26 ஏப்ரல் 2012

சிறிலங்கா படைகள் வீசிய கிளஸ்டர் குண்டுகள் – ஐ.நாவிடம் ஆதாரங்கள்!

சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது சிறிலங்காப் படையினர் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா கண்ணிவெடி அகற்றும் நிபுணர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்முறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணை அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று அனைத்துலக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைத் திட்ட தொழில்நுட்ப ஆலோசகர் அலன் போஸ்ரன் என்ற நிபுணரே, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இவர், புதுக்குடியிருப்பில் கிளஸ்டர் குண்டின் வெடிக்காத பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மின்னஞ்சல் மூலம் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.
“கடந்த மாதம் புதுக்குடியிருப்பில் வீடு ஒன்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த உலோகங்களைப் பிரிக்க முற்பட்ட பையன் ஒருவர் அது வெடித்ததில் உயிரிழந்தான். அவனது சகோதரி படுகாயமடைந்தார்.
இதுதொடர்பாக நிழற்படங்களை விசாரணைக் குழுவினர் ஆராய்ந்த போது, கிளஸ்டர் குண்டின் வெடிக்காத சிறிய பகுதிகளை சேகரித்து வீட்டில் வைத்திருந்த போதே, அந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றதை கண்டறிய முடிந்தது.
சிறிலங்காவில் வெடிக்காத நிலையில் கிளஸ்டர் குண்டின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்தடவை.
இதுபற்றி சிறிலங்கா இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை சிறிலங்கா அரசின் பாதுகாப்பு விவகார பேச்சாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, சிறிலங்காப் படைகள் போரின்போது கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நாவிடம் இருந்தும் உடனடியாக எந்தக் கருத்தும் வரவில்லை.
2009 பெப்ரவரி மாதம், சிறிலங்கா அரசினால் போர்தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைப் பகுதியில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா முதல்முறையாக தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதை நிராகரித்தது.
அதேவேளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில், போர் தவிர்ப்பு வலயத்தில் சிறிலங்காப் படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.
சில காயங்கள் கிளஸ்டர் குண்டினால் ஏற்பட்டவை போன்றிருப்பதாகவும் இதுபற்றி மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர் குழு கூறியிருந்தது.
தற்போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் ஐ.நாவிடம் சிக்கியுள்ளதால், சிறிலங்கா மீதான அனைத்துலக போரக்குற்ற விசாரணை அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக