22 மார்ச் 2012

கேணல் ரமேசை கொன்று எரியூட்டியது சிங்களப்படை!

விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருக்கின்றன.
அவரிடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொள்ளும் காணொளிகள் வெளியாகிய நிலையில் தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் சிறீலங்கா இராணுவத்தினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா (18.08.1964) என ரமேசின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
காணொளியில் சாதாரண உடையில் இருந்த ரமேசிடம் இராணுவ உடைகளை அணுயுமாறு பலவந்தப்படுத்திய சிறீலங்கா படையினர் அதன் பின்னர் அவரை படுகொலை செய்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக