04 ஜூன் 2014

சிங்களப்படைக்கு ஆட்களை சேர்ப்போருக்கு எச்சரிக்கை!

கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை சேர்த்துக்கொள்வது நியாயப்படுத்த முடியாததொன்று. சம்பந்தப்பட்ட அலுவலர்களும் தமது கடமைகளை புறம்தள்ளிவிட்டு இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் காலமொன்று வருமென சீற்றத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார்
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.
அச்சுவேலியில் காணி சுவீகரிப்புக்கு எதிரான அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஐங்கரநேசன் கோபம் மேலிட்ட நிலையில் பொலிஸ், கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் நடைமுறையை முன்னிலைப்படுத்தி கூறி விசனம் தெரிவித்திருந்தார்.
காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் கடந்த திங்கட்கிழமை அச்சுவேலி யூனியன் இராணுவ முகாமுக்கு அருகில் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் வருகை தந்திருந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸாரோடும் நிலஅளவை அதிகாரிகளோடும் ஆக்ரோசமான கருத்துப் பரிமாறல் இடம்பெற்றது.
பெருமளவில் பொதுமக்களும் கூடி இருந்தனர். கிராம அலுவலர் மற்றும் அதிகாரிகளும் காணப்பட்டனர். அமைச்சர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்; அரசின் முறைகேடான செயற்பாடுகள் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளன. அரச அலுவலர்களை முறைகேடான முறையில் அரசு பயன்படுத்தி இராணுவத்துக்கு ஆள்சேர்ப்புச் செய்கின்றது. இந்த விடயத்தில் அலுவலர்களும் தமது நாளாந்த கடமைகளைத் தவிர்த்து இராணுவத்துக்கு ஆள்களைத் திரட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக