12 ஆகஸ்ட் 2016

வாழும் போராளிகளை காப்பாற்றக் கோரி ஜெர்மனியில் போராட்டம்!

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர்.
சிங்கள பேரினவாத ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் மர்ம மரணங்களைக் கண்டித்தும் ! பன்னாட்டு விசாரணையை கோரியும் பேர்லின் நகரில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 18.08.2016 அன்று மாலை 16:30 மணிக்கு நடைபெறவுள்ளது. கொன்று அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் ஒன்று கூடுகிறோம்.போராளிகள் சிறைக்குள்ளும், வெளியேயும் சிதைக்கப்படும் காலகட்டத்தில், நமது போராட்ட குரல்களே அவர்களுக்கான நீதியை கொடுக்கும்.மௌனமாக அரங்கேறிக்கொண்டிருக்கும் உயிர்வதைகளை, உயிர்க்கொலைகளை நிறுத்த இந்த போராட்டங்கள் முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றுகூடுவோம். எமது விடுதலைக்காக தமது வாழ்வையே அர்ப்பணித்து போராடி இன்று பல்வேறு வடிவங்களில் சிங்கள பேரினவாத அரசின் கெடுபிடியால் துன்பப்படும் போராளிகளுக்காக குரல் கொடுப்போம் வாருங்கள்.வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும் ஏனெனில் அழிக்கப்பட்ட எமது சரித்திரத்தில் எஞ்சியுள்ள சாட்சிகளும் , சரித்திரமும் அவர்கள் மட்டும் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக