19 பிப்ரவரி 2014

என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்!

எனது மகன் பேரறிவாளன் மட்டுமல்லாது 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியுள்ளார்.பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருப்பது தமிழ் ஆர்வலர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததால் சந்தோஷத்தில் திக்கு முக்காடிய அற்புதம் அம்மாள், தற்போது தனது மகன் விடுதலையாகப் போவது பற்றி இரட்டிப்பு சந்தோஷத்தில் திளைத்து போயிருக்கிறார்.பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது பற்றிய தமிழக அரசின் அறிவிப்பு வெளியான உடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:எனது ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் இத்தனை சீக்கிரமாக முதல்வர் ஜெயலலிதா புரிந்து கொண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.பேரறிவாளன், சாந்தன், முருகன் மட்டுமின்றி, ஆயுள் தண்டனை கைதியாக இருந்த நளினி உள்ளிட்ட 4 பேரையுமே விடுதலை செய்து அவர் அறிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.இந்த நேரத்தில் முதல்வருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவருக்கு எத்தனை முறை நன்றிகள் கூறினாலும் போதாது.இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி. குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். எனது வாழ் நாளிலேயே மகிழ்ச்சியான தருணமாக இதனை பார்க்கிறேன் என்று ஆனந்த கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக