23 ஜனவரி 2014

காப்பாற்றுமாறு கெஞ்சினார் மரணதண்டனைக்குள்ளான வாலிபர்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொலை குற்றஞ்சாட்டப்பட்டு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மட்டக்களப்பு, கொம்மாதுறையை சேர்ந்த 32 வயதான கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் என்பவரின் சடலத்தை பெற்றுத்தர உதவுமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு கட்டார் நாட்டு பிரஜை ஒருவரை வாகனத்தால் மோதி கொலை செய்ததாக ரவீந்திரன் மீது அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து அவருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக அந்த நாட்டு சிறைச்சாலையொன்றில் ரவீந்திரன் மரண தண்டனைக் கைதியாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதுவராலய அதிகாரிகள் ரவீந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவரை பார்வையிடுவதற்கு அவரது தாயாரை அழைத்திருந்தது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பாக அறிவிக்கப்பட்டவுடன் முதல் நாள் இரவு தங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ரவீந்திரன் கொம்மாதுறையிலுள்ள அவரது குடும்ப உறவுகளுடனும் உரையாடியதாக அவரது சகோதரர்களில் ஒருவரான விஜேந்திரன் குறிப்பிட்டார்.
மரண தண்டனைக்குள்ளான ரவீந்திரனின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோரும் தற்சமயம் தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே தங்கியுள்ளார்கள். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் அந்நாட்டு பொலிஸாரினால் தான் அழைக்கப்பட்டதாகவும் மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை இறுதியாக சந்தித்து பேச அவர்கள் வாய்ப்பளித்ததாகவும் ரவீந்திரனின் சகோதரி ஆனந்தி கூறினார்.
அவ்வேளையில் தன்னை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முடிந்த முயற்சிகளை எடுக்குமாறும் மரண தண்டனைக்குள்ளான தனது சகோதரன் கெஞ்சியதாகவும் தெரிவித்த ஆனந்தி அவரைக் காப்பாற்றும் முயற்சி தங்களால் முடியாமல் போனதாகவும் வேதனை வெளியிட்டார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் சடலத்தை பார்வையிட தனக்கும் அவரது மனைவிக்கும் சில நிமிடங்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டதாக கூறும் ஆனந்தி சடலத்தை எப்படியாவது இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இதற்கு மனிதாபிமான சேவையிலுள்ளோர் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

22 ஜனவரி 2014

மஹிந்தரின் இறுதிப்பயணம் ஆரம்பம்!

ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் இறுதிப் பயணம் எவ்வாறு அமைந்ததோ அவ்வாறானதொரு பயணத்தையே சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தையர் ஆரம்பித்துள்ளார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அவர் இன்று அதனை முற்றாக நாசம் செய்து விட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவே ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இறுதிப் பயணத்தின் ஆரம்பமாகவும் இருந்தது. மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முப்படைகளையும் பொலிஸாரையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறார்.
அரசுக்கு எதிராகச் செயற்படுவோர்கள் அடக்கப்படுகிறார்கள், அழிக்கப்டுகிறார்கள். நாட்டில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு காட்டுத் தர்பார் இன்று நடத்தப்படுகிறது இன்று இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை, மனித உரிமைகள் விலை பேசப்படுகினறன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

21 ஜனவரி 2014

மானத்தை கப்பல் ஏற்றிய பருத்தித்துறையில் சில கழிவுகள்!

தமிழ்நாட்டின் குப்பை சினிமாவின் அங்கமான விஜய் என்ற கூத்தாடியின் படம் பற்றி விமர்சனம் வெளியிட்ட உதயன் பத்திரிகைக்கு எதிராக பருத்தித்துறையில் ஒரு சில கழிவுகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
வேலைவெட்டி இல்லாமல் தகப்பன் பெயர் தெரியாமல் பிறந்த சில கழிவுகளே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக வடமராட்சி மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

20 ஜனவரி 2014

இலங்கையைப் புறக்கணிக்கும் போராட்டம்!

தமிழகம் அடையாரில் உள்ள நீலகிரி சிறப்பங்காடியை 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டு, இலங்கை பொருட்களை தமிழகத்தில் விற்காதே என்ற முழக்கத்தை எழுப்பி கோரிக்கை வைத்தனர்.
இலங்கையில் தயாராகும் பிஸ்கட், கேக் முதலிய திண்பண்டங்களை நீலகிரி அங்காடி பல ஆண்டுகளாக விற்று வருகிறது. ஏற்கனவே இலங்கை புறக்கணிப்பு குழு, நீலகிரி நிறுவனத்திடம் இப்பொருட்களை விற்கவேண்டாம், இவைகள் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் இருந்து வருகிறது,
அதனால் இப்பொருட்களை விற்று வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இந்நிலையில் நீலகிரி நிறுவனத்தின் தமிழர் விரோத போக்கை கண்டிக்கும் வகையிலும் அந்நிறுவனத்திற்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் நேற்று நீலகிரி கடையின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் அந் நிறுவனம் உடனடியாக இலங்கை பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் அனைத்து நீலகிரி கடைகளையும் தமிழர்கள் நாங்கள் புறக்கணிப்போம் என்ற செய்தி நிறுவன அதிகாரிகளிடம் சொல்லப்பட்டது.
நேற்று நீலகிரி நிறுவனம் தங்கள் வசம் உள்ள இலங்கை பொருட்களை சில நாட்களில் அகற்றுவோம் என உறுதி அளித்தனர். எனினும் தமிழகத்தில் இருந்து முற்றிலும் இலங்கை பொருட்கள் புறக்கணிக்கப்படும் வரை இந்த போராட்டம் ஓயாது என மாணவர்கள் தெரிவித்தனர்.

19 ஜனவரி 2014

திருநெல்வேலியில் விரட்டப்பட்ட ஆவணப்படக் குழுவினர்!

எதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா காய்ச்சலில் அல்லாடிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு தமிழ் செயற்பாட்டாளர்களை முடக்க சகோதரப் படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்யும் யுக்தியொன்றினை கையில் எடுத்துக்கொண்டுள்ளது. அவ்வகையினில் தமிழ் போராட்ட அமைப்புக்கள் தமக்குள் மோதிக்கொண்டதாக கூறும் ஆவணப்படமொன்றை தயாரிக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டில் டெலோ அமைப்பினரது இந்திய அரச அடிவருடித்தனமான செயல்களையடுத்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளினை திரிபு படுத்தி பிரபல ஆவணப்படத் தயாரிப்பாளர் யூட் இரட்ணம் என்பவரது இயக்கத்தினில் இப்படம் தயாராகின்றது. இலங்கை அரசினது ஒட்டுக்குழுவான சிறீடெலோ அமைப்பின் அனுசரணையினில் தயாரித்து வழங்கப்படும் இவ் ஆவணப்படத்திற்கான காட்சிகள் திருநெல்வேலியினில் இன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியார் சிலரை அழைத்து வந்து தமது கிராமத்தினில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட படப்பிடிப்பு தொடர்பினில் கிராம மக்கள் குழப்பமுற்று அவர்களை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளனர். எனினும் பொதுமக்களை அச்சுறுத்தும் பாணியினில் குழுவினர் செயற்பட முற்பட முறுகல் நிலை முற்றியிருந்தது. அதனையடுத்து கிராம மக்கள் குழுவினரை சுற்றி வளைத்து படப்பிடிப்பினை தடுத்துள்ளனர்.
இதையடுத்து தகவல் வழங்கப்பட்டதையடுத்து வருகை தந்த பொலிஸார் படப்பிடிப்பு குழுவினை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர். சம்பவ வேளை சிறீடெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் அப்படுகொலை நடவடிக்கையில் உயிர் தப்பி வெளிநாடுகளினில் அடைக்கலம் புகுந்துள்ள தரப்புக்களைச் சேர்ந்த சிலர் மக்களிற்கு பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எங்களை யாரென தெரியாது விளையாடுகிறீர்கள் படையினர் வந்தால் நடப்பது தெரியுமென எச்சரித்துமுள்ளனர்.
இதனிடையே அப்பகுதி மக்களது கருத்துக்களை குழுவினர் ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட போதும் மக்கள் அதனை மறுதலித்துள்ளனர்.

18 ஜனவரி 2014

ஊடகவியலாளர்களுக்கு ‘ஆவா’ குழு அச்சுறுத்தல்!

யாழில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் ஐவர் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
ஆவா குழுவினரின் வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பதில் நீதவான் எம். திருநாவுக்கரசுஅவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிமன்ற வாசலில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் ஐவரும் ஆவா குழுவை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் போது புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளனர்.
இதனைத் தடுக்க முற்பட்ட ஆவாகுழுவைச் சேர்ந்தவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று மிரட்டியுள்ளதோடு ‘உங்கள் அனைவரையும் எமக்குத் தெரியும் உங்கள் வீடுகளும் தெரியும் உங்கள் அனைவரையும் வெட்டுவோம்’ என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
உடனடியாக ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

17 ஜனவரி 2014

அங்கொடையில் மனநோய் மருத்துவம் செய்விக்க வேண்டும்!

ஜனநாயக நடைமுறைகள் பற்றிய எந்தவித அறிவும் இல்லாத இராணுவ நபர்களை ஆலோசனை சொல்ல பக்கத்தில் வைத்து கொண்டால் அவர்கள் இப்படித்தான் யோசனை சொல்வார்கள். மேல்மாகாணத்தில் தேர்தல் நடத்த போகின்றீர்கள். வடக்கில் நடத்திய தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு மக்கள் பிரதிநிதியை கைது செய்வதாக பயமுறுத்துகிறீர்கள். இத்தகைய ஆலோசகர்கள் மூலமாகத்தான் அரசாங்கமும், நாடும் சர்வதேச ஆபத்து சிக்கலில் தேடி போய் விழுகின்றன. இதைதான் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது என்பார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தெகிவளை ஸ்டபர்ட் ஒழுங்கை தோட்டத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நமது கட்சி நாட்டு பிரிவினையை எதிர்க்கிறது. பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்யப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் யார் பிரிவினைவாதி என்ற கேள்வி இங்கே எழுகிறது.
காணாமல் போன தனது கணவனையும், மனைவியையும், பிள்ளைகளையும் தேடி அலைபவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. இந்த நாட்டில் மக்களை இன, மத ரீதியாக பிரித்து ஆள நினைப்பவர்கள்தான் பிரிவினைவாதிகள் ஆகும்.
சகோதர இனத்தின் உரிமைகளை பறித்து எடுப்பவர்களும், சகோதர மதத்து மக்களின் வழிபாட்டு உரிமைகளையும் மறுப்பவர்களும்தான் பிரிவினைவாதிகள். இந்த நாட்டில் இந்து கோவில்களையும், இஸ்லாமிய பள்ளிவாசல்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் உடைப்பவர்கள் யார்? ஒரு ஒழுங்கைக்கு தமிழ் பெயர் வைப்பதையும், இஸ்லாமியர்கள் தங்கள் உணவு பழக்க வழக்கங்களை கொண்டு நடத்துவதையும், கிறிஸ்தவர்கள் தங்கள் பிரார்தனை கூட்டங்கள் நடத்துவதையும் தடுத்து நிறுத்துபவர்கள் யார்? இவர்கள்தான் உண்மை உண்மையான பிரிவினைவாதிகள் ஆகும்.
இந்த நாட்டில் தொன்று தொட்டு இனவாதம் பேசி சிறுபான்மை இனங்களை பிரிவினைவாதத்தை நோக்கி தள்ளி விடுபவர்களே பிரிவினைவாதிகள் ஆகும். இவர்களுக்குதான் இன்று புனர்வாழ்வு தேவைபடுகிறது. முன்னாள் புலிகள் இயக்கத்து நபர்கள் என்று பார்த்தாலும் கூட, அவர்களில் மிகப்பிரபலமானவர்கள் இன்று அரசாங்கத்துக்குள்ளேதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் புனர்வாழ்வு வழங்குங்கள். ஆனால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை கைது செய்து புனர்வாழ்வு வழங்க வேண்டி வரும் என்று கூறி, சர்வதேச கண்டனத்துக்கு உள்ளாகி, மிச்சம் இருக்கும் நாட்டின் பெயரையும் நாசமாக்காதீர்கள். இந்த உண்மையை நான் தமிழ் மொழியிலும் கூறுகிறேன். அதையே சிங்கள மொழியிலும் கூறுகிறேன். அதையே ஆங்கில மொழியிலும் கூறுகிறேன். இதை இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டும் அல்ல, நல்லெண்ணம் கொண்ட சிங்கள பெளத்த மக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

16 ஜனவரி 2014

சிறீலங்காவிற்கு எதிராக கூட்டு நடவடிக்கை!

மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில் சிறிலங்காவுக்கு எதிராக அனைத்து மேற்கத்தைய நாடுகளும் பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் இணைந்து செயற்படவுள்ளமை தொடர்பில் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மனித உரிமைப் பேரவையில் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சிறிலங்கா அரசை மிக இக்கட்டானதொரு நிலைக்குக் கொண்டு செல்ல அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் திடசங்கற்பம் கொண்டுள்ளன.
இதேவேளை, சிறிலங்கா அரசுக்கு ஆதரவான நாடுகளுடன் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற மேற்கத்தைய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தகவல்களை சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பிரித்தானிய அரசு திரட்டி வருவதாகவம் திவயின தெரிவித்துள்ளது.

15 ஜனவரி 2014

சிங்கள பயங்கரவாத அரசுக்கு துதிபாடும் ஹக்கீம்!

சிறிலங்கா தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டுமென சிறீலங்காவின் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயலும் போது அமெரிக்கா இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல என்றும் அவர் கூறுகிறார்.
சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவென்பது போர்க்குற்ற தூதுவர் ஸ்டீபன் ரொப் வெளியிட்டிருந்த கருத்துகள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, சிறிலங்கா குறித்த சில தீர்மானங்களை முன்னேரே மேற்கொண்டுள்ளதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
போர்க்கால குற்றங்களையும் சாட்சியங்களையும் தேடுவதால் உள்ளுரில் மேலும் முரண்பாடுகளே தோன்றும். அது நல்லிணக்கத்துக்குத் தடையாகவே அமைந்து விடும்.
இந்த நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உண்மையை கண்டறியும் குழுவை போன்ற மாற்று முறைமையை சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காக ஆராய வேண்டுமென்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது, சிங்கள இனவாதிகள் பல நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். பல பள்ளிவாசல்கள், பெளத்த பிக்குமாரினால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மஹிந்த அரசாங்கத்தின் மீதான ஹக்கீமின் அக்கறை முஸ்லிம் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 ஜனவரி 2014

தமிழர்களுக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை!

தமிழர்களுக்கு அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கை முற்றாக அழிந்து விட்டது அவர்களுக்கான ஒரேயொரு நம்பிக்கையாக இன்று சர்வதேச அமைப்புகள் மட்டுமே உள்ளன. அதனை நம்பியே வடக்குத் தமிழர்கள் வாழ்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழர்களுக்கு இருக்கின்றது.
இவ் விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும். அரசாங்கத்தின் கபடத்தனத்தினை தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடாது. திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவத்தில் அரசாங்கம் சுயாதீனமான பரிசோதனைகளை நடத்துவதாகத் தெரியவில்லை.
தமிழ் மக்களின் விடயத்தில் அரசாங்கம் ஏன் இவ்வாறாக நடந்து கொள்கின்றது. இன்று தமிழர்களுக்கு அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கை முற்றாக அழிந்து விட்டது. அவர்களுக்கான ஒரேயொரு நம்பிக்கையாக இன்று சர்வதேச அமைப்புகள் மட்டுமே உள்ளன. அதனை நம்பியே வடக்குத் தமிழர்கள் வாழ்கின்றனர்.
யுத்த காலக்கட்டத்திலும் இறுதிக்கட்ட யுத்தத்திலும் இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான சிறந்த ஆதாரமாக மன்னார் சம்பவம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் தமிழர் அடக்குமுறையும் இடம்பெற்று வருகின்றன. என்பதற்கான சான்றாகவும் அரசாங்கத்தின் அலட்சியமான நடவடிக்கைகள் காணப்படுகின்றன.சர்வதேசத்தின் முழுப்பார்வையும் இலங்கை மீது திரும்பியிருக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுயநலமாகவும் சர்வாதிகப் போக்கிலும் நடந்து கொள்வது அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்களையே அதிகரிக்கும். குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அரசாங்கம் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குறிப்பிடுள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பிலும் இலங்கையில் நியாயம் கிடைக்கவில்லை. இந்த நிலைமையில் தமிழர்கள் மேலும் அரசாங்கத்தை நம்பி எவ்விதப் பயனும் இல்லை அரசாங்கத்தின் சூழ்ச்சிகளையும் கபடத்தனத்தினையும் தமிழர்களிடத்தில் தொடர்ந்தும் செயற்படுத்தக்கூடாது.
இனி மேலாவது வடக்குத்தமிழர்கள் விடயத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும், யார் எவ்வாறு செயற்பட்டாலும் தமிழர்களின் நியாயம் தான் எமக்கு முக்கியம். அதற்கான செயற்பாடுகளை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 ஜனவரி 2014

"பொங்கலை மக்கள் மறந்துவிட்டார்கள்"வர்த்தகர்கள் புலம்பல்!

தைப்பொங்கலை கூட மறந்து விட்டனர் யாழ் மக்கள் என்று யாழ் நகர் நவீன சந்தை தொகுதி
வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் .
தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கல் வியாபாரத்துக்கென பொருட்களை கடைகளில் வாங்கிக் குவித்துள்ள வர்த்தகர்கள் வியாபாரம் இல்லாது பெரும் நெருக்கடிக்காளாகியுள்ளனர் . இந்த நிலையில் நகர்க்கடைகள் யாவும் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடி காணப்படுகின்றது .
மேலும் பண்டிகைக் காலங்களில் கிராமப்புறங்களில் கூடுதல் நடைபாதைக் கடைகள் அமைக்கப்படுவதால் நகர்ப்புறக் கடைகளை மக்கள் புறக்கணிப்பதாக வியாபாரிகள் விசனம் தெரிவித்தனர் .
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வியாபாரி ஒருவர் ,
நாங்கள் ஒரு வாரத்துக்கு முன் பொங்கலுக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கி குவித்துள்ளோம் . ஆயினும் மக்கள் வருகையும் கொள்வனவும் குறைவாக உள்ளது . இதனால் நாங்கள் பெரும் நஸ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக நகர்க்கடை வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

12 ஜனவரி 2014

மகசீன் சென்றார் வடக்கு முதல்வர்!

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மஹிந்தவின் அனுமதியின் பின்னர் மகசின் சிறைசாலைக்குச் சென்றுள்ளார்.
வடக்கு முதல்வருக்கும் தமக்கும் புரிந்துணர்வு இருப்பதாக உலகிற்கு காட்டுவதற்கு இந்த ஏற்பாட்டினை [ கபட நாடகத்தினை] ஒழுங்குபடுத்தி இருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
கடந்த வாரம் புதுவருட சந்திப்பிலேயே விக்கியும் இந்த கோரிக்கையினை முன்மொழிய போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷவு வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

11 ஜனவரி 2014

சிறிலங்கா குறித்து அமெரிக்கா கடும் நிலைப்பாடு!

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஏஎவ்பியிடம் கருத்து வெளியிட்ட கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரி ஒருவர், “சென்.அந்தனிஸ் மைதானம்- 2009 ஜனவரியில் இராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம்” என்று டுவிட்டரில் வெளியிடப்பட்ட கருத்து, சிறிலங்கா தொடர்பான வொசிங்டனின் கடுமையான மனிதஉரிமைக் கொள்கையைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த டுவிட்டர் குறிப்பு அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகவும், தம்மை வெளிப்படுத்த விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொதுஉறவுகள் விவகார பணிப்பாளர் கிறிஸ்ரோபர் ரீல், நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது,
“அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் உயிர் பிழைத்த பலரை சந்தித்துள்ளார். உயிர்தப்பியவர்களிடம் இருந்து, பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொண்டுள்ளோம்.
எனவே நம்பகமான சுதந்திரமான விசாரணையொன்று அவசியமானது. அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு எதிராக, எமது அரசாங்கம் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் செயற்பாடுகளை நியூயோர்க்கில் அவதானித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம். சில வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரை நாடு கடத்தினோம். விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாகவே அமெரிக்கா பேணிவருகிறது.
உலகிலேயே விடுதலைப் புலிகளை தடை செய்த முதலாவது நாடு அமெரிக்கா தான். எனவே விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ராப் தற்போது சிறிலங்காவில் இருக்கிறார். அவர் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளார். கடந்த சில தினங்களில் அவர் வடக்குக்கும் சென்றிருந்தார்.
சிறிலங்கா நிலைமைகளை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் கொழும்பு வந்துள்ளார். குறிப்பாக, போர் நடந்த பகுதிகளில் நிலைமைகளை பார்வையிடுகிறார். அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் புரியப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த இடத்துக்கும் அவர் சென்றார்.
அங்கு அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தினார். மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் நாங்கள் பல அமைப்புக்களின் அறிக்கைகளை பார்த்துள்ளோம். அதானால் தான் இந்த சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான நம்பகமான, உறுதிப்படுத்தக்கூடிய விசாரணையை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம். இந்த விசாரணைகள் அவசியமானவை.
அத்துடன் போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப்பின் பயணம் இதற்குச் சிறந்த சந்தர்ப்பம்.
சிறிலங்காவின் நல்லிணக்க நகர்வுகள் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றுக்கு இவரது பயணம் அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்று நம்புகின்றோம். அனைத்து விசாரணைகளும் சுதந்திரமானதாகவும் நம்பகத்தன்மைமிக்கதாகவும் உண்மையானதாகவும் அமைய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

09 ஜனவரி 2014

சர்வதேச சமூகத்தின் உதவி தேவை-இராயப்பு ஜோசப்

அமெரிக்க போர்க்குற்ற விசாரணை குழுவினர் யாழ் மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோரை நேற்று பி.ப 3மணியளவில் ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் அமெரிக்க போர்க்குற்ற விசாரணையின் விசேட தூதுவர் ஸ்ரிபன் ராப் கருத்து தெரிவிக்கையில்
தாங்கள் வந்ததன் முக்கிய நோக்கம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையில் 2009ம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் சில தீர்மானங்கள் எடுப்பதற்காகவும் அது பற்றிய விபரங்களை திரட்டுவதற்காகவே வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் யாழ் ஆயர் தோமஸ் கருத்து தெரிவிக்கையில் போர் முடிவுற்று 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் வழமையான நிலைக்கு மக்கள் திரும்பவில்லையென்றும் மாகாண சபையின் மூலம் மக்களின் எதிர்பார்ப்பு திருப்தியாகாமல் ஒரு முறுகல் நிலையே தற்போதும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த யுத்த காலப்பகுதியில் குண்டுத் தாக்குதல் மூலம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மனிதக் கேடயமாகவே மக்கள் பயன்படுத்தப்பட்டனர்.மேற்படி போர்க்குற்ற வலயங்களிலே மக்கள் அதிகமாக கொல்லப்பட்டுமுள்ளனர். அத்தோடு மக்களின் இன அழிப்பையும் காணி அபகரிப்பையும் அரசு செய்து வருகிறது.மற்றும் காணாமல் போனோர் பற்றிய விசாரணை கொண்டு வரப்பட வேண்டும்.; தமிழ் அரசியலை தளம்பல் நிலைக்கு கொண்டு வரவே குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.அவை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இங்கு இராணுவத்தினரே அதிகம் உள்ளனர் சிவில் நிர்வாகம் தேவை.
போரின் இறுதிக் கட்டத்தில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், இரசாயன ஆயுதம் என்பவற்றை படைகள் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் சண்டையில் எப்போது எங்கே பாவித்தார்கள் என்பதையும் மக்கள் எமக்கு விபரித்துள்ளனர். அதனை அமெரிக்க தூதுவரிடம் கையளித்துள்ளோம் னெவும் தெரிவித்தார்.
மேலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்ய கூட முடியவில்லை எனவேதான் நாட்டிற்கு உண்மையும் நல்லிணக்கமும் உருவாக வேண்டுமானால் சர்வதேச சமூகம் எமக்கு ஒத்துழைப்பும் உறுதியும் அளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

06 ஜனவரி 2014

மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்கும்படி கோரிக்கை!

கிளிநொச்சியில் திடீர் மரணமடைந்த தன்னுடைய 14 வயதான மகனின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்ள கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தமது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த சிவாஜினி வீரலிங்கம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்‌சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருந்த மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தலைசுற்றி விழுந்து மரணமடைந்ததாகவும், இதனால் தமது குடும்பம் மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தாயாரான சிவாஜினிசிறிலங்கா அதிபருக்கு அனுப்பிவைத்திருக்கும் அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் வீரலிங்கம் (48 வயது) என்பவரின் மகனான நிதர்ஷனே நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் மரணத்தைச் சந்தித்திருக்கின்றார்.
2009ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தில் கைதான சுப்பிரமணியம் வீரலிங்கம் கடந்த ஐந்தாண்டு காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரது மூத்த மகனான நிதர்சனே ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார். இவரது ஏனைய 3 பிள்ளைகளும் பெண்களாவர். வீரலிங்கம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்போது மூத்த மகனும் மரணமடைந்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள்.
“என்னுடைய 14 வயதான மகனைப் பறிகொடுத்து தவித்துக்கொண்டு நிற்கின்றேன். தயவு செய்து என்னுடைய கணவரை இப்போதாவது விடுதலை செய்யுங்கள். அவர் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். என்னுடைய மூத்த மகன் தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் பல ஆண்டுகாலமாக தவித்துக்கொண்டு இருந்தவர். திடீரென தலைசுற்றி விழுந்து ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார். இதனால் எமது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மகனின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்வதற்காவது எனது கணரை விடுதலை செய்யுங்கள்” என மனைவி சிறிலங்கா அதிபரிடம் உருக்கமாகக் கோரியுள்ளார்.

05 ஜனவரி 2014

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு நாள் இன்று!

புகழ்பெற்ற ஈழத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து " இவன் தந்தை எந்நோற்றான் கொல் ' என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார் . தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார் . மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் . சிங்கள இராணுவம் , சிறப்பு அதிரடிப்படை , சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார் . அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது இவரது ஒப்பற்ற தொண்டுக்குச் சான்றாகும் .தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பல அறிக்கைகளை அவர் அளித்துள்ளார் . செம்மணி புதைகுழி போன்ற பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார் . சிறைகளில் சித்திரவதை , கேள்விமுறையின்றி கைது செய்யப்படுதல் , சட்டவிரோதமான படுகொலைகள் , காணாமல் போதல் போன்ற தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு அட்டூழியங்களை ஐ.நா. மனித உரிமைக் கமிசன் முன் ஆதாரபூர்வமாக அளித்து சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார் . பெல்ஜியத் தலைநகரான பிரசெல்ஸில் இயங்கும் ஐரோப்பிய பாராளுமன்றம் , இலண்டனில் உள்ள ராயல் நிறுவனம் மற்றும் பல்வேறு உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேராகச் சென்று புகார்களை அளித்தார் .
இதன் விளைவாக சந்திரிகாவின் கடுங்கோபத்திற்கு ஆளானபோதிலும் இறுதிவரை உயிரைப் பற்றிக் கவலைப்படாமலும் யாருக்கும் அஞ்சாமலும் தமிழர்களுக்காகத் தொண்டாற்றினார் .

ஆங்கிலத்தில் வெளிவந்த நினைவுரையின் மொழிபெயர்ப்பு.

மர்மமான துப்பாக்கிதாரிகளால் சுடப்படவேண்டியிருந்ததானது குமார் பொன்னம்பலத்திற்கு இந்த வேளையில் எள்ளளவும் எதிர்பார்க்கப்பட்டிராத செய்தியாகும் . ஏனெனில் , குறிப்பாக அவர் தனது நோக்கத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பிரசித்தமான காலகட்டத்திற்கும் மிகப்பிந்திய காலத்திலேயே இது நிகழ்ந்தது .
தலைகவிழ்ந்து மரணித்த நிலையில் இருக்கும் பொன்னம்பலத்தின் படம் எமது மனங்களில் எப்போதுமே பதிந்திருக்கும் . ஆனால் நாம் அறிந்துள்ள குமார் பொன்னம்பலமோ எமது அலுவலகங்களில் பிரவேசித்து அனைவருடனும் ஏன் ஒவ்வொருவருடனும் கூட சிநேகபூர்வமாக அளவளாவும் குமார் பொன்னம்பலமாகத் தானிருப்பார் . தீங்கே தராதஇ அன்பு நிறைந்தஇ இரக்கம் நிறைந்த மனிதர் ஒருவரின் சோகமான முடிவு அது .
அவர் கொல்லப்படவேண்டுமென விரும்பிய அவருக்கிருந்த இந்தக் கசப்பான எதிரி யார் ? அதை எமக்கு நினைத்துப் பார்க்கவே இயலாதுள்ளது . செய்தியாளர்களுக்குக் குமார் பொன்னம்பலம் ஒரு இரட்சகர் . ஏனெனில் எவருக்கும் செய்திப் பஞ்சம் ஏற்படுவதுண்டு . ஆனால் குமாருடன் ஏற்படுத்தும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவர் கவலையெல்லாம் ஒழிந்துவிடும் . பல விடயங்களில் , குறிப்பாகச் சிறுபான்மையினர் விடயங்களில் குமாரின் கண்ணோட்டங்கள் மிக ஆழமானதாகவும் இருந்தன . ஆனால் வனப்பு மிக்க அவரது ஆளுமையிலிருந்து வெளிப்படும் மேற்கோள் ஒன்றின் காரணமாகச் செய்தியின் பிரதி எப்போதும் மகிழ்விப்பதாகவே இருக்கும் .
மனித முகங்களை மறக்காதவர் குமார் . அவர்களிடமிருந்து செய்தியொன்றைப் பெற்றுக்கொண்ட புதிதாய் நியமனம் பெற்ற , அனுபவமில்லாத ஒரு செய்தியாளர் கூட அடுத்த தடவை குமாரைச் சந்திக்கும் போது அடையாளம் காணப்பட்டதன் அறிகுறியாக இலேசான ஒரு புன்முறுவலை நிச்சயமாக அவரிடம் காணலாம் . உறவு வளர்ந்து வருகையில் குமாரே பல செய்திகளுடன் பெரும்பாலும் புத்தகங்கள் பற்றிய விளம்பரச் செய்திகளுடன் தொலைபேசியில் அழைப்பார் . அவர் கூறும் விடயங்கள்இ செய்தியாளர் விவேகமானவராயிருந்தால் நன்கு பயன்படும் .
1980 களின் பிற்பகுதியில் குமார் தனது இறுதிக்காலத்தில் காணப்பட்டதை விட வேறுபட்ட ஒரு நபராகக் காணப்பட்டார் . இறுதிச் சில வருடங்களின் போது நிச்சயமாக இரு தரப்புகளிடமிருந்தும் அங்கீகாரம் மறுக்கப்பட்ட அவரெடுத்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து தோன்றிய வெறுப்புணர்வொன்று அவரிடம் காணப்பட்டது . 1980 களின் பிற்பகுதியில் அரசியல் முன்னேற்றம் கருதி அவர் எடுத்த முயற்சிகள் தோல்விகண்ட போது , தான் ஆதரிக்கும் அரசியல் சித்தாந்தம் இறுதியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையோடு அத்தோல்விகளை அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டார் .
நம்பமுடியாத அளவு செல்வம் படைத்தவர் எனக் குமார் அறியப்பட்டிருந்தார் . சில மேர்ஸிடஸ் வகைக் கார்களை அவர் சொந்தமாகக் கொண்டிருந்த போதிலும் , அவரணிந்த தங்கக் கைச்சங்கிலியைத் தவிர , அவரது ஆடையணிகள் கிட்டத்தட்ட அக்கறை எடுத்துத் தேர்ந்து அணியப்படாத எளியனவாகவே இருந்தன . முன்னோடி வடிவமைப்புக்கொண்ட ஆடைகளை அணிவதன் மூலமோ அல்லது ஆதரவாளர்கள் புடைசூழ வலம் வருவதன் மூலமோ தன்னை விளம்பரப்படுத்துவதை அவர் ஒருபோதும் நாடவில்லை .
தமிழன் என்பதற்கு ஓர் அடையாளமாக விளங்குவதே குமாரின் நோக்கமாக இருந்தது . வேட்டியொன்றை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறையும் அணிந்து கொள்வார் அவர் . இராணி வீதியில் உள்ள தனது வீட்டின் மதிற்சுவர் மீது சுவாமி அறையொன்றை நிருமாணித்திருப்பதோடு தனது கடிதத் தலைப்பிலும் ' ஓம் ' எனும் அடையாளத்தைப் பொறித்திருந்தார் அவர் . ஒரு வகையில் பார்த்தால் தனது தமிழ்த் தன்மையைப் பறைசாற்ற அவர் எடுத்த தளராத முயற்சிக்கே அவர் உயிர் விலையாகிப் போனது .
தன்னைக் கொலை செய்யக்கூடிய பகைவர்கள் தனக்கில்லையென்றே அவர் நம்பினார் . தமது பிரதிநிதியாக இருக்கக் கூடிய அளவுக்கு அவரின் செயற்பாடுகளைப் புலிகள் தமக்குகந்தவையாக ஏற்றிருக்காவிடினும் புலிகளோடு அவர் ' நல்லுறவையே பேணிவந்தார் . அவரது கருத்துகளுக்காகத் தெற்கு அரசியல்வாதிகள் அவரைக் கொல்லப் போவதில்லையெனத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவர்களுள் பெரும்பாலானோரைப் போதுமான அளவு நெருக்கத்தோடு அவர் அறிந்திருந்தார் . அவரது அபிப்பிராயங்களைவிட்டு அவர்கள் அவரைப் பகிரங்கமாகத் திட்டக் கூடுமேயொழிய நிச்சயமாகக் கொல்ல நினைத்திருக்க மாட்டார்கள் .பணமும் அந்தஸ்தும் இருந்தால்தான் அதிகாரம் வரும் என்று சொல்லக்கூடிய வேறொரு யுகத்தில் அவரது கூர்மதிக்குப் பொருந்திவரும் விதத்தில் அதிகார உயர் வர்க்கக் குழாமில் தனக்கெனத் தனியானதோர் இடத்தை அவர் பிடித்திருக்கக் கூடும் . ஆனால் பாராளுமன்ற அரசியலின் இன்றைய முரட்டுத்தன்மை வாய்ந்த குளறுபடியான உலகத்தில் அவருக்கு இடமிருக்கவில்லை .
அவரது கருத்துகள் எதுவாயிருப்பினும் , குமார் பொன்னம்பலத்தைப் போன்ற ஓர் அரசியல் வாதி பாராளுமன்றத்திற்கே அழகூட்டுபவராய் இருந்திருப்பார் . மக்களின் செல்வாக்குக் கிடையாத விடயங்களுக்கு ஆதரவளிப்பவராக தோல்வியுற்ற விடயங்களுக்கு உயிரூட்டி முன்கொண்டு வருபவராக இருந்திருப்பார் . கட்சியின் கைப்பாவையாகத் தரந் தாழ்ந்து போயிருக்கும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போலல்லாது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் உயர்வாய் மதிக்கப்படுகின்ற ஒரு துடிப்பான நிறுவனமாக சட்டசபையை மாற்றியமைக்கும் தனிவழி செல்லும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருந்திருப்பார் .

04 ஜனவரி 2014

விக்கினேஸ்வரனும் சுமந்திரனும் ஜனாதிபதியுடன் இரகசிய உடன்படிக்கை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது வாகன சாரதியாக தொழிற்படும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் மகிந்த ராஜபக்ஸவுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று வவுனியாவில் இடம்பெற்றது. அச் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களிடம் ஊடகவியலாளர் ஒருவர், இரா.சம்பந்தன் ஐயாவையும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயாவையும் ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே இச் சந்திப்பில் கலந்து கொள்ளுவீர்களா? என கேட்ட போது, இரா.சம்பந்தன் அவர்கள் இது தனிப்பட்ட விடயம் இல்லை. கூட்டமைப்புடன் கலந்தாலோசித்தே இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந் நிலையில் அதற்கு மாறாக எந்தவிதமான முன்னறிவித்தலும் இன்றி முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவருடைய தற்போதைய சாரதியான சுமந்திரனுடன் சென்று ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை செய்துள்ளார். என்ன விடயம் கதைக்கப்பட்டது என தெளிவாக தெரிவிக்கப்படாத போதும், இவர்கள் இருவரும் ஜனாதிபதியுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளதாகவும் இதன்படி அடிக்கடி ஜனாதிபதியை சந்திக்க வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03 ஜனவரி 2014

மகிந்தவைக் காப்பாற்றும் முயற்சியில் களம் இறக்கப்படுகிறாரா விக்னேஸ்வரன்?

இன்றைய ஊடகங்களில் வெளிவந்திருந்த ஒரு புகைப்படம் ஈழத் தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் என்று நம்பலாம்.
புகைப்படத்தின் ஒரு பக்கத்தில், நிமிர்ந்த வெற்றிச் சிரிப்புடன் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஷவும், மறு பக்கத்தில், குனிந்த பணிவுடன் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனும் நின்றிருந்தார்கள். ரொம் அன்ட் ஜெரி பாத்திரங்களை உருவாக்கிய வால்ட் டிஸ்னி அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், இந்தப் படத்தின் இருவரது பொருத்தங்களைக் கண்டு அசந்திருப்பார்.
வால்ட் டிஸ்னி அவர்களது ரொம் அன்ட் ஜெரி கதாபாத்திரங்களாக வரும் பூனையும், எலியும் அடிக்கடி சண்டை இட்டுக்கொள்ளும். இடையே இரண்டுமே வெள்ளைக் கொடியுடன் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளும். பின்னர், ஒன்றை ஒன்று குழிபறிக்கும் வேலைகளில் ஈடுபடும். பார்ப்பதற்கு மிகுந்த வேடிக்கையாக இருக்கும். இந்தக் கதாபாத்திரங்கள் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை வசியப்படுத்தி, இன்னுவரை வரவேற்பைப் பெற்றுள்ளன.
சிறுவர்களைச் சிரிக்க வைக்க வால் டிஸ்னி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கதாபாத்திரங்களை இன்று திடீரென அடம்பெற்ற மகிந்த – விக்னேஸ்வரனது சந்திப்பும், அது குறித்து வெளியான புகைப்படமும் நினைவுக்குக் கொண்டு வந்துள்ளது. மகிந்தவின் சிரிப்புக்குப் பின்னால், சிங்கள இனவாதத்தின் நிமிர்வும், விக்னேஸ்வரனின் குனிவுக்குப் பின்னால், தமிழ்த் தேசியத்தின் தடுமாற்றமும் இருக்கும் என்பது நிச்சயம்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஒவ்வொரு கணமும் ஈழத் தமிழர்களது எதிர்காலம் திசை நிர்ணமமற்ற வகையில் சுழலுக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குத் தென்படும் மிதவைகளைக் கொண்டு கரையேறத் துடிக்கும் தமிழ் மக்களை அவர்கள் நம்பிய மிதவைகளே கல்லாக மாறி, அவர்களைப் புதையுண்டு போகச் செய்கின்றன.
ஒரு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னர், இன்னொரு புயலே வந்த தமிழ்த் தேசியத்தை ஆட்டம் காணச் செய்கின்றன. இறுதிப் போரின் பின்னரான ஈழத் தமிழர்களது அரசியல் தலைவிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒவ்வொரு கட்டத்திலும் இருளுக்குள் புதைக்கப்படுவதாகவே உள்ளது. அரசியல் விவேகமற்ற சுயநலமிகளால் கொண்டு செலுத்தப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு முடிவும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களது பெறுமதிகளைச் சிதறடிப்பதாகவே உள்ளது.
சிறிலங்காவுக்கான ஜனாதிபதி தேர்தலில், இன்னொரு போர்க் குற்றவாளியான சரத் பொன்செகாவுக்கு ஆதரவு வழங்குவதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவித்தல் மகிந்த ராஜபக்ஷேவை இன்னும் பலப்படுத்தியது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டதுடன், மேடையில் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து சம்பந்தன் ஈழத் தமிழர்களது உணர்வினைக் காயப்படுத்தினார். சிங்கள இனவாதிகளின் கைதட்டல்களுக்காக, விடுதலைப் புலிகளையும், தேவியத் தலைவர் அவர்களையும் கறை படுத்த முயன்ற சம்பந்தன் உலகத் தமிழர்கள் மத்தியில் தரம் தாழ்ந்து போனார்.
இப்போது விக்கினேஸ்வரன் முறை. கருத்துக்களால் தமிழ் உணர்வினைக் காயப்படுத்திய வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன், இப்போது சம்மந்தி உறவுடன் சிங்களத்திற்குத் தலை குனிந்து தமிழினத்தை அவமானப்படுத்தியுள்ளார்.
ஒரு மாகாணத்தின் முதல்வர் என்ற வகையில் விக்னேஸ்வரன் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை சந்திப்பது என்பது தோஷமான விடயம் அல்ல. ஆனால், நிமிர்ந்தே நின்ற தமிழீழ மக்களை முள்ளிவாய்க்காலில் சின்னாபின்னமாக்கி, நீதி கேட்கவும் முடியாதவர்களாக இராணுவ ஆக்கிரமிப்புக்குள் முடக்கப்பட்ட தமிழீழ மக்களது அவல வாழ்வுக்கு முடிவு கட்டாமல், அது குறித்துத் தெளிவான தகவல்கள் எதையும் தமிழ் மக்களிடம் தெரிவிக்காமல் விக்னேஸ்வரன் சிங்கள ஆட்சித் தலைவரைச் சந்தித்தது குறித்தே தமிழர்கள் கொந்தளித்துப் போயுள்ளார்கள்.
இன்னமும் இரண்டே மாதங்களின் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையில் தமிழீழ மக்களுக்கான நீதி கோரும் குரல்கள் ஓங்கி ஒலிக்கவிருக்கும் நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்களின் சந்தேகத்திற்குரிய பின்கதவு அரசியல்வாதியான சுமந்திரன் மட்டுமே கலந்து கொண்டது மிகுந்த எச்சரிக்கைக்குரிய நிகழ்வாகும். போர்க் குற்றச்சாட்டிலிருந்து மகிந்த ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதற்காக சுமந்திரன் எடுத்துவந்த முயற்சிகள் தமிழுலகம் அறியாதது அல்ல. சம்பந்தரை பின்றநின்று இயக்கி, தமிழ்த் தேசியப் படகின் ஓட்டைகளை உருவாக்கிவரும் சுமந்திரனே விக்னேஸ்வரனையும் பின்நின்று இயக்குகின்றார்.
விக்கினேஸ்வரனின் சம்மந்தி வாசுதேவ நாணயக்காரவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நிச்சயம் ஈழத் தமிழர்களது அவலங்களைப் போக்குவதற்கானதாக இருந்திருப்பதற்குச் சாத்தியமே இல்லை. ஏனெனில், வாசுதேவ நாணயக்கார அமைச்சராகப் பதவியிலிருந்த காலத்திலேயே ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பு நிகழ்ந்தேறியது. அதன் பின்னரான, ஈழத் தமிழர்களது அத்தனை அவலங்கள் நடைபெற்று வருகின்ற காலத்திலும் வாசுதேவ நாணயக்கார சிங்கள ஆட்சி பீடத்தில் மந்திரியாகவே பதவி வகித்து வருகின்றார். எனவே, தனது சம்மந்தி உறவைப் பயன்படுத்தி, வாசுதேவ நாணயக்கார மகிந்தரை போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்ப வைக்கவே முயற்சிப்பார். அடுத்த சந்திப்புக்களில், விக்னேஸ்வரனின் சால்வை நிறம் மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சுவிசிலிருந்து கதிரவன்

02 ஜனவரி 2014

வடக்கில் மக்கள் காணியில் உல்லாச தங்குமிடம்!

கீரிமலை பிரதேசத்தில் J/ 226 கிராமசேவையாளர் பிரிவில் கிருஷ்ணன் கோவிலடியில் உள்ள மக்கள் காணியிலேயே குறித்த தங்குமிடம் கட்டப்பட்டு வருகின்றது.வடக்குக்கு ஜனாதிபதி செல்லும் போது தங்கி செல்வதற்காகவே குறித்த இந்த தங்குமிடம் கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.நவீன வசதிகளுடன் கட்டப்படும் தங்குமிடத்தில் நடுவினில் அதிநவீன வசதிகளுடனான பெரிய வீடு ஒன்றும் அதனை சுற்றி நவீன வசதிகளுடனான 7 சிறிய வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.இந்த தங்குமிடத்தை சுற்றி அதிவேக நெடுஞ்சாலைக்கு பயன்படுத்தப்படும் தரம் உயர்ந்த காப்பற் மூலம் வீதிகள் போடப்பட்டுள்ளன.இந்த தங்குமிடத்தை சுற்றி உள்ள காணிகளில் இருந்து கல் அகழ்ந்ததினால் பாரிய குழிகள் காணப்படுகின்றன. அக் குழிகளுக்குள் கடல் நீரை உட்புகுத்தி தங்குமிடத்தை சுற்றி (அகழி போன்று) தண்ணீர் ஓடக்கூடியவாறான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.வலி வடக்கில் இருந்து கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நலன்புரி முகாம்களிலும் உறவினர் ,நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.இம்மக்களின் சொந்த இடமான வலி வடக்கில் 24 கிராமசேவையாளர்கள் பிரிவில் உள்ள 6 ஆயிரத்து 382 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் கையகபடுத்தி உள்ளனர்.
அக் காணிகளில் இராணுவத்தினரால் யோக்கட் தொழிற்சாலை ,கோல்ப் விளையாட்டு மைதானம், நட்சத்திர விடுதி என்பன அமைக்கப்பட்டுள்ளதுடன் விவசாய செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன இந் நிலையில் தற்போது ஜனாதிபதிக்கான தங்குமிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் உள்ள வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு தற்போது இராணுவத்தினரால் இலகுவில் தழைத்து பெருக கூடிய மரவகையான 'கிளிசொரியா' (ஒருவகை மரம் ) தடிகள் நடப்படுகின்றன.

01 ஜனவரி 2014

ராதிகாவை விசாரிக்கின்றோம்-சிங்களம்

தமிழர் தாயகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகை தந்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை தாம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக சிறிலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது.முன்னதாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தியினை சிங்கள அரசு மறுத்திருந்தது. ஆனால் தற்போது தாம் விசாரணை செய்து வருவதாக கூரியுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிவரவு அதிகாரிகள் என்ற போர்வையில் ராதிகாவை பயங்கரவாத புலனாய்வாளர்கள் விசாரணை செய்துவருகின்றனர்.