30 செப்டம்பர் 2014

செல்வி ஜெயலலிதா ஜெயராம் நாளை வெளியே வருகிறார்?

அரசு வக்கீல் இல்லாவிட்டாலும் ஜாமீன் மனுவை விசாரிக்கலாம் என்ற ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்று கர்நாடக ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு நாளை மீண்டும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்த உள்ளது.ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று காலை கர்நாடக ஹைகோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வு விசாரித்தது. பின்னர் அடுத்த வாரம் 6ம்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.இதற்கு காரணம், அரசு தரப்பு வக்கீல் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை என்பதுதான். எனவே அடுத்த விசாரணைக்கு முன்பாக அரசு தரப்பு வக்கீலை நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட், கர்நாடக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது.எனவே ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு ஒரு வாரம் காலதாமதம் ஆகும் நிலை உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த ராம் ஜெத்மலானி, குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள், அதிரடியாக ஒரு வேலையை செய்தனர்.அதாவது, சட்ட விதி 389 (1)படி அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என்பதை சுட்டிக் காண்பித்து கர்நாடக ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் பி.என்.தேசாயிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜாமீனில் வெளியேவிட கோரும்போதுதான், அரசு தரப்பு பதில் தேவை.எனவே ஜெயலலிதா வழக்குக்கு அந்த விதிமுறை பொருந்தாது. அரசு வக்கீல் இல்லாமலேயே, அவசர வழக்காக கருதி நீதிமன்றம் தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பதிவாளர் ஜெனரல் தேசாய், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் தொடர்பான வழக்கு என்பதை கருத்தில் கொண்ட தலைமை நீதிபதியும், செவ்வாய்க்கிழமை (நாளை) ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். அரசு வக்கீல் இல்லாமலேயே ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி ரத்னகலாதான் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளார். தற்போது உள்ள நிலவரம், சட்ட விவரங்களைப் பார்த்தால், அநேகமாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது.

29 செப்டம்பர் 2014

மகிந்தவின் அமைச்சர்கள் ஐ.தே.கட்சியில் இணையவுள்ளனராம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியில் இணையும் முதல் நடவடிக்கையாக இது இருக்கும் எனவும் மேலும் சுமார் 25 அமைச்சர்கள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அந்த தகவல்கள் கூறின. இவர்கள் ராஜபக்ஷவினருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹார,அரசாங்கத்தை சேர்ந்த 5 முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டு வரும் ஐக்கியம் காரணமாக இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடியதாகவும் அலுவிஹார குறிப்பிட்டிருந்தார். எனினும், அவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.

28 செப்டம்பர் 2014

முதல்வருக்கு எதிரான தீர்ப்பிற்கு ஜெத்மலானி கண்டனம்!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததற்கு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் போது ராம்ஜெத்மலானியே அவருக்காக ஆஜராகி வாதாடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது: ஜெயலலிதான மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேன்மை மிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. நீதிபதி குன்கா ஊழல் தடுப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லை. அதுவும் ஜெயலலிதாவுக்கு அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறிய செயல். நீதிபதி குன்கா நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டார். அவர் ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி தீர்ப்பை வழங்கவில்லை. அபராதம் விதித்ததில் நீதித்துறை கோட்பாடுகளை குன்கா மீறிவிட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை நான் எதிர்க்கிறேன்.இவ்வாறு ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார். ஜெ. வழக்கில் ஆஜராகிறார்? இதனிடையே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத்மலானியே ஆஜராகி வாதாடக் கூடும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.