31 மே 2014

ராகுல் காந்தி கோமாளி!

ராகுல் காந்தி ஜோக்கரே தான்.. சஸ்பென்ட் செய்யப்பட்ட காங். தலைவர் ராகுல் காந்தியை கோமாளி என்று நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று காங்கிரசில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட கேரள முன்னாள் அமைச்சர் டி.எச்.முஸ்தபா கூறினார். லோக்சபா தேர்தலில் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள காங்கிரஸ் தலைமையகமான இந்திர பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் சார்பில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டது. ஒட்டுமொத்த தோல்விக்கு மத்திய அரசின் மக்கள் விரோத ஆட்சியும், ஊழல் பிரச்னைகளும், விலைவாசி உயர்வும்தான் காரணம் என கூறப்பட்டது. காங்கிரஸ் தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் டி.எச்.முஸ்தபா சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ராகுல்காந்தியை ஜோக்கர் என்று கூறி இருந்தார். முஸ்தபாவின் இந்த பேச்சு குறித்து நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ராகுல் காந்தியை அவதூறாக பேசிய முஸ்தபாவை சஸ்பென்ட் செய்ய அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சஸ்பென்ட் செய்யப்பட்டது குறித்து முஸ்தபா செய்தியாளர்களிடம் கூறும்போது, 'ஏற்கனவே நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சரியான முடிவை எடுக்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதால் தான் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஏகாதிபத்திய சிந்தனைக்கு காங்கிரசில் இடமில்லை. பா.ஜ.க. சார்பில் பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு வாக்குச்சாவடிகள் வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், காங்கிரசில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. மூத்த உறுப்பினர் என்ற முறையில் கருத்துகளை சொல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இருக்குமேயானால் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குறித்து நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக