19 அக்டோபர் 2014

கமிஷனர் அலுவலகத்தில் காத்திருக்கும் ஐங்கரன் கருணா!

லைகா நிறுவனத்தின் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேச கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி, பல மணி நேரமாக அலுவலகத்திலேயே காத்திருக்கிறார். கத்தி படத்தை லைகா நிறுவனத்தின் பெயரை எடுத்துவிட்டு வெளியிடுமாறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மீறி வெளியிட்டால் பெரும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள், மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.மேலும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் விநியோகஸ்தர்களை நேரில் அழைத்து, படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடப் போவதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். கத்தியை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அறிக்கை வெளியிட்டார். இன்னொரு பக்கம், கத்தி வெளியீடு குறித்தும், டிக்கெட் முன்பதிவு குறித்தும் லைகா நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டு வந்தது. இந்த சூழலில், படத்தை வெளியிடுவது, அதையொட்டி எழுந்துள்ள சூழல் குறித்துப் பேச சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு படத்தின் இணை தயாரிப்பாளரான ஐங்கரன் கருணாமூர்த்தி வரவழைக்கப்பட்டார். அவரிடம் லைகா நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு லைகா மற்றும் ஐ
ங்கரன் தரப்பு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மேற்கொண்டு பேசலாம் எனக் கூறி கருணாமூர்த்தியை கமிஷனர் அலுவலகத்திலேயே காத்திருக்க வைத்துள்ளனர். கத்தி படத்துக்கு இன்று முதல் டிக்கெட் முன்பதிவு என்று அறிவித்திருந்தனர். ஆனால் எந்த அரங்கிலும் முன்பதிவு தொடங்கவில்லை. அதேநேரம், தமிழகத்தில் வெளியாகாவிட்டாலும் பரவாயில்லை, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படத்தை 22-ம் தேதி வெளியிடுவதில் உறுதியாக உள்ளதாம் லைகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக