07 ஆகஸ்ட் 2014

அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பிய தமிழர்கள் மீது சித்திரவதை!

ஆஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை 'கார்டியன்' செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் தமிழர்களே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- ஆஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களில் தமிழர்கள் 4 பேரும் தனியாக பிரிக்கப்பட்டனர். நெல்சன் என அழைக்கப்படும் தமிழரின் முகத்தின் மீது அதிகாரி ஒருவர் தாக்கியதில் அந்த தமிழரின் முகத்திலிருந்து இரத்தம் கொட்டியது. அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர். "விடுதலைப் புலிகளுக்கு நீ பணம் கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா?" - என கேட்டு தாக்கினர். காலால் உதைத்தனர். இன்னொருவர் தண்ணீர் போத்தலால் அவரது முகத்தில் அறைந்தார். தமிழர்களை பின்னர் ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று வரிசையாக இருக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர் இன்னொரு இடத்திற்கு கூட்டி வந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். நெல்சன் தனது வீட்டு முகவரியை தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.அதே நாளில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தனது வீட்டுக் கதவை தட்டியதாக நெல்சன் மனைவி குறிப்பிட்டார். காலியில் நெல்சனை விசாரித்துக் கொண்டிருந்த அதிகாரிகளே அவர்களை இங்கு அனுப்பி இருந்தார்கள். அவ்வேளை அவர் தனது 14 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்குள் வந்த நபர்கள் நெல்சன் எங்கே எனக் கேட்டனர். அதில் ஒருவர் மகன் முகத்தில் ஓங்கி அறைந்தார். அப்பா எங்கே எனக் கேட்டனர். நான் தெரியாது என சொன்னேன் என அந்த சிறுவன் தெரிவித்தான். நெல்சன் ஜூலை மாதம் 9 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். அவர் தனது கிராமத்திற்கு திரும்பி உள்ளார். நெல்சனும் படகில் இருந்த ஏனைய 3 தமிழர்களும் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் தாங்கள் இன அடிப்படையில் துன்புறுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு தமிழரும் புலி ஆதரவாளர்களோ எனச் சந்தேகிக்கப்படுகின்றனர். நெல்சன் தான் நாடு கடத்தப்பட்ட பின்னர் தனது நிலைமை மோசமாகியுள்ளது என தெரிவிக்கிறார். "நான் அச்சமடைந்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டார் என 'கார்டியன்' மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக