16 ஏப்ரல் 2016

தமிழகத்தை கன்னடர்,தெலுங்கர்,மலையாளர் ஆள்வது சரி தமிழர் ஆண்டாள் இன வெறியா?

கோவை சிங்காநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப்பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், சொன்னதைச் செய்தோம் எனக் கூறும் ஜெயலலிதா, தன் ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போவதாக சொன்னாரா? என கேள்வி எழுப்பினார்.
"கன்னடர் வந்து நம் தமிழகத்தை ஆண்டுவிட்டார், வாழ்ந்திட்டீர்கள். மலையாளர் வந்து நம் தமிழகத்தை ஆண்டார் வாழ்ந்திட்டீர்கள். தெலுங்கர் வந்து நம் தமிழகத்தை ஆண்டார் வாழ்ந்திட்டீர்கள். அது போல தமிழகத்தை ஒரு முறை தமிழன் கையில்தான் கொடுத்துப்பாருங்களேன். கன்னடர் ஆளலாம் அது சரி, மலையாளர் ஆளலாம் அது சரி, தெலுங்கர் ஆளலாம் அதுவும் சரி, தமிழகத்தை தமிழர் ஆண்டால் அது வெறியா ?!
கலைஞர் அவர்கள் கூறுகிறார், மதுவை மூட வேண்டும் என்று. ஆம் உண்மைதான் நீங்கதான திறந்து வெச்சீங்க. உங்ககிட்டதான சாவி இருக்கும், நீங்கதான் மூடணும். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 'தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுவேன்' என்கிறார். முதலில் உங்கள் மந்திரிகளை தலை நிமிர்ந்து நடக்க வையுங்கள். மேலும் அவர் சொன்னதைச் செய்தோம் எனக் கூறிக்கொண்டு வருகிறார். தன் ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போவதாக எங்களிடம் சொன்னீர்களா ?!
தஞ்சாவூர் தி.மு க கோட்டை, கோவை அ.தி.மு.க.கோட்டையா? இந்த கோட்டை எல்லாம் எதுனால வந்தது? இந்த தமிழக மக்கள் போட்ட ஒவ்வொரு ஓட்டினாலும், ஒரு தடவ மாத்திப் போட்டுப்பாருங்க, நீங்க இல்லைனா இவுங்களாம் யாரு? ஜெயலலிதா மார்கெட் குறைந்த பழைய சினிமா நடிகை, கலைஞர் அவர்களும் அவர் கால கட்டத்தில் மார்கெட் இழந்த ஒரு கதாசிரியர், மத்தபடி ஒண்ணும் இல்ல.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை சர்க்கரை எல்லாம் தடை செய்வொம். கருப்பட்டி, பனங்கற்கண்டுகளை பயன்படுத்த சொல்லுவோம். 'இல்ல.. எனக்கு அதுதான் பழகிப் போச்சு!' என்று சொன்னால், அந்த வெள்ளை சர்க்கரைக்கு இரட்டிப்பு வரியைக் கூட்டுவோம், நீ சாகறது சாவு எங்களுக்கு வரி கொடுத்திட்டு சாவு. மேம்பாலங்களை இடிப்பேன். அனைத்தும் பாதாள வழிப்பயணமாக மாத்துவேன். தானியங்கி பேருந்துகளை கொண்டு வந்து அதைக் கண்காணித்துக் கொள்ள ஊனமுற்றோரையும், திருநங்கைகளையும் பணியமர்த்துவேன்.
தமிழகத்துக்கு தலை நகரையே மாற்றுவேன். நம் தமிழகத்திற்கு ஐந்து தலை நகரம், அதாவது நிர்வாக வசதிக்காக சென்னையை திரை மற்றும் கணினி துறையின் தலைநகராக தொடர வைப்போம், அடுத்து திருச்சியை நிர்வாகத் தலை நகராக மாற்றுவோம், கன்னியாகுமரியை மெய்யியல் தலைநகராக மாற்றுவோம், மதுரையை கலை, பண்பாடு, இலக்கிய தலை நகராக மாற்றுவோம், அடுத்து தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த கோவையை தொழிற்துறையின் தலை நகராக மாற்றுவோம்.
அடுத்து மந்திரிகளில் எவருக்கு உடல் சரி இல்லை என்றாலும் அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும். இலவசமென கல்வியைத் தவிர எதுவும் இருக்காது. அனைவரது வாழ்வாதரத்தையும் உயர்த்துவோம். நிலங்களை உரிமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கி அரசே அதில் விவசாயம் செய்யும். விவசாயம் என்பது அரசு வேலையாக்கப்படும்.
மொழிக் கொள்கை என்று பார்த்தால் தமிழ் வழி கல்வித் திட்டம், ஆங்கிலக் கல்வி கட்டாயம் ,சிறப்புக் கல்வி அனைவருக்கும் உண்டு. ஒரு குழந்தைக்கு ஓவியம் விருப்பப் பாடமாக இருந்தால், அதற்கு ஓவியம்தான் சிறப்புப் பாடம். அந்த குழந்தை அந்த பாடத்தில் தோற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது. இதன் மூலம் தனித்திறன் வளரும்.
அடுத்து நீர் சேமிக்கும் திட்டத்தை மேம்படுத்துவோம். அடுத்து எது தமிழ்த்தாய் வாழ்த்து? நீராரும் கடலுடுத்த பாடலா? திராவிடர் நல் திருநாடா? மானத் தமிழ் நாட்டுல எங்கடா திராவிடர் நாடு? கொளுத்தி விடுவோம்.தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' போடுவோம். இதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக அத்தனையும் மாற்ற போகிறோம்" எனக் கூறினார்.

நன்றி:விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக