24 ஜூலை 2013

தமிழ் மொழியை புறக்கணிக்கும் மாணவர்கள்:தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!

மாணவர்கள் மதிப்பெண் கூடுதலாகப் பெற தமிழ் மொழியல்லாத பிற மொழிகளை தேர்வு செய்யும் போக்கினை தமிழக அரசு தடுத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மேனிலைப் பள்ளிகளில் (பிளஸ் 2) இரண்டாவது மொழிப் பாடமான தமிழை புறக்கணித்துவிட்டு பிரெஞ்ச், ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தேர்வு செய்து படிக்கும் நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இப்படி தமிழ் மொழியை படிப்பதை தவிர்ப்பது திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பள்ளி பாடத் திட்டத்தில் முதல் மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழிப் பாடமாக தமிழும் இருந்து வருகிறது. தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்கிற காரணத்தைக் காட்டி, தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதம், பிரஞ்ச், ஜெர்மன் ஆகிய ஏதாவது ஒரு அந்நிய மொழியை தேர்வு செய்து படித்துவிட்டு தேர்வு எழுதுகிறார்கள். மெட்ரிக்குலோஷன் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படும் பள்ளிகளில் இரண்டாவது மொழிப் பாடமாக இருக்கும் தமிழுக்கு பதிலாக அயல் மொழிகளை படித்து தேர்வு எழுதுவது ஊக்குவிக்கப்படுகிறது.
சமஸ்கிருதம், பிரெஞ்ச், ஜெர்மனி போன்ற மொழிகள் படிக்கும்போது, அதற்கான பாடத் திட்டம் மிக எளியதாக (எலிமெண்ட்ரி லெவல்) தயாரிக்கப்பட்டுள்ளதால், அரசு நடத்தும் மேனிலைத் தேர்வில் அதிக மதிப்பெண்களை - அதாவது 200க்கு 199 என்றெல்லாம் பெறுவது - சுலபமானது என்பதனால் பல மாணாக்கர்கள் இப்படி அயல் மொழியை தேர்வு செய்து படிக்கிறார்கள். ஆனால் பிளஸ் 2 வகுப்பிற்கான தமிழ் மொழி பாடத் திட்டம் உயர்ந்த நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதில் தங்களால் 200க்கு 160 மதிப்பெண் கூட பெற முடியாது என்று அந்த மாணவர்களும் கருதுகின்றனர். தமிழ் மொழி தொடக்கப்பள்ளியில் இருந்து கற்றுவரும் மாணவர்களுக்கு தமிழக அரசு பாடத் திட்டம் எந்த விதத்திலும் கடினமானதாக இல்லை. ஆனால், பிற மாநிலங்களில் சென்று தங்களை பட்டப் படிப்பை தொடர நினைக்கும் நகர வாழ், மேல் தட்டு வீட்டுப் பிள்ளைகள் அயல் மொழிப் பாடங்களை எடுத்து அதிக மதிப்பெண் பெற இப்படியான ஒரு வழியை கடைபிடிக்கிறார்கள்.
இப்படி ஒரு நிலையை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், நாளையடைவில், தமிழ் மொழியை படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தமிழ் மண்ணிலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகும் . எனவே, இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழை புறக்கணிக்கும் நிலையை தடுத்திட வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக