27 நவம்பர் 2016

தமிழீழத்தில் பெரும் எழுச்சி கொண்ட மாவீரர் நாள் நிகழ்வுகள்!

கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர்.கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடந்த நிகழ்வில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஈகைச்சுடர் ஏற்றி வைத்தார். இவ் அஞ்சலி நிகழ்வில், வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.அதேவேளை, தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி - முழங்காவில் துயிலுமில்லத்தில், நடந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். பொதுச்சுடரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏற்றிவைத்தார்.

26 நவம்பர் 2016

தமிழர் பகுதிகளில் நாளை துயிலுமில்லங்களில் சுடரேற்றல்!

தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை சுத்தப்படுத்தும் பணிகள் இன்றும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நாளை மாலை அங்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில், மாவீரர் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நேற்றும் இன்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் கல்லறைகள், நடுகற்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச் சிதைவுக் குவியலின் மீது மாவீரர் தீபம் ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டதுடன், நடுகற்களும் நாட்டப்பட்டன. இங்கு 2150 மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டதுடன் 1000 நடுகற்கள் அமைக்கப்பட்டும் உள்ளன.2009 ஆம் ஆண்டு இராணுவத்தினர் குறித்த பகுதியை கைப்பற்றிய பின்னர் மாவீரர் துயிலுமில்லம் அழிக்கப்பட்டதுடன், கல்லறைகளும் சிதைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன் குறித்த பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து, உடைக்கப்பட்ட கல்லறைகளை ஒன்று சேர்த்து நாளை அதன் மேல் மாவீரர்களின் நினைவாக சுடரேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.அதேவேளை, ஒரு சில கல்லறைகள் சேதமடையாத நிலையில் மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இராணுவத்தின் பிடியில் இல்லாத துயிலுமில்லங்களில் நாளை மாவீரர்களை நினைவு கூருவதற்கு பரவலான ஏற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

24 நவம்பர் 2016

புலிகளின் தலைவர் ஒருவரை கொல்வோமா எனக் கேட்டார்கள்!

புலிகளின் தலைவர் ஒருவரை கொல்வோமா எனக் கேட்டார்கள்!எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார். அதற்கு நான், சரி எனக் கூறினேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிருதிவிராஜ் மனம்பேரி, நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.அதுமட்டுமின்றி, இந்த வழக்கின் சந்தேகநபரான சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷை, கொழும்பு கங்காராமை, லொன்றிவத்தை பகுதியில் வைத்து, ரவிராஜ் எம்.பி கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் சந்தித்தபோது, அவருடன் இருந்த கடற்படை வீரர்கள் மூவரையும் மன்றுக்கு அடையாளம் காட்டினார்.த.தே.கூ எம்.பியான நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரிகள் சபை முன்னிலையில், நேற்று முற்பகல் 11.17 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இருந்து, அரச தரப்புச் சாட்சியாக மாறிய பிருதிவிராஜ் மனம்பேரி சாட்சியமளிக்க, சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார்.அவரிடம், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரலான ரோஹந்த அபேசூரிய கேள்வி கேட்டபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறியதோடு, பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கேள்விகளுக்குப் பதிளித்து, சாட்சியம் வழங்கினார். அவர் சாட்சியமளித்த போது “கிழக்கு மாகாணத்தில், பொலிஸ் அதிகாரியாக நான் பணியாற்றியபோது, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் எங்களுடன் சேர்ந்து செயற்பட்டனர். இதன்போதே சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முகாமொன்றைத் தாக்க முயன்றபோது, விசேட அதிரடிப்படையினர் எங்களைத் தடுத்தனர்.
அதனையடுத்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு நான் மாற்றப்பட்டேன். நான், கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில், கருணா குழுவைச் சேர்ந்த சாமி என்பவர், கொட்டாஞ்சேனைப் பகுதியிலேயே தங்கியிருந்தார். 2006.11.09 அன்று மாலை 4.30 மணியளவில், சாமியிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர், கங்காராமை, லொன்றிவத்தை பகுதியிலுள்ள கட்டடத்தில் அவரைச் சந்தித்தேன். அங்கேயே, கடற்படை அதிகாரிகளான பிரசாத் ஹெட்டியாராச்சி, செனவிரத்ன, வஜிர என்ற கடற்படை அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னரும், அப்பகுதியில் வைத்து அவர்களைச் சந்தித்துள்ளேன்.எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?” என, சாமி கேட்டார். நானும் சரி என்றேன். அன்றையதினம், தனது மோட்டார் சைக்கிளையும் தலைக்கவசங்கள் இரண்டையும் என்னிடம் தந்த சாமி, நாளை (2006.11.10) காலை 6 மணிக்கு பொரளை கனத்தை மயானத்துக்கு அருகில் வருமாறு என்னிடம் கூறினார். நானும், அந்த இடத்துக்குச் சென்றேன்” எனச் சாட்சியமளித்தார்.
அத்துடன், சாட்சியமளிப்பு நிறுத்தப்பட்டது. முதலாவது சந்தேகநபரின் சாட்சியமளிப்பு, இன்றும் தொடரவுள்ள நிலையில், வழக்கு விசாரணையை, இன்று காலை 10.30க்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.

13 நவம்பர் 2016

முதல்வர் ஜெயலலிதா பெயரில் அறிக்கை!

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியாகியிருக்கிறது.அனைவரது பிரார்த்தனையாலும், தான் மறுபிறவி எடுத்துள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் முழு உடல் நலன் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
வரும் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
அதேபோல், தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், தொண்டர்கள் அனைவரும் அதிமுக வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆனால், அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் கையொப்பம் இடம்பெறவில்லை. பெயர் மற்றும் பதவி மட்டுமே குறி்ப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை தேறிவிட்டதாக அப்போலோ மருத்துமவனை தலைவர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, அவரது உடல் நிலை குறித்த தெளிவு இல்லாத நிலையில், இந்த அறிக்கை வந்திருக்கிறது.இடைத் தேர்தலில் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும், வாக்காளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவுமே இந்த நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

03 நவம்பர் 2016

போராளி ஒருவர் திடீர் மரணம்!

வவுனியா- பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார். புளியங்குளம் பகுதியை சேர்ந்த அமலதாஸ் (வயது-46) என்ற முன்னாள் போராளியே மரணமானவராவார்.நேற்றைய தினம் உறவினர்களுடன் வெளியில் சென்று விட்டு மதியம் மூன்று மணியளவில் வீடு திரும்பிய இவர் ஓய்வு எடுப்பதற்காக உறங்கச் சென்ற வேளை திடீரென மயங்கி கீழே விழுந்தார். மயக்கத்துடன் தான் இருக்கின்றார் என்று நினைத்து குடும்பத்தினர் அவரை புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மரணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இவரது மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள், இதுவரை அவர் நல்ல ஆரோக்கியமாகவே காணப்பட்டார் என்றும் தெரிவித்தனர். அமலதாஸ் 2011.04.23 அன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.