01 ஏப்ரல் 2014

மீண்டும் முருங்கையில் ஏறிக்கொண்ட வேதாளங்கள்!

யாழ்.குடாநாட்டில் காவலரண்கள் மூடப்பட்டன. மினிமுகாம்கள் மூடப்பட்டன என யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி புள்ளி விபரங்களை ஒருபுறம் வாசித்துக் கொண்டிருக்க வடமராட்சியின் கரையோரப பகுதிகளில் மாத்திரம் ஓரே நாளில் நூற்றுக்கணக்கான காவலரண்கள் முளைத்துள்ளன. அத்துடன் வெளியேறிவிட்டதாக மக்கள் மகிழ்ச்சி கொண்டாடிய படையினர் மீண்டும் இரவோடிரவாக நிலை கொண்டும்விட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கில் படையினர் கரையோர கிராமங்களில் குவிக்கப்பட்டதுடன் கைவிடப்பட்டிருந்த காவலரண்கள் மற்றும் மினிமுகாம்கள் அவசர அவசரமாக புனரமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென படையினர் குறைக்கப்பட்டதையடுத்து பயிற்சி நடவடிக்கைக்காக படையினர் வருகை தந்திருந்ததாகவும் பயிற்சி முடிந்து அவர்கள் வெளியேறியதாகவும் மக்களிடையே பேச்சுக்கள் பரவின. எனினும் குறைக்கப்பட்ட படையினர் மீண்டும் இரவோடிரவாக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பருத்தித்துறையினை அண்மித்த எரிஞ்ச அம்மன் கோவிலடியில் புதிய படைதளம் ஒன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. பருத்தித்துறை நகரப்பகுதியில் துறைமுகம் உள்ளடங்களாக செயற்பட்டு வந்திருந்த இராணுவ தளம் சுமார் 18 வருடங்களின் பின்னர் அண்மையிலேயே மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த தளத்திற்கு பதிலாகவே எரிஞ்ச அம்மன் கோவிலடியில் புதிய படைதளமொன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக