21 அக்டோபர் 2016

யாழ்,பல்கலை மாணவர்கள் படுகொலை!ஐவர் கைது என தெரிவிப்பு!

கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.மாணவர்களின் கொலை தொடர்பிலான விசாரணைகள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் வருட மாணவர்களான கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷ்ன் என்ற 24 வயதுடைய மாணவனும், 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் என்ற 23 வயதுடைய மாணவனும் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் உயிரிழந்திருந்தனர். கந்தரோடையில் இருந்து யாழ்ப்பாணம் - பல்கலைக்கழக விடுதிக்கு, சென்று கொண்டிருந்த போது, கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இவர்கள் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக மாணவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாணவன் சுலக்சனின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதை சட்ட மருத்துவ அதிகாரி தனக்குக் காட்டியதாக அவரது தந்தையார் தெரிவித்தார்.
இதனால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம், இந்தக் கொலைகளுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை பகிஷ்கரித்துள்ளதுடன், உயிரிழந்த மாணவர்களின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பதாதைகளையும் தொங்கவிட்டுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடிகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக