11 நவம்பர் 2012

பரிதி கொலையை அடுத்து புலிகளின் முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு கோருகின்றனர்!

சங்கதிவிடுதலைப்புலிகள் இயக்கத் தளபதி பரிதி பாரிஸில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, பிரான்சில் உள்ள விடுதலைப் புலிகள் தளபதிகள் மூவர் பொலிஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக, பிரான்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.
பரிதி கொலை விசாரணை பிரான்ஸ் பொலிஸ் (police nationale) பிரிவிடமிருந்து DCRI பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. DCRI (Direction Centrale du Renseignement Intérieur) பிரான்சின் உள்ளக புலனாய்வுப் பிரிவு.
DCRI பிரிவு தகவல் தொடர்பாளர் André Beauchamp, ஆரம்ப கட்ட விசாரணைகள் தொடங்கியுள்ளதாகவும், கொல்லப்பட்ட தளபதி ஏற்கனவே பிரான்ஸ் சிறையில் கைதியாக இருந்து தற்போது பெயிலில் உள்ளதால், அவர் பற்றிய விபரங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், தற்போது கொல்லப்பட்ட பரிதியின் அமைப்பை சேர்ந்த மூவர் தமக்கு உயிராபத்து உள்ளதால் பொலிஸ் பாதுகாப்பு கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார் அவர்.
பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, அந்த கோரிக்கையை தமது பிரிவு கவனிப்பதில்லை எனவும், கோரிக்கையை தாம் police nationale பிரிவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார் André Beauchamp.
விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் தலைவர் பரிதி கொல்லப்பட்டுள்ளதால், அடுத்த நிலை தலைவர்கள், அதே அச்சுறுத்தல் தமக்கும் உள்ள காரணத்தால் பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளார்கள் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக