18 ஆகஸ்ட் 2014

தம்பாட்டி மக்களுக்கு நீர் விநியோகம்!

தம்பாட்டி மக்களுக்கு நீர் விநியோகம்!வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிதண்ணீர் விநியோகம் இன்று திங்கட்கிழமைமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் நிலவும் வழமைக்கு மாறான வரட்சியால் பல்வேறு இடங்களிலும் குடிதண்ணீருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. உள்ளூராட்சி மன்றங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் குடிதண்ணீர் வழங்கலை பவுஸர்கள் மூலம் மேற்கொண்டு வந்தபோதும் குடிநீருக்கான தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில் அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் குடிதண்ணீர் வழங்கலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொள்ளும் குடிதண்ணீர் வழங்கும் சேவைக்கு மேலதிகமான உதவி தேவைப்படின் அதனை வடக்கு மாகாண விவசாய அமைச்சு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தம்பாட்டி கிராமத்துக்கு பவுஸர்கள் மூலம் நீர் வழங்கும் திட்டத்தை வடமாகாண விவசாய கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஊர்காவற்துறை பிரதேசசபையுடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. தம்பாட்டி கிராமத்துக்கான நீர்வழங்கும் நிகழ்வு அக்கிராமத்தின் பொதுநோக்கு மண்டபத்தில் சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான பா.கஐதீபன், விந்தன் கனகரட்ணம், இ.ஆர்னல்ட், ஊர்காவற்துறைப் பிரதேசபையின் செயலாளர் என். சுதர்ஐன், தம்பாட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் அ.அன்னராசா, நீர் வழங்கல் திட்டத்துக்கு நிதி உதவி வழங்கிய அன்பே சிவம் அமைப்பின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் கு.குமணன் உட்பட கிராமத்து மக்களும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக