01 நவம்பர் 2012

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட சீனாவின் ஆட்டிலறிகள்! புலிகளுக்கு கிடைத்தது எப்படி?

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்டிலறிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்டிலறிகளை இலங்கைப் படையினர் நேற்று கைப்பற்றினர். இவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இந்த ஆட்டிலறிகள் மூன்றரை ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாதது குறித்து இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், முள்ளிவாய்க்காலில் இலங்கைப் படையினர் 3 ஆண்டுகளாக தொடர் தேடுதல்களை நடத்தியிருந்தனர்.
நிலம் புயலினால், காட்டிக்கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்ற விசாரணையை இராணுவத் தரப்பு இப்போது ஆரம்பித்துள்ளது.
இவை விடுதலைப் புலிகளால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது இராணுவத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையா என்று கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளை, முதல்முறையாக ஒரே தடவையில் விடுதலைப் புலிகளின் 5 ஆட்டிலறிகளை கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அந்தப் பகுதியில் தேடுதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஒரு 130 மி.மீ ஆட்டிலறி மற்றும் நான்கு 152 மி.மீ ஆட்டிலறிகளே மீட்கப்பட்டுள்ளன. இவற்றுடன், சக்திவாய்ந்த 120 குதிரைவலுக் கொண்ட இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கடற்புலிகளின் படகு ஒன்றையும் சிறிலங்காப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் தரைதட்டியுள்ள ஜோர்தானிய கப்பலுக்கு அருகில் இவை கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், 'நிலம்' புயலினால் அவை வெளித் தெரிய ஆரம்பித்ததை அடுத்து அவற்றைத் தாம் மீட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக