22 ஜூன் 2014

ஐ.நா.அதிகாரி எம்மிடம் விபரம் கோரினார்-சுரேஷ்

சுரேஷ் பிரேமச்சந்திரன்
வடக்கு மாகாணசபையை இயக்கமுடியாதுள்ளது என்றால் அதற்கான தடைகள் என்ன, மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லையாயின் அதற்கான காரணம் என்ன, இன்னும் எவ்வளவு தொகையினர் அகதிகளாகவே உள்ளனர் போன்ற விவரங்களை எம்மிடமிருந்து பெற்றுக்கொண்டார் ஐ.நா. உதவிச் செயலர். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இரண்டாம் நாள் பேச்சு இன்று நடைபெற்றது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12.15 மணி வரை இந்தப் பேச்சு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, நேற்றைய சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா. அதிகாரிக்கு விளக்கினோம். குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி, அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி, அவர்கள் சுயமாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். போரின்போது இடம்பெற்றக் கூறப்படும் மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறல். இலங்கையில் நீண்ட காலமாக நிலவிவரும் இன்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணுதல். வடக்கு மாகாண சபையைச் சுதந்திரமாக இயக்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வடபகுதியிலுள்ள காணிகளை அரசு கையகப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், இராணுவத் தலையீடுகளால் மக்களுக்கு ஏற்படும் நாளாந்தப் பிரச்சினைகள் குறித்து நேற்று நாம் அவருக்கு தெளிவாக விளக்கினோம். இவ்வாறான பிரச்சினைகள்,நெருக்கடிகள் குறித்த விளக்கங்களையும் காரணங்களையும் இன்று கேட்டறிந்த அவர், எம்மிடம் ஆதாரங்களையும் கோரினார். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அச்சுறுத்தல்கள்,நெருக்கடிகள் குறித்த ஆதாரபூர்வமான தகவல்களை நாம் இன்று ஐ.நா. அதிகாரியிடம் வழங்கினோம் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக