26 செப்டம்பர் 2017

சிங்களவர்களின் மிரட்டலால் வைகோவிற்கு ஐ.நா.பாதுகாப்பு!

தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைகோவை சிங்களர்கள் மிரட்டிய நிலையில் அவருக்கு ஐ.நா சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார்.மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார். பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள்.210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியல் உண்ணாவிரதம்இருக்கிறார்கள். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. 2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்கேயும் மைத்ரிபாலா சிறிசேனாவும் சொல்கிறார்கள். எனவே, மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக இலங்கை வந்து பார்வையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று பேசினேன். இதற்கு சிங்களப் பெண் ஒருவர் திட்டினார். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களர்களே தகராறு செய்தனர். நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர் என்று வைகோ சொன்னார். ஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தமிழ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

17 செப்டம்பர் 2017

கள்ளிச் செடி கூட எங்க ஊரில் வளரும்.. பாஜக வளரவே வளராது:சீமான்

தமிழகத்தில் கள்ளிச் செடி கூட வளரும்.. பாஜக வளரவே வளராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:பாஜக தேசிய செயலாளர் ராஜா, நான் சாரணர் இயக்கத்தின் முன்னாள் மாணவர்; நான் பொறுப்புக்கு வந்தால் தேசப்பற்று, ஒழுக்கத்தை கற்பிப்பேன் என்றார்.ஆனால் உங்க ஒழுக்கமும் பற்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். 51 ஓட்டுகள்தான் வாங்கியிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற மணி 236 ஓட்டுகள் வாங்கியிருக்கிறார். இதுதான் உங்க நிலைமை.தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு வருகிறது என்கிறார்கள்... எங்க வளருது? கள்ளிச்செடி கூட எங்க ஊரில் வளரும். பாஜக வளரவே வளராது.
இவ்வாறு சீமான் கூறினார்.

01 செப்டம்பர் 2017

நீட் தேர்வால் ஏமாற்றம் மாணவி அனிதா தற்கொலை!

Anithaஅரியலூரை சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் அனிதா. ப்ளஸ் டூ தேர்வு அடிப்படையில் அனிதாவின் கட் ஆப் மதிப்பெண் 196.5 ஆகும். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார் அனிதா, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து நன்றாக படித்தவர் அனிதா. அவர் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீட் தேர்வு அடிப்படையிலேயே கவுன்சிலிங் நடைபெற்றது.இதனால் விரக்தியடைந்த அனிதா,தன்னுடைய மருத்துவ கனவு கலைந்து போனதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளர். இந்த நிலையில் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அதேவேளை,மாணவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழலாம் என நம்பப்படுகிறது.