24 ஜனவரி 2017

வடமராட்சி இளைஞர் ஆபிரிக்காவில் அடித்துக்கொலை!

சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் புறப்பட்டுச் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான சியாராலியோனிலேயே இந்தக கொலை இடம்பெற்றுள்ளது.யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார். இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவின் கடற்கரைப் பிரதேசத்தில் இவர்களைத் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, கடந்த 3 நாட்களுக்கு முன் குறித்த இளைஞன் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த இளைஞனின் நண்பர், கரவெட்டியிலுள்ள அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவ்விளைஞன் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். குறித்த இளைஞன் போன்று பல இளைஞர்கள் அம்முகவரினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக குறித்த பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சுப்பையா சண்முகம் ஆகியோருக்கு 16 இலட்சம் ரூபாய் பணம் வழங்கியே தமது மகன் சுவிற்ஸர்லாந்துக்கு செல்வதற்காக ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளார். மேலும் பணம் கேட்டு மகனை துன்புறுத்தியதால் அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவனை தாக்கிக் கொன்று விட்டார்கள். மேலும் தற்போது 15 இலட்சம் ‌ரூபாய் பணம் தந்தாலே அவனுடைய சடலத்தைத் தருவோம். அல்லாவிட்டால் தரமாட்டோம் என தற்போது எம்மை மிரட்டுகின்றனர் என்று இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக