13 பிப்ரவரி 2011

தமிழகத்தில் முக்கிய அரசியல்வாதிகளை புலிகள் இலக்கு வைத்துள்ளனராம்!

தமிழக சட்டசபை தேர்தல்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரமுகர்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்கள் தமிழகத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளது.
ஊடுறுவிய புலி உறுப்பினர்கள் மறைவிடமொன்றில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் குறித்த புலி உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் சென்னையில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைப் போராளிகள் இலங்கை அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் ஊடுறுவியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, தமிழகத்தில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எவரும் கிடையாது என மாநில காவல்துறை ஆணையர் லத்திக்கா சரண் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், எச்சரிக்கை அறிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக