09 பிப்ரவரி 2014

இரசாயன ஆயுதம் பயன்படுத்தியமை உண்மை!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என இலங்கை அரசு கூறிவரும் நிலையில்,இலங்கை ராணுவத்தின் படைவீரரே தாங்கள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் லண்டனில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பாக 'இலங்கையில் நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாடு' நடைபெற்றது.இதில் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலேடெய் உள்பட உலகளவில் பல்வேறு தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இம்மாநாட்டில், சமீபதத்தில் இலங்கை சென்று தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்து, இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனும் கலந்து கொண்டு தனது ஆவணப்படத்தை வெளியிட்டார்.இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள்தான் இப்பொழுது இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது '(This Land Belongs to the Army) என்ற பெயரில் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார் மகா தமிழ்ப்பிரபாகரன்.இதில் வன்னிப் போரில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி எண்ணிலடங்கா அப்பாவி பொது மக்களை கண்மூடித்தனமாக இலங்கை இராணுவம் கொன்று குவித்ததையும்,இலங்கையின் உள்நாட்டு போர் சம்பந்தமாக வெளியான பல்வேறு மனித உரிமை அறிக்கைகளும் ஆதாரங்களையும்,போர் முடிந்து இன்றும் இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளது என்பதையும் இந்த ஆவணப்படம் எடுத்துக் காட்டியுள்ளது.அவரின் இந்த நில அபகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளையும், போரில் பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்கள் குறித்த குற்றசாட்டையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கிறது ஆனால்,ரசாயன ஆயுதங்கள் விசயத்தை பற்றியும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை அழிக்கும் ரசாயன தாக்குதல் பற்றியும் போரில் பங்கேற்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தான் இப்படத்தில் வெளியாகியுள்ள பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.தவறுகள் உள்ள இடத்தில் தான் தடைகளும் கட்டுப்பாடுகளும் பயமும் அதிகமாக இருக்கும். அந்த தடைகளுக்கு பின்னால் உள்ள காட்சிகளையும், இன்றைய வடகிழக்கு நிலத்தின் எதார்த்தத்தையும், போரின் போது இசைப்பிரியாவை போன்று இன்னும் பிற தமிழ் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சிகளையும் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது' என்ற ஆவணப்படத்தின் மூலம் மனிதத்தையும்,மனிதர்களையும் நேசிக்கும் மக்கள் முன்வைத்துள்ளார் தமிழ்பிரபாகரன்.மகா தமிழ் பிரபாகரன் ஏற்கனவே 'புலித்தடம் தேடி- இரத்த ஈழத்தில் 25 நாட்கள்' என்ற தொடரை எழுதி அதை அண்மையில் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக