28 ஏப்ரல் 2012

கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டது உண்மை-மருத்துவர் சாட்சியம்!

cluster-bombsபோரில் தாம் ஒருபோதும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பு மறுத்துள்ள நிலையில், கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒருவரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவரின் சாட்சியத்தை ஏபி செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் போரின் போது, வெடிக்காத கிளஸ்டர் குண்டினால் காயமடைந்த ஒருவரைத் தான் கண்டதாக அந்த மருத்துவப் பணியாளர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் போரின் இறுதிகட்டத்தில், கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நாவின் வெடிபொருள் நிபுணர் அலன் போஸ்டனின் அறிக்கையை ஏபி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது.
இதனை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் அடிப்படையற்றது என்று நிராகரித்துள்ள நிலையிலேயே, கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்டவரை நேரில் கண்டவரின் சாட்சியத்தை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த மருத்துவப் பணியாளர் மேலும் கூறியுள்ளதாவது -
“போரின் இறுதி மாதங்களில் வெடிக்காத கிளஸ்டர் குண்டு ஒன்றினால் காயமடைந்த ஒருவரைப் பார்த்தேன்.
அவரது காலைக் கிழித்துக் கொண்டு நுழைந்த அந்த கிளஸ்டர் குண்டின் பாகம், வெடிக்காத நிலையில் புதைந்து போயிருந்தது.
பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைச் சுற்றாடலில் தாம் கிளஸ்டர் குண்டின் சிதறல்களைக் கண்டுபிடித்ததாக ஐ.நாவின் உள்ளூர் பணியாளர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்த நோயாளர்கள் கிளஸ்டர் குண்டுகளால் காயமடைந்ததாக கூறியதை அடுத்து அந்த மருத்துவமனை புதுமாத்தளனுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.
வித்தியாசமான வெடிப்புச்சத்தம் கேட்டது. பாரிய குண்டுச்சத்தத்தை அடுத்து சிறிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
காயங்கள் பலமானதாக இருந்ததால் மருத்துவ அதிகாரிகளால் சான்றுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் பின்னர் மார்ச் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஒருவர் தனது காலின் கீழ்ப் பகுதியில் காயமடைந்த நிலையில் வந்தார்.
அவரது காயத்தை மருத்துவ அதிகாரிகள் சுத்தம் செய்த போது, கிளஸ்டர் குண்டின் சிறியதொரு வெடிக்காத பாகம் உள்ளிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனால், குண்டு இருந்த அவரது முழங்காலுக்கு கீழான பகுதியை மருத்துவ அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.
அவரது காலுக்குள் குண்டு இருந்தது.
அதனை செயலிழக்க வைப்பது பாதுகாப்பற்றது என்பதால், அவரது கால் அகற்றப்பட்டு வீசப்பட்டது.“ என்றும் அந்த மருத்துவப் பணியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஏபி பெற்றுக் கொண்ட ஒரு ஒளிப்படத்தில், ஒருவரது முழங்காலுக்குக் கீழ் உலோக உருளை ஒன்று புதைந்துள்ளதை காணமுடிகிறது.
இதை தொழில்நுட்ப வல்லுனர்களிடம் காண்பித்தபோது, அது ஒரு கிளஸ்டர் குண்டு தானா இல்லையா என்பதை கூறமுடியவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் ஏபி குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் மேற்கொண்ட போரின் போது, பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் என்றும் இவர்களில் பலர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டினால் ஏற்பட்டிருக்கக் கூடிய எரிகாயங்களுக்கு உள்ளாகியதாகவும் ஏபி தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அந்த மருத்துவப் பணியாளர், “வெள்ளைப் பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களுடன் நோயாளர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
குண்டுவெடிப்பு நடந்த பகுதிக்கருகே சென்று பார்த்தபோது அந்த இடம் கருகிப் போயிருந்தது“ என்றும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதை அனைத்துலக சட்டங்கள் தடை செய்யவில்லை.
ஆனால் பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவை பயன்படுத்தப்படுவது மனிதஉரிமை அமைப்புகள் போர்க்குற்றம் என்று கூறுவதாகவும் ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக