸ்ரீலங்காவும்!

பொதுநலவாய நாடுகள் (கொமன் வெல்த்) அமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள நாடுகளில் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு என்பவற்றைக் கவனிப்பதற்காக மனிதஉரிமைகள் ஆணையாளர் ஒருவர் தலைமையை ஏற்படுத்துவதற்கான யோசனையை இந்தியாவும் எதிர்த்துள்ளது.
ஏற்கனவே இந்த யோசனைக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இன்று ஆரம்ப மாகும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்த கண்காணிப்புப் பொறிமுறை, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுதியுரைக்கு (மான்டேட்) மாறானது என்று கூறுகின்றது இந்தியா. அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வழிகாட்டலில் இந்தக் கண்காணிப்புப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட 11 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு தனது 106 பக்கப் பரிந்துரையை வழங்கி உள்ளது.
இந்தியா அதில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டாலும் உறுப்பு நாடுகளைக் கண்காணிக்க மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை (ஐ.நா. போன்று) நியமிப்பது என்ற பரிந்துரையை ஏற்கத் தயாராக இல்லை. இந்தப் பரிந்துரையைப் பயன்படுத்தி இலங்கையை வீழ்த்த மேற்குலக நாடுகள் முயலக்கூடும் என்று இந்தியா அஞ்சுகிறது.அத்துடன் இலங்கையின் மனித உரிமை மீறல்களில் இந்தியாவிற்கும் சம பங்குண்டு என்பது யாவரும் அறிந்ததே.

25 அக்டோபர் 2011

அவுஸ்திரேலியா வரும் போர்க் குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு மனித உரிமை அமைப்புக்கள் வேண்டுகோள்!

ஒக்ரோபர் பிற்பகுதியில் அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் பங்கு கொள்ளும் உச்சி மாநாட்டில் சிறிலங்காவின் 'போர்க் குற்றவாளியான' அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு, அவுஸ்திரேலிய நாட்டின் பிரபலம் மிக்க சில மனித உரிமை வழக்கறிஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ராஜபக்ச அரசாங்கம் 'போர்க் குற்றங்கள்' மற்றும் 'மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்' போன்றவற்றை மேற்கொண்டுள்ளதாக, Deakin பல்கலைக்கழகத்தின் குடியுரிமை, அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும் பேராசிரியருமான டாமியன் கிங்ஸ்பெரி, 'சிறிலங்காவின் வகைகூறும்தன்மை : பொதுநலவாய அமைப்பில் பொதுவான நீதித்தன்மை' என்ற தலைப்பில் ஒக்ரோபர் 20 அன்று சிட்னியில் இடம்பெற்ற அனைத்துலக கருத்தரங்கிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"சிறிலங்காவில் 2009ல் 40,000 வரையிலான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் யுத்தத்தின் இறுதி வாரங்களில் 'மக்கள் செறிந்திருந்த பகுதிகளை நோக்கி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில்' கொல்லப்பட்டுள்ளனர். 2009 இல் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வருவதற்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சிலவற்றை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தனர்" எனவும் பேராசிரியர் கிங்ஸ்பெரி தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்காண தமிழ்ப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் காணாமற் போனமை தொடர்பாக நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாகவும், அனைத்துலக குற்றவியல் சட்டங்களின் பிரகாரம் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகத் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சாட்சியங்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்குத் தாக்கல் ஒன்றைச் செய்வதற்கு போதுமானதாகும் எனவும் கிங்ஸ்பெரி மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக நீதி நடவடிக்கைகள் எடுக்கும் வரை பொதுநலவாய அமைப்பிலிருந்து சிறிலங்காவை இடைநிறுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளதாக பேராசிரியர் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.
சிட்னியில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியவர்களுடன் கிங்ஸ்பெரியும் இணைந்து கொண்டு, பேர்த்தில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவிற்கு ராஜபக்ச வரும்போது அவரிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
சிறிலங்காவிற்கான முன்னாள் அவுஸ்திரேலியாவின் உயர் ஆணையாளர் Bruce Haigh, கன்பராவிற்கான கத்தோலிக்க ஆயர் Pat Power, தேவாலய ஒருங்கிணைப்பாளரான வணக்கத்திற்குரிய ஜோன் பார், சமாதானம் மற்றும் முரண்பாடுகள் கற்கை மையத்தின் இயக்குனர் ஜேக் லின்ஜ், அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் அவுஸ்திரேலியாவிற்கான தலைவரும் NSW இன் முன்னாள் பிரதம வழக்கறிஞருமான ஜோன் டோவ்ட் ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றினார்கள்.
வேறு நாடுகளிலிருந்து இக்கருத்தரங்கிற்கு சமூகம் தந்திருந்த சில பிரமுகர்களும், ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பில் தம்மையும் இணைத்துக் கொண்டனர். இவ்வாறு ஓங்கிக் குரல் கொடுத்தவர்களில் மலேசிய நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான டற்றோ ஜொகாறி அப்துல் மற்றும் எம். மனோகரன் ஆகியோர் உள்ளடங்குவர்.
அவுஸ்திரேலியாவிற்கான சிறிலங்காவின் தற்போதைய ஆணையாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான திசார சமரசிங்கவை சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், ஏனெனில் இவர் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பாளியாகவுள்ளார் என்பதற்கான போதியளவு சாட்சியங்கள் உள்ளதாகவும் Haigh மற்றும் டோவ்ட் ஆகியோர் தெரிவித்தனர்.
சமரசிங்க தொடர்பான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பெறப்பட்ட சாட்சியங்களை அவுஸ்திரேலியாவிற்கான அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு, அவுஸ்திரேலிய காவற்துறையினரிடம் அனுப்பியுள்ளனர். அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியோரால் இக்கருத்தரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.
"சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கான போதியளவு சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதுடன், இவை தொடர்பான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான அழைப்புக்கள் அதிகரித்துள்ள போதிலும் சிறிலங்கா தொடர்ச்சியாக இவற்றை மறுத்துவருகின்றது" என சிட்னியில் இடம்பெற்ற இக்கருத்தரங்கின் தொடர்பாளர் Sam Pari தனது உரையில் குறிப்பிட்டார்.
"பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்காத் தலைவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதானது, 2013ல் இடம்பெறவுள்ள இவ்வமைப்பின் உச்சி மாநாட்டை தமது நாட்டில் நடாத்துவதற்கான பரப்புரையை மேற்கொள்வதற்காகும். எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களுக்கான சரியான பதிலை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்காத வரை 2013ல் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டால் அதனைத் தான் புறக்கணிப்பதாக கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் ஏற்கனவே அறிவித்திருந்தார். 2018ல் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் விளையாட்டுக்களை தனது நாட்டில் மேற்கொள்வதற்காக சிறிலங்கா, அவுஸ்திரேலியாவுடன் போட்டியிடுகின்றது" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சனல்4 வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களம்"எனும் காணொளி பக்கச்சார்பற்றது.

இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து சனல் 04 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த காணொளி பக்கச்சார்பான முறையிலோ அல்லது ஊடக விதிகளுக்கு முரணான வகையிலோ தயாரிக்கப்படவில்லை என பிரித்தானிய ஊடக கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் கொலைக்களம் என்னும் காணொளியை வெளியிட்டிருந்தது.
சனல் 4 ஊடகத்திற்கு எதிராக 118 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் காணொளியானது ஊடக விதிகளை மீறி வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சீ21 என்ற சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசின் அனுமதியின்றி மகிந்தவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவிப்பு!

மத்திய அரசின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தொடர முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்ற நபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொது நலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பேர்த் சென்றுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியின்றி அவ்வாறு வழக்குத் தொடர முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி எதுவும் செய்ய முடியாதென அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபருக்கு இவ்வழக்குத் தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,
எனினும் இதுகுறித்து சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கேதீஸ்வரனின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதும் இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் தமக்குக் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிராந்திய பொலிஸார் இது தொடர்பில் அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கவலையடைவதாகக் கூறிய அவுஸ்திரேலிய பிரதமர் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்திவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

24 அக்டோபர் 2011

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் வாள் வெட்டு!

நடுக்கடலில் தமிழக மீனவரை அரிவாளால் வெட்டி இலங்கை மீனவர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா விழுந்தமாவடியிலிருந்து நேற்று முன்தினம் அர்ச்சுனன், விஜயபாலன், விக்னேஷ், கந்தன் ஆகிய 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க ஒரு படகில் சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டு நேற்று காலை கரைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் அவர்களை 2 படகில் வந்த 8 இலங்கை மீனவர்கள் வழிமறித்தனர். தமிழக மீனவர்களின் படகில் ஏறி, இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் இங்கு வந்தாய் என்று கூறி அர்ச்சுனனை அரிவாளால் வெட்டினர். அவர் தடுத்ததில் 2 கைகளிலும் வெட்டு பலமாக விழுந்தது.
வேதனையில் அவர் அலறி துடித்தார். இதைக்கண்டு பதறிய மற்ற 3 மீனவர்களையும் கயிறு, கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இனி இந்த பக்கமே வரக்கூடாது என்று விரட்டியுள்ளனர். படுகாயமடைந்த 4 மீனவர்களும் ஆறுகாட்டுத்துறை கடற்பகுதிக்கு வந்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் காயம்பட்ட நிலையில் மீனவர்களால் கரைக்கு வந்து சேரமுடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்கள் ஒரு படகில் சென்று 4 பேரையும் மீட்டு வந்தனர். பின்னர் 4 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் வேதாரண்யம் பகுதி மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

என் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கியே தீருவேன்"கடாபியின் மகன் சபதம்!

என் தந்தையை (கடாபியை) கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது என்று கடாபியின் மகனான சயீப் அல்- இஸ்லாம் என்பவர் ஆவேசமாக சபதம் செய்துள்ளார்.
லிபியாவில் சிர்த் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட கடாபிக்கு 2 மனைவிகள் மூலம் 7 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.
அவர்களில் 2 பேர் தங்கள் குடும்பத்துடன் அல்ஜீரியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். நேட்டோ படை குண்டு வீச்சில் ஒருவர் பலியாகிவிட்டார். முட்டாசிம் என்ற மகன் கடாபியுடன் கொல்லப்பட்டார்.
மற்றொரு மகனான சயீப் அல்- இஸ்லாம் என்பவர் தலைமறைவாகி விட்டதால் உயிருடன் இருக்கிறார்.
அவர் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டி.வி.யில் திடீரென தோன்றி தனது ஆதரவாளர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அதன்போது, ’’நான் சாகவில்லை, இன்னும் உயிருடன் சுதந்திரமாக இருக்கிறேன். லிபியா மக்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன்.
என் தந்தையை (கடாபியை) கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது’’ என்று ஆவேசமாக பேசினார்.

யதார்த்தத்திற்கு முகம் கொடுக்க முடியாதவர்களே துமிந்தவை பார்வையிடவில்லை!

துமிந்த சில்வாவை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துமிந்தவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டமை குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர், இது ஓர் மனிதாபிமான அடிப்படையில் நடைபெற்ற சம்பவமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் துமிந்த தமது அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிகளை வழங்கியிருந்ததாகவும்,ஆபத்து ஒன்றில் சிக்கிய போது அவரை பார்வையிடுவதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
துமிந்தவை விடவும் பாரதவை தமக்கு நீண்ட காலமாக தெரியும் எனவும், பாரத ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தத்திற்கு முகம் கொடுக்க முடியாத பலர் துமிந்தவை சென்று பார்வையிடவில்லை எனவும், நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் சிலர் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு அமைச்சர்களோ ஏனைய முக்கியஸ்தர்களோ துமிந்தவை ஏன் பார்வையிடச் செல்லவில்லை என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது கோதபாய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் தனியார் பாதுகாப்புப் படையினரை சேவையில் ஈடுபடுத்தக் கூடாது என நீண்ட காலமாக தாம் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாரத படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிழையான கருத்துக்களை மக்கள் முன்னிலையில் எடுத்துச் செல்ல சில தரப்பினர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் இருப்பதாக பாரத முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும், முறைப்பாடு செய்வதற்கு அவருக்கு போதியளவு சந்தர்ப்பம் காணப்பட்டதாகவும் கோதபாய குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவுடன் தாம் உத்தியோகபூர்வமான உறவுகளை மட்டுமே பேணி வருவதாகவும் அதற்கு அப்பால் எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச அழுத்தம் தொடர்ந்தும் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் சர்வதேச அழுத்தங்களை முறியடிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை எவரும் சரியாக மதிக்கவில்லை எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், கைதிகளை விடுதலை செய்தல், புலிச் சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது எனவும் இது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் கோத்தபாய தெரிவித்தார்.

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் தனித்துவமான இறைமையை வலியுறுத்தவேண்டும்!

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞா்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க்குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஐாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லும் நிலையில் அவா்களது பயணம் தொடா்பாக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளா் மகாநாடு ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவா்களில் ஒருவரும் வெளிவிவகாரக்குழு தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்களது இல 15 இராணி வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்று 23-10-2011 காலை 11.00 மணிக்கு இடம் பெற்றது.
அந்த மகாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன், உபபொருளாளர் கிருஸ்ணகுமார் கட்சியின் இளைஞா் அணியின் இணைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனா்.
ஊடகவியலாளா்களுக்கு கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்கள் தமிழ் மக்களால் தமது பிரதி நிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்க இராஐாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்து அமெரிக்காவுக்கு அழைத்துள்ளமை தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரியதொரு அங்கீகாரம் என்றும் அவ்வாறு அழைக்கப்பட்டமையானது .தமிழ் தரப்பை ஓர் தனித்தரப்பாக அங்கீகரிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.
அவ்வாறு அழைக்கப்பட்டமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மனப்பூர்வமா வரவேற்ப்பதுடன் கூட்டமைப்பின் பயணம் வெற்றிகரமாக அமைய எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் கூறினார். கிடைத்துள்ள இச்சந்தர்பத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதாவது தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதனையும் தமிழர்களது சுயநிர்ணய உரிமை சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் இடம் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தி, கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும் என்றும், மேலும்,முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் உயிர் கொடுத்த மக்களது இளைஞர்களது உயிர்த்தியாகங்களைப் பேரம்பேசும் விதமாக கூட்டமைப்பினர் போர்க்குற்றச் சாட்டு விடயங்களை கையாள முற்படக் கூடாது என்றும், முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரான அறுபது ஆண்டுகளிலும் புரியப்பட்ட இனப்படு கொலைகள் தொடர்பாக பூரணமாக பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.
அங்கு கருத்துத் தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் அவர்கள் , சர்வதேச சமூகம் தமிழ் மக்களைப் பயன்படுத்தி சிறீலங்காவுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து தமது நலன்களை அடைய முயற்சி செய்யும் இந்த நேரத்தில் தமிழ்த் தரப்பு தமிழ் மக்களது இறைமை சுயநிர்ணய உரிமை ஆகிய விடயங்களில் உறுதியாக இருந்தால் நிச்சயம் அதற்கான அங்கீகாரங்களை தமிழ் மக்கள் பெற்று நிம்மதியாக வாழக் கூடிய சூழல் உருவாகும் என்றும் அதனை விளங்கிக் கொண்டு கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

23 அக்டோபர் 2011

கேர்ணல் கடாபிக்கு இரங்கல் தெரிவித்து மகிந்த குடும்பம் கடிதம்!

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச மற்றும் அவருடைய குடும்பத்தினர், கேணல் கடாபியின் மறைவு தொடர்பான தமது இரங்கல் செய்தியையும், தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவரது மகனான கன்னிபல் கடாபிக்கு தெரிவித்துள்ளனர்.
ஒக்ரோபர் 21,2011 அன்று மிஸ்றற்றாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள மசூதி ஒன்றின் அருகில் உள்ள மரக்கறிச் சந்தையின் அறையொன்றுக்குள் இருந்த மெத்தை மீது லிபிய நாட்டின் பலம்மிக்க ஆட்சியாளரான முகமர் கடாபியின் இறந்த உடல் வைக்கப்பட்டிருந்தது.
கடாபி கொல்லப்பட்டமை தொடர்பாக பல்வேறு குழப்பகரமான சூழல் நிலவுகின்ற போதிலும் கூட, லிபியத் தலைவர்கள் தமது நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும், ஜனநாயக ஆட்சியை இங்கு மேற்கொள்ள வேண்டும் என்பதில் பல்வேறு பாரிய அழுத்தங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கேணல் கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவால் கன்னிபல்லுக்கு எழுதப்பட்ட இரங்கல் கடிதத்தின் மூலப் பிரதி வருமாறு:
அன்பிற்குரிய மகன் கன்னிபல்,
தயவுடன் எமது அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது அப்பாவிற்கு என்ன நடந்ததென்பது தொடர்பாக முற்றிலும் நாம் மிகவும் குழப்பமடைந்துள்ளோம்.
சிறிலங்காவில் இது போன்ற சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளதை நாம் பார்த்துள்ளோம். கடந்த வாரம் கூட, எனக்கு நெருக்கமானவர்கள், மற்றும் சில மக்கள் இங்கே கொல்லப்பட்டுள்ளனர்.
எமது நாட்டிலுள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என எல்லா வகையான மக்களையும் பாதுகாக்க முயற்சிப்பதுடன், அவர்களுக்கு நல்லவற்றைச் செய்ய முயற்சிக்கும் போது இவ்வாறான சம்பவங்களை நாம் ஒவ்வொருநாளும் சந்திக்கின்றோம்.
இவ்வாறான நன்றி கெட்ட விதத்தில் எமது நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் சம்பவங்களுக்கு மத்தியில் இந்நாட்டைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்வதற்காக நாம் மிகப் பிரயத்தனப்படுகின்றோம். எங்களை விளங்கிக் கொள்ளாதவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அன்பிற்குரிய கன்னிபல், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களது அப்பா பல மில்லியன் கணக்கானவர்களுக்கு கதாநாயகராகவும், மாவீரராகவும் இருந்துள்ளார்.
உங்களது அப்பா அவருடைய நண்பர்களால் எப்போதும் அன்புடனும், நேசிப்புடனும், நன்றியுணர்வுடனும் எப்போதும் நினைவு கூரப்படுவார்.
உங்களது நேசிப்பிற்குரிய தந்தையாரின் இறப்பை நினைவு கூர்ந்து அவருக்கு பிரித் ஓதும் நிகழ்வு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நுகேகொடவில் உள்ள கங்காராம விகாரையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. 'அவர் nibbana அடைவார்' என பௌத்தர்களாகிய நாம் சொல்கின்றோம்.
மகனே கன்னிபல், உங்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு ஒரு இடம் தேவைப்படுமானால் தயவு செய்து கொழும்பிற்கு வரவும். நாங்கள் உங்களுக்கு ஒரு அறையைத் தயாராக வைத்துள்ளோம். உங்களது கவலைகளை மறப்பதற்கான பல்வேறு களியாட்ட நிகழ்வுகளை நாம் இங்கு கொண்டிருக்கின்றோம்.
உங்களது அப்பா தனது குடும்பத்தவர்களை எவ்வாறு நேசித்தார் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களது தாயார், சகோதரர்கள், சகோதரிகளுக்கும் தயவுசெய்து எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளவும்.
அவருடைய செவிலிப் பெண்களைப் பராமரிப்பதையும் மறக்க வேண்டாம். உங்களின் தந்தையார் பின்பற்றிய சிலவற்றை தொடர்ந்தும் செய்ய வேண்டிய கடப்பாட்டை நீங்கள் கொண்டுள்ளீர்கள்.
இவ்வாறான ஒரு கடினமான சூழலில் உங்களையும் உங்களது குடும்பத்தவர்களையும் கடவுள் காத்தருள்வார்.
எந்தவழியில் நீங்கள் இது தொடர்பாகப் பார்த்தாலும் கூட, பிரபாகரன் மற்றும் பின்லேடன் போன்றவர்களின் மரணத்தைப் போன்று சிலிர்க்க வைக்கும் சம்பவமல்ல.
தங்களின் ஏனைய நேசிப்பிற்குரிய குடும்பத்தவர்களான,
மாமா மகி, அன்ரி சிராந்தி, மல்லிலா ( தம்பிகள்)
செய்தி வழிமூலம்: Sri Lanka Guardian

மனோ கணேசனை மசிய வைக்க முடியாதென்று ஜனாதிபதிக்கு நன்கு தெரியும்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தொலைபேசியில் தன்னுடன் தொடர்பு கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊன்றுகோளில் நிற்பதைவிட சொந்த காலில் நிற்பது நல்லம் தானே என்று தான் ஜனாதிபதியிடம் கோட்டதாகவும் அதற்கு ஜனாதிபதி சிரித்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும், அலரிமாளிகைக்கு அழைத்து பிரியானி விருந்து கொடுத்துகூட மனோ கணேஷனை மசியவைக்க முடியாது என்று ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும் என்றும் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் உரையாற்றிய போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக வழக்காம்!

ஹெலிகொப்டர்கள், கடற்படைப் படகுகள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய ஆறு முக்கிய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 811 பேருக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசால் வழக்குத் தொடரப்படவுள்ளதாக தவல்கள் தெவிக்கின்றன.
கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு போன்ற புலிகளின் முக்கிய முகாம்களில் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர்களாக கடமையாற்றிய ஆறு பேர் இவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குண்டு மற்றும் கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களும் இவர்களில் அடங்குகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

22 அக்டோபர் 2011

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லையென்பதை ஹேக் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

இன்று, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றில், நெதர்லாந்தின்,ஹேக் நகரிலுள்ள மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகளை சர்வதேசப் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்த முடியாது என்று கூறியது.
விடுதலைப் புலிகளுக்கு பணம் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நெதர்லாந்து வாசிகளான ஐந்து தமிழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளான இன்று, ”நெதர்லாந்து(டச்சு) சட்டப்படி விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தப்பட முடியாது” எனினும் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையானது இவர்கள் மேல் செல்லுபடியாகும் என்பதனால், விடுதலைப் புலிகளுக்காக இவர்கள் பணம் சேர்த்தமை சட்ட விரோதமாகிறது என்று எழுத்து மூலம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்தும், அச்சுறுத்திப் பணம் பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்தும் ”நிரபராதிகள்” என்று இவர்கள் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், விடுதலைப்புலிகளுக்குப் பணப் பங்களிப்பு செய்யாவிடில் ஊருக்குச் செல்ல முடியாது என்று வன்முறையற்ற வழியில் பலவந்தப்படுத்தி விடுதலைப் புலிகளுக்காகப் பணம் வசூலித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்களுக்கு 2 மற்றும் 6 வருட சிறைத் தண்டனையை வழங்கினர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல அது ஒரு விடுதலை இயக்கம் என்று வாதிட்ட இரண்டு பிரதி வாதிகளின் வழக்குரைஞரான விக்டர் கோப், லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியை பதவியிலிருந்து கவிழ்ப்பதற்காகப் போரிட்ட விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்களே தமிழீழ விடுதலைப் புலிகள் என்று வாதிட்டார்.
வழங்கப்பட்ட தீர்ப்புப் பற்றிக் கருத்துரைத்த அவர், “தமிழீழ விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கக் கூடாத இயக்கம் என்பதே தீர்ப்பின் அடிப்படையாகும்,” என்றார்.
இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதலால், நேற்று வரை பல தமிழர் விரோத சக்திகள் இவர்களுக்குக் குறைந்த பட்சம் 21 வருட தண்டனை தீர்க்கப்படும் என்று வதந்திகளைப் பரப்பியிருந்தன.
வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்தில் குழுமியிருந்த நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமற்றது என்று கூறியதுடன் தாம் எதுவித பலவந்தமும் இன்றி மனமுவந்தே இவர்களிடம் பணம் கொடுத்தனர் என்று செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழுக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், விரைவில் அத்தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கான முதற்படியாக, இன்று ஹேக் மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகள் பற்றி வங்கிய தீர்ப்பு பார்க்கப்படும் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தனர்.

21 அக்டோபர் 2011

மறுமலர்ச்சி தி.மு.கவிற்கு புதிய மறுமலர்ச்சி!

மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.
அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கோவையில் 11,000க்கும் மேலாகன வாக்குகளையும், திருச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளையும், அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.
மேலும் ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தது. கடைசி நேரத்தில் அது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதுதவிர பல இடங்களில் மதிமுகவுக்கு அவர்களுக்கென்றே இருக்கும் 4000, 5000 வாக்குகள் அப்படியே கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் மதிமுகதான் தனது வாக்கு நிலை கரையாமல் நிலையாக உள்ளதை நிரூபித்துள்ள ஒரே கட்சி என்று சொல்ல முடியும் அளவுக்கு அதற்கான வாக்குகளை தொடர்ந்து பெற்று வருகிறது.
நிச்சயம் இந்த தேர்தல் மதிமுகவுக்கு நிச்சயம் மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ள தேர்தல் என்று கூறலாம். நிச்சயம், லோக்சபா தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா முன்வருவார் என்பதில் சந்தேகமில்லை.

கே.பி.க்கு நிதி பொறுப்பாளராக இருந்தவரை கைது செய்ய ஸ்ரீலங்கா நீதிமன்றம் உத்தரவு!

விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் முன்னாள் தலைவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் நிதி பொறுப்பாளராக இருந்த அய்யா என்ற பொன்னையா ஆனந்தராஜா என்பவரை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டதுடன் அதற்கான சிகப்பு அறிக்கையும் வெளியிட்டார்.
அமெரிக்க பிரஜையான இந்த நபர் ஒரு கணக்காய்வாளர் எனவும் இவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ரியாஸ் பாரி தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக ஆனந்தராஜாவுடன் சேர்த்து குற்றம்சுமத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நீராவியடி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 42 வயதான சுப்ரமணியம் சிவக்குமார் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
2007 ஜனவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையான கால பகுதியில், அமெரிக்காவிலும் இலங்கையிலும் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்ததாக இலங்கை சட்டமா அதிபர சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் இவர்கள் தண்டனை பெறக் கூடிய குற்றத்தை செய்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசு மீது தருஸ்மான் குற்றச்சாட்டு!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு ஐநா செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு என அக்குழுவின் தலைவர் மர்சுக்கி தருஸ்மான் தெரிவித்துள்ளார்.
ஆனால் நிபுணர் குழுவை இலங்கை அரசாங்கம் தருஸுமான் குழு என அழைப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐநா செயலாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நியமிக்கப்பட்டதால் அதனை நிபுணர் குழு என்றே அழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள மர்சுக்கி தருஸுமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐநா நிபுணர் குழு அறிக்கையை இலங்கை தருஸுமன் அறிக்கை என்றே அழைத்து வருகிறது.

20 அக்டோபர் 2011

கே.பியுடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொன்னய்யா செல்வராஜா மற்றும் சுப்பிரமணியம் சிவகுமார் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தரவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இருவரும் 2007ம் ஆண்டு முதல் சுமார் இரண்டரை ஆண்டுகள் இவ்வாறு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவருக்கும் எதிராக விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்ற நீதவான் தீபாலி விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

நாம் தமிழீழத்தை மறந்தாலும் அரசு ஞாபகப்படுத்துகிறது!

நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் பாதுகாப்புப்படையினரும் தமிழீழத்தை மறக்க மாட்டார்கள் போல் தெரிகிறது.நாம் அகிம்சை வழியில் நடத்தும் சாத்வீகப் போராட்டங்களுக்குத் தொடர்ந்தும் குந்தகம் ஏற்படுத்த முயன்றால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
சட்டம் ஒழுங்கு சீரழிவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய வினோ தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது:
வடக்கில் மட்டுமல்ல தென்பகுதியிலும் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கோரிக்கை விடுத்தே வந்துள்ளோம். இதனை அரசு செவிமடுக்கவில்லை.நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் படையினரும் இன்னும் மறந்துவிடவில்லை.கடந்த 16 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர் தலைவன் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் சட்டவிரோதக் கும்பலினால் தாக்கப்பட்டுள்ளார். அந்த மாணவரைத் தாக்கியவர்கள் “தமிழீழம் வேண்டுமா?சு என்று கேட்டே தாக்கி உள்ளனர். அப்படியானால் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
கடந்த கால வரலாற்றைச் சற்றுத் திரும்பிப்பாருங்கள். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது என்பதை மறந்து விடக்கூடாது.இது மட்டுமல்ல கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினோம்.எமது அமைதிப் போராட்டத்துக்கு சட்ட பூர்வமான அனுமதியும் பெறப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் பொலிஸார் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். வீதித்தடைகளை ஏற்படுத்தி மக்களை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்தனர்.அமைதி வழிப் போராட்டத்துக்கு தொடர்ந்தும் தடை விதித்தார்களேயானால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என்றும் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.அதேவேளை இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் பாரதலக்ஸ்மனின் கொலையையும் அவர்கள் மீது போட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பித்திருப்பார்கள் என்று கூறினார் வினோ.

19 அக்டோபர் 2011

ராம் ஜெத்மலானியின் திறமையால் மூவரின் தூக்கு கயிறும் நிச்சயம் அறுபடும்!

சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அங்கு விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க 3 பேர் கொண்ட பெஞ்ச் இன்று மறுத்து விட்டது. இந்த பெஞ்ச் விசாரணைக்கு 3 தமிழர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆட்சேபனை தெரிவித்ததை ஏற்று நீதிபதிகள் இந்த முடிவைத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வந்தபோது உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டம் கூடியது. இதனால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. எனவே வழக்கு விசாரணையை சென்னையில் தொடர்நதால் அது தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் தூக்குத் தண்டனை குறித்த ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்துக்கே மாற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை ஏற்று சிங்க்வி தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. சிங்க்வி விடுமுறையில் இருப்பதால் 3 பேர் கொண்ட வேறு பெஞ்ச் முன்பு வழக்கு வந்தது.
இதையடுத்து பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிடுகையில், இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டது. நீதிபதி சிங்க்வி தற்போது விடுமுறையில் உள்ளார். அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இந்த பெஞ்ச் விசாரிக்கக் கூடாது. தவறான பெஞ்ச் முன்பு இந்த வழக்கு இன்று வந்துள்ளது என்று கூறினார்.
இதை 3 நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர். நீதிபதி சிங்க்வி வந்த பின்னர் அந்த பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
பின்னர் ராம்ஜேத்மலானியுடன், இந்த வழக்குக்காக டெல்லிக்குப் போயிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியில் வந்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராம்ஜேத்மலானி அவர்களின் வாதத் திறமையால் மூன்று பேரின் தூக்குக் கயிறும் அறுபடும். அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் முறியடிக்கப்படும் என்றார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை ஆரம்பம்!

அவுஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்திருக்கின்றது. அவுஸ்திரேலியாவின் சமஸ்டிப் பொலிஷார் இந்த விசாரணையினை ஆரம்பித்திருப்பதாக அவுஸ்திரேலியன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
போர்க் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களின் நேரடிச் சாட்சியமான அவுஸ்திரேலியப் பிரஜையான மீனா கிருஷ்ணமூர்த்தியின் சாட்சியங்களுடன் விசாரணைகளை சமஸ்டிப் பொலிஸார் முன்னெடுத்துவருவதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச, போர்க்காலத்தில் வெளியுறவுச் செயலராக இருந்த பாலித கோகன தற்போதைய அவுஸ்திரேலியாவிற்கான தூதுவரும் போர்க்காலத்தில் இலங்கைக் கடற்படைத் தளபதியுமான திஸர சமரசிங்க ஆகியோருக்கு எதிராகவே இந்த விசாரணை இடம்பெற்றுவருவதாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வழமைபோல திஸர சமரசிங்க இந்த விசாரணைச் சம்பவத்திற்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்.

சாந்தன்,முருகன்,பேரறிவாளன் தூக்கு தொடர்பான இன்றைய வழக்கிலும் ராம் ஜெத்மலானி ஆஜரானார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சி.கே. பிரசாத், டத்து ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். இந்த விசாரணை விசயமாகத்தான், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்றுள்ளார்.

18 அக்டோபர் 2011

நான் இன்னும் உயிர் வாழ வேண்டுமா?ஆனந்தசங்கரிக்கு ஏற்பட்ட விரக்தி!

காணி அபகரிப்பு மற்றும் சிங்களக்குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 17.10.2011 அன்று நடாத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு ஆனந்த சங்கரி தலைமையுரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு முதல் நந்திக்கடல்வரை சுமார் 8000ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் விமானப்படைக்குரியது என்று பலகை வைத்துள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனைவிடவும் சிவசக்தி ஆனந்தன் சொன்ன விடயம் இன்னமும் எனது மனவேதனையை அதிகரித்து விட்டது. இத்தகைய அடாவடித்தனங்களைக் கண்டபிறகும் எனது உயிர் பிரிய மாட்டேன் என்கிறதே என்று எனக்;குக் கவலையாக உள்ளது. இன்னும் நான் ஏன் வாழ வேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது என்றும் கூறினார்.
அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது இன்றைய உண்ணாவிரதம் என்னை 30வருடஙகள் பின்னோக்கிப் பார்க்க வைக்கின்றது. அன்றைய அதிபர் சிறிமாவோ அம்மையார் தனிச்சிங்கள சட்டத்தை அமுல்படுத்தியபோது இதே வவுனியா நகரசபை மைதானத்திலே நாங்கள் உண்ணாவிரதம் இருந்தது எனது நினைவுகளுக்கு வருகின்றது. அன்றும் அரசுக்கு ஆதரவானவர்கள் எமது உண்ணாவிரதத்தைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். எம்மினத்துக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து எம்மினத்தவர்களே துரோகம் இழைத்த வரலாறுகள் எம்மிடம் நிறையவே உள்ளன. இன்றும்கூட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஏராளமான மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற காணி உத்தியோகத்தர் ஒருவர் தற்போதைய காணிப்பதிவு முறைமை சிறந்ததென்று ஊடகங்களின் மூலம் தெரிவித்துள்ளார். அவருக்கு நான் ஒன்றை சொல்லி;கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள் நீங்கள் தாராளமாக உங்கள் குடும்பத்தினருடன் உங்களது எஞ்சிய வாழ்க்கையை அனுபவியுங்கள். எமது மக்களுக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் உருப்படியான யோசனைகளைச் சொல்லுங்கள் அல்லது மௌனமாக இருங்கள்.
கடந்த 30ஆண்டுகால வாழ்க்கையில் எமது மக்கள் இலட்சக்கணக்கில் மடிந்துள்ளனர். இறந்தவர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. காணிபூமியுடன் வளமாக வாழ்ந்தவர்கள். அவர்களின் வாரிசுகளுக்கு தங்கள் காணி எங்கிருக்கின்றது என்பதே தெரியாது. அத்துடன் யுத்தத்தில் உயிரைக் கையில் பிடித்து ஓடியவர்கள் தங்களது காணி உறுதிகளைத் தொலைத்துள்ளனர். இந்தியாவிலிருந்து ஓருலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வரவிருக்கின்றனர். அவர்களது காணிகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது இந்த அரசாங்கம்? இந்த நேரத்தில் இத்தகைய பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
அரசாங்கம் துரிதகதியில் மேற்கொள்ளும் இத்தகைய செயல் தொடருமானால் எமது இனம் இல்லாமலேயே போய்விடும். இவைகளை எல்லாம் சிந்தித்துத்தான் நாங்கள் அனைவரும் எம்மிடமுள்ள சிறுசிறு வேற்றுமைகளை மறந்து ஓரணியாக அணிதிரண்டு எமது மக்களின் எதிர்ப்பை இன்று அரசாங்கத்திற்குக் காண்பித்திருக்கிறோம்.
இன்று எத்தகைய உயர்பீடத்திலும் தமிழர்கள் இல்லை. முன்பு ஓரளவிற்கு உயர் பதவிகளில் தமிழர்கள் இருந்தார்கள். இன்று இலங்கை பொதுநிர்வாகத்திற்கான சோதனையில் ஒரு தமிழரும் சித்தியடையாத நிலைதோன்றியுள்ளது. இந்த நாட்டில் நாம் மனிதர்களாக வாழ்வோமா என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் இத்தகைய செயலைத் தடுத்துநிறுத்த வேண்டும். எனவே இப்பொழுது நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தம் அதனை நாம் திடசங்கல்பமாக ஏற்போம் என்று கூறினார்.

மன்னார் அரச அதிபராக சிங்களவர்?

வடக்கில் சிங்களமயமாக்கல் நடவடிக்கையினைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற அரசாங்கம் அரச நிர்வாககங்களின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் சிற்றூழியர்கள் வரையிலும் சிங்களவர்களைப் பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள், மருத்துவமனைகள் உட்பட்ட அரச நிர்வாகங்களின் கீழ் உள்ள கட்டமைப்புப் பணிகளுக்கு சிங்களவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீயின் துணையுடன் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கின்றது.
இதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அங்கிருந்து அகற்றப்பட்டு மன்னார் மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொது நிர்வாக சேவைகள் அமைச்சினால் நடத்தப்பட்ட நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட சிங்களவர்களை பணிக்கென வடக்கு மாவட்டங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் வவுனியா அரச திணைக்களங்களுக்கு மூவர் உயர் பதவிகளுக்காக அனுப்பப்படவிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இவ்வாறு அனுப்பப்படுபவர்களில் பெருமளவானவர்கள் பெண்கள் எனத் தெரியவருகிறது.
நிர்வாக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய தமிழ் மாணவர்கள் எவரும் சித்தியடையாத நிலையில் 125 சிங்களவர்கள் தெரிவாகியிருந்தனர். குறித்த பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போது விரைவில் பரீட்சையினை நடத்தப் போவதாக பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனிவிரத்தன வாக்குறுதி அளித்திருந்த நிலையிலும் குறித்த பரீட்சை நடைபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியா பொது மருத்துவமனைக்கு சிங்கள இனத்தினைச் சேர்ந்த 18 சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குருநாகல், மாத்தறை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றிவருகின்ற வவுனியா மாவட்ட பெண் சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் சிங்களவர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்கியுள்ளமையின் பின்னணியில் வடமாகாண ஆளுநர் சந்திசிறீ இருப்பதாக தெரியவருகின்றது.

17 அக்டோபர் 2011

சிங்களப்படை நடத்தும் கொலை வெறியாட்டம்!

எந்த நாட்களில் இவை எடுக்கப்பட்டது எனத் தெரியாவிட்டாலும் இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என சந்தேகிக்கப்படும் சில புகைப்படங்களை ஆங்கில ஊடம் ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் போராளி ஒருவரையும் மற்றும் பொதுமக்கள் 6 பேரை இலங்கை இராணுவம் கொலைசெய்து பின்னர் வெட்டிப் புதைக்க முனையும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அப் படத்தை உற்று நோக்கும்போது ஒருவரின் வேட்டியை உருவி ஒரு உடலத்தின் காலில் கட்டி உள்ளனர். அதாவது கொலைசெய்யப்பட முன்னர் அவர் கால்கள் கட்டப்பட்டுள்ளது. இதனைவைத்துப் பார்க்கும்போது இவர்கள் யுத்ததில் இறக்கவில்லை என்பது புலனாகிறது. இவர்கள் சரணடைய வந்தவர்களாகவும் இருக்கலாம்.
இலங்கை இராணுவத்தின் கைகளில் உயிருடன் பிடிபட்ட இவர்களை பின்னர் இராணுவத்தினர் கொலைசெய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுகிறது. சில உடலங்கள் குழிக்குள் கிடக்கும் நிலையைப் பார்த்தால் அவற்றை வெட்டிப் புதைக்க இராணுவம் காத்து நிற்பது போன்றும் உள்ளது. இப் புகைப்படத்தில் 2 பெண்களின் உடலங்களும் காணப்படுகிறது. மேற்படி உடலங்களை கட்டி இழுத்து இவ்விடத்துக்கு கொண்டுவந்திருப்பதற்கான தடையங்களும் இப் புகைப்படத்தில் இருப்பதாக் பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர்.
இப் புகைப்படமானது முன்னரே வெளியாகியுள்ள போதும் அதன் தெளிவான மற்றும் பெரிய அளவிலான புகைப்படம் தற்போதே அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றது என்பதனையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியம் காணப்படுவதாக பி.ரி.ஐ.தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக நெதர்லாந்து அதிகாரிகள் மற்றும் யூரோபோல் ஆகிய இருதரப்பினராலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போது தமிழீழம் கோரி 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டதாக அரசாங்கம் நம்பியிருந்தது.
ஆனால் நெதர்லாந்து நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் ஐரோப்பாவில் தற்போதும் தமிழீழக் கோரிக்கை வலுவாகவிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் சட்டவிரோத நிதி சேகரிப்பு, ஆட்கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக பயங்கரவாத நிலைகளும் அதன் போக்கும் எனும் தலைப்பில் யூரோபோல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வமைப்புக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து நெதர்லாந்து தமிழர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளின் போது ஐரோப்பாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகமாகவுள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கணினியில் இருந்து நிதி தொடர்பிலான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அரச வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தமிழீழத்தை உருவாக்க வேண்டும் எனும் இலட்சியத்தைப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தற்போதும் கொண்டிருப்பதாகவும் இவ்வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட பின்னரும் ஐரோப்பாவில் இடம்பெற்று வரும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைகின்றனரா என்ற ஐயத்தையே நெதர்லாந்து நீதிமன்ற விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ரொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழீழம் எனும் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ளனர் என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதென பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருணாவுடன் கோத்தபாய குத்தாட்டம்,கருணாவை இன்னும் பயன்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிப்பு!

யுத்தம் காரணமாக இருபது வருடங்கள் நடத்தப்படாமல் இருந்த இராணுவத்தின் வருடாந்த இராப்போசன நடன விருந்து, கடந்த 15 ஆம் திகதி கொழும்பு கண்காணி மற்றும் கருத்தரங்கு மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவப் பிரிவின் தளபதியாக இருந்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் கலந்துக்கொண்டனர்.
இவர்கள் இருவரும், இணைந்து விருந்தில் நடனமாடினர். கருணா தனது பரிவாரங்களுடன் இரவு 10 மணியளவில் விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தார். இவர் விருந்துக்கு வந்ததை பார்த்த முழு இராணுவ அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.அங்கு முன்னாள் இராணுவ தளபதிகளான ஸ்ரீலால் விஜேசூரிய, ஜெனரல் ரொஹான் தளுவத்த, ஜெனரல் ஜெரி சில்வா, பாதுகாப்பு செயலாளரான முன்னாள் இராணுவ கர்ணல் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரமே சிவில் உடையில் காணப்பட்டனர்.
30 வருடகால யுத்தத்தில், இராணுவத்தினருடன் நடந்த பயங்கரமான மோதல்களின் போது, எதிரணியில் இருந்த ஆயுதப்படையினருக்கு கட்டளைகளை வழங்கிய கருணா, இராணுவத்தினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த விருந்து உபசாரத்தில் எப்படி கலந்துக்கொள்ள முடியும் என இராணுவத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்து கேள்வி எழுப்பிக்கொண்டனர்.
இதன் காரணமாக இராணுவ தளபதியும் விசனமடைந்துள்ளார்.விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த மேஜர் ஜெனரலான மிலிந்த பீரிஸை அழைத்து, யார் கருணாவுக்கு அழைப்பு விடுத்தது என இராணுவத் தளபதி வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த பீரிஸ், தான் அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். கருணா மூலம் எதிர்காலத்தில் பல வேலைகளை செய்துக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்புச் செயலாளர், "இல்லை.. இல்லை.. பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நான் தான் அவரை வர சென்னோன்" என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கருணா தரப்பினர் இராணுவ அதிகாரிகள் இருக்கும் இடத்திற்கு சென்ற போது, இராணுவத் தளபதி, தனது வெட்கத்தை கதிரை மீது வைத்து விட்டு, கருணாவுக்கு மரியாதை செலுத்தினார். விடுதலைப்புலிகளின் ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் கருணாவை, இராணுவத் தளபதி சேர் என அழைத்ததுடன் பிரதியமைச்சரான கருணா, அரசாங்க அதிகாரியான பாதுகாப்புச் செயலாளரை சேர் என விளித்தார்.
இவர்களை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளும், கருணா முன்னிலையில், மரியாதை செலுத்தும் வகையில் காணப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர், கோத்தபாய ராஜபக்ஷ தனது மனைவியுடன் நடனமாடினார். அவரது மனைவி சென்றவுடன் அவர் கருணாவுடன் இணைந்து குத்தாட்டம் ஆடத்துவங்கினார்.
இதனை பார்த்து பொறுத்து கொள்ள முடியாத முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர், சொல்லிக் கொள்ளாமல். விருந்து நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறினர்.