04 பிப்ரவரி 2011

இன்றெமது அடிமை நாள்!

உலகத்தில் எங்குமே யாருக்குமே சுகந்திரம் கிடைத்ததைப்போல தெரியவில்லை. மக்கள் எங்கும் ஏதோ ஒரு அதிகாரத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இன்று இலங்கை ஐக்கிய இராட்சியத்திடமிருந்து விடுதலை பெற்ற நாள். இலங்கையர்கள் இது எங்கள் நாடு. இது எங்கள் தேசியம். இது எங்கள் கொடி. இது எங்கள் படைகள் என்று வாழ்த்துக்களை பாடுகிறார்கள். முற்றிலும் அந்நியமான இந்தப் பாடல்களிடமிருந்து ஈழத் தமிழர்கள் விலகியிருக்க நினைக்கிறபோதும் இவை பெருந்தேசியமாக அதன் அலைகளாக அதன் படைகளாக ஈழத் தமிழர்களின் கழுத்தை நெரித்துக் கொண்டேயிருக்கிறது. ஒடுக்குமுறை வாழ்க்கைக்குள் இப்படி ஒரு ஒடுக்குமுறை. இலங்கை ஐக்கியராட்சியத்திடமிருந்து விடுதலை பெற்ற அதே நாளிலிருந்து ஈழத் தமிழர்கள் அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டார்கள் என்ற வரலாறும் தொடங்கியிருக்கிறது.
அந்நிய படைகளாலும் அரசாலும் ஈழத் தமிழ் அரசு கலைப்பட்ட பொழுது ஈழத் தமிழர்களின் சுகந்திரம் இழக்கப்பட்டது. சிங்கள அரசுகளிடம் இலங்கை என்ற இராட்சியத்தில் ஈழம் மூழ்கடிக்கப்பட்ட பொழுது மீண்டும் விடுதலை வேண்டி ஈழத் தமிழினம் போராடி வருகிறது. விடுதலைக்காக லட்சக்கணக்கான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பல்வேறு வழிமுறைகளில் குரல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இலங்கை அரசின் அடக்குமுறைப் போக்குகளாலும் உலகின் அடக்கு முறைப் போக்குகளாலும் பறிபோன விடுதலை தொடர்பில் தொடர்ந்தும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகளும் போராட்டங்களும் ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டங்களும் என்று விடுதலை வேண்டிய கோரிக்கை பல வகையில் கிளர்ந்திருந்தது.
விடுதலை கேட்டுப் போராடிய ஈழத் தமிழ் மக்களை மேலும் ஒடுக்கி அழித்து உரிமைகளை பறித்து இன அழிப்பை செய்து வருகின்றன சிங்கள அரசாங்கங்கள். விடுதலைக்குப் பதிலாக அழிவையும் பயங்கரங்களையும் தமிழ்மக்கள்மீது திணித்து வருகிறது. சாக்காடாகவும் லட்சம் உயிர்கள் புதைந்த மண்ணாகவும் மாறிவிட்ட ஈழத் தமிழர்களின் கனவு நிலத்தில் மீண்டும் தனது சிங்களப் பெருந்தேசியவாத தந்திரங்களை வளர்த்து வருகிறது அரசு. ஈழத் தமிழர்களின் சகல உரிமைகளும் இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் புகைக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி வெறும் இனமாக அவலங்களை ஒடுக்குமுறைகளை பயங்கரங்களை எதிர்கொள்ளும் ஒரு இனம் தனது அடிமைத்தனம் குறித்தும் அதற்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள் குறித்தும் இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் இன்றும் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. தங்கள் சுகந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்பதையே அடக்குமுறையுடன் அரசு நடைமுறைப்படுத்துகிறது. மக்கள் தாமாக கொண்டாட வேண்டிய சுகந்திரதினத்தை இராணுவம் கொண்டாட நிர்பந்திக்கிறது. வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயகத்தில் தமிழர்கள் இலங்கை சுகந்திரதினத்தை கொண்டாட வேண்டும் என்று இராணுவம் கடுமையான அழுத்தங்களை கொடுக்கிறது.
வீடு வீடாக கொடிகளை கொடுத்து ஏற்ற வேண்டும் என்றும் கடை கடையாக கொடிகளை கொடுத்து ஏற்ற வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவதுடன் தமிழர் பகுதிகளில் இராணுவமே சுகந்திரதினத்தை கொண்டாடுகிறது. முள்ளிவாய்க்கால் என்ற ஈழத்தமிழன அழிவு நிகழ்ந்த ஆற்றில் வெட்டி பாய்ச்சப்பட்ட குருதி இன்னும் காயாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இழப்புகளின் மேல் இழப்புக்களும் ஏமாற்றங்களும் இருண்ட நாட்களும் என்று காலத்தை எப்படி கழிப்பது என்று ஈழத்தமிழ் மக்கள் ஏங்குகையில் யாருக்குச் சுகந்திரதினம்? என்ற மாபெரும் கேள்வி எகிறது. யுத்தம் தந்த வெற்றியால் பூரிப்படைந்த அரசும் அதனுடைய படைகளும் அதனுடைய மக்களும் இந்த நாடு முழுமையாக தங்களுக்கே சொந்தமாகிவிட்டது என்றும் வெள்ளைக்கார்கள் உடையாத நாட்டை தம்மிடம் தந்து விட்;டு சென்றனர் என்றும் இந்த நாளைக் கொண்டாடட்டும்.
இலங்கை அரசும் அதன் கூறுகளும் சிங்கள அடையாளத்துடன் ஈழத்தமிழனத்தை கடுமையாக எச்சரிக்கின்றது. இந்த விழாக்களும் இதற்கான உரைகளும் எதிர்காலம் பற்றி மேலும் மேலும் அச்சத்தையே தரப் போகின்றன. தமிழ் இனத்தையும் அதன் கனவையும் போராட்டத்தையும் யாரும் புரியவில்லை என்று கூற முடியாது. நன்கு புரிந்து கொண்டு ஆழமாக கால்களை உள்ளே வைத்துக் கொண்டே தமிழ் இனத்தின் விடுதலை முனைப்புக்களை ஒடுக்கியிருக்கிறார்கள். அதற்கும் அப்பால் சிறைகளிலும் தடுப்புக்களிலும் முகாங்களிலும் தமிழ் மக்களை தடுத்து வைத்துக் கொண்டு அவர்களை விடுதலை செய்ய அரசு வியாபாரம் பேசிக் கொண்டிருக்கிறது. இந்த சுகந்திர தினத்திலாவது எங்களை விடுதலை செய்யுங்கள் என்று தடுப்புக் கம்பிகளுக்குள் சிறை வைக்கப்பட்ட இளைஞர்கள் கேட்கிறார்கள். தனது அரசின் அதிகாரம், அரசியல், வியாபார ஒழுங்கு என்பவற்றுக்குப் பொருத்தமாக சில தமிழ்மக்கள் ஜனாதிபதியின் கால்களில் வீழ்த்தப்பட்டு இன்றைய நாளில் விடுவிக்கப்படக்கூடும்.
பத்தாயிரம் இளைஞர்களை தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறியிருந்த பொழுதும் அதற்கு அதிகமாக பதினையாயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. முறிகண்டி முதல் புதுக்குடியிருப்பு வரை பல பகுதிகளில் மக்கள் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படாது முகாங்களிலும் வெளியிலும் தங்கியிருக்கிறார்கள். மக்களின் காணிகள் பலவற்றில் படையினர் இராட்சியம் புரிகின்றனர். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறவில்லை. எதற்கெடுத்தாலும் இராணுவம் தலையிட்டு கண்காணிக்கப்பட்டு வாழும் இராணுவ ஆட்சியில் யாருக்குச் சுகந்திரம் கிடைத்திருக்கிறது?
ஜனநாயக சோசலீசக் குடியரசு பிரதமர்களின், ஜனாதிபதிகளின் வரலாறு முழுவதும் இந்த அடக்குமுறை கனகச்சிதமாக செய்யப்பட்டு வருகின்றன. பண்டா முதல் ஜெயவர்த்தன முதல் சிறிமா முதல் இன்றைய ஜனாதிபதியின் குடும்பம் வரை ஈழத் தமிழரின் விடுதலை வாழ்வை விழுங்கும் கதைகள் தொடர்கின்றன. எதையும் செய்ய முடியாத நிலையில் தமிழர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இந்தத் சுகந்திரதினம் என்பது சிங்கள பெருந்தேசிய வாதத்தை கொண்டாடும் நாள் என்பதே ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு. தவிரவும் இந்த அடிமை வாழ்வில் இன்றைய சுகந்திரதினத்தை தமிழர்களில் பலர் அறியவில்லை. இன்றைய சுகந்திர தினநாளும் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான அடக்கமுறைக்கான வடிவங்களை அலைகளை பெருக்கி அச்சுறுத்துகிறது. ஈழத் தமிழர்களுக்கு என்று முடியும் இந்த அடக்குமுறை வாழ்வு? மக்கள்; எப்பொழுது விடுதலை பெறுவார்கள்?
நன்றி:GTN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக