16 ஏப்ரல் 2016

தமிழகத்தை கன்னடர்,தெலுங்கர்,மலையாளர் ஆள்வது சரி தமிழர் ஆண்டாள் இன வெறியா?

கோவை சிங்காநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப்பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், சொன்னதைச் செய்தோம் எனக் கூறும் ஜெயலலிதா, தன் ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போவதாக சொன்னாரா? என கேள்வி எழுப்பினார்.
"கன்னடர் வந்து நம் தமிழகத்தை ஆண்டுவிட்டார், வாழ்ந்திட்டீர்கள். மலையாளர் வந்து நம் தமிழகத்தை ஆண்டார் வாழ்ந்திட்டீர்கள். தெலுங்கர் வந்து நம் தமிழகத்தை ஆண்டார் வாழ்ந்திட்டீர்கள். அது போல தமிழகத்தை ஒரு முறை தமிழன் கையில்தான் கொடுத்துப்பாருங்களேன். கன்னடர் ஆளலாம் அது சரி, மலையாளர் ஆளலாம் அது சரி, தெலுங்கர் ஆளலாம் அதுவும் சரி, தமிழகத்தை தமிழர் ஆண்டால் அது வெறியா ?!
கலைஞர் அவர்கள் கூறுகிறார், மதுவை மூட வேண்டும் என்று. ஆம் உண்மைதான் நீங்கதான திறந்து வெச்சீங்க. உங்ககிட்டதான சாவி இருக்கும், நீங்கதான் மூடணும். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 'தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுவேன்' என்கிறார். முதலில் உங்கள் மந்திரிகளை தலை நிமிர்ந்து நடக்க வையுங்கள். மேலும் அவர் சொன்னதைச் செய்தோம் எனக் கூறிக்கொண்டு வருகிறார். தன் ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போவதாக எங்களிடம் சொன்னீர்களா ?!
தஞ்சாவூர் தி.மு க கோட்டை, கோவை அ.தி.மு.க.கோட்டையா? இந்த கோட்டை எல்லாம் எதுனால வந்தது? இந்த தமிழக மக்கள் போட்ட ஒவ்வொரு ஓட்டினாலும், ஒரு தடவ மாத்திப் போட்டுப்பாருங்க, நீங்க இல்லைனா இவுங்களாம் யாரு? ஜெயலலிதா மார்கெட் குறைந்த பழைய சினிமா நடிகை, கலைஞர் அவர்களும் அவர் கால கட்டத்தில் மார்கெட் இழந்த ஒரு கதாசிரியர், மத்தபடி ஒண்ணும் இல்ல.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை சர்க்கரை எல்லாம் தடை செய்வொம். கருப்பட்டி, பனங்கற்கண்டுகளை பயன்படுத்த சொல்லுவோம். 'இல்ல.. எனக்கு அதுதான் பழகிப் போச்சு!' என்று சொன்னால், அந்த வெள்ளை சர்க்கரைக்கு இரட்டிப்பு வரியைக் கூட்டுவோம், நீ சாகறது சாவு எங்களுக்கு வரி கொடுத்திட்டு சாவு. மேம்பாலங்களை இடிப்பேன். அனைத்தும் பாதாள வழிப்பயணமாக மாத்துவேன். தானியங்கி பேருந்துகளை கொண்டு வந்து அதைக் கண்காணித்துக் கொள்ள ஊனமுற்றோரையும், திருநங்கைகளையும் பணியமர்த்துவேன்.
தமிழகத்துக்கு தலை நகரையே மாற்றுவேன். நம் தமிழகத்திற்கு ஐந்து தலை நகரம், அதாவது நிர்வாக வசதிக்காக சென்னையை திரை மற்றும் கணினி துறையின் தலைநகராக தொடர வைப்போம், அடுத்து திருச்சியை நிர்வாகத் தலை நகராக மாற்றுவோம், கன்னியாகுமரியை மெய்யியல் தலைநகராக மாற்றுவோம், மதுரையை கலை, பண்பாடு, இலக்கிய தலை நகராக மாற்றுவோம், அடுத்து தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த கோவையை தொழிற்துறையின் தலை நகராக மாற்றுவோம்.
அடுத்து மந்திரிகளில் எவருக்கு உடல் சரி இல்லை என்றாலும் அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும். இலவசமென கல்வியைத் தவிர எதுவும் இருக்காது. அனைவரது வாழ்வாதரத்தையும் உயர்த்துவோம். நிலங்களை உரிமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கி அரசே அதில் விவசாயம் செய்யும். விவசாயம் என்பது அரசு வேலையாக்கப்படும்.
மொழிக் கொள்கை என்று பார்த்தால் தமிழ் வழி கல்வித் திட்டம், ஆங்கிலக் கல்வி கட்டாயம் ,சிறப்புக் கல்வி அனைவருக்கும் உண்டு. ஒரு குழந்தைக்கு ஓவியம் விருப்பப் பாடமாக இருந்தால், அதற்கு ஓவியம்தான் சிறப்புப் பாடம். அந்த குழந்தை அந்த பாடத்தில் தோற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது. இதன் மூலம் தனித்திறன் வளரும்.
அடுத்து நீர் சேமிக்கும் திட்டத்தை மேம்படுத்துவோம். அடுத்து எது தமிழ்த்தாய் வாழ்த்து? நீராரும் கடலுடுத்த பாடலா? திராவிடர் நல் திருநாடா? மானத் தமிழ் நாட்டுல எங்கடா திராவிடர் நாடு? கொளுத்தி விடுவோம்.தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' போடுவோம். இதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக அத்தனையும் மாற்ற போகிறோம்" எனக் கூறினார்.

நன்றி:விகடன்

12 ஏப்ரல் 2016

இது பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்குமான போர்!சீமான் முழக்கம்!

இதுவரை நான் தூங்க விடாமல் தடுத்தேன்.இப்போ உலகம் முழுதும் இருப்பவர்கள் என்னை தூங்க விடாமல் தடுக்கிறார்கள் என இன்றைய குன்னூர் எழுச்சியுரையில் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.நல்லதொரு ஆட்சி மலரவும் தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் தமிழக மக்கள் முன்வரவேண்டும்.தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு அளிக்கப் போகும் வாக்கு உலகத்தமிழர்களின் விடிவுக்கான வாக்கு என்பதை புரிந்து கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென புளியங்கூடல்.கொம் வலைக்குழுமம் தமிழக வாக்காளர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

08 ஏப்ரல் 2016

இலங்கையில் அதிகரித்து வரும் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு,பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள காட்டுப் பாலத்தடி பகுதியில் இருந்து நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டி ஒன்று காணப்படுவதாகவும்,குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பாலத்திற்குள் வீழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.அண்மைக்காலங்களில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுவதான செய்திகள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

30 மார்ச் 2016

மறவன்புலோவில் வெடி பொருட்கள் மீட்பாம்!

தென்மராட்சி மறவன்புலோ மத்தியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் பல நேற்றிரவு செய்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது,தற்கொலை அங்கி-1,கிளைமோர்-4 கிளைமோர் பற்றறி-2 C4 வெடிமருந்து - 12kg 9MMகைதுப்பாக்கி ரவை-100, சிம் காட்டுகள் 5 என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த அவர்கள் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனராம்.

20 மார்ச் 2016

உலகத் தமிழர்களை காயப்படுத்திய வைகோவின் பேச்சு!

காலம் காலமாக தமிழர்களுக்கு துரோகம் இளைக்கும் படலம் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது,அந்த வழியிலே தன்னையும் வெளிக்காட்டி இருக்கின்றார் தமிழர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட,மரியாதைக்கு உரியவராக கருதப்பட்ட வைகோ அவர்கள்.தமிழீழப் போராட்டம் தனிலே தன்னையும் ஒரு போராளியாகக் காட்டிக்கொண்ட வைகோ அண்மையில் தமிழ் தேசியத்திற்கு எதிராக பேசியிருப்பது அவரின் வேடம் கலைந்து விட்டதையே காட்டுகிறது.தானும் ஒரு அற்ப அரசியல்வாதிதான் என்பதையே அவரின் பேச்சு நிலை நிறுத்தி நிற்கிறது.அவரின் இப்பேச்சுக் குறித்து தமிழ் உணர்வாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் எத்தகைய கண்டனங்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் உன்னத நோக்கங்களுக்காக போராடி வரும் சீமான் அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டியது உலகத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

11 மார்ச் 2016

திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களுக்கு சம்பந்தன் அனுதாபம்!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சளைக்காது குரல் கொடுத்தவர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். காலம் சென்ற மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- 1977ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் குடும்பம், அரசியல் என இரண்டறக் கலந்து வாழந்தவர்.அத்துடன், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகச் சளைக்காது குரல் கொடுத்த ஒருவராவார். தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக கைதுசெய்யப்ட்டு அரசியல் கைதியாக திருமதி மங்கையர்க்கரசியும் சிறைவாசம் அனுபவித்தவராவார். தான் இளம் சட்டத்தரணியாக தொழில்புரிந்த காலத்திலிருந்தே தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் அவரின் மனைவியுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளேன். தமிழரசுக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் அனைவராலும் "மங்கை அக்கா" என அன்புடன் அவர் அழைக்கப்பட்டார்.
தமிழ் மக்களின் விடிவுக்காக மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வந்த அவரது இழப்பு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் அனைவருககுமே ஒரு பேரிழப்பாகும். சத்தியாக்கிரகம் உள்ளிட்ட எமது கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்று செயற்பட்ட துணிச்சல்மிக்க ஒரு பெண்மணியாவார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 பிப்ரவரி 2016

மீண்டும் ஒப்பந்தம் இட்டனர் தி.மு.கவும் காங்கிரசும்!

தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை தி.மு.க.காங்கிரஸ் இணைந்து சந்திக்கும் என இருகட்சிகளும் தெரிவித்துள்ளன. தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இடையேயான சந்திப்பையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது.காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் ஆகியோர் சனிக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்திற்கு வந்து சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், தி.மு.க. - காங்கிரஸ் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார்.எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது இனிமேல்தான் முடிவுசெய்யப்படும் என்றும் இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுமா என்பதை தி.மு.க. தலைமையே முடிவுசெய்யும் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.ஈழப் பிரச்சனையை முன்வைத்து 2013ஆம் ஆண்டில் தி.மு.க.வும் காங்கிரசும் பிரிந்த நிலையில், இப்போது மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது குறித்துக்கேட்டபோது, அரசியலில் பல்வேறு நெருக்கடிகள், சூழல் காரணமாக பல்வேறு விதமான முடிவுகளை எடுக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால், பெரும்பலான தருணங்களில் இந்த இரண்டு கட்சிகளுமே இணைந்து தேர்தலை சந்தித்திருப்பதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தே.மு.தி.கவுக்கு கருணாநிதி ஏற்கனவே ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன. 2013ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக எழுந்த பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இரு கட்சிகளுமே தனித் தனியாக சந்தித்தன.

09 பிப்ரவரி 2016

யாழ்,பிரதேச செயலகங்களுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நியமனம்!

வட,மாகாணசபை
யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலுமுள்ள தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் செயற்படுவதற்காக, வட மாகாண சபை உறுப்பினர்களை ஒவ்வொரு பிரதேச செயலகம் ரீதியாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.பிரதேச செயலகங்களுக்குரிய அபிவிருத்தி, ஏனைய துறைசார் பௌதீக வள தேவைகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை மாகாண சபை உறுப்பினர்கள் முன்னெடுப்பதுடன், அவர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை மட்டும் தன்னிடம் முறையிடுமாறு முதலமைச்சர் தெரிவித்ததுள்ளார். இதன்மூலம், வட மாகாணத்துக்குட்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி, ஏனைய துறைசார் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை இலகுவில் நடைமுறைப்படுத்துவதற்கு வடமாகாண சபையால் முடியும் என எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

நியமனம் பெற்றோர் பெயர்விபரம்:
01.அனந்தி சசிதரன்- வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை)
02. எம்.கே.சிவாஜிலிங்கம்- வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி)
03. விந்தன் கனகரட்ணம் - காரைநகர்
04. பா.கஜதீபன்- நல்லூர்
05. ச.சுகிர்தன் - வேலணை தெற்கு, நெடுந்தீவு
06. கே.சயந்தன்- யாழ்ப்பாணம்
07. கே.சர்வேஸ்வரன்- கரவெட்டி
08. ஆ.பரஞ்சோதி- உடுவில்
09. சி.தவராசா- பருத்தித்துறை
10. வே.சிவயோகன்- கோப்பாய்
11. எஸ்.அகிலதாஸ் - ஊர்காவற்றுறை
12. கே.தர்மலிங்கம்- சங்கானை, சண்டிலிப்பாய்
13. இமானுவல் ஆர்னோல்ட்- சாவகச்சேரி

03 பிப்ரவரி 2016

தமிழீழம் குறித்துப் பேசுவதில் பயனில்லை-சிறீதரன்

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிறிதரன் தெரிவித்ததாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சிவஞானம் சிறிதரன்,
“தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிடவில்லை. தமிழீழ கோரிக்கைக்கு அப்பால் சென்று தீர்வை முன்வைத்து போட்டியிட்டவர்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர். கிடைக்கப்போகும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலுள்ள அரசியலமைப்புக்களை போன்றதொரு அரசியலமைப்பை இலங்கையில் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை ஆதரிக்க வேண்டும். தமிழீழம் பற்றி பேசி, புதிய அரசியலமைப்பு முயற்சிகளை குழப்பாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இன்று சிறிதரன் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் நிறுவனத் தலைவரான தந்தை செல்வா அவர்கள் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி 1976 ஆம் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தது. “மேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.” என தீர்மானத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தை செல்வா அவர்கள் தீர்மானத்துடன் நின்றுவிடாது, மக்கள் கருத்தை அறியும் முகமாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியானது இந்த தீர்மானத்தை முன்வைத்து மக்கள் ஆதரவைக் கோரியது. தமிழ் மக்களும் அமோக ஆதரவைத் தெரிவித்து கூட்டணியை வெற்றிபெறச் செய்தார்கள் என்பது வரலாறு,
ஆனால் அதன் பிறகு தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியோ தாம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை. தமிழீழத்தை கைவிடுகிறோம் என எந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டு மக்களைச் சந்தித்ததில்லை . நிலைமை இப்படியிருக்கும்போது தமிழ் மக்கள் தமிழீழத்தை நிராகரித்துவிட்டார்கள் என்று சிறிதரனால் எப்படி முடிவுக்குவர முடிந்தது. அடுத்து வரும் தேர்தல்களில் சிறிதரனாவது கிளிநொச்சியில் ‘தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம்’ ‘என் தலைவர் பிரபாகரன் இல்லை சம்பந்தன் தான் ‘ என்ற உண்மையைச் சொல்லி வாக்குச் சேகரிப்பாரா என்பது சமானியர்களின் கேள்வி.

நன்றி:தமிழ் லீடர்

31 ஜனவரி 2016

ஒரு பெண் போராளியின் வாழ்க்கைப் போராட்டம்!

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகவுள்ளன. இந்த நிலையில் போருக்குப் பின்னரான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் பற்றி பேசுகின்ற இலக்கியப் படைப்புகள் பல வெளிவருகின்றன.
அந்த வகையில், முன்னாள் போராளிகளான பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கும் விதத்தில் யாழிசை என்ற நாவல் ஒன்று வெளிவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட இந்த நாவல், இலக்கிய உலகில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நாவலை எழுதிய சிவ ஆரூரன் என்ற சிவலிங்கம் ஆரூரன் ஒரு பொறியியல் பட்டதாரி.
மெகசின் சிறைச்சாலையில் கடந்த 8 ஆண்டுகளாக 'அரசியல்' கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சிவ ஆரூரனின் முதல் இலக்கிய முயற்சி இந்த நாவல் தான்.
சிறைச்சாலையில் நூல் வாசிப்பு மூலம் பெற்ற இலக்கிய அறிவையும் வாழ்க்கை அனுபவத்தையும் கொண்டு அவர் இந்த நாவலை எழுதியுள்ளார்.இந்த நாவல் பற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வவுனியாவில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளரும் திறனாய்வாளருமாகிய நடராஜா பார்த்தீபன், 'அண்மைக் காலத்திலே நான் வாசித்த நாவல்களிலேயே இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல் என்று கூற விரும்புகிறேன்' என்றார்.'யாழிசை நாவலின் கதாநாயகி சமூகத்திலே படுகின்ற துன்பங்களையும், கஸ்டங்களையும் இந்தக் கதையின் ஊடாகக் காட்டுகின்ற நாவலாசிரியர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் இன்றைய சமூக வாழ்க்கையை குறியீடாக சித்தரித்திருக்கின்றார் என்பதை மறுக்க முடியாது' என்றார் பார்த்திபன்.
எம் மண்ணின் மைந்தர்கள் பற்றி தத்ரூபமான கதையை நாவலாசியர் அமைத்துள்ளார் என்றார் பார்த்திபன்.

நன்றி:பிபிசி தமிழோசை

23 ஜனவரி 2016

வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ஜெர்மனி!

ஜெர்மனியின் எசன் நகர்
உலகிலே வாழ்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 41 ஆவது இடத்திலுள்ளது. இதில் ஜெர்மனி முதலாம் இடத்திலும் கனடா, பிரித்தானியா ஆகியன இரண்டாம், மூன்றாம் இடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அண்மையில் உலகப் பொருளாதார மாநாடு சுவீடனில் உள்ள லாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களிடையே இது தொடர்பான கருத்துக்கணிப்பு நடைபெற்றபின்னரே இந்தப் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. இதில் முன்னணியில் இருக்கும் 60 நாடுகளின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்து. உலகின் 60 நாடுகளின் கலாசாரம், தொழில், பாரம்பரியம், வர்த்தகம், வாழ்கை தரம் போன்ற 24 வகை தகுதிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண்களின் அடிப்படையில் இதில் முதலாம் இடத்தினை ஜேர்மனி, இரண்டாம் மூன்றாம் இடத்தினை முறையே கனடா, பிரித்தானியாவும் பெற்றுள்ள நிலையில் 4 ஆம் இடத்தினை அமெரிக்காவும் பெற்றுக்கொண்டன. மேலும் ஐந்து தொடக்கம் 10 வரையில் முறையே சுவீடன் (5), அவுஸ்திரேலியா (6), ஜப்பான் (7), பிரான்ஸ் (8), நெதர்லாந்து (9), டென்மார்க் (10) ஆகிய நாடுகளும் பெற்றுக்கொண்டன. இதில் சீனா 17ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

11 ஜனவரி 2016

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (38). இவரது மனைவி கலைச்செல்வி (32). இவர்களுக்கு கவிப்பிரபா (13), நவீனா (7) என்று இரு பெண் குழந்தைகளும், பத்து மாதத்தில் குகன் என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.நவீனாவுக்கு காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தது. கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல, பத்து மாத குழந்தை குகனுக்கும், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது, சில நாட்களுக்கு முன் தெரியவந்தது.குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு குறித்து, கலைச்செல்வி தொடர்ந்து கவலையுற்று வந்துள்ளார். இதனால், மேலும் விரக்தியடைந்த கலைச்செல்வி, நேற்று காது குறைபாடுள்ள இரு குழந்தையும் தன்னுடைய உடலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு, கயிற்றின் இன்னொரு முனையில் பெரிய கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.இந்நிலையில், அதிகாலையில் தூங்கி எழுந்த மூத்த மகள் கவிப்பிரபா, தனது தாய், தங்கை, தம்பியை காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை எழுப்பியுள்ளார்.கதவை திறந்து பார்த்தபொழுது வீட்டின் வெளிப்பக்கக் கதவு பூட்டியிருந்ததால், அருகில் உள்ள ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து திறக்கச் சொல்லியுள்ளார். பின்னர், கலைச்செல்வியையும் குழந்தைகளையும் தேடிப்பார்த்துள்ளனர்.எங்கும் காணாததால், மீண்டும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலைச்செல்வி எழுதி வைத்திருந்த கடிதம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த செல்வராஜ, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன் பேரில், உடுமலை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து, சடலங்களை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

29 அக்டோபர் 2015

தமிழரின் உரிமைகளை போராடியே பெறவேண்டும்-சொல்ஹெய்ம்!

இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைப் பங்கு குறித்து லண்டனில் நூல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. மார்க் சோல்டர் என்ற ஆய்வாளரினால் இயற்றப்பட்ட 'சிவில் யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டுவர இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி' என்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில், நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவராகப் பலவருடங்கள் பணிபுரிந்த எரிக் சொல்ஹெய்மும், முன்னாள் நோர்வே அமைச்சர் விதார் ஹெல்கிசனும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றபோதிலும், ஈழத்தமிழர்கள் களத்திலும், புலத்திலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொள்வதன் ஊடாகவே தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், சிங்களவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகளை ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவது கிடையாது என்றும் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே வாக்களித்திருந்தனர் என்றும், தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்தே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது என்றும் சுட்டிக்காட்டிய அவர், புதிய அரசு நேர்த்தியான வழியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சர்வதேச சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

25 செப்டம்பர் 2015

மன்னார் ஆயரின் உடல் நிலையில் முன்னேற்றம்!

மன்னார் ஆயர்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கும் ஆலோசனை மருத்துவர் டாக்டர் பெண்டன் ஜியாப் கூறுகிறார்.சிங்கப்பூரிலிருந்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், டாக்டர் ஜியாப், "ஆயரின் உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறது. அவரது வலது கையிலும் வலது காலிலும் இன்னும் கொஞ்சம் தசைப் பிடிப்பு இருக்கிறது. அவருக்கு தரப்படும் பிசியோதெரப்பிக்கு ( அதாவது இயன்முறை சிகிச்சை)அவர் நல்லமுறையில் ஒத்துழைத்து பயிற்சி பெற்று வருகிறார். நடை பழகும் கருவியை வைத்துக்கொண்டு நடக்கிறார். உடையணிவது போன்ற அன்றாட வேலைகளைச் செய்ய அவருக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது. அவருக்கு வந்த ஸ்ட்ரோக்கை வைத்துப் பார்க்கும்போது, இது ஒன்றும் அசாதாரணமானதல்ல" , என்றார்.சிகிச்சை இன்னும் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதங்கள் வரை தொடரக்கூடும் என்று கூறிய டாக்டர் ஜியாப், ஆனால் அவர் இலங்கைக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் திரும்ப முடியும் என்று கருதுவதாகக் கூறினார்.

19 செப்டம்பர் 2015

தானும் இனவாத சிங்களவன்தான் என்பதை நிரூபிக்கிறார் விக்கிரமபாகு!

ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது ஜனநாயகத்திற்காக போராடிய எம்மைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழர்கள் வாக்களிக்காததால் தான் அவர் தோல்வி அடைந்தார். “ரணில் விக்கிரமசிங்க இனவாதியல்ல. அவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர். கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் கோரும் உரிமை எவருக்கும் இல்லை.
கலப்பு நீதிமன்றம் என்ற பரிந்துரை, ஜனநாயகத்துக்காக போராடிய எம்மை, இலக்கு வைத்து அவமானப்படுத்தும் செயல்.இந்தக் கலப்பு நீதிமன்றம், சிலரால், ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், முன்னைய காவல்துறை, நீதித்துறை தான் இலங்கையில் இன்னமும் இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. ஜனவரி 8 ம் திகதி ஏற்பட்ட புரட்சி எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தியுள்ளது.
புதிய இடதுசாரி முன்னணி, தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளையும், வடக்கில் போரின் போது குற்றங்கள் இழைக்கப்பட்டது என்பதையும், ஏற்றுக் கொள்கிறது.லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, தாஜுதீன் படுகொலைகளும் போர்க்குற்றங்களுக்குள் அடக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆயுதப்படைகளினால், போர்க்காலத்தில் தான் இவை மேற்கொள்ளப்பட்டன.இவை குறித்து விசாரிக்க சிறிலங்கா தமது சொந்த நீதிமன்றத்தை உருவாக்க முடியும்.இந்தியாவைப் போன்று இந்தப் பிரச்சினையை ஒற்றையாட்சி அரசுக்குள் தீர்க்கப்பட முடியும். சமஸ்டி முறை இங்கு தேவையற்றது.தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும் வெள்ளையின மக்களையும், குடும்பங்களையும் கொலை செய்திருக்கிறார் எனக் குறிப்பிட்டதுடன், எல்லா கெரில்லா தலைவர்களும், போராளிகளும், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை கொன்றிருக்கிறார்கள்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடயத்தில் இது ஒன்றும் புதியதல்ல என்றார். புதிய இடதுசாரி முன்னணி வன்முறைகளைக் கண்டிக்கிறது.” எனவும் அவர் தெரிவித்தார்.

16 செப்டம்பர் 2015

கலப்பு நீதிமன்றம் விசாரணை என்கிறது ஐ.நா!

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

01 செப்டம்பர் 2015

கருணாவின் பேச்சால் படைகளுக்குள் குழப்பமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனின் மரணம் தொடர்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்த கருத்து இலங்கை இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரபாகரனின் சாவு குறித்து சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் யுத்த முடிவில் அறிவித்த நிலையில் பிரபாகரன் தனது கைத்துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுக்கொன்றதாகவும் மனைவியும் மகளும் இராணுவத்தின் செல்வீச்சில் கொல்லப்பட்டதாகவும் கருணா கூறியுள்ளார்.
இறுதிப் போர் தொடர்பில் கருணா தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது இராணுவப் பேச்சாளர் தடுமாறியுள்ளார். கருணாவின் பேச்சுக்கள் இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவா தொடர் நடைபெறவுள்ள வேளையில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருத்துக்களை அவர் வெளியிடலாம் என்ற சந்தேகம் இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபாரகன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதே கருணாதான் என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் அவர் தற்போது கூறும் கருத்து தொடர்பில் அதன் உண்மை நிலையை அறிய சட்ட ஆலோசனை நடத்துவதே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

16 ஆகஸ்ட் 2015

தீவக வாக்குப்பெட்டிகள் கடற்படையிடம்!

நாளை (17.08.2015)நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னொட்டி இன்று காலை தேர்தல் தொகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பும் பணி ஆரம்பமாகியுள்ளது.குறிப்பாக தீவகப் பகுதிக்கான வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணி,வாக்களிப்பு நிறைவடைந்ததும் மீண்டும் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வது போன்ற பணிகள் அனைத்தும் சிறீலங்காவின் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

14 ஆகஸ்ட் 2015

பொட்டுவின் சேனை என்ற பெயரில் மறுப்பறிக்கை!

13-08-2015 நேற்றையதினம் "தமிழ்வின்"இணையத்தில் வெளியாகிய -புலனாய்வு முக்கியஸ்தர் அனுப்பிய கடிதம்...!என்ற தலைப்பில் வந்த செய்தி தொடர்பாக எமது மறுப்பறிக்கை!

விழிப்புடன் செயற்படுங்கள் எம் மக்களே!

எமது அமைப்பிற்குள் சமாதான காலத்தை பயன்படுத்தி ஊடுருவலையும்,சேதங்களையும் ஏற்படுத்துவதற்காக 2003ம் ஆண்டு நடுப்பகுதியில் எதிரியால் திட்டமிட்டு வன்னிப்பகுதிக்கு அனுப்பப்பட்டவர்தான் இந்த புலனாய்வு முக்கியஸ்தர் என்று தனக்குத்தானே புகழ்மாலை சூட்டி தனது படத்தையும் போட்டு பொய்ச் செய்தியை அவிட்டிருப்பவரான {சி.சசிதரன் இ.பெயர்:செவ்வாணன்}-

சொந்த முகவரி:மலையகம்-(இந்திய வம்சாவழி)
வன்னியில்-த.முகவரி: றெட்பானா விஸ்வமடு
வீட்டுப் பெயர்: சி.சசிதரன்
இயக்கப் பெயர்: செவ்வாணன்
இயக்கத்தில் இணைவு:2004

பணிகள்: 2003ல் இருந்து 2004லு வரை புலனாய்வு முகவர், 2004ல் இருந்து உள்ளகப் புலனாய்வுப் பொறுப்பாளர் காந்தி அவர்களின் வாகனச் சாரதியாகவும், அம்முகாமின் எரிபொருள் அளக்கும் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
சமாதான காலம் இவருடைய வரவுக்கும் இணைவுக்கும் சாதகமாகியதால் இவர் இரட்டை முகவராக பணிபுரிந்தார்' ஆரம்பத்திலிருந்தே இவரை எமது விசேட கண்காணிப்புக்குள் உட்படுத்தியே பொறுப்பாளர் காந்திக்கான சாரதியாகவும் நாம் நியமித்திருந்தோம்.
அத்துடன் இவர் சாரதியாக பணிபுரிந்தவேளை முகாமிற்கான எரிபொருள் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் எரிபொருள் பொறுப்பினை வகித்த காலப்பகுதியில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த சில தனியார் எரிபொருள் களஞ்சியங்களுக்கு களவாக எரிபொருட்களை முகாமிலிருந்து திருடி விற்றதை கையும் களவுமாக பிடித்து எமது கண்காணிப்புப் போராளிகள் காந்தியிடம் ஒப்படைத்திருந்தார்கள். இது நடந்தது 2006ம் ஆண்டு இறுதிப்பகுதியில்.இந்த களவிற்கான தண்டனையாக காந்தி அவர்களால் முகமாலை முன்னரங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆனால் இவர் இரட்டை முகவராக பணிபுரிந்துவருவதை எம்மால் உடனடியாக உறுதிப்படுத்தமுடியாமல் இருந்தபொளுது இவர்தொடர்பான தகவல் ஒன்று முகமாலை களமுனையில் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்றது. அதுதான் இவரின் இரட்டைவேடத்தை எமக்கு உடைத்தது' அது என்னவெனில் முன்னரங்கிலிருந்து தொலைத்தொடர்பு வளியாக எமது தகவல்களை இராணுவத்திற்கு வளங்குகிறார் என்பதே அத்தகவல்.
இதன்பின் இவர் உடனடியாக எம்மால் கைதுசெய்யப்பட்டு வள்ளிபுனம் அல்பா5-Alpha5 எனும் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கு வைத்து இவர் காந்தி அவர்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தார். பின்னர் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியான 2008 நடுப்பகுதியில் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் தொடர்ந்து எம்மால் கண்காணிக்கப்பட்டும் வந்தார்.
மேலும் போர் உக்கிரம் பெற்றது. இவர் வசித்துவந்த றெட்பானா விஸ்வமடுவை இராணுவம் கைப்பற்றியபொழுது இவர் அங்கு இராணுவத்துடன் இணைந்துகொண்டார்' அதன்பின் 17-05-2009 காலை நாம் இவரை முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குள் கண்டோம். இவர் அங்கு சிவில் உடையில் நின்று எம்மை காட்டிக்கொடுத்ததுடன் இன்றும் இவர் இராணுவத்துடன்தான் சேர்ந்து இயங்கிவருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகவே எம் அன்பார்ந்த தமிழீழ மக்களே...

தமிழ்வின் இணையதளத்தினர் பிரசுரித்த பொய்யான செய்தியை எவரும் நம்பவேண்டாம்.அத்தோடு ஜனநாயகப் போராளிகளின் வரவினை யார் விரும்புவார்கள் யார் விரும்பமாட்டார்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்' இன்று த. தே.கூட்டமைப்பின் கையாலாகாத் தனத்தினாலும் அவர்களின் சோரம்போகும் குணத்தினாலுமே இன்று கூட்டமைப்பில் நம்பிக்கையிழந்து எமது முன்னைநாள் போராளிகள் நேரடியாக களமிறங்கியுள்ளார்கள்.
இவர்களின் வரவினை எதிர்பவர்கள் இன்று நீங்கள் அறிந்தவரை எதிரிகளும் எமது முன்னைநாள் துரோகிகளுமே அன்றி வேறு யாருமல்ல. மேலும் ஜனநாயகப்போராளிகளாகிய இவர்கள் உண்மையான போராளிகள் என்பதை எதிரிகளும் துரோகிகளும் தமது பொய்யான அறிக்கைகள் ஊடாக உங்களுக்கு நிரூபித்தும் வருகின்றார்கள். ஆகவே இதன் உண்மைத்தன்மையை விளங்கி அவர்களின் வெற்றியை உறுதிசெய்து உங்கள் பிள்ளைகளின் உண்மையான பாதுகாப்பினை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி

உங்கள் காவலர்களான....
பொட்டுவின் சேனை
தமிழீழம்.

06 ஆகஸ்ட் 2015

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து இடையூறு!

தேர்தல்விதி முறைகளைமீறினாரென சாவகச்சேரி காவல்துறையினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சாவகச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நீதிமன்றினில் ஆஜராகியிருந்தார்.
கடந்த மாதம் 31ம் திகதி சாவகச்சேரி பகுதியினில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் பிரச்சாரத்தினில் ஈடுபட்டடிடிருந்த வேளை அவர்களில் சிலரை பொலிசார்  கைது செய்து தடுத்து வைத்திருந்ததுடன் கடுமையாக அச்சுறுத்தியுமிருந்தனர்.
அவர்கள் தேர்தல் விதி முறைகளை மீறினரென சாவகச்சேரி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்றம்  அழைப்பாணை விடுத்திருந்தது.அதேவேளை பிரச்சாரக் குழுவுடன் சென்ற யாழ்,மாவட்ட வேட்பாளர் திருநாவுக்கரசு சிவகுமாரனுக்கும் அழைப்பாணை அனுப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக இன்று காலை இருவரும் நீதிமன்றிற்கு சமூகமளித்தனர். அவ்வழக்கு பதில் நீதவான் கணபதிப்பிள்ளையால் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையினில் அரசு திட்டமிட்டு தமது பிரச்சாரங்களை குழப்பிவருவதாக முன்னணி குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.