20 டிசம்பர் 2016

மரணத்தில் மர்மம் ஜெயலலிதாவின் தோழி வழக்கு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெயலலிதாவின் தோழி என கூறும் கீதா என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனு தாக்கலுக்கு பிறகு, நிருபர்களிடம் கீதா கூறியது: நான் ஜெயலலிதாவுடன் பள்ளி காலத்திலிருந்து நட்புடன் இருந்தேன். அவரது மரணம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்தேகிக்கிறேன்.ஜெயலலிதா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவின் உறவினர் தீபாவுக்கு எனது ஆதரவு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலா கிருஷ்ணன், சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும்.பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக கொலை செய்ய, தவறான சிகிச்சை அளிக்க முன்வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துகளை கைப்பற்ற கொலை செய்ததாக, இந்திய தண்டனை சட்டம் 327, 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் போயஸ் கார்டன், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீதா சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வாதிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக