25 செப்டம்பர் 2015

மன்னார் ஆயரின் உடல் நிலையில் முன்னேற்றம்!

மன்னார் ஆயர்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கும் ஆலோசனை மருத்துவர் டாக்டர் பெண்டன் ஜியாப் கூறுகிறார்.சிங்கப்பூரிலிருந்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், டாக்டர் ஜியாப், "ஆயரின் உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறது. அவரது வலது கையிலும் வலது காலிலும் இன்னும் கொஞ்சம் தசைப் பிடிப்பு இருக்கிறது. அவருக்கு தரப்படும் பிசியோதெரப்பிக்கு ( அதாவது இயன்முறை சிகிச்சை)அவர் நல்லமுறையில் ஒத்துழைத்து பயிற்சி பெற்று வருகிறார். நடை பழகும் கருவியை வைத்துக்கொண்டு நடக்கிறார். உடையணிவது போன்ற அன்றாட வேலைகளைச் செய்ய அவருக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது. அவருக்கு வந்த ஸ்ட்ரோக்கை வைத்துப் பார்க்கும்போது, இது ஒன்றும் அசாதாரணமானதல்ல" , என்றார்.சிகிச்சை இன்னும் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதங்கள் வரை தொடரக்கூடும் என்று கூறிய டாக்டர் ஜியாப், ஆனால் அவர் இலங்கைக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் திரும்ப முடியும் என்று கருதுவதாகக் கூறினார்.

19 செப்டம்பர் 2015

தானும் இனவாத சிங்களவன்தான் என்பதை நிரூபிக்கிறார் விக்கிரமபாகு!

ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது ஜனநாயகத்திற்காக போராடிய எம்மைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழர்கள் வாக்களிக்காததால் தான் அவர் தோல்வி அடைந்தார். “ரணில் விக்கிரமசிங்க இனவாதியல்ல. அவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர். கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் கோரும் உரிமை எவருக்கும் இல்லை.
கலப்பு நீதிமன்றம் என்ற பரிந்துரை, ஜனநாயகத்துக்காக போராடிய எம்மை, இலக்கு வைத்து அவமானப்படுத்தும் செயல்.இந்தக் கலப்பு நீதிமன்றம், சிலரால், ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், முன்னைய காவல்துறை, நீதித்துறை தான் இலங்கையில் இன்னமும் இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. ஜனவரி 8 ம் திகதி ஏற்பட்ட புரட்சி எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தியுள்ளது.
புதிய இடதுசாரி முன்னணி, தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளையும், வடக்கில் போரின் போது குற்றங்கள் இழைக்கப்பட்டது என்பதையும், ஏற்றுக் கொள்கிறது.லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, தாஜுதீன் படுகொலைகளும் போர்க்குற்றங்களுக்குள் அடக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆயுதப்படைகளினால், போர்க்காலத்தில் தான் இவை மேற்கொள்ளப்பட்டன.இவை குறித்து விசாரிக்க சிறிலங்கா தமது சொந்த நீதிமன்றத்தை உருவாக்க முடியும்.இந்தியாவைப் போன்று இந்தப் பிரச்சினையை ஒற்றையாட்சி அரசுக்குள் தீர்க்கப்பட முடியும். சமஸ்டி முறை இங்கு தேவையற்றது.தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும் வெள்ளையின மக்களையும், குடும்பங்களையும் கொலை செய்திருக்கிறார் எனக் குறிப்பிட்டதுடன், எல்லா கெரில்லா தலைவர்களும், போராளிகளும், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை கொன்றிருக்கிறார்கள்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடயத்தில் இது ஒன்றும் புதியதல்ல என்றார். புதிய இடதுசாரி முன்னணி வன்முறைகளைக் கண்டிக்கிறது.” எனவும் அவர் தெரிவித்தார்.

16 செப்டம்பர் 2015

கலப்பு நீதிமன்றம் விசாரணை என்கிறது ஐ.நா!

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

01 செப்டம்பர் 2015

கருணாவின் பேச்சால் படைகளுக்குள் குழப்பமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனின் மரணம் தொடர்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்த கருத்து இலங்கை இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரபாகரனின் சாவு குறித்து சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் யுத்த முடிவில் அறிவித்த நிலையில் பிரபாகரன் தனது கைத்துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுக்கொன்றதாகவும் மனைவியும் மகளும் இராணுவத்தின் செல்வீச்சில் கொல்லப்பட்டதாகவும் கருணா கூறியுள்ளார்.
இறுதிப் போர் தொடர்பில் கருணா தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது இராணுவப் பேச்சாளர் தடுமாறியுள்ளார். கருணாவின் பேச்சுக்கள் இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவா தொடர் நடைபெறவுள்ள வேளையில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருத்துக்களை அவர் வெளியிடலாம் என்ற சந்தேகம் இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபாரகன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதே கருணாதான் என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் அவர் தற்போது கூறும் கருத்து தொடர்பில் அதன் உண்மை நிலையை அறிய சட்ட ஆலோசனை நடத்துவதே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.