08 மார்ச் 2015

கூட்டமைப்பு சோரம் போய் விட்டது:மக்கள் பாடம் புகட்டுவர்!

பிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றி மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள் மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஆ.ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று சனிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பல உயிர் தியாகங்களையும், இழப்புக்களையும் சந்தித்த தமிழ் இனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைகுனிய வைத்துள்ளது. இது வரை காலமும் தமிழ் மக்கள் மத்தியில்; தமிழ் தேசியம், வடகிழக்கு இணைப்பு என்ற கோசம் எழுப்பியவர்கள் இன்று மாற்றானிடம் மண்டியிட்டு அமைச்சு பதவிகளை பிச்சை எடுத்துள்ளார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதிக்கு பூரண ஆதரவினை தெரிவித்து அவர் வெற்றியும் பெற்று விட்டார் இன்று வரை எமது தமிழ் சமுகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுன்வரவில்லை, இன்று பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் புலிகள் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரு சிலரையேனும் விடுவிக்கக்கோரி ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை.வடகிழக்கில் யுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான விதவைகள் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்து கொடுக்கவில்லை
இவற்றையெல்லாம் மறந்து தன்மானம் இழந்து எமது தமிழ் சமூகத்தின் சுய கௌரவத்தை கொச்சைப்படுத்தி இன்று அற்ப சலுகைகளுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சோரம் போய் விட்டார்கள். இதற்காகத்தான எமது தமிழ் சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.
இந்த மாகாணசபை முறைமை தமிழ் சமூகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்தையும் இழந்து தவிக்கும் எமது சமூகத்திற்கு மாகாணசபை ஆட்சியில் தலைமையை கைப்பற்றி முழுமையான சேவையை செய்வதை விடுத்து கிழக்கு மாகாணசபையில் அதிக தமிழ் பிரதிநிதிகளை கொண்டிருந்தும் அதிக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றும் இன்று சோரம் போய் பிச்சைப்பாத்திரம் ஏந்தி அமைச்சு பதவிகளை பெற்றிருக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் எமது உரிமைகள் வெல்லப்படும்வரை உள்ளுராட்சி தேர்தலையே புறக்கணிப்போம் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, புலிகள் மறைந்த பின் தங்கள் போலியான முகமுடியை அகற்றி உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாகாணசபை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவில் தான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்கு? இது தானா? தலைமைத்துவம். இன்று ஏனைய கட்சிகளுடன் அமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைபின் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் மேடைகளில் எதை பேசுகிறார்கள் தாங்கள் மட்டும் தான் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் ஏனைய கட்சிகளுக்கு முடியாது என்று தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வெரு தமிழருக்கும் உரிமையுண்டு தற்போது தமிழ் தேசியக் கூட்மைப்புக்குள் கொள்கை இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
இன்று இலட்சியம் கொள்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு மானம் இழந்து மரியாதை இழந்து சுய கௌரவம் இழந்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுவததை இனியும் தமிழ் சமுகம் அனுமதியாது . தமிழ் இனத்தின் உரிமைகளை உரிய முறையில் வென்றெடுக்காமல் பிச்சைக்காரன் தனது ஆராத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள்; தமிழ் சமுகம் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு ஓர் சரியான பாடத்தை எதிர்காலத்தில் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை நெஞ்சம் பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட அரசியல் வாதிகளை நினைக்கும் போது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக