20 ஏப்ரல் 2014

கருணாநிதியின் சுயரூபம் மீண்டும் அம்பலம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், மூவரின் தூக்கை ரத்து செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பு பற்றிய நீதிபதியின் அறிவிப்பு மரபுகளுக்கு உகந்ததா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் சென்னை தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது,
தி.மு.க. ஆட்சியைவிட அ.தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் பீகாரைவிட குறைந்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துவிட்டன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்கை ரத்து செய்யக் கோரும் வழக்கில் 25ம் தேதிக்குள் தீர்ப்பு என தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது, தமிழகத்தில் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என பலருக்கும் ஐயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்காததோடு, தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்திலேயே ஒரு மனுவினை தாக்கல் செய்து, அந்த வழக்கின் தீர்ப்பினைத்தான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவையில் நடைபெற்ற ஒரு விழாவிலே வெளிப்படையாக தெரிவித்து, அந்த செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது.
வரும் 24-ந் தேதியன்று நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழ்நிலையில், நீதியரசர் சதாசிவம் தான் ஓய்வு பெறவுள்ள 25-ந் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ? என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்த கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது தானா? என்பதையும் எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப முடிவு செய்வது நீதிமன்ற நெறிகளைக் காப்பாற்ற பயன்படும் என்பதுடன் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டம் படித்த நீதிபதிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதிபதி எனக்கும் நண்பர் தான். தெரிந்தவர் தான். நீதிக்கு மதிப்பளித்து, நீதி தராசு எல்லோரும் சமம் என்று நினைத்து பார்க்கக்கூடிய நீதிபதி ஒருவர் இது போன்ற கருத்துக்களை பொது விழாக்களில் கூறலாமா? இதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நீதிபதியின் அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா? என அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். நீதிமன்ற நெறிமுறைகளை காப்பாற்றும் வகையில் நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக