17 பிப்ரவரி 2014

மகிந்தவின் ஏமாற்று வேலையே ஜனாதிபதி ஆணைக்குழு!

மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சர்வதேசத்தினை ஏமாற்றுமொரு கண்துடைப்பென மீண்டும் அம்பலமாகியுள்ளது. அவ்வகையில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியத்தில் இதுவரையில் சுமார் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களது வாக்குமூலங்களையே ஆணைக்குழு பதிவு செய்துள்ளது. எஞ்சியவர்கள் பற்றி எந்தவொரு அறிவிப்புமின்றியே ஆணைக்குழு திரும்பவுள்ளது.இதுவரையினில் யாழ்.மாவட்டத்தினில் 175பேர் சாட்சியமளித்துள்ள நிலையில் 795பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக விண்ணப்பித்திருக்கின்றனர்.
கடந்த 14ஆம் திகதி தொடக்கம் காணாமல் போனோர் தொடர்பிலான யாழ்.மாவட்டத்திற்கான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.முதலாம் நாள் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 10 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கான சாட்சியங்கள் யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றன. நிகழ்வில் 66பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் 48பேர் சாட்சியமளித்திருந்தர். அதேவேளை 103பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டனர்.அதேபோல சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கான சாட்சியங்கள் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 13 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 59பேர் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 48 பேர் சாட்சியமளித்திருந்தனர். அதேவேளை 170 பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
இறுதி இருநாட்கள் சாட்சியமளிப்புக்கள் யாழ்.அரச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றன. நேற்றைய நாள் பதிவு நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. 04 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 67 பேர் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் 54 பேர் சாட்சியமளித்தனர். அதேவேளை 244 பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டனர்.
இன்று யாழ்.அரச செயலகத்தில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 04 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 52 பேர் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 1.30 மணிவரையில் 25பேர் சாட்சியமளித்திருக்கின்றனர். அதேநேரம் 278 பேர் புதிதாக சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக