03 பிப்ரவரி 2016

தமிழீழம் குறித்துப் பேசுவதில் பயனில்லை-சிறீதரன்

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிறிதரன் தெரிவித்ததாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சிவஞானம் சிறிதரன்,
“தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிடவில்லை. தமிழீழ கோரிக்கைக்கு அப்பால் சென்று தீர்வை முன்வைத்து போட்டியிட்டவர்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர். கிடைக்கப்போகும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலுள்ள அரசியலமைப்புக்களை போன்றதொரு அரசியலமைப்பை இலங்கையில் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை ஆதரிக்க வேண்டும். தமிழீழம் பற்றி பேசி, புதிய அரசியலமைப்பு முயற்சிகளை குழப்பாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இன்று சிறிதரன் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் நிறுவனத் தலைவரான தந்தை செல்வா அவர்கள் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி 1976 ஆம் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தது. “மேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.” என தீர்மானத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தை செல்வா அவர்கள் தீர்மானத்துடன் நின்றுவிடாது, மக்கள் கருத்தை அறியும் முகமாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியானது இந்த தீர்மானத்தை முன்வைத்து மக்கள் ஆதரவைக் கோரியது. தமிழ் மக்களும் அமோக ஆதரவைத் தெரிவித்து கூட்டணியை வெற்றிபெறச் செய்தார்கள் என்பது வரலாறு,
ஆனால் அதன் பிறகு தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியோ தாம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை. தமிழீழத்தை கைவிடுகிறோம் என எந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டு மக்களைச் சந்தித்ததில்லை . நிலைமை இப்படியிருக்கும்போது தமிழ் மக்கள் தமிழீழத்தை நிராகரித்துவிட்டார்கள் என்று சிறிதரனால் எப்படி முடிவுக்குவர முடிந்தது. அடுத்து வரும் தேர்தல்களில் சிறிதரனாவது கிளிநொச்சியில் ‘தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம்’ ‘என் தலைவர் பிரபாகரன் இல்லை சம்பந்தன் தான் ‘ என்ற உண்மையைச் சொல்லி வாக்குச் சேகரிப்பாரா என்பது சமானியர்களின் கேள்வி.

நன்றி:தமிழ் லீடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக