05 அக்டோபர் 2011

மூவர் தூக்கு விவகாரம் மோதிக்கொள்ளும் வைகோவும் சீமானும்!

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி யாரும் எதிர்பாராதது. தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒரே அணியில் கைகோத்துப் போராடிய சில சம்பவங்களில் இதுவும் ஒன்று. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேய அடிப்படையில் மக்கள் பெருமளவு இணைந்து போராடியதும் தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை.
தமிழ்நாட்டில் எழுந்த இந்த பெரும் போராட்டங்கள்தான், முதல்நாள் ‘தூக்கை நிறுத்தக் கோர தங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று சொன்ன முதல்வர் ஜெயலலிதாவை, மறுநாள் சட்டமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வைத்தது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் தவிர, அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கருத்துதான் இருந்தது. ஆனாலும் வைகோவும், சீமானும்தான் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டினர். இருந்தாலும், போராட்டம் தொடர்பான மேடைகளில் இருவரும் இணைந்து கலந்து கொள்ளாதது இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் இருப்பதை உணர்த்தியது. தற்போது இந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக புலம்புகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரில், பேரறிவாளனுக்காக மட்டும் வைகோ பேசுவதாகவும், மற்ற இருவர் குறித்தும் அவர் மௌனமாக இருப்பதாகவும் சீமான் தரப்பில் வைகோ மீது குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு ஆதாரமாக வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தூக்கு தண்டனை ரத்து தொடர்பாக எழுதிய கடிதத்தையும் காட்டு கிறார்கள் சீமான் தரப்பினர்.
‘‘மத்திய அரசு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவை நிராகரித்த உத்தரவை தமிழக அரசுக்கு அனுப்பியது. தமிழக அரசு அந்த விவரத்தை வேலூர் சிறையில் உள்ள மூவருக்கும் அனுப்பிய அன்றே, இந்த விஷயத்தில் என்ன செய்வது என டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களோடு கலந்து பேசினோம். நாம் தமிழர் க ட்சியின் சார்பாக வழக்கறிஞர் தடா சந்திரசேகர் வேலூர் சிறைக்குச் சென்று மூவரையும் சந்தித்தார்.
‘உங்களுக்கு இந்தியாவில் எந்த வழக்கறிஞர் வேண்டுமோ அந்த வழக்கறிஞரை உங்களுக்காக வாதாட அமர்த்துகிறோம்’ என்று அவர் மூவரிடமும் வாக்குறுதி அளித்தார். அவர்களும், ‘நீதிமன்ற நடவடிக்கைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல்ரீதியான நடவடிக்கைகளை வைகோ பார்த்துக் கொள்ளட்டும்’ என்று தெரிவித்ததனர். அதன் தொடர்ச்சியாகவே நீதிமன்ற நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தோம்.
‘ஒருவேளை நாங்கள் தூக்கிலிடப்பட்டால், எங்கள் உடல்களை சீமானிடம் ஒப்படையுங்கள்’ என்று முருகனும், சாந்தனும் எழுதிக் கொடுத்துள்ளனர். இதில் இருந்தே சீமான் அவர்களுக்காக எப்படியெல்லாம் உழைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’’ என்று உணர்ச்சி வசப்படுகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
‘‘தி.மு.க. அரசால் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதே, முருகன், சாந்தன் உள்ளிட்டோர் தங்களின் வழக்கு குறித்து சீமானுடன் விவாதித்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, மூவர் தூக்கு தொடர்பாக நாம் தமிழர் இயக்கம் சார்பாக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.
ஆனால், நாம் தமிழர் இயக்கமும், சீமானும் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை இருட்டடிப்புச் செய்யும் வண்ணம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செயல் படுகிறார். வைகோவோடு இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் வைகோதான் எங்களோடு இணைந்து செயல்படுவதில் தயக்கம் காட்டுகிறார். இந்த விவகாரத்தில் எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் கிடையாது’’ என்கிறார்கள் ஆவேசமாக!
ஆனால் வைகோ தரப்போ, இதை மறுத்து சீமான் மீது குற்றச்சாட்டு வைக்கிறது. ‘‘சட்ட போராட்டங்களை நடத்தியது நாம் தமிழர் என்பதே பொய்யான வாதம். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை அழைத்து வந்ததே வைகோதான். ‘நான் சென்னை வந்ததே எனது நண்பர் வைகோவுக்காகத் தான்’ என்று ஜெத் மலானி நீதிமன்ற வளாகத்திலேயே குறிப்பிட்டார்.
மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார். பேரறிவாளனுக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மற்ற இரு வருக்கும் ரத்து செய்யப்படும் என்ற அடிப்படையில்தான் அவர் பேசுகிறார். மரண தண்டனை ஒழிப்பில் உடன்பாடு உள்ளவர்களோடு இணைந்து செயல்படுவதில் வைகோவுக்கு எந்த ஈகோவும் கிடையாது. ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மூவர் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி நடந்த கூட்டத்தில் அனைத்து அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். சீமான் ஒருவர்தான் கலந்து கொள்ளவில்லை.
காஞ்சிபுரத்தில் மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி இறந்த செங்கொடியின் வீர வணக்க நிகழ்ச்சியில் கூட சீமான் கலந்து கொள்ளவில்லை. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவர் மூவர் தூக்கு தண்டனை வழக்கை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார். இப்படி ஏதாவது செய்து தான் எங்கள் கட்சியை பிரபலப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் எதுவுமில்லை’’ என்று பதிலுக்கு ஆவேசப்படுகிறார்கள் ம.தி.மு.க.வினர்.
தங்களின் மரண தண்டனை வழக்கை வைத்து வைகோ, சீமான் இருவரும் அரசியல் செய்வதாக சிறையில் இருக்கும் மூவரும் வருத்தப்படுகிறார்களாம். ‘‘பேரறிவாளன் தூக்கு தண்டனையை மட்டும் ரத்து செய்யச் சொல்கிறீர்களே, நாங்கள் மட்டும் குற்றம் செய்தோம் என நம்புகிறீர்களா?’’ என்று முருகனும், சாந்தனும் வைகோவிடம் கேட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது.
எங்கள் வழக்கு விசாரணை தொடர்பாக வைகோ தெளிவாகத் தான் முடிவெடுப்பார் என்று பேரறிவாளன் சீமானிடம் சொல்ல, அவர் கோபித்துக் கொண்டு வேலூர் சிறையை விட்டு வெளியேறிய சம்பவமும் நடந்திருக்கிறதாம். ஒருவேளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் தங்கள் உடல்களை சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுதான் முருகனும், சாந்தனும் விண்ணப்பத்தில் எழுதிக் கொடுத்துள்ளனர். இதை நாம் தமிழர் அமைப்பினர், பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க, இருவரையும் சீமானே கட்டாயப்படுத்தி கையெழுத்திடச் சொன்னதாகச் சொல்கிறார்கள் ம.தி.மு.க.வினர்.
சென்னை வந்த ராம்ஜெத்மலானி தங்குவதற்கு கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்ததாகவும், அதை வைகோ பயன்படுத்திக் கொள்ளவில் லை என்றும் சீமான் நெருங்கிய நண்பர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார்.
மூவர் தூக்கு தொடர்பாக ம.தி.மு.க. என்ன செய்திருக்கிறது என்று வைகோ எழுதிய புத்தக முன்னுரையில், ‘‘ராம்ஜெத்மலானி சென்னை வந்தால் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்குவதுதான் வழக்கம். அதனால்தான் அங்கு ஏற்பாடு செய்தோம்’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
‘‘மூவர் தூக்கு தொடர்பான மக்கள் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் விலகி இருங்கள்’’ என்று சீமானிடம் வைகோ கேட்டதாக சீமான் தரப்பினர் கூறுகின்றனர். தூக்கு தண்டனை ரத்து தொடர்பாக நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் சீமான் கலந்து கொள்வதுகூட இல்லை. தீரன்தான் கலந்து கொள்கிறார். வழக்கறிஞர்கள் இருக்கும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில்கூட நாம் தமிழர் அமைப்பினர் கலந்து கொள்ளவில்லை. அப்புறம் இதில் பேச என்ன இருக்கிறது?’’ என்று கோபமாகக் கேட்கிறார்கள் ம.தி.மு.க.வினர்.
இதற்கிடையில், மூவர் தூக்கு தொடர்பாக தமிழ் ஆர்வலர் ஒருவரிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘‘மத்திய அரசின் பதில் பேரறிவாளனுக்கு சாதகமாகத்தான் இருக்கும். முருகன், சாந்தன் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தக் கொலை வழக்கில் பங்கு இருக்கலாம்’’ என்று சொன்னதாகவும் ஒரு தகவல் புயலைக் கிளப்பி இருக்கிறது.
தலைவர்களின் ‘ஈகோ’ பிரச்னைகள் தமிழர்களின் உயிரைக் காவு வாங்கி விடக்கூடாது என்பதே இப்போதைக்கு தமிழ் ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக