24 ஜூன் 2014

தமிழகத்தில் மாணவி பலாத்காரம் செய்து கொலை!

உத்தரப்பிரதேசம்
கரூரில் தலித் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வினிதா (17). பிளஸ் 2 முடித்திருந்த வினிதா, வரும் 1ஆம் தேதி கல்லூரியில் சேர இருந்தார். இதனிடையே, குடும்ப வறுமை காரணமாக வினிதா, கரூரில் உள்ள கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கிராமத்தில் இருந்து சைக்கிளில் வரும் வினிதா, கிருஷ்ணராயபுரத்தில் சைக்கிளை வைத்து விட்டு பேருந்தில் கரூரில் 5 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து பேருந்தில் கிருஷ்ணராயபுரம் வந்த வினிதா, அங்கிருந்து சைக்கிளில் ஒன்றரை கிலோ மீட்டரில் உள்ள ஊருக்கு சென்றுள்ளார். இதனிடையே, இரவு ஆகியும் வினிதா வீட்டிற்கு வராத காரணத்தால் அவரது பெற்றோர், உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர்.இரவு 11 மணி அளவில் அங்குள்ள வெற்றிலை தோட்டத்தில் வினிதா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி வினிதாவின் பெற்றோர், உறவினர்கள் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து கரூர் மாவட்ட எஸ்.பி (பொறுப்பு) ராஜேஸ்வரி காவல்துறையினருடன் விரைந்து வந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்க மறுத்ததோடு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.வினிதாவின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. உடலை வாங்க மறுத்து வினிதாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருவதால் கரூர் அரசு மருத்துவமனை முன்பு பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, மாயனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் அண்மையில் இரண்டு இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்நிலையில், கரூரில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக