04 அக்டோபர் 2013

கைதிகளை சந்திக்க சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி!

இலங்கைக் கைதிகளை சந்திக்க சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கைப் பிரஜைகள், நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
குறித்த இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கை அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். 2011ம் ஆண்டில் குறித்த இலங்கைப் பிரஜைகளின் புகலிடக் கோரிக்கையை சுவிட்சர்லாந்து குடிவரவுத் திணைக்களம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைதிகளை பார்வையிட்டு அவர்களின் சுக நலன்களை விசாரிப்பதற்கு சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு அனுமதியளிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சொந்த நாட்டில் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுகின்றார்களா என்பதனை சுவிஸ் அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை சுவிட்சர்லாந்து தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக