30 ஏப்ரல் 2014

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மே தின அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இணைந்து நடாத்தும் சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலமும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் மே 1ம் திகதி இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்விற்கு அனைவரையும் அணிதிரண்டு வருமாறு வடமராட்சி எங்கும் துண்டு பிரசுரம் மூலம் அழைப்பு விடுத்து வருகிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள்.கஜேந்திரன்,கஜேந்திரகுமார் உட்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி துண்டுப்பிரசுர விநியோகத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.கொள்கைகளை விட்டுக் கொடுக்காது தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்: ஞானவைரர் ஆலய முன்றல், சாமியன் அரசடி, கரவெட்டி (நெல்லியடி – கொடிகாமம் வீதியிலுள்ள கரவெட்டி தபாற் கந்தோர் அருகாமை)

திகதி: 01-05-2014 (வியாழக்கிழமை)
நேரம்: பி.ப3.00 – பி.ப 6.00 மணிவரை

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

தொடர்புகளுக்கு : 0773024316, 0779599361, 0212223739
முகவரி : இல 43, 3ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.

28 ஏப்ரல் 2014

மரக்கறி இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களின் ராஜாவான அல்போன்சா மாம்பழம் மற்றும் சில காய்கறிகளுக்கு தடை விதித்து ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது.
பழங்களின் ராஜாவான இந்திய அல்போன்சா மாம்பழம் மற்றும் காய்கறிகளுக்கு எதிராக 28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள எம்.பி.க்களும், இந்திய மக்கள் மற்றும் வியாபாரிகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பழம் மற்றும் காய்கறிகளில் ஈக்கள், பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருந்ததை தொடர்ந்தே இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாம்பழம் மற்றும் கத்திரிக்காய், முட்டை கோஸ், பாகற்காய், புடலங்காய் ஆகிய காய்கறிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவையனைத்தும் 5 சதவிகிதத்திற்கும் குறைவான அளவுக்கே அங்கு இறக்குமதி செய்யும் நிலையில், இவற்றில் காணப்படும் ஈக்கள் மற்றும் பூச்சிகளால் தங்கள் நாட்டு விவசாயம் பாதிக்கும் என அந்நாடு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

27 ஏப்ரல் 2014

ஜெர்மன் பெண்ணிடம் வாலாட்டிய விமானப்படையினன்!

நீர்கொழும்பு சுற்றலாத்துறை பிரதேசத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஜேர்மன் நாட்டு இளம்பெண்ணொருவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாக கூறப்படும் விமானப்படை வீரரின் சார்பாக விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையினை நிராகரித்த நீர்கொழும்பு மேலதிக நீதிவான் திலக்கரத்ன பண்டார சந்தேக நபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 29 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மீரிகமயில் கடமையாற்றும் விமானப்படை வீரரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
சந்தேக நபரை நீர்கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் கைது செய்து மன்றில் ஆஜர் செய்தனர்.
வழக்கின் முறைப்பாட்டாளரான ஜேர்மன் பிரஜை 25 வயதுடைய திருமணமான பெண்ணாவார். இவர் தனது கணவருடன் இலங்கைக்கு சுற்றலா வந்துள்ளார். நீர்கொழும்பு சுற்றலாத்துறை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இவர்கள் குளிப்பதற்காக அருகிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
கணவர் கடற்கரையில் இருக்கும் போது ஜேர்மன் பெண் மாத்திரம் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். இதன் போது கடலில் குளித்துக் கொண்டிருந்த சந்தேக நபரான விமானப்படை வீரர் அந்த வெளிநாட்டுப் பெண்ணின் அருகில் நீந்தி வந்து பெண்ணின் உடலை தொட்டுள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து ஏசியுள்ளார். இதனை அடுத்து சந்தேக நபர் தனது காற்சட்டையை கீழிறக்கி தனது அந்தரங்க உறுப்பை அந்த ஜேர்மன் பெண்ணிற்கு காட்டியுள்ளார் என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.(சிங்களப் படைகள் என்றாலே அது (அ)சிங்கப்படைகள் தானே!)

26 ஏப்ரல் 2014

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படையினரின் தொகை குறைவு என்கிறார் சவேந்திர!

சவேந்திரசில்வா,டயஸ் 
யுத்த காலத்திலும், அதன் பின்னரும், குறைந்த அளவான இராணுவ துருப்பினரே வடக்கில் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் யுத்த காலத்தில் 6 சதவீதமான சம்பவங்களிலும், அதன் பின்னர் 4 சதவீதமான சம்பவங்களிலுமே இராணுவத்தினர் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய பெரும்பாலான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களே ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தின் போது இலங்கை இராணுவத்தினர் தமிழ் பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் யுத்த கால பாலியல் கொடுமைகள் சம்பந்தமான சிறப்பு பிரதிநிதி சைனப் ஹாவா பங்குரா நேற்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கை படையினரால் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணி யாஸ்மின் சூக்கா அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இவற்றுக்கு பதில் வழங்கும் வகையிலேயே சவேந்திரசில்வா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

25 ஏப்ரல் 2014

நீதிபதி சதாசிவம் தலைமையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.
அரசியல் சாசன பெஞ்ச்சின் தீர்ப்பு வரும் வரை, சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடையையும் அது நீட்டித்திருக்கிறது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பிப்ரவரி 18ம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து, இந்த மூவரையும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட வேறு நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு பற்றி மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு கெடு விதித்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு தொடுத்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வில் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பில், இந்த வழக்கு முக்கிய அரசியல் சட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்புவதால்,இது குறித்து ஒரு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வெளியிட்டது.
அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கில் விசாரிக்க ஏழு முக்கிய அரசியல் சட்ட கேள்விகளையும் அது வரையறுத்தது.
மரண தண்டனை ஆயுள் தண்டனையாக , உச்சநீதிமன்றத்தாலோ, அல்லது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநராலோ குறைக்கப்பட்ட பின்னர், அதை மேலும் மாற்றியமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது இதில் முக்கியமான கேள்வி.

24 ஏப்ரல் 2014

துண்டுபிரசுரம் வைத்திருக்கிறீர்களா?

தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பு முடிந்து மானிப்பாய் வீதியினூடாக வீடுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரை வழிமறித்துள்ள இராணுவத்தினர், அம்மாணவர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வைத்துள்ளீர்களா என்று விசாரணை நடத்திய சம்பவமொன்று நேற்று புதன்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே இவ்வாறு மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள மாணவர்கள், எம்மிடம் பாடக்கொப்பிகள் தான் இருக்கின்றன பாருங்கள் என்று கூறியதை அடுத்து அம்மாணவர்களின் முதுகைத் தட்டி ‘சொறி’ என மன்னிப்பு கேட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (17) இரவு ‘தமிழீழம் மலரும்’ என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (வயது 24)இ இணுவில் பகுதியினைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (வயது 24) ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இவர்கள் இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கபபட்டதன் பின்னர் அந்த இளைஞர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, ‘கணினி வலைப்பின்னல்’ என்னும் நிலையத்தை நடத்திய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் யுத்தத்தில் கால் ஒன்றினை இழந்தவருமான கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் சுதர்சன் (வயது 30) என்பவர் வெள்ளிக்கிழமை (18) கைது செய்யப்பட்டார்.
இவ்விரு சம்பவங்களை அடுத்து, பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்நிலையிலேயே வீதியில் கொப்பிகளுடன் நின்றிருந்த மாணவர்களிடமும் படையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

23 ஏப்ரல் 2014

வவுனியாவில் திலீபனை தேடுகிறதாம் சிங்கள புலனாய்வுத்துறை!

விடுதலைப்புலிகளை மீள உருவாக்கியதாக கூறி வவுனியா நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து வவுனியாவில் தேவிகன் அவர்கள் வசித்த வீடு கண்டு பிடிக்கப்பட்டதுடன் அவருடன் இணைந்து நெருக்கமாக செயற்பட்டவர்கள் தொடர்பாகவும் தகவல்களைப் பெற்ற புலனாய்வு துறையினர் விடுதலைப் புலிகளின் விமானப்படையைச் சேர்ந்த தேவிகன் என்பவருடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்ததாக வவுனியா வடக்கு வலய பாடசாலை ஆசிரியரான திலீபன் என்பவர் மீது தமது கவனத்தை செலுத்தினர்.
ஆனால், கடந்த 8 ஆம் திகதி பாடசாலை லீவு விடுவதற்கு முன்பாகவே அ.திலீபன் என்ற ஆசிரியர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து திலீபன் என்பவர் வசித்து வந்த வவுனியா திருநாவற்குளத்தில் உள்ள வாடகை வீடு ரிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா நகர பஸ் நிலையப் பகுதியில் திலீபனால் நடத்தப்பட்டு வந்த வர்த்தக நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திலீபன் கற்பித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள், கடையில் வேலை செய்தோர் எனப் பலரிடமும் துருவி துருவி விசாரணைகளை புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் விசாரணைகளின் மூலம் தேவிகன் வசித்த வவுனியா வீடு திலீபன் என்பரின் திட்டமிடலில் கட்டப்பட்டது என உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு பலதடவை சென்று வந்துள்ள திலீபன் தேவிகனுடன் பணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேவிகன், திலீபன் ஆகியோருடன் தொடர்புகளை வைத்திருந்ததாக கூறி பலர் மீது விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அதன் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் யாழ் நல்லூர் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி ஹய்சஸ் வாகனம் ஒன்றினை ரிஐடியினர் கைப்பற்றியுள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்ட இவ் வான் திலீபனின் பெயரில் 35 லட்சம் ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது எனவும் தேவிகனே இதனை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
தேவிகன் வசித்த வீடு கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்காணி உரிமையாளர், அவ் வீட்டுக்கு வந்து சென்றவர்கள், தேவிகனின் வாகனம் என்பன ரிஐடியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரும் தீவிர விசாரணையால் மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

22 ஏப்ரல் 2014

ஜோசப்,லசந்த கொலைகளைச் செய்தது அரசாங்கமே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே கொலை செய்தது என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் நடந்த விவாதம் ஒன்றிலேயே எரிக் சொல்ஹெய்ம் இது குறித்து தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை விடுதலைப் புலிகளே கொலை செய்தனர்.
அதுபோலவே, ஜோசப் பரராஜசிங்கத்தையும், லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே படுகொலை செய்தது என்று எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நோர்வேயின் அனுசரணையுடனான போர் நிறுத்த உடன்பாடு நடைமுறையில் இருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது தேவாலயத்துக்குள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 ஏப்ரல் 2014

மீசாலையில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!

யாழ் மீசாலைபகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார். யாழ். மீசாலை பகுதியில் வாள்வெட்டுக்கு உள்ளாகி படுகாயமடைந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த சின்னராஜா சிவானந்தமூர்த்தி (வயது 34) என்ற குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மதுபோதையில் அட்டகாசம் புரிந்தவர்களை தடுப்பதற்குச் சென்றபோதே மேற்படி குடும்பஸ்தர் வாள்வெட்டுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள விளையாட்டுக் கழகமொன்றின் மைதானத்திலிருந்த கரப்பந்தாட்ட வலையை மதுபோதையில் காணப்பட்ட சிலர் அறுத்தெறிந்ததுடன், மின்குமிழ்களையும் அடித்து நொருக்கிக் கொண்டிருந்தனர். இதனை தடுப்பதற்குச் சென்ற மேற்படி குடும்பஸ்தர் மீது மது போதையிலிருந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனராம்.

20 ஏப்ரல் 2014

கருணாநிதியின் சுயரூபம் மீண்டும் அம்பலம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், மூவரின் தூக்கை ரத்து செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பு பற்றிய நீதிபதியின் அறிவிப்பு மரபுகளுக்கு உகந்ததா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் சென்னை தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது,
தி.மு.க. ஆட்சியைவிட அ.தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் பீகாரைவிட குறைந்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துவிட்டன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்கை ரத்து செய்யக் கோரும் வழக்கில் 25ம் தேதிக்குள் தீர்ப்பு என தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது, தமிழகத்தில் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என பலருக்கும் ஐயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்காததோடு, தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்திலேயே ஒரு மனுவினை தாக்கல் செய்து, அந்த வழக்கின் தீர்ப்பினைத்தான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவையில் நடைபெற்ற ஒரு விழாவிலே வெளிப்படையாக தெரிவித்து, அந்த செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது.
வரும் 24-ந் தேதியன்று நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழ்நிலையில், நீதியரசர் சதாசிவம் தான் ஓய்வு பெறவுள்ள 25-ந் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ? என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்த கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது தானா? என்பதையும் எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப முடிவு செய்வது நீதிமன்ற நெறிகளைக் காப்பாற்ற பயன்படும் என்பதுடன் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டம் படித்த நீதிபதிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதிபதி எனக்கும் நண்பர் தான். தெரிந்தவர் தான். நீதிக்கு மதிப்பளித்து, நீதி தராசு எல்லோரும் சமம் என்று நினைத்து பார்க்கக்கூடிய நீதிபதி ஒருவர் இது போன்ற கருத்துக்களை பொது விழாக்களில் கூறலாமா? இதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நீதிபதியின் அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா? என அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். நீதிமன்ற நெறிமுறைகளை காப்பாற்றும் வகையில் நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்றார்.

19 ஏப்ரல் 2014

ஈழ மக்களுக்குப் படிப்படியாக நீதி கிடைக்கும்!

ஈழ மக்களுக்கு படிப்படியாக நீதி கிடைக்கும் என்று, இறுதி யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளருக்காக விசாரணை நடத்திய நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சூக்கி தருஸ்மன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் – நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தருஸ்மன் கலந்துக் கொண்டிருந்தார். இதன் போது தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு மேற்கொண்ட விசாரணைகளின் வெற்றித் தன்மை தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு நேரடியாக பதிலை வழங்காத தருஸ்மன், கம்போடிய மக்களுக்கு நீதி கிடைக்க தாமதமான போதும், கட்டம் கட்டமாக அது கிடைக்க செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதன் மூலம் அவர் ஈழ மக்களுக்கும் கட்டம் கட்டமாக நீதி கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

18 ஏப்ரல் 2014

தமிழீழம் மலரும் என சுவரொட்டி ஒட்டினாராம்!

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயதாஸன் கஜானன் என்ற இளைஞனை நேற்று (17.04.14) கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் நேற்று (17.04.14) இரவு அவ்விடத்தில் தமிழீழம் மலரும் என துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டிலேயே நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த இளைஞன் ஒட்டிய துண்டுப்பிரசுரமும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

17 ஏப்ரல் 2014

பார ஊர்தி கவிழ்ந்து படைகள் காயம்!

சிங்கள படைச்சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பார ஊர்தியொன்று மாங்குளம் - இந்திரபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 18 சிங்களப் படைச்சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பார ஊர்தி வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து இன்று (17.04.14) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த சிங்கள சிப்பாய்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

16 ஏப்ரல் 2014

அரசுக்கு எதிராகச் சாட்சியமளிக்க முன்னாள் படை அதிகாரிகள் தயார்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் ஏற்பாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணையின் போது பிரதான சாட்சியங்கள் தமிழர் தரப்பிலிருந்து மட்டுமல்லாமல், தென்னிலங்கைத் தரப்பிலிருந்து  அதுவும் படைத்தரப்பிலிருந்தே வலுவாக முன் வைக்கப்படவுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் அரசுத் தலைமைக்குக் கிட்டியிருக்கின்றதாம்! இதனால் அரசுத் தலைமை அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் சில கொழும்பில் 'மலரும்' இணையத்துக்குத் தகவல் வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் காலத்தில் படைகளில் மிக உயர்ந்த தரத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சிலர் யுத்தம் முடிவுற்ற காலத்தில் அரசுத் தலைமையுடன் ஏற்பட்ட கசப்புணர்வுகளை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறி, பிறநாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். அவர்களில் குறைந்தது மூன்று அதிகாரிகளின் சாட்சியங்களை மேற்கு நாடுகள் சில ஏற்கனவே பதிந்து வைத்திருக்கின்றன என்றும், மேற்கு நாடுகளின் தொழில்நுட்ப சான்றுகள், புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களுடன் அந்த சாட்சியங்கள் சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் முன்னால் வலுவான ஆதாரங்களாக முன்வைக்கப்படும் என்றும் இலங்கை அரசுத் தலைமைக்குத் தற்போது நம்பகமாகத் தெரிய வந்திருக்கின்றதாம். சாட்சியமளிக்கத் தயாராக இருப்பவர்களுள் ஒருவர் இராணுவத்தின் மிக உயர்ந்த தர நிலையில் பதவி வகித்த, பெரும்பான்மையினரின் மதமான பௌத்தத்தைச் சாராத பிற மதம் ஒன்றைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகளின் சாட்சியங்களுக்கு மேலும் வலுவூட்டும் விதத்தில் வைக்கப்படக்கூடிய படைத் தரப்பு சாட்சியங்கள் மிகப் பாரதூரமான விளைவுகளை சர்வதேச மட்டத்தில் இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு ஏற்படுத்தும் என்பது ஆட்சித் தலைமைக்கு எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் ஆட்சித் தலைமை ஆடிப்போயிருப்பதாகவும் கூடத் தகவல். இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டால், அவ்வாறான சாட்சியங்களை மறுத்துரைக்கும் விதத்தில் நேரடியாக அத்தகைய மன்றில் ஆஜராகி சான்றளிக்க முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தயாராக இருக்கின்றார் என்ற தகவல் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் அரசுத் தலைமைக்குக் கோடிகாட்டப்பட்டுள்ளதாகவும் - ஆனால், அதத்தகைய விவகாரத்துக்கு இணங்கி இடமளித்து, அந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துவது தென்னிலங்கை அரசியலில் சரத் பொன்சேகாவுக்கு கதாநாயகன் அந்தஸ்தைத் தேடிக் கொடுத்து அவரைப் பெரிய ஆள் ஆக்கி, தமக்கு அரசியல் பின்னுதைப்பை வாங்கித் தந்துவிடும் என்பதால் அந்த யோசனையை அரசுத் தலைமை சாதமாகப் பரிசீலிக்கவேயில்லை எனவும் தெரியவந்தது.

15 ஏப்ரல் 2014

சிறீலங்கா தலைமை வகிப்பதால் நிதியை நிறுத்துகிறது கனடா!

இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் நடந்த பொதுநலவாய அமைப்பு மாநாட்டை கனேடிய பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பர் (stephen harper) புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து. "இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றல் இன்னும் நிகழாமல் இருப்பது தொடர்பில் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது." என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேர்ட் (john baird) தெரிவித்துள்ளார். "சிறுவர் திருமணம், சிறுவர் நிர்ப்பந்தத் திருமணம், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சமுதாய வேலைத் திட்டங்கள் என்பவற்றை நோக்கி ஒதுக்கப்பட்டிருக்கும் குறித்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

14 ஏப்ரல் 2014

“ஒத்துழைக்கிறாராம் நந்தகோபன்” – அரச சார்பு எழுத்தாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் வாக்குமூலம்!

மலேசியாவிலிருந்து பிடித்துக் கொண்டுவரப்பட்டதாக அரசு சொல்லிய நந்தகோபன் என்ற நபர் தொடர்பிலான பல்வேறு விடயங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட அரச சார்பு எழுத்தாளரான பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய விரிவான கட்டுரை ஒன்றை ”டெய்லிமிரர்’ பத்திரிகை பிரசுரித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ;
நந்தகோபனின் உண்மையான பெயர் கபிலனாகும். அரவிந்தன் அல்லது இரும்பொறை என்ற மற்றொரு நபரும் நெடியவன் குழுவின் பிரதித் தலைவராக இருந்து வருகிறார். இரும்பொறை ஐரோப்பாவில் இயங்கிவருகிறார். தென் கிழக்காசியா பகுதியில் நந்தகோபன் செயற்பட்டு வந்துள்ளார்.
நந்தகோபன் போலிக் கடவுச்சீட்டில் பயணம் மேற்கொண்டிருந்தார். தெஹ்ரான் வழியாக லண்டன் செல்லும் விமானத்தில் மலேசியாவிலிருந்து புறப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை இலங்கை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருந்த போது அவரின் பயணம் இடம்பெற்றது.
தென் கிழக்காசியாவிலுள்ள வட்டாரமொன்றின் தகவலின் பிரகாரம் புலிகளின் தலைவரின் நடமாட்டங்கள் குறித்து விழிப்பூட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர்கள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டுள்ளனர்.
தெஹ்ரான் விமானநிலையத்தில் பயணிகள் இடைத்தரிப்பு நிலையத்தில் வைத்து நந்தகோபன் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர அனுமதி மறுக்கப்பட்டது. போலி கடவுச்சீட்டின் மூலம் அவர் பயணம் செய்கின்றார் என்ற அடிப்படையில் அவர் மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
கோலாலம்பூருக்கு திரும்பி வருவதா அல்லது தெஹ்ரானில் காலவரையறையற்ற விதத்தில் தடுத்து வைத்திருப்பதா என்ற நிலையில் நந்தகோபன் மலேசியாவுக்கு திரும்பி வருவதையே விரும்பியிருந்தார். நெடியவனின் முக்கியமான பிரதித் தலைவர் கோலாலம்பூரை வந்தடைந்தவுடன் மலேசிய அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டார்.
அதேவேளை இலங்கை அதிகாரிகளும் மலேசியாவிற்கு சென்றிருந்தனர். நந்தகோபனின் விபரம் தொடர்பாக மலேசியாவிலுள்ள அதிகாரிகளுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்ததன் பிரகாரம் அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.
அதன் பின்னர் அவர் இலங்கை அதிகாரிகளினால் கையேற்கப்பட்டு மார்ச் 6 இல் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற தருணத்தில் ஷெல் வீச்சினால் நந்தகோபன் காயமடைந்திருந்தார். விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் சுப்பைய்யா பரமு தமிழ்ச்செல்வன் போன்று கைத்தடியின் உதவியுடனேயே நடமாடி வந்தார்.
இலங்கை அதிகாரிகள் நந்தகோபனை தந்திரோபாயமான பரிவிரக்க உணர்வுடன் நடத்துவதாக அறியவருகிறது. சௌகரியமான வாசஸ்தலத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விசேட நிபுணர்கள் உட்பட மருத்துவர்கள் அவரை கவனித்துள்ளனர். ஐரோப்பாவிலுள்ள தனது மனைவியுடன் தொடர்பு கொள்வதற்கும் நிலைமையைத் தெரியப்படுத்துவதற்கும் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனது குடும்பத்துடன் இணைந்து கொள்ளச் சென்றபோதே அவர் ஈரானில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரின் மனைவியும் 4 பிள்ளைகளும் தற்போது ஜேர்மனியில் உள்ளனர்.
இலங்கை அதிகாரிகளுக்கும் நந்தகோபனுக்குமிடையிலான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சூழ்நிலைக்கு அதிகளவுக்கு இசைவான தன்மையை நந்தகோபன் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இலங்கை அதிகாரிகளுடன் அதிகளவுக்கு ஒத்துழைப்புடன் செயற்படும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் தேவைப்படும் தகவல்களை வெளியிடுவதற்கு ஒத்துழைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் தென்படுகின்றது.
இதேவேளை விடுதலைப்புலிகளின் வெளிநாடுகளிலுள்ள தற்போதைய நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை அதிகளவுக்கு அறிந்துள்ளவராக நந்தகோபன் இருக்கிறார் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.
நோர்வே அதிகாரிகளினால் அழுத்தங்கள் ஏற்பட்டதன் காரணமாக விடுதலைப் புலிகளின் தலைவர் சிவபரன் அல்லது நெடியவன் தாழ்ந்த மட்டத்தில் செயற்படும் நடவடிக்கைகளை உள்வாங்கும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள கிளைகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் அன்றாட நிர்வாகத்தைக் கவனிப்பதற்கான இலக்கு நெடியவனின் நம்பிக்கைக்குரிய பிரதித் தலைவர்களான நந்தகோபனிடமும் இரும்பொறையிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இரும்பொறை நியூஸிலாந்து கடவுச்சீட்டைக் கொண்டுள்ளார். அதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் ஜேர்மனியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை நந்தகோபன் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தில் அகதியாக பதிவு செய்துள்ளார்.
தாய்லாந்திலுள்ள யு.என்.எச்.சி. ஆர்.ரிலே அகதியாக பதிவு செய்திருக்கிறார். ஆயினும் அவர் போலிக் கடவுச்சீட்டுகளில் தாய்லாந்து , மலேசியா , இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு இரும்பொறை பொறுப்பாக இருக்கும் அதேவேளை , நந்தகோபன் பிரசார நடவடிக்கைகளில் கவனத்தை செலுத்தி வந்துள்ளார்.
‘விடுதலைப் புலிகள் அனைத்துலக செயலகம்‘ என்ற பெயரில் அவர் புலிகளின் சார்பில் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளார். உலகளாவிய ரீதியில் புலிகளின் பிரசார நடவடிக்கைகளுக்கு அவர் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வந்துள்ளார். தொலைக்காட்சி கட்டமைப்புகள் , வானொலி நிலையங்கள் , பத்திரிகைகள் , சஞ்சிகைகள் , இணையத்தளங்கள் போன்ற புலிகளின் பல்வேறு ஊடகப் பிரிவுகளை அவர் இயக்கி வந்துள்ளார்.
அதற்கப்பால் தமிழ்நாடு மற்றும் இலங்கையிலுள்ள பலதரப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினருடன் நந்தகோபன் தொடர்பாடல்களை கொண்டுள்ளார். இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள தற்போதைய புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான சிறப்பான தகவல்களை நந்தகோபனால் வழங்கக்கூடியதாக இருக்குமென்ற நம்பிக்கையை இலங்கை அதிகாரிகள் கொண்டுள்ளனர். “புலம்பெயர்ந்த புலிகள் பற்றிய தகவல்களை அவர் வழங்குவார்.
அந்த விடயம் பிந்திய விபரமாக உண்மையில் அமையும். அத்துடன் பெறுமதியானவையாகவும் அவை விளங்கும். ஏனெனில் அவர் கைது செய்யப்படும் வரை புலிகளின் வெளிநாடுகளிலுள்ள கட்டமைப்புகளுடன் அவர் கிரமமான தொடர்புகளை கொண்டிருந்தார் என்று அதிகாரபூர்வ வட்டாரமொன்று டெய்லி மிரருக்கு கூறியுள்ளது.இதேவேளை 2014 மார்ச் 21 இல் வர்த்தமானியொன்று பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வர்த்தமானியில் 16 அமைப்புகள் மற்றும் 422 தனிப்பட்டவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதனைத் தயாரிப்பதற்கு நந்தகோபனிடமிருந்து பெறப்பட்ட விபரங்கள் எதுவும் பயன்படுத்தப்பட்டிருக்க வில்லையென அந்த வட்டாரம் விபரித்துள்ளது.
இந்த வருடம் பெப்ரவரி 25 இல் வர்த்தமானியிலுள்ள விபரங்கள் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாக அந்த வட்டாரம் விபரித்திருக்கிறது. வர்த்தமானி மார்ச்சில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் மார்ச் 6 இலேயே நந்தகோபன் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் வர்த்தமானியின் இறுதி வடிவம் பெப்ரவரியிலேயே பூர்த்தியடைந்திருந்ததாக அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது அவர் மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். படிமுறையான விசாரணைகள் அதன் பின் ஆரம்பிக்கப்படும். புதிய மற்றும் பெறுமதியான அதிகளவு தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதிகளவான பெயர்களுடன் புதியவர்த்தமானி அறிவித்தல் கூட நந்தகோபனிடமிருந்து பெறப்படும். புதிய தகவல்களின் அடிப்படையில் விடுக்கப்படக் கூடும் என்று அந்த வட்டாரம் அழுத்தி உரைத்துள்ளது.
சுப்பிரமணியம் கபிலன் அல்லது நந்தகோபன் யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்தவரான கிராமத் தலைவரான சுப்பிரமணியத்தின் மகனாவார். மணியம் விதானையார் என தகப்பனார் நன்கு அறியப்பட்டவர். நந்தகோபன் 1969 நவம்பர் 4 இல் பிறந்தவர். மிகவும் மதிப்பு பெற்ற வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் 1989 இல் புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார்.
இலங்கையின் வட , கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் இவர் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார். புலிகளின் 4 ஆவது ஆட்சேர்ப்பு பிரிவிலிருந்தும் இவர் பயிற்சி பெற்று வெளியேறியிருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மணலாறு / வெலிஓயாவிலிருந்த இரகசிய இடத்தில் இவர் பயிற்சி பெற்றிருந்தார்.
1990 மார்ச்சில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் வட பகுதியை புலிகள் எடுத்திருந்தனர். நந்தகோபன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார். வீரகத்தி மணிவண்ணன் அல்லது காஸ்ட்ரோ என்பவர் அச்சமயம் யாழ்ப்பாணத்திற்கு அப்பால் உள்ள தீவுப் பகுதிக்கு பொறுப்பாளராக இருந்தார். அவரின் பிரதித் தலைவராகவும் மெய்ப்பாதுகாவலராகவும் நந்தகோபன் பணியாற்றினார்.
ஆயினும் 1990 நடுப்பகுதியில் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை மூலம் தீவுப் பகுதி இராணுவத்தின் வசம் வந்திருந்தது. அதன் பின்னர் யாழ். குடாநாட்டில் நந்தகோபன் பணிக்கமர்த்தப்பட்டிருந்தார். காஸ்ட்ரோவின் குழுவில் அங்கமாக அவர் செயற்பட்டார். காஸ்ட்ரோ வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவர் ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவன்.
1991 இல் ஆனையிறவு இராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதலை ஆரம்பித்த போது காஸ்ட்ரோ காயமடைந்திருந்தார். தோல்வியில் முடிந்த இந்தத் தாக்குதலில் 700 க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தனர். காஸ்ட்ரோவும் கடுமையாகக் காயமடைந்திருந்தார். கழுத்துக்கு கீழ்ப் பகுதியில் இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் சக்கர நாற்காலியில் முடங்கியிருந்தார். புலிகளின் வெளிநாடுகளிலுள்ள கிளைகளுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளுக்கு வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் பணியும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அச்சமயம் செல்வராஜா பத்மநாதன் அல்லது கேபி ஆயுதக் கொள்வனவு , சர்வதேச நிதி சேகரிப்பு , வெளிநாடுகளிலுள்ள புலிகளின் கிளை நிர்வாகம் ஆகிய மூன்று முக்கியமான விடயங்களுக்கு முழுப் பொறுப்பாளியாக இருந்தார். கேபிக்கும் காஸ்ட்ரோவுக்கும் இடையில் அதிகளவு முரண்பாடு இருந்து வந்தது. புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புகள் தொடர்பான தத்தமது அதிகாரங்கள் குறித்து அவர்களிடையே முறிவு இருந்து வந்தது.
பின்னர் விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் நிர்வாகத்தைக் கையாள்வதற்கு தனியான திணைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த அலுவலகத்தின் கடமைகள் வெளிநாடுகளிலுள்ள கிளைகளுடனும் புலம்பெயர்ந்தோர் மத்தியிலுள்ள முக்கியமானவர்களுடனும் தொடர்புகளை பேணுதலும் ஒருங்கிணைந்தது செயற்படுவதுமாக இருந்தது.
வடக்கிற்கு வருகை தரும் புலம்பெயர்ந்த தனிப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்காக விசாவுடன் தொடர்புபட்ட பாஸ் முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த நடைமுறை இருந்துவந்தது. வெளிநாட்டு விடயங்களுக்காக ”நந்தவனம்’ என்ற தனியான அலுவலகம் அமைக்கப்பட்டது. வெளிநாட்டுக் கிளைகள் , புலம்பெயர்ந்த உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த அலுவலகம் கையாண்டது. காஸ்ட்ரோவுக்கு நேரடியாக உத்தியோகபூர்வமான அன்றாட அறிக்கை சமர்ப்பிக்கும் பணியில் நந்தகோபன் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
2002 இல் கேபி பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் காஸ்ட்ரோவின் ஆட்கள் மேலெழுந்தனர். கேபியின் கட்டமைப்பை காஸ்ட்ரோ கலைத்துவிட்டார். தனக்கு விசுவாசமானவர்களை நியமித்தார். 2002 இல் ஏற்பட்டிருந்த யுத்த நிறுத்தம் அதிக எண்ணிக்கையான புலம்பெயர்ந்த தமிழர்களை வடக்கிற்கு வருகை தர வைத்தது. இதன் பெறுபேறாக காஸ்ட்ரோவின் திணைக்களம் தனது தனியான புலனாய்வு பிரிவை வெளிநாடுகளில் விரிவுபடுத்தியது. நந்தகோபன் அதற்குப் பொறுப்பாக இருந்தார்.
நந்தவனம் அலுவலகத்தில் வைத்து பல வெளிநாட்டுத் தமிழர்கள் நந்தகோபனால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தம் முடிவடைந்து 2005 இல் யுத்தம் தீவிரமடைந்த பின்னரும் வெளிநாட்டு நிர்வாகப் பிரிவானது காஸ்ட்ரோவின் கீழ் செயற்பட்டிருந்த நிலையில் நந்தகோபன் அவரின் கீழ் தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் வன்னியில் ஷெல் தாக்குதலில் அவர் காயமடைந்திருந்தார்.
இரகசியமாக இந்தியாவிற்கு மன்னார் கரை வழியாக கொண்டு செல்லப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் அவர் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். அங்கு யு.என்.எச்.சீ.ஆரில் அகதியாக பதிவு செய்திருந்தார். அத்துடன் தனது மனைவியையும் 4 பிள்ளைகளையும் ஐரோப்பாவுக்கு இடமாற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
காயங்கள் குணமடைந்த பின்னர் கைத்தடியின் உதவியுடன் நடக்கக்கூடிய நிலை ஏற்பட்டதையடுத்து நந்தகோபன் போலி கடவுச்சீட்டுகளைப் பெற்று தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் பயணம் மேற்கொண்டிருந்தார். அதேவேளை புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் , முன்னணி அமைப்புகளின் கட்டுப்பாட்டை நெடியவன் பெற்றுக் கொண்டிருந்தார்.
நோர்வே அமைப்புகளின் கட்டுப்பாட்டினால் நெடியவனின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நிர்வாக ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு இரும்பொறை மற்றும் நந்தகோபனிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் நந்தகோபன் நெடியவனிலும் பார்க்க புலிகள் இயக்கத்தில் சிரேஷ்ட உறுப்பினராவார். ஆனால் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் அவர் நெடியவனுக்கு பிரதித் தலைவராக பணியாற்றியிருந்தார்.
நியூஸிலாந்து பிரஜையான இரும்பொறை ஐரோப்பாவிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நந்தகோபன் தென்கிழக்காசியாவிலிருந்து இயங்கி வந்துள்ளார். அவர் அதிகளவுக்கு பிரசார செயற்பாடுகளில் கவனம் செலுத்தியிருந்தார்.
ஊடக அமைப்புகளுடனும் ஊடகவியலாளர்களுடனும் அவர் அதிகளவுக்கு தொடர்பாடல்களை கொண்டிருந்தார். அதேவேளை இலங்கையிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் , ஊடக துறையினருடன் தொடர்பை கொண்டிருந்தார். தனது குடும்பத்தினருடன் மீள இணைந்து கொள்வதற்காக திட்டமிட்டிருந்த அவர், மலேசியாவிலிருந்து ஈரான் வழியாக ஐரோப்பாவிற்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டிருந்த போதே பிடிபட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். முன்னர் குறிப்பிட்டிருந்தது போல் அவர் தகவல் சுரங்கமாக கருதப்படுகின்றார். புலிகளின் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் , தற்போதைய கட்டமைப்புகள் பற்றிய தகவல்களின் சுரங்கமாக அவர் கருதப்படுகின்றார். நந்தகோபன் தொடர்பாக “அங்குலிமாலா’ அணுகுமுறையை இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே உள்ளீர்த்துக் கொண்டுள்ளதாக தெரிகின்றது. இந்த அணுகுமுறை பௌத்தர்களுக்கு நன்கு அறியப்பட்டதொன்றாகும். அங்குலிமாலா என்பவர் இரக்கமற்ற கொலைகாரனாவார்.
அவர் இதயசுத்தியுடன் மாற்றமடைந்தவர். பௌத்த போதனைகளின் சக்தியின் பெறுபேறாக அங்குலிமாலா மாற்றமடைந்ததாக கருதப்படுகின்றது. ஆன்மீக முன்னேற்றமானது ஒருவரின் பின்னணியைக் கொண்டதல்ல என்ற போதனையாக அது காணப்படுகிறது.
கதையின் பிரகாரம் “ கைதிகள் சிலர் தடி மூலமோ அல்லது சாட்டை மூலமோ வழங்கப்படும் தண்டனையினால் திருத்தப்படுகின்றார்கள். ஆனால் நான் எந்தத் தடியோ ஆயுதமோ இல்லாமல் திருந்தினேன். புத்த பிரானின் பரிவிரக்கம் கொண்ட அன்பான வார்த்தைகளினால் மூர்க்கத் தன்மை குறைக்கப்பட்டு வசப்படுத்தப்பட்டேன்“ என்று அங்குலிமாலா கூறுகிறார்.இலங்கை அதிகாரிகளின் பிரகாரம் , கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் தொடர்பாக அங்குலிமாலா அணுகுமுறை ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் பிரதானமானவர் செல்வராஜா பத்மநாதன் அல்லது கேபி ஆவார். அவர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவின் பின்னர் குறிப்பிட்ட சில காலத்திற்கு புலிகளின் தலைவராக இருந்தவர்.
அவரை தண்டிப்பதற்குப் பதிலாக இலங்கை அதிகாரிகள் அவர் சமூக சேவை ஆற்ற இடமளித்திருந்தனர். இப்போது கேபி 3 ஆதரவற்றோர் நிலையங்களை நடத்திவருகின்றார். அவற்றில் 250 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ளனர். முத்தையன்கட்டு , முள்ளியவளை , கிளிநொச்சி ஆகிய இடங்களில் அன்பு இல்லம் , பாரதி இல்லம் , செஞ்சோலை என்ற பெயர்களில் சிறுவர் இல்லங்கள் இயங்குகின்றன.
மற்றொரு சிறிய உதாரணம் சுப்பிரமணியம் சிவகுமார் அல்லது மலேசியா ராஜன் ஆவார். அவர் மலேசியாவில் புலிகள் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தவர். இதற்கு முன்னர் அவர் கொழும்பில் புலிகளின் புலனாய்வு செயற்பாட்டாளராக இயங்கி வந்தவர். கண்ணன் , சாந்தலிங்கம் என்ற பெயர்களில் அவர் செயற்பட்டவர். அத்துடன் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவிலும் மலேசியா ராஜன் சம்பந்தப்பட்டவர்.
மலேசியாவில் வைத்து அவர் 2010 இல் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஒப்பீட்டளவில் சுதந்திர மனிதராக கொழும்பின் புறநகர் பகுதியில் அமைதியான வாழ்வை முன்னெடுத்து வருகிறார். இதேவேளை கேபியையும் மலேசியா ராஜனையும் இப்போது நந்தகோபனையும் பிடிப்பதற்கு முக்கியமான பங்களிப்பை மலேசிய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். அதேவேளை கேபி மற்றும் ராஜனைப் போன்றே நந்தகோபன் தொடர்பாகவும் அங்குலிமாலா அணுகுமுறையை உள்வாங்கியிருப்பது சுவாரஸ்யமாக காணப்படுகிறது.
இவர்கள் மூவரும் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் அரங்கேற்றப்பட்ட நபர்களாகவுள்ளனர். வெஞ்சினம் தீர்ப்பதிலும் பார்க்க இந்த மாதிரியான ஆக்க நலம் தருகின்ற விடயத்தை உள்ளீர்த்துக் கொள்ளுதல் அதாவது அக உறுத்தல் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தொடர்பான அணுகுமுறையானது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் புதிய கருத்தென்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தக் கொள்கைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கீகாரமளித்திருப்பதாகவும் கூறியுள்ளன. நந்தகோபன் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள பெறுமதியான தகவல்களைப் பற்றி தெரிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமாதிரி வெளிப்படுத்தப்படும் விடயங்களின் பெறுபேறுகள் எதிர்காலத்தில் உணரப்படும் சாத்தியம் காணப்படுகிறது.

- டெய்லி மிரர் -
மொழி பெயர்ப்பு உதவி – தினக்குரல்

13 ஏப்ரல் 2014

விநாயகம்,நெடியவனை கைது செய்ய சர்வதேச பொலிசை நாடுகிறதாம் சிங்களம்!

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை விரிவுபடுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிலர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விநாயகம் மற்றும் நெடியவன் போன்றோறைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கும், மீண்டும் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க உதவிகளை வழங்கியது இவர்கள் என பாதுகாப்பு பிரிவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

12 ஏப்ரல் 2014

பிரித்தானிய பா.உ.களின் இலங்கை விஜயம் ரத்து!

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது வாழ்க்கைத்துணைகளும் இந்த விஜயத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தனர். பயணத்தை ஆரம்பிக்க சில மணித்தியாலங்கள் இருக்கும் நிலையில் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளீதரனின், தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குறித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயத்திற்கான செலவுகளை குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவிருந்தது. எனினும், இறுதி நேரத்தில் எழுந்த சர்ச்சைகள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் கிடையாது என முரளீதரனின் தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு அறிவிக்காமல், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய தொழிற் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர், இந்த விஜயத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதனைத் தொடர்ந்து, விஜயம ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

11 ஏப்ரல் 2014

இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட தமிழ் இராணுவ வீரர் கிளிநொச்சியில் மரணம்!

இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட இலங்கையைச் சேர்ந்த இராணுவ வீரர் அமிர்தலிங்கம்- குமாரசாமி நேற்று முன்தினம் 9ஆம் திகதி தனது 97ஆவது வயதில் அக்கராயனில் காலமானார்.1916 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி அன்று மயிலிட்டியில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
1936ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இராணுவத்தில் இணைந்து இத்தாலியில் உலக மகா யுத்தத்தில் பங்குகொண்டு 1946ஆம் ஆண்டு நாடு திரும்பியே இராணுவத்திலிருந்து விலகினார்.
அப்போதைய காலத்தில் யாழ்.குடாநாட்டில் வசித்ததோடு இராணுவத்தில் இருந்து விலகி தபால் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதோடு முதுமைக் காலத்தில் அக்கராயன் பகுதியில் வசித்து வந்தார். இவரின் இறுதி நிகழ்வுகள் நேற்று 10ஆம் திகதி இடம்பெற்றன.

10 ஏப்ரல் 2014

சிங்களப் படைகளின் சித்திரவதையால் கருச்சிதைவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்மிளா என்ற கர்ப்பிணிப் பெண், சிங்களப் படைகளின் சித்திரவதையில் கருச்சிதைவுக்கு ஆளாகியிருக்கின்றார்.தமிழீழ விடுதலைப் புலிகளைக் கைது செய்யும் புலிவேட்டை எனும் போர்வையில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் நாளன்று திருமலையில் சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு கொண்டு செல்லப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக கருச்சிதைவுக்கு இவர் ஆளாகியுள்ளார்.
இருந்த பொழுதும் இவருக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்காது தொடர்ந்தும் கொடூர வதைகளுக்கு சிங்களப் படையினர் உட்படுத்து வருகின்றனர்.

08 ஏப்ரல் 2014

தமிழரசுக் கட்சிக்கு எதிராக சிங்களவர் வழக்கு!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் சாசனத்தின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநாடு ஒன்றை அமைக்கும் நோக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி என்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியள்ளார்.
களனியின் பொல்ஹேன என்னும் இடத்தைச் சேர்ந்த எச்.கே.டொன் சந்திரசோம என்பவரே மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.இலங்கைக்குள் தனிநாடு ஒன்றை அமைப்பதனை இலக்காக கொண்டு தனிப்பட்ட நபர்களோ அல்லது அரசியல் கட்சிகளோ செயற்படக் கூடாது என அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்ட மா அதிபா பாலித பெர்னாண்டோ ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்;டுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்சி யாப்பில் தனிநாட்டு கோரிக்கை பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இந்தக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனுதாரர் உச்ச நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

07 ஏப்ரல் 2014

"சாட்சி சொன்னால் விபரீதம்"ரம்புக்கெல எச்சரிக்கை!

ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்;ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசேட நிபுணர் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடாத்த உள்ளார். மூவர் அடங்கிய இந்த விசாரணைக் குழுவினர் எதிர்வரும் மே மாதத்தில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்,
இந்த சர்வதேச விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாட்டுக்கு வெளியே நடத்தப்பட உள்ள சர்வதேச விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச விசாரணைகளில் பங்கேற்று சாட்சியமளிப்பதானது அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார்.சர்வதேச விசாரணைகளின் மூலம் நாட்டின் இறைமை பாதிக்கப்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் சாசனத்தைப் பேணிப் பாதுகாப்பதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

06 ஏப்ரல் 2014

விசாரணைகள் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்!

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் 28 வது அமர்வில் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க கூடியவாறாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜெனிவா தகவல்கள் கூறுகின்றன.
2002 ம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரிய தீர்மானம் கடந்த மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கென விசேட நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இவ் விசேட குழு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது விசாரணைகளை துரித கதியில் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 27வது அமர்வின்போது இந்த குழு வாய்மொழி மூலமான அறிக்கையை முன்வைக்கவுள்ளது. இதன் பின்னதாக 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத்தொடரில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05 ஏப்ரல் 2014

கிளிநொச்சியில் படைகளின் பலவந்தக் கொண்டாட்டம்!

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள களியாட்ட நிகழ்ச்சியில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் கலந்துகொள்ளக்கூடும் என்று கிளிநொச்சி மாவட்ட இராணுவக்கட்டளைத் தலமையகம் எச்சரித்துள்ளது.
இதனால் குறித்த நிகழ்ச்சியின்போது இராணுவத்தினரை உசார் நிலையில் வைத்திருக்கவும் கிளிநொச்சி மாவட்ட இராணுவக்கட்டளைத் தலமையகம் முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இந்துப் புத்தாண்டு கொண்டாட்டம் என்று கிளிநொச்சி எங்கும் பதாகைகளை வைத்து களியாட்ட நிகழ்வுகளில் மக்களை கலந்துகொள்ளுமாறு இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்திருந்தனர். கிராமம் கிராமாகவும் சென்று இதற்கான பிரசார வேலைகளையும் அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் வட மாகாணத்திலும் கிளிநொச்சியிலும் பயங்கரவாத்துடன் தொடர்புடைய பலர் பதுங்கி உள்ளதாக தெரிவிக்கும் இராணுவத்தரப்பு இன்றைய நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொள்ளக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
அவ்வாறானவர்கள் வந்தால் கைதுசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தரப்பு குறிப்பிடுகின்றது. இதேவேளை பயங்கரவாத்துடன் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் நோக்கில் சிவில் உடையில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
இன்று காலை முதல் கிளிநொச்சியில் உள்ள சில பின் தங்கிய கிராமங்களுக்கு பேரூந்துகளைக் கொண்டு சென்று சிங்கள இந்துப் புத்தாண்டை கொண்டாட வருமாறு இராணுவத்தினர் மக்களை பலவந்தப்படுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

04 ஏப்ரல் 2014

புலம்பெயர் ஊடகங்களுக்கும் தடை வருகிறதாம்!

வெளிநாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்த இலங்கை அரசாங்கம் அடுத்ததாக, வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களுக்கும் தடைவிதிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம் பெயர்ந்த மக்களின் தமிழ் தேசிய செயற்பாடுகளில், வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் பெரும் பங்கினை வகித்து வருகின்றன.
இதன்அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட சில இணையத்தள செய்தி ஊடகங்களை இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் தடை செய்துள்ளது.
இந்த நிலையில் விரைவில் இவ்வாறான ஊடகங்களை உத்தியோகபூர்வமாக தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

03 ஏப்ரல் 2014

ஆதாரமிருந்தால் நிரூபியுங்கள்’ – சிறீலங்காவிற்கு பிரித்தானியா சவால்!

பயங்கரவாதச் செயல்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நிரூபிப்பது சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு என்று பிரித்தானியா சவால் விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மறு முக அமைப்புக்கள் என முத்திரை குத்திப் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் பதினைந்து அமைப்புக்களை தடைசெய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வரும் பின்புலத்தில் இன்று இது தொடர்பாக இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியன் இணைய இதழிற்கு கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலவற்றுடன் தமது அரசாங்கம் தொடர்பைப் பேணி வருவதாகவும், கருத்துச் சுதந்திரத்தையும், நியாயபூர்வமான விமர்சன உரிமையையும் கட்டுப்படுத்துவதற்கு தடைத் அறிவித்தல்களைப் பயன்படுத்த முற்பட வேண்டாம் என சிறீலங்கா அரசாங்கத்திற்குத் தாம் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘‘இலங்கை விடயத்தில் அக்கறை கொண்டு, சனநாயக வழிகளில் தாம் செயற்படுவதாகப் பகிரங்கமாகக் கூறி வரும் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளடங்கலான அரசு சாரா அமைப்புக்கள், வெகுசன அமைப்புக்கள் போன்றவற்றுடன் பிரித்தானிய அரசாங்கம் நல்லுறவைப் பேணி வருகின்றது.
வன்முறை நீர்த்த வழிமுறைகளில் இலங்கையில் நிரந்தரமானதும், நீதியானதுமான சமாதானம் ஏற்படுவதற்கு உழைக்கும் அமைப்புக்களுடன் நாம் தொடர்ந்தும் உறவைப் பேணுவோம்.
பிரித்தானியாவில் இயங்கி வரும் தமிழ் சமூக அமைப்புக்கள் எவையும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாக நாம் அறியவில்லை.
பயங்கரவாதத்துடன் பல தரப்பட்ட தமிழ் அமைப்புக்கள் தொடர்புபட்டிருப்பதாக சிறீலங்கா அரசாங்கத்தால் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரங்களை நிரூபிக்கும் பொறுப்பு அவ் அரசாங்கத்தையே சாரும்.
ஏனைய நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பது தொடர்பான உண்மையான ஆதாரங்களை சிறீலங்கா அரசாங்கம் தரும் பட்சத்தில் இவற்றை பிரித்தானிய காவல்துறையினரும், பட்டய குற்றவியல் வழக்குப் பதிவுப் பிரிவினரும் ஆழமான பரிசீலனைகளுக்கு உட்படுத்துவார்கள்.’’

நன்றி: தமிழ்கார்டியன்

02 ஏப்ரல் 2014

இலங்கைக்குள் அனுமதி இல்லை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் விசாரணைக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நவனீதம்பிள்ளை, நிபுணர் குழு ஒன்றை நிறுவி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கிற்கு விஜயம் செய்து சாட்சியங்களை திரட்டுவதற்கு அனுமதியளிக்குமாறு நிபுணர் குழு கோரியுள்ளது.
இலங்கையை போர்க் குற்றவாளிகளாக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டு குறித்த நிபுணர் குழு விசாரணை நடாத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

01 ஏப்ரல் 2014

மீண்டும் முருங்கையில் ஏறிக்கொண்ட வேதாளங்கள்!

யாழ்.குடாநாட்டில் காவலரண்கள் மூடப்பட்டன. மினிமுகாம்கள் மூடப்பட்டன என யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி புள்ளி விபரங்களை ஒருபுறம் வாசித்துக் கொண்டிருக்க வடமராட்சியின் கரையோரப பகுதிகளில் மாத்திரம் ஓரே நாளில் நூற்றுக்கணக்கான காவலரண்கள் முளைத்துள்ளன. அத்துடன் வெளியேறிவிட்டதாக மக்கள் மகிழ்ச்சி கொண்டாடிய படையினர் மீண்டும் இரவோடிரவாக நிலை கொண்டும்விட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கில் படையினர் கரையோர கிராமங்களில் குவிக்கப்பட்டதுடன் கைவிடப்பட்டிருந்த காவலரண்கள் மற்றும் மினிமுகாம்கள் அவசர அவசரமாக புனரமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென படையினர் குறைக்கப்பட்டதையடுத்து பயிற்சி நடவடிக்கைக்காக படையினர் வருகை தந்திருந்ததாகவும் பயிற்சி முடிந்து அவர்கள் வெளியேறியதாகவும் மக்களிடையே பேச்சுக்கள் பரவின. எனினும் குறைக்கப்பட்ட படையினர் மீண்டும் இரவோடிரவாக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பருத்தித்துறையினை அண்மித்த எரிஞ்ச அம்மன் கோவிலடியில் புதிய படைதளம் ஒன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. பருத்தித்துறை நகரப்பகுதியில் துறைமுகம் உள்ளடங்களாக செயற்பட்டு வந்திருந்த இராணுவ தளம் சுமார் 18 வருடங்களின் பின்னர் அண்மையிலேயே மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த தளத்திற்கு பதிலாகவே எரிஞ்ச அம்மன் கோவிலடியில் புதிய படைதளமொன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நம்பப்படுகின்றது.