11 ஆகஸ்ட் 2013

கொழும்பில் தொடர்ந்து பதற்றம்!

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மசூதி மீது நேற்றுமாலை, பௌத்த அடிப்படைவாத குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
கிரான்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் உள்ள மாடிக்கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மசூதி மீது, நேற்று மாலை தொழுகை முடிந்த பின்னர், சுமார் 100 பேர் வரையிலான பௌத்த அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதன்போது, அருகிலுள்ள வீடுகள், வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் மசூதிக்குப் பாதுகாப்பு வழங்கிய இரு காவல்துறையினர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேற்றிரவு தொடக்கம் இன்று காலை 7 மணிவரையும் கிரான்ட்பாஸ் பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
சுவர்ண சைத்திய வீதியில் உள்ள இந்த மசூதியை அகற்ற வேண்டும் என்று கோரி கடந்த மாதம் பொதுபல சேனாவின் பெளத்த பிக்குகளும், பௌத்த அடிப்படைவாதிகளும் போராட்டம் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக