13 ஜூன் 2014

ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு பன்னிருவர் நியமிப்பு!

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருக்கின்றார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார். இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிருவர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதேசமயம், இக்குழுவினருக்கு வெளி நிபுணத்துவ உதவிகள் மற்றும் புலனாய்வு ஒத்துழைப்பை வழங்குவதற்காக இரண்டாம் நிலை உதவிக் குழு ஒன்றும் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் நியூஸிலாந்தின் நீதியரசரான டாம் சிஸ்வியா கார்ட்ரைட்டும் இந்த விசாரணைக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவின் பணி இந்த ஜூன் நடுப்பகுதியில் ஆரம்பித்து, பத்து மாதங்கள் கடந்து 2015 ஏப்ரலில் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக