01 ஜூன் 2015

ஓமந்தையில் சிறுமி மர்மமான முறையில் மரணம்!

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர்
பெண்கள் சிறுமியருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலியல் சித்திரவதைகள் என்பவற்றுக்கு முடிவுகட்டி, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாடளாவிய ரீதியில் குரல் கொடுக்கப்பட்டு வரும் வேளையில், ஓமந்தை பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தனது கொட்டில் வீட்டிற்குள் கழுத்தில் சுருக்கிட்டு மர்மமான முறையில் இறந்த நிலையில் திங்களன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த சிறுமியின் தாய் தந்தையர் வவுனியா நகருக்கு முக்கிய அலுவல் காரணமாகச் சென்றிருந்தபோது தனிமையில் அந்த சிறுமி வீட்டில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லாதிருந்த இந்தச் சிறுமியே, தனது தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிந்தபோது சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்றிருந்தார். உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி:பிபிசி தமிழோசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக