01 ஆகஸ்ட் 2013

வடக்கில் கோத்தாவிற்கு தடை!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உருவப்படத்தைப் பயன்படுத்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, முஸ்லிம் வர்த்தகரான சிராஸ் யாழ்ப்பாணத்தில் கோத்தாபய ராஜபக்சவின் படத்துடன் பெருமளவு சுவரொட்டிகளை ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, அவருக்கு ஆதரவானவர்கள் யாழ்.செயலகத்துக்கு முன்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன்பின்னர், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட்ட இடம், சிராசுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையிலேயே, கோத்தபாய ராஜபக்சவின் ஒளிப்படத்தைப் பயன்படுத்தியதால்தான், வேட்பாளர் பட்டியலில அவரைச் சேர்த்துக் கொள்வதில் இழுபறி ஏற்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார். மேலும், கோத்தபாய ராஜபக்சவின் படத்தையோ, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் படத்தையோ தேர்தல் சுவரொட்டிகளில் பயன்படுத்தக் கூடாது என்றும் சிராசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், கோத்தபாய ராஜபக்சவின் படத்துடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை உடனடியாக அகற்றுமாறும் வேட்பாளர் சிராசுக்கு, அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக