29 அக்டோபர் 2015

தமிழரின் உரிமைகளை போராடியே பெறவேண்டும்-சொல்ஹெய்ம்!

இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைப் பங்கு குறித்து லண்டனில் நூல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. மார்க் சோல்டர் என்ற ஆய்வாளரினால் இயற்றப்பட்ட 'சிவில் யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டுவர இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி' என்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில், நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவராகப் பலவருடங்கள் பணிபுரிந்த எரிக் சொல்ஹெய்மும், முன்னாள் நோர்வே அமைச்சர் விதார் ஹெல்கிசனும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றபோதிலும், ஈழத்தமிழர்கள் களத்திலும், புலத்திலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொள்வதன் ஊடாகவே தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், சிங்களவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகளை ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவது கிடையாது என்றும் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே வாக்களித்திருந்தனர் என்றும், தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்தே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது என்றும் சுட்டிக்காட்டிய அவர், புதிய அரசு நேர்த்தியான வழியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சர்வதேச சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

25 செப்டம்பர் 2015

மன்னார் ஆயரின் உடல் நிலையில் முன்னேற்றம்!

மன்னார் ஆயர்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கும் ஆலோசனை மருத்துவர் டாக்டர் பெண்டன் ஜியாப் கூறுகிறார்.சிங்கப்பூரிலிருந்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், டாக்டர் ஜியாப், "ஆயரின் உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறது. அவரது வலது கையிலும் வலது காலிலும் இன்னும் கொஞ்சம் தசைப் பிடிப்பு இருக்கிறது. அவருக்கு தரப்படும் பிசியோதெரப்பிக்கு ( அதாவது இயன்முறை சிகிச்சை)அவர் நல்லமுறையில் ஒத்துழைத்து பயிற்சி பெற்று வருகிறார். நடை பழகும் கருவியை வைத்துக்கொண்டு நடக்கிறார். உடையணிவது போன்ற அன்றாட வேலைகளைச் செய்ய அவருக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது. அவருக்கு வந்த ஸ்ட்ரோக்கை வைத்துப் பார்க்கும்போது, இது ஒன்றும் அசாதாரணமானதல்ல" , என்றார்.சிகிச்சை இன்னும் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதங்கள் வரை தொடரக்கூடும் என்று கூறிய டாக்டர் ஜியாப், ஆனால் அவர் இலங்கைக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் திரும்ப முடியும் என்று கருதுவதாகக் கூறினார்.

19 செப்டம்பர் 2015

தானும் இனவாத சிங்களவன்தான் என்பதை நிரூபிக்கிறார் விக்கிரமபாகு!

ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது ஜனநாயகத்திற்காக போராடிய எம்மைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழர்கள் வாக்களிக்காததால் தான் அவர் தோல்வி அடைந்தார். “ரணில் விக்கிரமசிங்க இனவாதியல்ல. அவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர். கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் கோரும் உரிமை எவருக்கும் இல்லை.
கலப்பு நீதிமன்றம் என்ற பரிந்துரை, ஜனநாயகத்துக்காக போராடிய எம்மை, இலக்கு வைத்து அவமானப்படுத்தும் செயல்.இந்தக் கலப்பு நீதிமன்றம், சிலரால், ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், முன்னைய காவல்துறை, நீதித்துறை தான் இலங்கையில் இன்னமும் இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. ஜனவரி 8 ம் திகதி ஏற்பட்ட புரட்சி எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தியுள்ளது.
புதிய இடதுசாரி முன்னணி, தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளையும், வடக்கில் போரின் போது குற்றங்கள் இழைக்கப்பட்டது என்பதையும், ஏற்றுக் கொள்கிறது.லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, தாஜுதீன் படுகொலைகளும் போர்க்குற்றங்களுக்குள் அடக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆயுதப்படைகளினால், போர்க்காலத்தில் தான் இவை மேற்கொள்ளப்பட்டன.இவை குறித்து விசாரிக்க சிறிலங்கா தமது சொந்த நீதிமன்றத்தை உருவாக்க முடியும்.இந்தியாவைப் போன்று இந்தப் பிரச்சினையை ஒற்றையாட்சி அரசுக்குள் தீர்க்கப்பட முடியும். சமஸ்டி முறை இங்கு தேவையற்றது.தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும் வெள்ளையின மக்களையும், குடும்பங்களையும் கொலை செய்திருக்கிறார் எனக் குறிப்பிட்டதுடன், எல்லா கெரில்லா தலைவர்களும், போராளிகளும், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை கொன்றிருக்கிறார்கள்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடயத்தில் இது ஒன்றும் புதியதல்ல என்றார். புதிய இடதுசாரி முன்னணி வன்முறைகளைக் கண்டிக்கிறது.” எனவும் அவர் தெரிவித்தார்.

16 செப்டம்பர் 2015

கலப்பு நீதிமன்றம் விசாரணை என்கிறது ஐ.நா!

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

01 செப்டம்பர் 2015

கருணாவின் பேச்சால் படைகளுக்குள் குழப்பமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனின் மரணம் தொடர்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்த கருத்து இலங்கை இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரபாகரனின் சாவு குறித்து சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் யுத்த முடிவில் அறிவித்த நிலையில் பிரபாகரன் தனது கைத்துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுக்கொன்றதாகவும் மனைவியும் மகளும் இராணுவத்தின் செல்வீச்சில் கொல்லப்பட்டதாகவும் கருணா கூறியுள்ளார்.
இறுதிப் போர் தொடர்பில் கருணா தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது இராணுவப் பேச்சாளர் தடுமாறியுள்ளார். கருணாவின் பேச்சுக்கள் இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவா தொடர் நடைபெறவுள்ள வேளையில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருத்துக்களை அவர் வெளியிடலாம் என்ற சந்தேகம் இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபாரகன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதே கருணாதான் என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் அவர் தற்போது கூறும் கருத்து தொடர்பில் அதன் உண்மை நிலையை அறிய சட்ட ஆலோசனை நடத்துவதே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

16 ஆகஸ்ட் 2015

தீவக வாக்குப்பெட்டிகள் கடற்படையிடம்!

நாளை (17.08.2015)நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னொட்டி இன்று காலை தேர்தல் தொகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பும் பணி ஆரம்பமாகியுள்ளது.குறிப்பாக தீவகப் பகுதிக்கான வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணி,வாக்களிப்பு நிறைவடைந்ததும் மீண்டும் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வது போன்ற பணிகள் அனைத்தும் சிறீலங்காவின் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

14 ஆகஸ்ட் 2015

பொட்டுவின் சேனை என்ற பெயரில் மறுப்பறிக்கை!

13-08-2015 நேற்றையதினம் "தமிழ்வின்"இணையத்தில் வெளியாகிய -புலனாய்வு முக்கியஸ்தர் அனுப்பிய கடிதம்...!என்ற தலைப்பில் வந்த செய்தி தொடர்பாக எமது மறுப்பறிக்கை!

விழிப்புடன் செயற்படுங்கள் எம் மக்களே!

எமது அமைப்பிற்குள் சமாதான காலத்தை பயன்படுத்தி ஊடுருவலையும்,சேதங்களையும் ஏற்படுத்துவதற்காக 2003ம் ஆண்டு நடுப்பகுதியில் எதிரியால் திட்டமிட்டு வன்னிப்பகுதிக்கு அனுப்பப்பட்டவர்தான் இந்த புலனாய்வு முக்கியஸ்தர் என்று தனக்குத்தானே புகழ்மாலை சூட்டி தனது படத்தையும் போட்டு பொய்ச் செய்தியை அவிட்டிருப்பவரான {சி.சசிதரன் இ.பெயர்:செவ்வாணன்}-

சொந்த முகவரி:மலையகம்-(இந்திய வம்சாவழி)
வன்னியில்-த.முகவரி: றெட்பானா விஸ்வமடு
வீட்டுப் பெயர்: சி.சசிதரன்
இயக்கப் பெயர்: செவ்வாணன்
இயக்கத்தில் இணைவு:2004

பணிகள்: 2003ல் இருந்து 2004லு வரை புலனாய்வு முகவர், 2004ல் இருந்து உள்ளகப் புலனாய்வுப் பொறுப்பாளர் காந்தி அவர்களின் வாகனச் சாரதியாகவும், அம்முகாமின் எரிபொருள் அளக்கும் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
சமாதான காலம் இவருடைய வரவுக்கும் இணைவுக்கும் சாதகமாகியதால் இவர் இரட்டை முகவராக பணிபுரிந்தார்' ஆரம்பத்திலிருந்தே இவரை எமது விசேட கண்காணிப்புக்குள் உட்படுத்தியே பொறுப்பாளர் காந்திக்கான சாரதியாகவும் நாம் நியமித்திருந்தோம்.
அத்துடன் இவர் சாரதியாக பணிபுரிந்தவேளை முகாமிற்கான எரிபொருள் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் எரிபொருள் பொறுப்பினை வகித்த காலப்பகுதியில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த சில தனியார் எரிபொருள் களஞ்சியங்களுக்கு களவாக எரிபொருட்களை முகாமிலிருந்து திருடி விற்றதை கையும் களவுமாக பிடித்து எமது கண்காணிப்புப் போராளிகள் காந்தியிடம் ஒப்படைத்திருந்தார்கள். இது நடந்தது 2006ம் ஆண்டு இறுதிப்பகுதியில்.இந்த களவிற்கான தண்டனையாக காந்தி அவர்களால் முகமாலை முன்னரங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆனால் இவர் இரட்டை முகவராக பணிபுரிந்துவருவதை எம்மால் உடனடியாக உறுதிப்படுத்தமுடியாமல் இருந்தபொளுது இவர்தொடர்பான தகவல் ஒன்று முகமாலை களமுனையில் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்றது. அதுதான் இவரின் இரட்டைவேடத்தை எமக்கு உடைத்தது' அது என்னவெனில் முன்னரங்கிலிருந்து தொலைத்தொடர்பு வளியாக எமது தகவல்களை இராணுவத்திற்கு வளங்குகிறார் என்பதே அத்தகவல்.
இதன்பின் இவர் உடனடியாக எம்மால் கைதுசெய்யப்பட்டு வள்ளிபுனம் அல்பா5-Alpha5 எனும் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கு வைத்து இவர் காந்தி அவர்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தார். பின்னர் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியான 2008 நடுப்பகுதியில் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் தொடர்ந்து எம்மால் கண்காணிக்கப்பட்டும் வந்தார்.
மேலும் போர் உக்கிரம் பெற்றது. இவர் வசித்துவந்த றெட்பானா விஸ்வமடுவை இராணுவம் கைப்பற்றியபொழுது இவர் அங்கு இராணுவத்துடன் இணைந்துகொண்டார்' அதன்பின் 17-05-2009 காலை நாம் இவரை முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குள் கண்டோம். இவர் அங்கு சிவில் உடையில் நின்று எம்மை காட்டிக்கொடுத்ததுடன் இன்றும் இவர் இராணுவத்துடன்தான் சேர்ந்து இயங்கிவருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகவே எம் அன்பார்ந்த தமிழீழ மக்களே...

தமிழ்வின் இணையதளத்தினர் பிரசுரித்த பொய்யான செய்தியை எவரும் நம்பவேண்டாம்.அத்தோடு ஜனநாயகப் போராளிகளின் வரவினை யார் விரும்புவார்கள் யார் விரும்பமாட்டார்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்' இன்று த. தே.கூட்டமைப்பின் கையாலாகாத் தனத்தினாலும் அவர்களின் சோரம்போகும் குணத்தினாலுமே இன்று கூட்டமைப்பில் நம்பிக்கையிழந்து எமது முன்னைநாள் போராளிகள் நேரடியாக களமிறங்கியுள்ளார்கள்.
இவர்களின் வரவினை எதிர்பவர்கள் இன்று நீங்கள் அறிந்தவரை எதிரிகளும் எமது முன்னைநாள் துரோகிகளுமே அன்றி வேறு யாருமல்ல. மேலும் ஜனநாயகப்போராளிகளாகிய இவர்கள் உண்மையான போராளிகள் என்பதை எதிரிகளும் துரோகிகளும் தமது பொய்யான அறிக்கைகள் ஊடாக உங்களுக்கு நிரூபித்தும் வருகின்றார்கள். ஆகவே இதன் உண்மைத்தன்மையை விளங்கி அவர்களின் வெற்றியை உறுதிசெய்து உங்கள் பிள்ளைகளின் உண்மையான பாதுகாப்பினை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி

உங்கள் காவலர்களான....
பொட்டுவின் சேனை
தமிழீழம்.

06 ஆகஸ்ட் 2015

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து இடையூறு!

தேர்தல்விதி முறைகளைமீறினாரென சாவகச்சேரி காவல்துறையினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சாவகச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நீதிமன்றினில் ஆஜராகியிருந்தார்.
கடந்த மாதம் 31ம் திகதி சாவகச்சேரி பகுதியினில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் பிரச்சாரத்தினில் ஈடுபட்டடிடிருந்த வேளை அவர்களில் சிலரை பொலிசார்  கைது செய்து தடுத்து வைத்திருந்ததுடன் கடுமையாக அச்சுறுத்தியுமிருந்தனர்.
அவர்கள் தேர்தல் விதி முறைகளை மீறினரென சாவகச்சேரி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்றம்  அழைப்பாணை விடுத்திருந்தது.அதேவேளை பிரச்சாரக் குழுவுடன் சென்ற யாழ்,மாவட்ட வேட்பாளர் திருநாவுக்கரசு சிவகுமாரனுக்கும் அழைப்பாணை அனுப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக இன்று காலை இருவரும் நீதிமன்றிற்கு சமூகமளித்தனர். அவ்வழக்கு பதில் நீதவான் கணபதிப்பிள்ளையால் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையினில் அரசு திட்டமிட்டு தமது பிரச்சாரங்களை குழப்பிவருவதாக முன்னணி குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

18 ஜூலை 2015

கீரிமலை கடற்கரையில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையார்!

யாழ்,கீரிமலை கடற்கரையில் பிள்ளையார் சிலையொன்று திடீரென தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளையார் சிலையை காண மக்கள் படையெடுத்து வருவதாகவும் மேலும் அறிய வருகிறது.இது கடந்த சில தினங்களின் முன்னர் தென்பட்டதாகவும்,கடலில் மிதந்து வந்ததெனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.ஆனாலும் இவ்வுருவச்சிலை அமர்ந்திருக்கும் விதமும் அதன் எடையும் ஆச்சரியமூட்டுவதாகவும்  சொல்லப்படுகிறது.இது கடவுளின் அதிசயம் என மக்களால் போற்றப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

16 ஜூலை 2015

சமயத் தலைவர்களிடம் த.தே.ம.முன்னணியினர் ஆசீர்வாதம் பெற்றனர்!

பாராளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பிப்பதற்கு முன்பதாக மத பெரியார்களிடம் ஆசீர்வாதத்தினை பெற்றனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன்(சட்டத்தரணி) திருமதி பத்மினி சிதம்பரநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவரும் விரிவுரையாளருமான அமிர்தலிங்கம் இராசகுமாரன், குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழக செயலாளர் தேவதாசன் சுதர்சன், இராமநாதன் மகளீர் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி ஆனந்தி, யாழ் பல்கலைக்கழக ஊழியர் வீரசிங்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் செல்வி சின்னமணி கோகிலவாணி, இந்துக் கல்லூரியின் ஆசிரியர் சங்க முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு சிவகுமாரன் ஆகியோர் இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும், நல்லை ஆதீன குருமகா சன்நிதானம் அவர்களிடமும், சமூக சேவையாளரும் இந்து மத பெரியாருமான ஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டனர்.

13 ஜூலை 2015

தமிழ் வாக்குகள் எந்தக் கட்சிக்கு?

இம்முறை நடைபெற இருக்கும் இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு,கிழக்கு பகுதிகளிலும் பெரும் அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.பொதுவாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என நோக்கர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.இந்த தேர்தல் களத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி இரண்டுக்கும் இடையில்தான் பெரும் போட்டி நிலவும் என மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
சமூக வலைத்தளங்களிலும் இவர்களுக்கு ஆதரவான பதிவுகளையே பெரிதும் காண முடிகிறது.வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் எப்பவுமே கொள்கைகளுடன் ஒன்றிப்போனவர்கள்,கொள்கைகளில் இருந்து பின்வாங்கி பம்மாத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகளை தூக்கி வீச அவர்களுக்கு இப்பொழுது சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அந்த வகையிலே சிங்கக்கொடியுடன் சம்பந்தமானவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பது எதிர்பார்ப்பான ஒன்றாகவே இருக்கிறது.

09 ஜூலை 2015

திருமலையில் தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள்!

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.
இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணிகளின் போது இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி மக்கெய்ஸர் விளையாட்டு மைதானம் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த பகுதியில் சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டப்பகுதியில் ஏற்கனவே நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு காவல்துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
திருகோணமலை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜா முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை அகழ்வுப்பணிகள் ஆரம்பமானபோது சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று புதன்கிழமை மூன்றாவதுநாளாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றபோது நான்கு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இந்த மனித எச்சங்கள் அனைத்தையும் சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்குமாறு காவல்துறையினரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமையும் இந்த அகழ்வுப் பணிகள் தொடரும் என்று அதிகாரிகள் கூறினர் என தெரிவிக்கப்படுகிறது.

03 ஜூலை 2015

உருவாகியது ஜனநாயகப் போராளிகள் கட்சி!

முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய , ஆற்றவேண்டிய , ஜனநாயகப் பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட போராளிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்தனர்.
ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் அறப்போர் நிகழ்த்தி, தன்னையே ஆகுதியாக்கிய தியாகி திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த நல்லூர் கோயில் வீதியில், இன்று நண்பகல் ஒன்றுகூடி தியானம் அனுஷ்டித்த அவர்கள், அதற்கு முன்னதாகத் தாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கியப்பட்டுச் செயற்படுவது என்று அங்கு பிரதிக்ஞையும் செய்துகொண்டனர்.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
முன்னாள் போராளிகள், அவர்களின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரை ஒன்றிணைத்து ஜனநாயகப் போராளிகள் (Crusaders for Democracy) கட்சி என்ற அமைப்பில் அரசியல் செயற்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபடுவது. ஈடுபாடுடைய பேராளிகளையும் ஆதரவாளர்களையும் ஐக்கியப்படுத்தி ஒரு புதிய கட்டுறுதியான அமைப்பை ஏற்படுத்துவது. அதுவரை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக என்.வித்தியாதரன் செயற்படுவார்.
தமிழ்பேசும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களை வென்றெடுப்பதற்காக அதிர்வுள்ள வகையில் செயற்படும் ஒரு புதிய ஜனநாயக அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை நோக்கமாகக் கொண்டு முன்னாள் போராளிகளும் அவர்களுக்கு உரித்தான பங்களிப்பை இவ்விடயத்தில் வழங்குவதற்கு வகை செய்யும் விதத்தில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்டங்கள் தோறும் தமது வேட்பாளர் பட்டியல்களில் விடுதலைப் புலிகளில் இயங்கிய தலா இரு முன்னாள் போராளிகளையாவது இணைத்துக்கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொள்வது.
தமிழர்களின் உரிமைகளை ஈட்டுவதற்கான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் ஈடுபட்டு, ஒரு முறையான அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்கள் மத்தியில் நிலைநிறுத்துவது. கடந்த கால இழப்புகளினால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வாதார வளங்களைக் கட்டி எழுப்பி, புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை உத்வேகத்துடன் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் வலியை நன்கு பட்டறிந்து உணர்ந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் விரைந்த விடுதலைக்கு அழுத்தம் தந்து அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பது.நீதி, நியாயமான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்த சுத்தியுடன் ஈடுபடுவதன் மூலம், தமிழ்ப்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கையின் நியாயமான அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பலமான இணைப்புப் பாலமாக விளங்கத்தக்க வகையில் வினைத்திறனுடனும் செயற்படுவது.இத்தீர்மானங்களுடன், பொதுத் தேர்தலை ஒட்டி மேற்கொண்டு எடுக்கவேண்டிய தந்திரோபாய உத்திகள் குறித்தும் ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு,
ஜனநாயகப் போராளிகள் கட்சி.

28 ஜூன் 2015

ஐ.நா.போர்க்குற்ற அறிக்கையில் மகிந்த சகோதரர்கள்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம் என்று ஐ.நா வட்டாரங்களை மேற்கோள்காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை தொடர்பான விசாரணைகளில், குறித்த நபர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் மேலும் ஐந்து இராணுவ ஜெனரல்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவர்கள் மீது கட்டளையிடல், கடத்தல், மனித படுகொலை, வழிநடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்மாக ஒப்படைக்கப்பட உள்ளது. அத்துடன் இந்த அறிக்கை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளின் போது வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 ஜூன் 2015

வித்தியா கொலை தடையங்களை அழிக்க சிரமதானம்!துவாரகேஸ்வரன் குற்றச்சாட்டு!

வித்தியா படுகொலை சூத்திரதாரிகளை காப்பாற்ற திட்டமிட்ட சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஐ.தே.கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சட்டத்தரணி தவராசா ஆகியோர் இவ்விடயத்தினில் பின்னின்று செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வித்தியா படுகொலை தொடர்பிலான சான்றாதரங்களை அழிப்பதற்கு சிரமதானமென்ற பேரினில் புங்குடுதீவினில் கனரக வாகனங்கள் மூலம் தடயங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.வித்தியாவினது உறவுகளது எதிர்ப்பினை தாண்டி அவ்வாறு தடயங்கள் அகற்றப்பட்டுள்ளன.
வித்தியா படுகொலை வழக்கினை குழப்பியடிக்கவும் குற்றவாளிகளை தப்ப வைக்கவும் சுவிஸிலிருந்து பெருமளவு பணம் கைமாற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆவணங்கள் எனக்கு கிட்டியுள்ளது.அவை விரைவினில் அம்பலப்படுத்தப்படும்.
சட்டத்தரணி தவராசா பொறுப்பாக கடமையாற்றாமையினாலேயே அரச சட்டத்தரணிகளாக மூவரை கொழும்பிலிருந்து தருவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அவர்களுள் ஒருவர் எனது சகோதரன் மகேஸ்வரன் படுகொலை சூத்திரதாரிக்கு மரணதண்டனை வாங்கிக்கொடுத்த திறமையாளன்.
வித்தியா கொலை சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.மக்களது நிலைப்பாடும் அவ்வாறாகத்தான் உள்ளது.
குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இத்தகைய கும்பல்கள் செய்யும் முயற்சி வெற்றி அளிக்காதெனவும் அதற்கு மக்கள் அனுமதிக்கப்போவதில்லையெனவும் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசியல் நோக்கமேதுமின்றி வித்தியாவின் படுகொலையாளிகள்; தண்டிக்கப்படவேண்டுமெனவும் அதற்காக குரல் கொடுத்து சிறை சென்றிருந்த 150 பேரிற்கும் பொறுப்பாக வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

01 ஜூன் 2015

ஓமந்தையில் சிறுமி மர்மமான முறையில் மரணம்!

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர்
பெண்கள் சிறுமியருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலியல் சித்திரவதைகள் என்பவற்றுக்கு முடிவுகட்டி, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாடளாவிய ரீதியில் குரல் கொடுக்கப்பட்டு வரும் வேளையில், ஓமந்தை பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தனது கொட்டில் வீட்டிற்குள் கழுத்தில் சுருக்கிட்டு மர்மமான முறையில் இறந்த நிலையில் திங்களன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த சிறுமியின் தாய் தந்தையர் வவுனியா நகருக்கு முக்கிய அலுவல் காரணமாகச் சென்றிருந்தபோது தனிமையில் அந்த சிறுமி வீட்டில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லாதிருந்த இந்தச் சிறுமியே, தனது தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிந்தபோது சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்றிருந்தார். உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி:பிபிசி தமிழோசை

23 மே 2015

கஜேந்திரன் விபத்தில் படுகாயம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை வீதியின் கைதடி வீதி-கோப்பாய் சந்தியில் இந்தியா பணியாளர் ஒருவர் செலுத்தி வந்த பாரம் தூக்கி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று மாலை 4,15அளவில் இவ்விபத்து நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளபோதும் அவரது மோட்டார் சைக்கிள் முற்றாக நசியுண்டுள்ளது.
இது திட்டமிட்ட கொலை முயற்சியாவென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேட முயன்ற மஹிந்த! அமைச்சர்கள் கண்டனம்.


புங்குடுதீவில் மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் என அரச அமைச்சர்கள்  கண்டனம் வெளியிட்டுள்ளனர்.  
மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் என அரச அமைச்சர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்த்தன மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா ஆகிய மூவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாட்டை இனவாதத்தை தூண்டி மீண்டுமாக பதவியைப் பிடிப்பதற்கான வெட்கக்கேடான செயற்பாடெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்த ஈனத்தனமான செயற்பாட்டின் மூலமாக மஹிந்த ராஜபக்ஸ தனது மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். தமது குடும்பத்தைச் சேர்ந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவருக்கு ஏற்பட்ட பேரவலத்தையடுத்து கோபங்கொண்ட மக்கள் இயல்பாக வெளிப்படுத்திய உணர்ச்சிவெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.

20 மே 2015

இன்று யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால்!போக்குவரத்து முடக்கம்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை தடுக்கும் விதத்தில் நாற்சந்தியில் ரயர்கள் கொளுத்தப்பட்டன. இதனால் குறைந்தளவு மக்களே பயணித்த போதும் அவர்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது. காலையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை இன்று யாழ்ப்பாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்காது எனத் தெரியவருகிறது. தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

12 மே 2015

மண்டைதீவில் மக்கள் காணிகளை கையகப்படுத்தியது கடற்படை!

மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 18 ஏக்கர் தோட்டக் காணியும் 7 ஏக்கர் கடற்கரை காணியுமே அவ்வாறு கையகப்படுத்தியுள்ளனர்.
காணி கையகப்படுத்தப்பட்டதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களால் வேலணை பிரதேச செயலாளருக்கு மறுப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடற்படையினர் தொடர்ந்து தமது தோட்ட காணியினை கையகப்படுத்தி வைத்திருப்பதனால் தோட்டம் செய்ய முடியாது தாம் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி வறுமையில் வாடுவதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடற்படையினரிடம் இருந்து தமது தோட்டகாணியினசம்பந்தப்பட்ட தரப்பினர் மீட்டு தந்து தமது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

21 ஏப்ரல் 2015

மதுவருந்தி கூத்தடித்த மகிந்த ஆதரவாளர்கள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று இரவு உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மது அருந்தி கூத்தடித்ததாக அமைச்சர் கூறிய புகாரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஊழல் மோசடி தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபாய ஆகியோருக்கு அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கை நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்திய ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் 'சரக்கடித்ததாக' சர்ச்சை!! இதேபோல் இலங்கை நாடாளுமன்றத்திலும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் சம்மன் அனுப்பியதற்கு எதிராக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று இலங்கை நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தையும் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மது அருந்திவிட்டு கூத்தடித்தனர் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டி இருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்றும் அவர்கள் அமளியில் ஈடுபட நாடாளுமன்ற நடவடிக்கைகள் வரும் 27-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

08 ஏப்ரல் 2015

கமலினி செல்வராசன் காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி, தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளருமான கமலினி செல்வராஜன் நேற்றைய தினம் காலமானார்.இவர் காலஞ்சென்ற பிரபல வானொலி புகழ் கவிஞர் சில்லையூர் செல்வராசனின்துணைவியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

06 ஏப்ரல் 2015

நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்! நல்லூரில் பேரணி,அரசியல்வாதிகளுக்குத் தடை!

‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தொனிப் பொருளில் யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை(07.04.2015) மாபெரும் பேரணியொன்று நடைபெறவுள்ளது.
தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம், விதை குழுமம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து குறித்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. இது மக்களினதும், மாணவர்களினதும் போராட்டம். அரசியல் வாதிகளுக்குத் தடை என ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
குறித்த பேரணி தொடர்பாக மேற்படி அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வலிகாமம் பகுதியின் நிலத்தடி நீரில் ஏற்பட்டிருக்கும் மாசடைதல் தொடர்பில் பல்வேறு குழப்பகரமான ஊகங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. வடக்கு மாகாண சபை வெளியிட்ட 40 கிணறுகளைக் கருத்திற் கொண்ட ஆய்வு ரீதியான பரிசோதனை முடிவு மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தெளிவின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் மக்களால் எழுப்பப்பட்ட சாதாரண கேள்வியான இந்த நீரைக் குடிக்கலாமா? கூடாதா? என்ற கேள்விக்குப் பொறுப்பானவர்களால் பதில் அளிக்கப்படவில்லை. இந்த அடிப்படையானதும்.
எளிமையானதுமான கேள்விக்கான பதிலை வடக்கு மாகாண சபையில் நீருக்கான விசேட செயலணிpயின் தலைமையில் வழங்க வேண்டும். தலைமை பதில் அளிக்காதவிடத்து வடக்கு முதலமைச்சர் அல்லது ஆளுநர்,அரசாங்க அதிபர் ஆகியோர் இதற்கான பதிலைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த மாசடைதல் தொடர்பில் பொதுமக்களாகிய நாம் தெளிவின்றி இருக்கிறோம்.ஆகவே மக்களின் நம்பிக்கையையும், காத்திருப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு வாராவாரம் இந்த மாசடைதல் தொடர்பில் எந்த விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் எந்த எந்த இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது போன்ற தரவுகள் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
மக்களாகிய நாம் பல்வேறு தரப்புக்களையும்0 உதவிக்காக அணகினோம்.எமது குரலை வெளிப்படுத்தக் கோரினோம். ஆனால் குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகள் கூடக் கிடைக்கவில்லை. ஆகவே, விசேட செயலணியின் நிரந்தரத் தீர்வை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர், ஆளுநர் மற்றம் அரசாங்க அதிபரின் கூட்டுத் தலைமை மற்றும் கூட்டுப் பொறுப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும். இதுவே, செயல்திறன் மிக்க அணியாக இருக்கும் என்பது மக்களின் கருத்து.
மேற்குறித்த அம்சங்களை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவைத் தெரிவித்து மாபெரும் பேரணி நாளை செவ்வாய்க்கிழமை காலை 08 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்துக் கோயில் வழியாகச் சென்று முதலமைச்சர், அரசாங்க அதிபர் மற்றும் உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதி ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.
இது ஒரு கடைசிப் போராட்டமாக இருக்கும். இதன் போது மாணவர்களும்,பொதுமக்களும் ‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ என்ற கோஷத்துடன் இணைக்கப்படுவர். நாம் பொறுமையை இழந்து விட்டோம்.
நாம் எமது வாழ்வாதாரப் பிரச்சினை பற்றிப் பேசப் போகிறோம்.தமது இயற்கைக்காகவும்,தமது எதிர்காலச் சந்ததிக்காகவும் தமது வாழ்நாளில் ஒரு நாளைக் கொடுக்கத் தயாராகும் ஒவ்வொரு மனிதனையும் நாங்கள் நல்லூர் முன்றலில் சந்திக்க விரும்புகிறோம்.
முற்று முழுதான அரசியல் கலப்பற்ற பேரணியாக இது அமையும்.எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாது. சுருக்கமாகச் சொன்னால் இது மக்களதும், மாணவர்களதும் போராட்டம்.
அரசியல் வாதிகளுக்குத் தடை. இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்புக்களும்,பொது அமைப்புக்களும் கலந்து கொள்ளவுள்ளன.
இன மத பேதமற்ற ஒரு பேரணியாகவும் இது அமையும். நீருக்காகவும் எமது எதிர்காலத்திற்காகவும் ஒன்று திரள்வோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 மார்ச் 2015

மைத்திரிபாலவின் சகோதரரின் இறுதிச்சடங்கு திங்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பரொருவரினால் கடந்த 26ஆம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான இவர், இன்று சனிக்கிழமை காலை மரணமடைந்தார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
1972ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி, பொலன்னறுவையில் பிறந்த இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இளைய சகோதரராவார். பொலன்னறுவை லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், கம்பஹா உடபில மகா வித்தியாலத்தில் சாதாரண தரம் வரையிலும் பயின்றார். அத்துடன் கம்பஹா கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை நொபாவௌ மகா வித்தியாலயம் ஆகியவற்றியில் உயர் தரம் பயின்றுள்ளார்.

27 மார்ச் 2015

முதல்வருக்கு அழைப்பில்லாததால் ரணிலின் அழைப்பை சிறீதரன் நிராகரிப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று பங்குகொண்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோர் பங்கேற்ற போதிலும், எஸ்.ஶ்ரீதரன் எம்.பி. அதனைப் பகிஷ்கரித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன்” என்று கூட்டமைப்பின் சிறிதரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இருப்பினும், அந்நிகழ்வில், சிறிதரன் எம்.பி கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்து கூறிய அவர், “பிரதமர் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்வுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் நானும் அந்நிகழ்வுகளுக்கு செல்லவில்லை” என்றார்.

15 மார்ச் 2015

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோரைக் கொன்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்! - மன்னார் ஆயர்.

இறுதிக்கட்டப் போரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித்தேவன், நடேசன் உள்ளிட்டவர்களைச் மஹிந்த அரசு சுட்டுக் கொன்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட அதிவணக்கத்திற்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையின் ‘நோ பயர் சோன்’ (யுத்த சூனிய வலயம்) என்ற பெயரில் சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பிலும், அதற்கு இலங்கையில் தடைவிதிக்கப்படலாம் என்று பரவலான செய்திகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், நடந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டாலேயே நல்லிணக்கம் உருவாகும். உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

13 மார்ச் 2015

மோடி யாழ்.வரும் போது பேரணி நடத்த ஏற்பாடு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில், யாழ்.நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் அமைதிப் பேரணி ஆகியன இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளளன. மக்களின் மீள்குடியேற்றம், காணாமல் போனோர் மற்றும் மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளின் துரித தீர்வுக்கு உதவுமாறு இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
வடக்கைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த அமைதிப் பேரணிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. காலை 9.30 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடுவோர், அங்கு கவனயீர்பு போராட்டத்தை ஆரம்பிப்பர். பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணியாக இந்தியத் துணைத் தூதரகத்துக்குச் செல்லவுள்ளனர். அங்கு இந்தியப்பிரதமர் மோடிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட உள்ளது.
வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, வலி.வடக்கு பிரஜைகள் குழு, மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், காணாமல் போனோருக்கான அமைப்புக்கள் ஆகியன போராட்டத்திற்கான முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளன.
மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது நலன் விரும்பிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

11 மார்ச் 2015

'நோ பயர் ஷோன்'ஆவணப்படத்தை இலங்கையில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்!

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய 'நோ பயர் ஷோன்' ஆவணப் படத்தை இலங்கையில் ஒளிபரப்பு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால அனுமதிக்க வேண்டும் என அதன் தயாரிப்பாளர் கெலும் மக்ரே கேட்டுக் கொண்டுள்ளார். சிங்கள மொழியில் பிரயாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம் பிரிட்டன் நாடாளுமன்றில் நேற்று திரையிடப்பட்டது.
இதனபோதே கெலும் மக்ரே மேற்படி கோரிக்கையை விடுத்தார். இதன்போது, சிங்கள மக்கள் உண்மைகளை அறிந்து விடக் கூடாது எனக் குற்றங்களை இழைத்தோர் எண்ணுகின்றனர். எனவே இந்த ஆவணப் படத்தை இலங்கையின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதிக்கக் கூடாது. இந்த ஆவணப்படத்தின் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

08 மார்ச் 2015

கூட்டமைப்பு சோரம் போய் விட்டது:மக்கள் பாடம் புகட்டுவர்!

பிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றி மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள் மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஆ.ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று சனிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பல உயிர் தியாகங்களையும், இழப்புக்களையும் சந்தித்த தமிழ் இனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைகுனிய வைத்துள்ளது. இது வரை காலமும் தமிழ் மக்கள் மத்தியில்; தமிழ் தேசியம், வடகிழக்கு இணைப்பு என்ற கோசம் எழுப்பியவர்கள் இன்று மாற்றானிடம் மண்டியிட்டு அமைச்சு பதவிகளை பிச்சை எடுத்துள்ளார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதிக்கு பூரண ஆதரவினை தெரிவித்து அவர் வெற்றியும் பெற்று விட்டார் இன்று வரை எமது தமிழ் சமுகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுன்வரவில்லை, இன்று பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் புலிகள் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரு சிலரையேனும் விடுவிக்கக்கோரி ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை.வடகிழக்கில் யுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான விதவைகள் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்து கொடுக்கவில்லை
இவற்றையெல்லாம் மறந்து தன்மானம் இழந்து எமது தமிழ் சமூகத்தின் சுய கௌரவத்தை கொச்சைப்படுத்தி இன்று அற்ப சலுகைகளுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சோரம் போய் விட்டார்கள். இதற்காகத்தான எமது தமிழ் சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.
இந்த மாகாணசபை முறைமை தமிழ் சமூகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்தையும் இழந்து தவிக்கும் எமது சமூகத்திற்கு மாகாணசபை ஆட்சியில் தலைமையை கைப்பற்றி முழுமையான சேவையை செய்வதை விடுத்து கிழக்கு மாகாணசபையில் அதிக தமிழ் பிரதிநிதிகளை கொண்டிருந்தும் அதிக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றும் இன்று சோரம் போய் பிச்சைப்பாத்திரம் ஏந்தி அமைச்சு பதவிகளை பெற்றிருக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் எமது உரிமைகள் வெல்லப்படும்வரை உள்ளுராட்சி தேர்தலையே புறக்கணிப்போம் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, புலிகள் மறைந்த பின் தங்கள் போலியான முகமுடியை அகற்றி உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாகாணசபை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவில் தான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்கு? இது தானா? தலைமைத்துவம். இன்று ஏனைய கட்சிகளுடன் அமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைபின் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் மேடைகளில் எதை பேசுகிறார்கள் தாங்கள் மட்டும் தான் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் ஏனைய கட்சிகளுக்கு முடியாது என்று தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வெரு தமிழருக்கும் உரிமையுண்டு தற்போது தமிழ் தேசியக் கூட்மைப்புக்குள் கொள்கை இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
இன்று இலட்சியம் கொள்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு மானம் இழந்து மரியாதை இழந்து சுய கௌரவம் இழந்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுவததை இனியும் தமிழ் சமுகம் அனுமதியாது . தமிழ் இனத்தின் உரிமைகளை உரிய முறையில் வென்றெடுக்காமல் பிச்சைக்காரன் தனது ஆராத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள்; தமிழ் சமுகம் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு ஓர் சரியான பாடத்தை எதிர்காலத்தில் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை நெஞ்சம் பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட அரசியல் வாதிகளை நினைக்கும் போது.

26 பிப்ரவரி 2015

விஜய் டி.விக்கு தடை-ஐரோப்பா தமிழர்கள் அதிரடி!


Bild in Originalgröße anzeigenவிஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் கவணத்தை ஈர்த்தது. காரணம், ஈழத்து சிறுமியான ஜெஸ்ஸிகா என்பவர் இந்த நிகழ்சியில் போட்டியிட்டார். இந்நிலையில், இந்த நிகழ்சியின் கடைசி கட்டம் சென்னையில் நடந்தது. இது உலகம் முழுவதும், நேரடியாக ஒளிபரப்பானது. வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களை, மக்களே SMS மூலம் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்.இதற்காக, உலகத் தமிழர்களும், ஈழத்து சிறுமிக்காக வெளிநாடுகளில் இருந்து வாக்களித்தனர். இந்த SMSகள் மூலம் மட்டுமே விஜய் டிவிக்கு 20 கோடி ரூபாய் வரை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இறுதிச்சுற்றில், வெற்றியாளர்களை தேர்தெடுத்ததில் விஜய் டி.வி., முறைகேடு செய்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

SMS வாக்குகள் அதிகம் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்காமல், தங்கள் இஷ்டத்திற்கு விஜய் டி.வி., வெற்றியாளரை அறிவித்துள்ளதாக ஐரோப்பிய தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விஜய் டி.வி., நிர்வாகம் மீதும், இறுதிச் சுற்றுக்கு வருகை தந்த, சிறப்பு விருந்தினர்களான, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப் போவதாக, அவர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கை கோடிகளைத் தாண்டியதாகக் கூறிய விஜய் டி.வி., வக்கு எண்ணிக்கையின் முழு விபரத்தை வெளியிடாதது ஏன் என்றும் ஐரோப்பிய தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், விஜய் டி.வி., முன்கூட்டியே முடிவு செய்து, இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், பார்வையாளர்களை கவருவதற்காகவும், பணம் சம்பாதிக்கவுமே இத்தகைய SMS சூழ்ச்சமங்களை கையாண்டுள்ளதாகவும் இலங்கையைச் சார்ந்த இணையங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதனடிப்படையில், விஜய் டி.வி., மக்களை அவமதித்ததாகவும், ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி நடைமுறை விதிகளை மீறியதாகவும், நிகழ்ச்சியில் குளறுபடி செய்ததாகவும் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து விஜய் டி.வி., மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக ஐரோப்பா வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குனர் உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் தாம் வலியுறுத்தப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து தீர்ப்பு மனுதாரர் தரப்பில் அமைந்தால், நிகழ்ச்சியின் நடுவர்கள், சிறப்பு விருந்தினர்களான அனுருத், தனுஷ், சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குநர் என அனைவருக்கும், ஐரோப்பிய சட்டப்படி, அந்நாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்படலாம். அது மட்டுமல்லாது, விஜய் டி.வி.,யும் ஐரோபாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

18 பிப்ரவரி 2015

ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுங்கள் என கனிமொழி சொன்னார்-அனந்தி

கருணாநிதி-கனிமொழி
“ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுங்கள் உங்களை நாங்கள் பாதுகாப்போம் என்று கனிமொழி, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் என் கணவரிடம் சொன்னார் ” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அனந்தி சசிதரன் ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு துணைப் பொறுப்பாளராகக் கடமையாற்றிய எழிலனின் மனைவியான அனந்தி இந்தப் பேட்டியில் முக்கிய விடயங்கள் பலவற்றை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.
“போர் மிகவும் மோசமாக நடைபெற்று இராணுவத்தின் குண்டுவீச்சுக்களால் பெருந்தொகையான மக்கள் குடும்பம் குடும்பமாக செத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மே 16 ஆம் திகதி இரவு எனது கணவர் தொலைபேசியில் பேசினார். அவருடன் பேசியது கனிமொழி. முன்னாள் முதலமைச்சர் கருணாநதியின் மகள்.
நீங்கள் சரணடையுங்கள். உங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். அது தொடர்பாக நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றோம் என கனிமொழி தனது தந்தையின் சார்பில் சொன்னார். இவற்றை நம்பி சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் இன்று வரை எங்கே என்பது தெரியவில்லை” எனவும் அனந்தி தெரிவித்தார்.

09 பிப்ரவரி 2015

சம்பந்தன் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றால் மரியாதை!

சம்பந்தனின் நீண்ட நாள் போற்றக் கூடிய அரசியல் சேவையிலிருந்து ஓய்வுபெற்று, அடுத்த இளம் தலைமுறைக்கு தம்மையை விட்டுக் கொடுப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும், சம்பந்தர் தமிழ்ச் சரித்திரத்தில் வாழ்நாள் தலைவராக இல்லாது, தமிழ் இனத்திற்காக தன்னை அர்ப்பணித்தார் என்று தமிழ்ச் சரித்திரம் கூறும்.
சரித்திரத்தை அமைத்துவிட்ட அமெரிக்காவின் முதல் தலைவர் ஜோர்ச் வாசிங்டன் 5 வருடம் அரசியலில் பணியாற்றிவிட்டு மீண்டும் 65 வயதில் தனது விவாசாயத்தினை செய்வதற்கு வேர்யினியாவுக்கு சென்றுவிட்டார்.
தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா 5வருடம் தலைவராய் பணியாற்றிவிட்டு மீண்டும் தனது வீடு சென்று ஓய்வு பெற்றார்.
சம்பந்தர் அவர்கள் 81 வயதினை அடைகின்றார். இந்த யூன் மாதத்துடன் அவரது எம். பி பதவி முடிவு பெறுகின்றது. இந்நிலையில் வடகிழக்கில் உள்ள ஒரு இளம் தலைவரை தேர்ந்து எடுப்பதற்கு இது ஒரு நல்ல தருணம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த புதிய தலைவர் சட்டதடதரணியாக இருக்கக் கூடாது. ஏனெனில் சட்டத்தரணியானவர் எங்கள் போராட்டத்தினை நீதித்துறையோடு இணைப்பதை தவிர போராடக்கூடியவர்கள் அல்லர். அத்துடன் எங்கள் புதிய தலைவர் துணிந்தவராகவும் நேர்மையுள்ளவராகவும், அறிவுள்ளவராகவும். குறிப்பாக போராட்டக் குணம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

(ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு)

14 ஜனவரி 2015

"என்னை அழித்தது நீங்கதாண்டா"கோத்தாவிடம் சீறினார் மகிந்த!

என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயவிடமும் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
தோ்தலில் தோல்வியடைந்த பின்னா் தனது சொந்த இடத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு வந்து தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்தநாள் காலையில் பிள்ளைகளுடனும் தனது சகோதரா்களுடனும் கோபதாண்டவம் ஆடியதாகத் தெரியவருகின்றது.
தனது 45 வருட அரசியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும், சகோதரா்களாலும் அழிந்துவிட்டது என மகி்ந்த கத்தியுள்ளார்.
என்னை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறாகள் என கோத்தபாய தனது அண்ணணுக்கு தொலைபேசியில் எடுத்து கூறிய போதே மகிந்த இவ்வாறு கத்தியுள்ளார்.
எனக்கு வாய்த்த சகோதரங்களும் அப்படி, பிள்ளைகளும் அப்படி, நான் என்ன செய்வது என மகிந்த துக்கத்தில் பிதற்றியதாக மகி்ந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய வட்டாரங்களால் செய்தி கசிந்துள்ளது.

10 ஜனவரி 2015

புதிய பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்!

கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா! புதிய பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்!பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு செயலாளராக பசநாயக்கவை அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து அவரால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர்.இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முதலொல் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாயவும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு செயலராக சுற்றுச் சூழல் அமைச்சக செயலர் பசநாயக்கவை நியமித்து அதிபர் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அதிபரின் செயலாளராக பொதுநிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் அபயகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவைத்தான் பாதுகாப்பு செயலராக நியமிக்க மைத்ரிபால் சிறிசேன முடிவு செய்திருந்தாராம். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பசநாயக்கவை மைத்ரிபால நியமித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

09 ஜனவரி 2015

ஊருக்கு புறப்பட்டார் மகிந்த!

பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு இன்னும் சற்று நேரத்தில் வந்து சேருவார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக கொழும்பில் இதுவரை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த அவரது உடைகள் மற்றும் பாவனைப் பொருட்கள் அவசர அவசரமாக அங்கிருந்து பொதி செய்யப்பட்டு மெதமுலன இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. Bin Bag ஆகப் பயன்படுத்தப்படும் கறுப்பு பைகளிலே அவை அவசர அவசரமாகச் சேகரித்துக் கட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றி மெதமுலனவுக்கு அனுப்பப்பட்டன. அவை சற்று முன்னர் மெதமுலனவில் உள்ள ராஜபக்‌ஷவின் குடும்ப இல்லத்தில் இறக்கப்பட்டு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன. இதுவரை காலமும் ஜனாதிபதி என்ற முறையில் கொழும்பு அலரி மாளிகை இல்லத்துக்கு அருகில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலமும் மெதமுலனவுக்குச் சென்று வந்த மஹிந்த ராஜபக்‌ஷ தம்பதியினர் இன்று தமது காரில் கொழும்பிலிருந்து ஊருக்குப் புறப்பட்டனர்.ஜனாதிபதிக்குரிய பாதுகாப்புத் தொடரணியை அவர் இன்னும் மீளக் கையளிக்காமையால் அந்த வாகனத் தொடரணியிலேயே தற்போது அவர் ஊருக்குப் புறப்பட்டார். தம்முடைய தரப்பில் பயன்படுத்தப்படும் மேலதிக வாகனங்களையும் அவர் விரைவில் புதிய அரசிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மெதமுலனவில் ராஜபக்‌ஷ தரப்பினரை வரவேற்பதற்கு சிறிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

01 ஜனவரி 2015

குமார் குணரத்தினம் மீண்டும் சிறீலங்கா வந்தார்!

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கை வந்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டிருந்த குமார் குணரட்னத்திற்கான அபராத பணம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செலுத்தப்பட்ட நிலையிலேயே அவர் இலங்கை வர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு 12.15 அளவில் அவர் நாடு திரும்பியதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.முன்னாள் ஜேவிபி உறுப்பினரான இவர் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.