29 ஏப்ரல் 2016

தமிழகத்தில் 130 வயதிற்கு மேற்பட்ட 28 வாக்காளர்கள்!

தமிழகத்தில் 130 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 28 பேர் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வசிக்கும் அதிக வயதுள்ள வாக்காளர்களின் பட்டியல் தனியாக தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர். மேலும் 130 வயதிற்கு மேற்பட்டவர்கள் 28 பேர் உள்ளனர்.வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு தினத்தன்று வரிசையில் நின்று வாக்களிக்கத் தேவையில்லை. அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 100 வயதிற்கு மேற்பட்டவர்களின் விபரம் வருமாறு, வேலூர் - 597,கோவை-440,சென்னை-434,திருப்பூர்-403, நெல்லை-359,விழுப்புரம்-355,காஞ்சிபுரம்-339,சேலம்-328,ஈரோடு-311,திண்டுக்கல்-306,திருவண்ணாமலை-303, கிருஷ்ணகிரி-282,திருச்சி-277,தஞ்சாவூர்-261,திருவள்ளூர்-260,தருமபுரி-230,கடலூர்-217,கன்னியாகுமரி-212, விருதுநகர்-190,மதுரை-183,நாகப்பட்டினம்-168,ராமநாதபுரம்-166,தூத்துக்குடி-154,சிவகங்கை-149,தேனி-145,புதுக்கோட்டை-130,திருவாரூர்-120-நாமக்கல்-113,அரியலூர்-64,பெரம்பலூர்-48,நீலகிரி-45,கரூர் 38.

27 ஏப்ரல் 2016

நாரந்தனையில் கிணற்றில் வீழ்ந்த சிறுமி மரணம்!

நாரந்தனைப்பகுதியில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று மாலை குறித்த ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.சிறுமியின் உடலம் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் உடலம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

21 ஏப்ரல் 2016

தாயொருவர் கூண்டில் அடைத்து வைப்பு!


வவுனியா சாந்தசோலை கிராமத்தில் ஒருவர்  95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை  மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில்  அனுமதித்தனர். 
சாந்தசோலை கிராமத்தில் ஒருவர் 95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இதேவேளை, குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தாயை கொடுமைப்படுத்தவில்லை எனவும் அவரை நல்லமுறையில் பராமரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தன் மீது தவறான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இவ்வாறு செய்தியொன்று தெரிவிக்கின்றது.

16 ஏப்ரல் 2016

தமிழகத்தை கன்னடர்,தெலுங்கர்,மலையாளர் ஆள்வது சரி தமிழர் ஆண்டாள் இன வெறியா?

கோவை சிங்காநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப்பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், சொன்னதைச் செய்தோம் எனக் கூறும் ஜெயலலிதா, தன் ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போவதாக சொன்னாரா? என கேள்வி எழுப்பினார்.
"கன்னடர் வந்து நம் தமிழகத்தை ஆண்டுவிட்டார், வாழ்ந்திட்டீர்கள். மலையாளர் வந்து நம் தமிழகத்தை ஆண்டார் வாழ்ந்திட்டீர்கள். தெலுங்கர் வந்து நம் தமிழகத்தை ஆண்டார் வாழ்ந்திட்டீர்கள். அது போல தமிழகத்தை ஒரு முறை தமிழன் கையில்தான் கொடுத்துப்பாருங்களேன். கன்னடர் ஆளலாம் அது சரி, மலையாளர் ஆளலாம் அது சரி, தெலுங்கர் ஆளலாம் அதுவும் சரி, தமிழகத்தை தமிழர் ஆண்டால் அது வெறியா ?!
கலைஞர் அவர்கள் கூறுகிறார், மதுவை மூட வேண்டும் என்று. ஆம் உண்மைதான் நீங்கதான திறந்து வெச்சீங்க. உங்ககிட்டதான சாவி இருக்கும், நீங்கதான் மூடணும். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 'தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுவேன்' என்கிறார். முதலில் உங்கள் மந்திரிகளை தலை நிமிர்ந்து நடக்க வையுங்கள். மேலும் அவர் சொன்னதைச் செய்தோம் எனக் கூறிக்கொண்டு வருகிறார். தன் ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போவதாக எங்களிடம் சொன்னீர்களா ?!
தஞ்சாவூர் தி.மு க கோட்டை, கோவை அ.தி.மு.க.கோட்டையா? இந்த கோட்டை எல்லாம் எதுனால வந்தது? இந்த தமிழக மக்கள் போட்ட ஒவ்வொரு ஓட்டினாலும், ஒரு தடவ மாத்திப் போட்டுப்பாருங்க, நீங்க இல்லைனா இவுங்களாம் யாரு? ஜெயலலிதா மார்கெட் குறைந்த பழைய சினிமா நடிகை, கலைஞர் அவர்களும் அவர் கால கட்டத்தில் மார்கெட் இழந்த ஒரு கதாசிரியர், மத்தபடி ஒண்ணும் இல்ல.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை சர்க்கரை எல்லாம் தடை செய்வொம். கருப்பட்டி, பனங்கற்கண்டுகளை பயன்படுத்த சொல்லுவோம். 'இல்ல.. எனக்கு அதுதான் பழகிப் போச்சு!' என்று சொன்னால், அந்த வெள்ளை சர்க்கரைக்கு இரட்டிப்பு வரியைக் கூட்டுவோம், நீ சாகறது சாவு எங்களுக்கு வரி கொடுத்திட்டு சாவு. மேம்பாலங்களை இடிப்பேன். அனைத்தும் பாதாள வழிப்பயணமாக மாத்துவேன். தானியங்கி பேருந்துகளை கொண்டு வந்து அதைக் கண்காணித்துக் கொள்ள ஊனமுற்றோரையும், திருநங்கைகளையும் பணியமர்த்துவேன்.
தமிழகத்துக்கு தலை நகரையே மாற்றுவேன். நம் தமிழகத்திற்கு ஐந்து தலை நகரம், அதாவது நிர்வாக வசதிக்காக சென்னையை திரை மற்றும் கணினி துறையின் தலைநகராக தொடர வைப்போம், அடுத்து திருச்சியை நிர்வாகத் தலை நகராக மாற்றுவோம், கன்னியாகுமரியை மெய்யியல் தலைநகராக மாற்றுவோம், மதுரையை கலை, பண்பாடு, இலக்கிய தலை நகராக மாற்றுவோம், அடுத்து தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த கோவையை தொழிற்துறையின் தலை நகராக மாற்றுவோம்.
அடுத்து மந்திரிகளில் எவருக்கு உடல் சரி இல்லை என்றாலும் அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும். இலவசமென கல்வியைத் தவிர எதுவும் இருக்காது. அனைவரது வாழ்வாதரத்தையும் உயர்த்துவோம். நிலங்களை உரிமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கி அரசே அதில் விவசாயம் செய்யும். விவசாயம் என்பது அரசு வேலையாக்கப்படும்.
மொழிக் கொள்கை என்று பார்த்தால் தமிழ் வழி கல்வித் திட்டம், ஆங்கிலக் கல்வி கட்டாயம் ,சிறப்புக் கல்வி அனைவருக்கும் உண்டு. ஒரு குழந்தைக்கு ஓவியம் விருப்பப் பாடமாக இருந்தால், அதற்கு ஓவியம்தான் சிறப்புப் பாடம். அந்த குழந்தை அந்த பாடத்தில் தோற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது. இதன் மூலம் தனித்திறன் வளரும்.
அடுத்து நீர் சேமிக்கும் திட்டத்தை மேம்படுத்துவோம். அடுத்து எது தமிழ்த்தாய் வாழ்த்து? நீராரும் கடலுடுத்த பாடலா? திராவிடர் நல் திருநாடா? மானத் தமிழ் நாட்டுல எங்கடா திராவிடர் நாடு? கொளுத்தி விடுவோம்.தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' போடுவோம். இதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக அத்தனையும் மாற்ற போகிறோம்" எனக் கூறினார்.

நன்றி:விகடன்

12 ஏப்ரல் 2016

இது பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்குமான போர்!சீமான் முழக்கம்!

இதுவரை நான் தூங்க விடாமல் தடுத்தேன்.இப்போ உலகம் முழுதும் இருப்பவர்கள் என்னை தூங்க விடாமல் தடுக்கிறார்கள் என இன்றைய குன்னூர் எழுச்சியுரையில் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.நல்லதொரு ஆட்சி மலரவும் தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் தமிழக மக்கள் முன்வரவேண்டும்.தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு அளிக்கப் போகும் வாக்கு உலகத்தமிழர்களின் விடிவுக்கான வாக்கு என்பதை புரிந்து கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென புளியங்கூடல்.கொம் வலைக்குழுமம் தமிழக வாக்காளர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

08 ஏப்ரல் 2016

இலங்கையில் அதிகரித்து வரும் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு,பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள காட்டுப் பாலத்தடி பகுதியில் இருந்து நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டி ஒன்று காணப்படுவதாகவும்,குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பாலத்திற்குள் வீழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.அண்மைக்காலங்களில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுவதான செய்திகள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.