26 பிப்ரவரி 2011

நாய்களை கொல்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறார் மகிந்த.

மான், மரை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, யானைகள், சிறுத்தை, கரடி, மயில் போன்ற மிருகங்கள் நாட்டின் தேசிய வளங்களாக இருப்பதனால், அவற்றை இறைச்சிக்காக அல்லது வேறு ஏதாவது இலாபமடையும் நோக்கத்திற்காக சுட்டுக் கொல்வது இலங்கைச் சட்டத்தின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.
அது போன்றே மனிதனின் நெருங்கிய நண்பனான நாயும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு மிருகமாகும். நாய்களை துப்பாக்கியால் சுட்டு அல்லது அடித்துக் கொல்வது ஒரு தண்டனைக்குரிய குற்றமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஆகவே, நாய்களை கொல்லுதல் அல்லது அடித்து ஊனமாக் குதல் தண்ட னைக்குரிய குற்றமாகும் எனவும் அதில் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாய்கள் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டும் அடித்தும் நச்சு ஊசிகளைக் குத்தியும் கொல்வது உடனடியாக தடுக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் அவற்றை அழிப்பது அவசியம் என்ற சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடலாகாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையை நாடெங்கிலும் குறைக்க வேண்டுமானால் அவற்றை பிடித்து நோய் தடுப்பு ஊசிகளை குத்தியும் கருத்தடை சத்திரசிகிச்சைகளை செய்தும் சுதந்திரமாக இருப்பதற்கு இடமளிக்க வேண்டுமென்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இத்தகைய நோய்த்தடுப்பு கருத்தடை, சத்திரசிகிச்சைகளை செய்வதற்காக அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் வைத்திய பிரிவுகளுக்கு வருடாந்தம் பல இலட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
விசர் நாய்களை மாத்திரமே உள்ளூராட்சி மன்றங்கள் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அழித்துவிடலாம் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால், இன்று மனிதனின் உற்ற நண்பனாக இருந்து அவனது வீட்டை பாதுகாத்து விஷப்பாம்பு போன்ற கொடிய பிராணிகளை அழித்தும் மனிதனுக்கு பல் வகையில் உதவி செய்துவரும் நாய்களுக்கு இப்போது ஓரளவு பாதுகாப்பு கிடைத்துள்ளது.
அப்படியாயின் யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் நாய்கள் இல்லையா?.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக