06 பிப்ரவரி 2014

இலங்கையரை புறம்தள்ளியது இந்தியா!

இந்தியாவில் தற்போது இருந்து வரும் வரையறுக்கப்பட்ட ‘வந்த பின் விசா’ திட்டத்தை விரிவுப்படுத்தி மேலும்180 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த திட்டதை அமல்படுத்தலாம் என்று இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இது சுற்றுலா மற்றும் வணிகத் துறைகளை ஊக்குவிக்க எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளின் குடிமக்கள் மட்டும் இந்த திட்டத்தை உபயோகப்படுத்த முடியாது.
இந்த திட்டத்தை வரும் அக்டோபர் மாதத்திலிருந்து அமல்படுத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போது பின்லாந்து, சிங்கபூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளின் குடிமக்களுக்கு இந்த வசதியை இந்தியா வழங்கி வருகிறது.
இந்த 'வந்த-பின்-விசா திட்டத்தை 180 நாடுகளுக்கு விரிவுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கு தேவையான உள்கட்டமைப்பை தயார் செய்ய அந்தந்தத் துறைகளுக்கு ஐந்திலிருந்து 6 மாத காலம் வரை பிடிக்கலாம். அடுத்த சுற்றுலா காலம் துவங்கும் அக்டோபர் மாதம் முதல் இந்த திட்டத்தை அமல்படுத்தமுடியும் என்று நம்புகிறோம்", என்றார் திட்டத் துறை அமைச்சர் ராஜிவ் ஷுக்லா.
மின்னணு வழி செயல்படும் 'வந்த-பின்-விசா' திட்டம் இந்தியாவின் 26 முக்கிய விமான நிலையங்களில் அமல்படுத்தப்படும். இந்த விசா அந்த சுற்றுலா பயணி வந்தடையும் தேதியிலிருந்து 30 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.இணையம் மூலம் சுற்றுலாப் பயணிகள் விசா விண்ணப்பிக்கவும், விசா கட்டணத்தை செலுத்தவும் ஒரு இணையதளத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. பின் மூன்று நாட்களுக்கு பிறகு அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம்.
பாகிஸ்தான், சுடான், ஆப்கானிஸ்தான், இரான், இராக், நைஜீரியா, இலங்கை மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் ஏன் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து ராஜிவ் ஷுக்லா எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக