13 மார்ச் 2015

மோடி யாழ்.வரும் போது பேரணி நடத்த ஏற்பாடு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில், யாழ்.நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் அமைதிப் பேரணி ஆகியன இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளளன. மக்களின் மீள்குடியேற்றம், காணாமல் போனோர் மற்றும் மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளின் துரித தீர்வுக்கு உதவுமாறு இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
வடக்கைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த அமைதிப் பேரணிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. காலை 9.30 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடுவோர், அங்கு கவனயீர்பு போராட்டத்தை ஆரம்பிப்பர். பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணியாக இந்தியத் துணைத் தூதரகத்துக்குச் செல்லவுள்ளனர். அங்கு இந்தியப்பிரதமர் மோடிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட உள்ளது.
வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, வலி.வடக்கு பிரஜைகள் குழு, மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், காணாமல் போனோருக்கான அமைப்புக்கள் ஆகியன போராட்டத்திற்கான முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளன.
மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது நலன் விரும்பிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக