04 பிப்ரவரி 2018

தமிழ்த் தேசியப்பேரவையின் கலந்துரையாடலை தடுக்க குழப்பம் விளைவித்தது ஈபிடிபி!

யாழ்ப்பாணம் - றக்கா வீதி - மருதடிப் பிரதேசத்தில், நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில், நேற்று மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது, தாம் ஈ.பி.டி.பியினர் எனக் கூறியவாறு, ஈ.பி.டி.பியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள், இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறியவாறு, அங்கிருந்த ஒலி மற்றும் ஒளி சாதனங்களின் வயர்களை அறுத்துவிட்டு மேடைப் பகுதியில் அமர்ந்துள்ளனர்.
பின்னர், மாலை 06.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலுக்கு மக்கள் திரளத் தொடங்கியபோது, அங்கிருந்து குறித்த தரப்பினர் நழுவிச் சென்றுள்ளனர். இதையடுத்து, யாழ். மாநகர வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் உள்ளிட்டோர் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென முச்சக்கரவண்டிகளில் வந்த சில குண்டர்கள், இது ஈ.பி.டி.பியின் இடம், இங்கு பிரசாரத்தில் ஈடுபட எவருக்கும் அனுமதி இல்லை எனக் கூச்சலிட்டவாறு கலந்துரையாடல் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களைக் கொண்டுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக