02 நவம்பர் 2012

சிறீலங்காவின் பொய்களை நம்பவேண்டாம் என மன்னிப்புச்சபை வேண்டுகோள்!

மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான இலங்கையின் உறுதிமொழிகளை ஏற்‍க முடியாதென சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை தொடர்ந்தும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என அச்சபை கோரியுள்ளது.
யுத்தத்தின் பின்னரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிதாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
2008ம் ஆண்டு அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
சில தசாப்தங்களாகவே மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை வெற்று வாக்குறுதிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமைக்காக குரல் கொடுப்போர் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பாடத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக